மலைபடுகடாம் - பத்துப்பாட்டு
நும்மில் போல நில்லாது புக்குக் | 165 |
கிழவிர் போலக் கேளாது கெழீஇச் சேட்புலம் பகல இனிய கூறிப் பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு குரூஉக்க ணிறடிப் பொம்மல் பெறுகுவிர் |
உங்கள் வீட்டிற்குள் செல்வது போலப் படுகர் வீட்டுக்குள் யாரையும் கேட்காமல் உள்ளே செல்லலாம். உரிமை உள்ளவர் போல வீட்டில் உள்ளவர்களோடு அளவளாவலாம். நெடுந்தொலைவு நடந்துவந்த வருத்தம் போகும்படி அவர்கள் இனிமையாக உரையாடுவர். அத்துடன் ஆட்டுக்கறி [பரூஉக்குறை] போட்டு நெய் ஊற்றிச் சமைத்த தினையரிசிப் பொங்கல் சோறும் உண்ணத் தருவார்கள்.
நன்னனது மலைநாட்டில் பெறும் பொருள்கள்
ஏறித் தரூஉம் இலங்குமலைத் தாரமொட | 170 |
வேய்ப்பெயல் விளையுள் தேக்கட் தேறல் குறைவின்று பருகி நறவுமகிழ்ந்து வைகறைப் பழஞ்செருக் குற்றநும் அனந்தல் தீர அருவி தந்த பழஞ்சிதை வெண்காழ் வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை |
175 |
முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை பிணவுநாய் முடுக்கிய தடியொடு விரைஇ வெண்புடைக் கொண்ட துய்த்தலைப் பழனின் இன்புளிக் கலந்து மாமோ ராகக் கழைவளர் நெல்லின் அரியுலை ஊழ்த்த |
180 |
வழையமை சாரல் கமழத் துழைஇ நறுமலர் அணிந்த நாறிரு முச்சிக் குறமகள் ஆக்கிய வாலவிழ் வல்சி அகமலி உவகை ஆர்வமொ டளைஇ மகமுறை தடுப்ப மனைதொறும் பெறுகுவிர் |
185 |
வீடுதோறும் பெறும் உணவு வகைகள். தேன் – மரத்திலும் பாறையிலும் ஏறிப் பெறப்படும் மலைத் தாரம். (தரும் பொருளைத் தாரம் என்பது பழந்தமிழ் வழக்கு) தேறல் – தேனை மூங்கில் குழாய்களில் அடைத்து வைத்துக் கள்ளாக்கிப் பருகத் தருவது தேறல். நறவு – (உண்டார்கண் அல்லது அடுநறா …குறள்) காய்ச்சி வடித்த மணநீர். இது மகிழ்ச்சி தரும் குடிவகை. தேங்காய் – அருவி அடித்துக்கொண்டு வந்த பழம். இதைச் சிதைத்தால் உள்ளே இருப்பது வெள்ளை வித்துப் பொருள். கடம்புமான் கறி – வருவிசை அம்பால் பெற்றது. முள்ளம் பன்றிக் கறி – கொழுப்பை அரிந்து எறிந்துவிட்டுப் பங்கிட்டு வைத்த முளவுக் கறி - பெண்நாய் முடுக்கிப் பிடித்துக் கொண்டுவந்த விலங்குக்கறி பழன் – இது நெருப்புக் கட்டி வெண்மையாகும் வரையில் புடையடுப்பின் மேல் புலாலை வைத்து வாட்டிப் பழுப்பாக்கிய பழன். மாங்காய் போட்ட மோர்க்குழம்பு – (இனிப்பும் புளிப்பும் கலந்த மாங்காய்) நெல்லரிசிச் சோறு – (மூங்கில் போல் வளர்ந்த நெல்) இதனைச் சமைத்த குறமகள் தன் கூந்தலை உச்சிக் கொண்டையாகப் போட்டு முடிந்திருந்தாள். இந்த முச்சியில் மணம் கமழும் பூவைச் சூடியிருந்தாள். அவள் சமையலின் மணம் வழைமரம் மிக்க மலைச்சாரல் எல்லாம் கமழ்ந்தது. சோறு வெள்ளை வெளேரென்று மலர்ந்திருந்தது. தன் மக்களுக்கு இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று தடுத்து வட்டியில் போடுவது போல் படைத்தாள். இவ்வாறு படைப்பதை ஒவ்வொரு மனையிலும் பெறுவீர்கள்.
மலைநாட்டில் நெடுநாள் தங்காது, நிலநாட்டில் செல்ல வேண்டுதல்
செருச்செய் முன்பிற் குருசில் முன்னிய பரிசில் மறப்ப நீடலும் உரியிர் அனைய தன்றவன் மலைமிசை நாடே |
நீங்கள் போராற்றல் மிக்க அரசனாகிய நன்னனை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறீர்கள். அவனிடம் பெறவேண்டிய பரிசிலை மறந்துவிட்டு மலைக்குறவர் விருந்தில் மயங்கி அங்கேயே தங்கி விடுதலும் கூடும். அப்படிப் பட்டது நன்னனின் மலைநாடு.
நிரையிதழ்க் குவளைக் கடிவீ தொடினும் வரையர மகளிர் இருக்கை காணினும் |
190 |
உயிர்செல வெம்பிப் பனித்தலும் உரியிர் பலநா ணில்லாது நிலநாடு படர்மின் |
நிறைந்த இதழ்களை உடைய குவளை மலர்களின் மணத்தை மிகுதியாக முகர்ந்தாலும், வரையர மகளிர் தங்கி விளையாடும் இடங்களைக் கண்டாலும் உயிர் பதைத்து நடுங்க நேரும். எனவே அம் மலைநாட்டில் பலநாள் தங்காமல் நிலநாட்டை நோக்கிச் செல்லுங்கள்.
வழியின் அருமை எடுத்துரைத்தல்
'பன்றிப் பொறியுள்ள வழிகளில் பகலில் செல்லவேண்டும்' எனல்
'பன்றிப் பொறியுள்ள வழிகளில் பகலில் செல்லவேண்டும்' எனல்
விளைபுன நிழத்தலிற் கேழல் அஞ்சிப் புழைதொறு மாட்டிய இருங்கல் அடாடர் அரும்பொறி உடைய வாறே நள்ளிருள் |
195 |
அலரிவிரிந்த விடியல் வைகினிர் கழிமின் |
விளைச்சலைப் பாழாக்கும் காட்டுப்பன்றியை அழிப்பதற்காக ஆங்காங்கே கானவர் பொறி வைத்திருப்பர். பெரிய பாறாங்கல்லைத் தூக்கிச் சாய்த்து நிறுத்தி, கவட்டைக் கோலில் குச்சி நிறுத்தி, அந்தக் குச்சியின் ஒரு முனையில் சாய்ந்திருக்கும் கல்லை நிறுத்தி, மற்றொரு முனையில் கயிறு கட்டி, அந்தக் கயிற்றை நிறுத்தி வைத்திருக்கும் கவட்டைக் குச்சியின் அடியில் இரண்டு சுற்று சுற்றி, கயிற்றின் மற்றொரு நுனியை மற்றொரு குச்சியின் ஒரு நுனியில் கட்டி, இந்தக் குச்சியின் மற்றொரு முனையைத் தூக்கி நிறுத்தியுள்ள பாறையில் பொருத்திப் பாறை விழாமல் நிறுத்தியிருப்பர். குச்சியில் காட்டுப்பன்றி விரும்பி உண்ணும் இரையைக் கட்டியிருப்பர். பன்றி இரையை இழுத்ததும் பாறை பன்றியின்மீது விழுந்து பன்றியைக் கொன்றுவிடும். இதற்கு இருங்கல் அடாஅர் என்று பெயர். இரவில் செல்லும்போது அறியாமல் அதில் மோதினால் பொறி வைத்திருக்கும் பாறாங்கல் விழுந்து துன்புற நேரும். எனவே இருள் நீங்கி விடிந்தபின் செல்லுங்கள்.
பாம்புகள் உறையும் இடத்தைக் கடந்து செல்லும் வகை
நளிந்துபலர் வழங்காச் செப்பந் துணியின் முரம்புகண் உடைந்த பரலவற் போழ்வில் கரந்துபாம் பொடுங்கும் பயம்புமா ருளவே குறிக்கொண்டு மரங் கொட்டி நோக்கிச் |
200 |
செறிதொடி விறலியர் கைதொழூஉப் பழிச்ச வறிதுநெறி ஓரீஇ வலஞ்செயாக் கழிமின் |
மரமடர்ந்த காட்டில் ஆள் நடமாட்டம் இல்லாத வழியில் செல்லக் கூடாது. அங்கு வெடிப்பு நிலங்களில் பரல் கற்கள் மூடிய வளைக்குள் பாம்பு இருக்கலாம். பின்னே வருபவர்களுக்கு வழி தெரிவதற்காக மரத்தைக் கல்லால் கொட்டி அடையாளம் செய்து வைத்துவிட்டுச் செல்லுங்கள். அப்படிப்பட்ட இடங்களைக் காணும்போது விறலியர் அதனைச் சுற்றிவந்து வாழ்த்துவர். அவ்வாறு செய்துவிட்டுச் செல்லுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மலைபடுகடாம் - பத்துப்பாட்டு, செல்லுங்கள், குச்சியின், மற்றொரு, நிறுத்தி, இலக்கியங்கள், மலைநாட்டில், தேறல், கட்டி, மலைபடுகடாம், பத்துப்பாட்டு, நேரும், இடங்களைக், மகளிர், நோக்கிச், தங்கி, வரையர, உடைய, கவட்டைக், வைத்திருக்கும், பாறை, விழுந்து, விறலியர், முனையில், அந்தக், கழிமின், பொறி, உரியிர், இருங்கல், மணம், சமைத்த, பெறும், அருவி, வருவிசை, போட்டு, உள்ளே, சங்க, பரூஉக்குறை, பெறுகுவிர், குறமகள், தாரம், சோறு, போல், மிக்க, இன்னும், மாங்காய், பழன், தரும், மூங்கில், வெள்ளை, கொஞ்சம்