பட்டினப்பாலை - பத்துப்பாட்டு
கடற்கரையில் பகல் விளையாட்டு
கிடுகுநிரைத் தெஃகூன்றி நடுகல்லின் அரண்போல நெடுந்தூண்டிலிற் காழ்சேர்த்திய |
80 |
குறுங்கூரைக் குடிநாப்பண் நிலவடைந்த இருள்போல வலையுணங்கு மணல்முன்றில் வீழ்த்தாழைத் தாட்டழ்ந்த வெண்கூ தாளத்துத் தண்பூங் கோதையர் |
85 |
சினைச்சுறவின் கோடுநட்டு மனைச்சேர்த்திய வல்லணங்கினால் மடற்றாழை மலர்மலைந்தும் பிணர்ப்பெண்ணைப் பிழிமாந்தியும் புன்றலை இரும்பரதவர |
90 |
பைந்தழைமா மகளிரொடு பாயிரும் பனிக்கடல் வேட்டஞ் செல்லாது உவவுமடிந் துண்டாடியும் |
நிறை-நிலா வெளிச்சத்தில் ஆணும் பெண்ணுமாகப் பரதவர் உண்டும் ஆடியும் மகிழ்வர். காதல் விளையாட்டுகள் கூரைவீடுகளின் இடையே வேல் நட்டுக் கேடயம் மாட்டப்பட்டிருந்தது. வயிரம் பாய்ந்த மரக்கொம்புகளை நட்டு அதில் மீன்வலையைக் காய வைத்திருந்தனர். இது நடுகல் அரண் போல் விளங்கியது. வலை விரித்த மணல் அவர்களுக்கு மெத்தை. இங்கிருந்த தாழைமரத்து அடியில்-தான் காதலர்களின் களியாட்டங்கள் நிகழ்ந்தன. பூச்சூடல் - மகளிர் கூதாளம் பூவைத் தலையில் சூடிக் கொண்டிருந்தனர். மனையணங்கு வழிபாடு - நிறைமதி நாளும் மறைமதி நாளும் ‘உவா’ எனப்படும். அந்த நாள்களில் கடலின் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும். எனவே அந்த இரண்டு நாள்களிலும் பரதவர் கடலில் மீன் பிடிக்கச் செல்வதில்லை. அவரவர் மனைவிமாருடன் கூடி மனையில் அணங்குவிழாக் கொண்டாடுவர். சுறாமீன் கொம்பு - அணங்குவிழா நாளில் வீட்டில் சினையுற்றிருக்கும் சுறாமீன் கொம்பு ஒன்றில் குத்தி நடப்பட்டிருக்கும். காதலர் உண்டு களித்து உடலுறவு கொள்வதைக் காட்டும் அடையாளச் சின்னம் சுறாமீன் கொம்பு. இது மனையில் நடப்பட்டிருந்தால் அம்மனைக்குள் வேறு யாரும் செல்லமாட்டார்கள். பூ மாற்றம் - மற்ற நாட்களில் கூதாளம் பூவைச் சூடிக்கொள்ளும் மீனவப் பெண்கள் அணங்குவிழா நாளில் தாழம் பூவைத் தலையில் சூடிக்கொள்வர் பனைக்கள் - கடலுக்குள் செல்லும்போது கள் பருகாத பரதவர் அணங்கு நாளில் பனங்கள்ளைப் பருகுவர். ஆடை மாற்றம் - பிற நாட்களில் நூலாடை உடுத்தியிருந்த பரதவப் பெண்கள் அந்த நாட்களில் தழையாடை அணிவர். உண்டாட்டு - வெட்சித்திணையின் துறைகளில் ஒன்றாகத் தொல்காப்பியம் குறிப்பிடும் உண்டாட்டு கூடிக் களிக்கும் புறத்திணையின் பாற்பட்டது (புறத்திணையியல் 2) இங்குக் கூறப்படும் உண்டாட்டு காதல் இருவர் களிப்புடன் தனிமையில் ஆடுவது.
புலவுமணற் பூங்கானல் மாமலை யணைந்த கொண்மூப் போலவும் |
95 |
தாய்முலை தழுவிய குழவி போலவும் தேறுநீர்ப் புணரியோ டியாறுதலை மணக்கும் மலியோத் தொலிகூடல் தீதுநீங்கக் கடலாடியும் மாசுபோகப் புனல்படிந்தும் |
100 |
அலவ னாட்டியும் உரவுத்திரை உழக்கியும் பாவை சூழ்ந்தும் பல்பொறி மருண்டும் அகலாக் காதலொடு பகல்விளை யாடிப் |
மீனவர் கடலாடல் - காவிரி ஆறு கடலில் கலக்கும் கூடல்நிலம் கொண்டது புகார் நகரம். மலையைத் தழுவும் மேகம் போல அங்குக் காவிரி கடலைத் தழுவியது. தாயைத் தழுவும் குழந்தையைப் போலக் காவிரி கடலைத் தழுவியது. புலவுமணல் - வைகறையில் தனித்துக் கூடிய காதலர் மாலையில் பொது இடமாகிய கருவாட்டு நாற்றம் வீசும் மணல் பரப்பில் விளையாடுவர். கடலாடல் \ புனலாடல் - கடலில் குளித்தால் செய்த தீமைகள் அகலும் என்று நம்பினர். என்றாலும் உப்பு உடலில் படிந்துவிடும் அல்லவா? அதனைப் போக்க நன்னீர் ஓடும் ஆற்றில் குளித்தனர். நண்டு விளையாட்டு - கடல் நண்டுகளை கடலோர மணலில் அங்குமிங்கும் ஓடச்செய்து அதனைப் பார்த்து மகிழ்ந்தனர். திரை விளையாட்டு - கடலலைகளில் நின்றும், ஓடியும், ‘நீரா, நிலமா’ என்று தொடச் சொல்லியும் விளையாடி மகிழ்ந்தனர். பொறி விளையாட்டுக் காணல் - மிதக்கும் பொருள்களைக் கடலலையில் போட்டால் அது கரைக்கு வந்துசேரும். இவ்வாறு மீள்வதைக் கண்டு களித்தல் பொறி விளையாட்டு. இது ஒருவகைக் கட்பொறி விளையாட்டு.
இரவில் துயிலும் நிலை
பெறற்கருந் தொல்சீர்த் துறக்க மேய்க்கும் பொய்யா மரபிற் பூமலி பெருந்துறைத் |
105 |
துணைப்புணர்ந்த மடமங்கையர் பட்டுநீக்கித் துகிலுடுத்தும் மட்டுநீக்கி மதுமகிழ்ந்தும் மைந்தர்கண்ணி மகளிர் சூடவும் மகளிர்கோதை மைந்தர் மலையவும் |
110 |
மகளிரும், மைந்தரும் மாலை மாற்றிக்கொண்டு மகிழ்ந்து திளைப்பர். கலவி என்னும் உடலுறவுக்கு முன்னும் பின்னும் செல்வர் - பூமலி பெருந்துறை என்பது காவிரிப்பூம் பட்டினத்தில் ஒரு பகுதி. அங்கு ஆண்டு முழுவதும் மாறிமாறிப் பொய்க்காமல் பூத்துக் கொண்டேயிருக்கும் மரங்கள் இருந்தன. அந்த இடம் வீடுபேற்றுச் சுவர்க்கம் போன்றது. அங்கிருந்த வீடுகளில் மகளிர் காலத்திற்கேற்ற கோலம் பூண்டு கூடிக்களித்து இன்புற்றனர். கணவனோடு கூடித் திளைத்த மகளிர் வெளியிலோ, வீட்டிலோ கூடித் திளைக்கும்போதும், வெளியில் உலாவும்போதும் முறையே பருத்தித்துணி உடுத்தியும், பட்டாடை உடுத்தியும் மகிழ்ந்தனர். மட்டு (சுவைநீர்) மதுமகிழ் (களிப்புநீர்) பருகல் - வெளியில் உலாவும்போது மயக்கம் தராத மட்டுகள்ளைப் பருகியவர்கள் கூடித் திளைக்கும்போது மதுக்கள்ளை உண்டு மகிழ்ந்தனர். மாலை மாற்று விளையாட்டு - மைந்தர் தலையில் சூடியிருந்த கண்ணி மகளிர் தலைக்கு மாறிவிட்டது. மகளிர் கழுத்தில் அணிந்திருந்த மாலை மைந்தர் கழுத்துக்கு மாறிவிட்டது.
நெடுங்கால் மாடத் தொள்ளெரி நோக்கிக் கொடுந்திமிற் பரதவர் குரூஉச்சுடர் எண்ணவும் பாட லோர்த்தும் நாடக நயந்தும் வெண்ணிலவின் பயன்றுய்த்தும் கண்ணடைஇய கடைக்கங்குலான் |
115 |
மாஅகாவிரி மணங்கூட்டும் தூஉவெக்கர்த் துயில் மடிந்து |
நிலாமுற்றத்தில், உயர்ந்த கால் நட்டுக் கட்டப்பட்டிருந்த மாடங்களில் கூடிக் களித்த காதலர் கடலில் விளக்கு ஒளியோடு மீன் பிடித்துக் கொண்டிருக்கும் திமில்களில் எரிந்த விளக்கொளிகளை எண்ணிக் கணக்குப் போட்டு மகிழ்ந்து கொண்டிருந்தனர். காவிரி மணலில் வெண்ணிலாவின் பயனைத் துய்த்துக் கொண்டிருந்த மக்கள் அங்கு மேடையில் இருந்து பாடப்பட்ட பாட்டுகளைக் கேட்டு மகிழ்ந்தனர். நாடகங்களைக் கண்டு மகிழ்ந்தனர். பார்த்துக்கொண்டும், கேட்டுக்கொண்டும் அந்த மணல் வெளியிலேயே தூங்கிவிட்டனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பட்டினப்பாலை - பத்துப்பாட்டு, விளையாட்டு, மகளிர், மகிழ்ந்தனர், அந்த, காவிரி, கடலில், பரதவர், இலக்கியங்கள், நாளில், கொம்பு, காதலர், நாட்களில், பத்துப்பாட்டு, உண்டாட்டு, மைந்தர், பட்டினப்பாலை, சுறாமீன், கூடித், மாலை, மணல், தலையில், மாறிவிட்டது, அதனைப், வெளியில், தழுவியது, மணலில், அங்கு, உடுத்தியும், பூமலி, கண்டு, மகிழ்ந்து, கடலைத், பொறி, உண்டு, பூவைத், கொண்டிருந்தனர், நாளும், கூதாளம், நட்டுக், சங்க, காதல், மீன், மனையில், போலவும், கடலாடல், கூடிக், பெண்கள், அணங்குவிழா, மாற்றம், தழுவும்