மலைபடுகடாம் - பத்துப்பாட்டு
மதந்தபு ஞமலி நாவி நன்ன துளங்கியல் மெலிந்த கல்பொரு சீறடிக் கணங்கொள் தோகையிற் கதுப்பிகுத் தசைஇ விலங்குமலைத் தமர்ந்த சேயரி நாட்டத்து |
45 |
இலங்குவளை விறலியர் நிற்புறஞ் சுற்றக் |
கலைக் கண்ணோட்டம் உள்ளவரைக் கண்ணுளர் என்கிறோம். யாழைக் கலம் என்றும் வழங்கினர். இவற்றின் வழியே பாணரைக் கலம்பெறு கண்ணுளர் என்று போற்றுகின்றனர். வெறி பிடிக்காத நாயின் நாக்கைப் போன்று ஈரமும் மென்மையும் கொண்ட காலடிகளை உடையவர்கள் விறலியர். தோகை விரித்தாடும் மயில்போல் அவர்கள் தம் கூந்தலை விரித்துக்கொண்டு ஆடுவர். மான் மருண்டும் மலைத்தும் பார்ப்பது போலத் தம் செவ்வரிக் கண்களின் பார்வையை வீசி ஆடுவார்கள். உள்ளக் கருத்தை உடலசைவால் வெளிப்படுத்தி யாழிசைக்கு ஏற்ப ஆடுபவள் விறலி. இவர்கள் தலைவனின் ஆணைக்காகக் காத்துக்கொண்டு எப்போதும் அவனைச் சுற்றியே சென்று கொண்டிருந்தனர்.
கயம்புக் கன்ன பயம்படு தண்ணிழல் புனல்கால் கழீஇய மணல்வார் புறவில் புலம்புவிட் டிருந்த புனிறில் காட்சிக் கலம்பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ |
50 |
இவர்கள் நடந்து செல்லும்போது மர நிழலில் தங்கினர். அந்த நிழல் குளத்தில் குளிக்காமலேயே குளத்தில் குளிப்பதுபோல் குளுமையாக இருந்தது. புனிறு என்பது தாய் பிள்ளைப் பேற்றின்போது அடையும் துன்பம். மலை ஏறும்போது உண்டான பிள்ளைப்பேறு போன்ற துன்பம் நிழலில் தங்கும்போது போய்விட்டது.
'நன்னனை அடைந்தால் நல்ல பயன் பெறுவீர்கள்' எனல்
தூமலர் துவன்றிய கரைபொரு நிவப்பின் மீமிசை நல்யாறு கடற்படர்ந் தாஅங்கு யாமவ ணின்றும் வருதும் நீயிரும் |
ஆற்றுப்படுத்தும் புலவர் பாணனுக்குச் சொல்கிறார். மீமிசை நல்யாறு - மலையில் உதிர்ந்த மலர்களை ஆற்றுநீர் சுமந்துகொண்டு கடலை நோக்கி வருவதுபோல் நன்னன் அள்ளாமலும் அளக்காமலும் கொட்டிய வளங்களைச் சுமந்துகொண்டு நாங்கள் அவனது செங்கண்மா நகரிலிருந்து எங்களது இருப்பிடம் நோக்கிச் செல்கையில் இங்கு வந்துள்ளோம்.
கனிபொழி கானம் கிளையொ டுணீஇய துனைபறை நிவக்கும் புள்ளின மானப் |
55 |
புனைதார்ப் பொலிந்த வண்டுபடு மார்பின் வனைபுனை எழின்முலை வாங்கமைத் திரடோள் மலர்போல் மழைக்கண் மங்கையர் கணவன் |
கனிமழை பொழியும் கானத்தைச் சிறகடிக்கும் பறவைகள் தேடிக்கொண்டு விரைந்து [துனை] பரப்பது போல மாலையில் வண்டு மொய்க்கும் மார்பினை உடையவன் அவன். அவனது மனைவியரின் கண்கள் மலர்போல் பூத்து மழைபோல் குளிர்ந்து அவனது மார்பை மொய்த்துக் கொண்டிருக்கும். அப் பெண்டிரின் தோள் மூங்கில் போல் வளைந்தும், முலை முகிழ்த்தும் கிடக்கும். குறிப்பிட்டுச் சொன்னால் அன்புமழை பொழியும் அழகியரின் கணவன் அவன்.
முனைபாழ் படுக்கும் துன்னருந் துப்பின் இசைநுவல் வித்தின் நசையே ருழவர்க்குப் |
60 |
புதுநிறை வந்த புனலஞ் சாயல் மதிமா றோரா நன்றுணர் சூழ்ச்சி வின்னவில் தடக்கை மேவரும் பெரும்பூண் நன்னன்சேய் நன்னற் படர்ந்த கொள்கையொடு உள்ளினிர் சேறிர் ஆயிற் பொழுதெதிர்ந்த |
65 |
நன்னனை நாடி நசை ஏர் உழவர், அவன் நன்னன் சேய் நன்னன். அவனிடம் செல்வீர் ஆயின், நல்லேர் உழவர் என்றும், சொல்லேர் உழவர் என்றும் வள்ளுவர் குறிப்பிடுவதை அறிவோம். நெல்லும் சொல்லும் விளைய அவர்கள் உழவு செய்பவர்கள். இங்கு ஆசையை ஏராகப் பூட்டி உழும் மறவர் குலம் வருகிறது. இவர்கள் பாராட்டுச் சொல் விளைச்சலைப் பெறுவதற்காக உழவு செய்பவர்கள். புனல் அம் சாயல் - ஆற்றில் ஊற்று நீர் சாய்ந்து வந்து வழங்குவது போல எதிரிகளின் போர்முனையைப் பாழ்படுத்துவதில் தம்மை நெருங்கமுடியாத வலிமை கொண்ட வீரர்களுக்குப் புத்தமுது நறைக்கள்ளை வழங்கும் தன்மை கொண்டவன் நன்னன். நன்னன்சேய்தன்னன் எனக் குறிப்பிடப்பட்டுள்ள இவனது பெயரில் வரும் சேய் என்னும் சொல்லிக்கு மகன் என்றும், முருகன் என்றும் பொருள் காணமுடியும். எனவே நன்னன் மகன் நன்னன் என்று ஒரு விளக்கம் அமையும். முதலில் உள்ள நன்னன் தந்தை பெயர் என்றும் அடுத்து வரும் சேய்நன்னன் இவன் பெயர் என்றும் கொள்ளமுடியும். சேட்சேன்னி நலங்கிள்ளி என்னும் பெயர் இவ்வாறு அமைந்திருத்தலை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். அவன் வில்லுக்குச் சொல்லித்தரும் வலிமை மிக்க கையை உடையவன். அதாவது வில்லாண்மை உடையவன். அதனைக் குறிக்கும் வகையில் கையில் பூண் அணிந்தவன். இதுவா அதுவா, இப்படிப்பட்டவரா அப்படிப்பட்டவரா என்று அறிவு தடுமாறாமல் ஆராந்துகொண்டிருக்காமல் நல்லதைத் தீர்மானிக்கும் திறம் கொண்டவன். இதுதான் அவனது ‘மதி மாறு ஓரா நன்று உணர் சூழ்ச்சி’. நன்று உணர் சூழ்ச்சி ஆளைப் பார்த்து அறிவு மாறுபடும் குணம் அவனுக்கு இல்லை. எல்லாரிடமும் நல்லனவற்றையே காணும் இயல்பினை உடையவன் அவன். வில்லாண்மையில் அவன் வல்லவன். தனக்குக் கிடைக்கும் பெருமையையே அணிகலனாகப் பூண்டவன்.அவனிடம் சென்றால்….
புள்ளினிர் மன்ற எற்றாக் குறுதலின் |
கூத்தன் தான் கூறப் போகும் செய்திகளைத் தொகுத்துக் கூறுதல்
ஆற்றின் அளவும் அசையுநற் புலமும் வீற்றுவளஞ் சுரக்குஅவ நாடுபடு வல்சியும் |
வழியில் அவன் நாடு சுரக்கும் வளங்களையும் பெறலாம். உங்களுக்கு நல்ல நேரம் [புள்ளினிர்] வெயில் பட்டு வாடும் [எல் தாக்குறுதலின்] நீங்கள் இனி வாட வேண்டா. அவன் ஆற்று வளமும், ஓய்வு கொள்ளும் இடமும் உங்களுக்கு ஆறுதல் தரும். அவற்றின் வளத்தால் உணவுப் பொருள்களை வழங்குவதில் பெருமை கொண்டது அவன் நாடு
மலையும் சோலையும் மாபுகல் கானமும் தொலையா னல்லிசை உலகமொடு நிற்பப |
70 |
பலர்புறங் கண்டவர் அருங்கலந் தரீஇப் புலவோர்க்குச் சுரக்கும்அவ நீகை மாரியும் இகழுநர்ப் பிணிக்கும் ஆற்றலும் புகழுநர்க்கு அரசுமுழுது கொடுப்பினும் அமரா நோக்கமொடு தூத்துளி பொழிந்த பொய்யா வானின் |
75 |
வீயாது சுரக்குமவ நாள்மகி ழிருக்கையும் |
நன்னன் தன் அரசாட்சி முழுவதையும் பிறருக்குக் கொடுத்தாலும் நிறைவடையாமல் மேலும் மழை போல வழங்குவதற்காக நாள்மகிழ் இருக்கையில் காத்திருப்பான். அவனது அரண்மனை விலங்குகள் விரும்பி விளையாடும் மலை, சோலை, கானம் ஆகியவற்றுக்கு இடையே இருந்தது. அரசவை நாளெல்லாம் மக்கள் மகிழும் இருப்பிடமாகத் திகழ்ந்தது. அதனை உலகமெல்லாம் காலமெல்லாம் புகழ்ந்துகொண்டேயிருந்தது. பகைவரை வென்று அவர் தந்த வளங்களை மாரிபோல் அவன் புலவர்களுக்கு வழங்கி வந்தான். (மக்கள் தந்த வரிப்பணத்தை நாட்டு நலனுக்குச் செலவிட்டான்.) அவன் தன்னை இகழ்பவர்களை மாற்றித் தன்வயப்படுத்தி விடுவான். புகழ்பவர்களுக்குத் தன் ஆட்சி உரிமையையே கொடுத்தாலும் அவன் மனம் நிறைவடையாது. இன்னும் கொடுக்க ஏதுமில்லையே என்று ஏங்குவான். இடைவிடாமல் பெய்யும் தூறல் மழைபோல் மற்றவர்களுக்கும் வழங்கிக்கொண்டேயிருப்பான்.
நல்லோர் குழீஇய நாநவில் அவையத்து வல்லா ராயினும் புறமறைத்துச் சென்றோரைச் சொல்லிக் காட்டிச் சோர்வின்றி விளக்கி நல்லிதின் இயக்குமவன் சுற்றத் தொழுக்கமும் |
80 |
அவன் அவையில் நல்லவர்களே குழுமியிருப்பர். நாட்டை நல்வழிப்படுத்தும் வழிகளை அவர்கள் கூறுவர். அவனது அவைக்குச் சென்றவர் வல்லவரல்லாதவர்கள் ஆயினும் அதனை மறைத்து அவர்களிடமுள்ள திறமைகளை மட்டும் சொல்லிக் காட்டி நன்மை செய்து அனுப்பி வைப்பர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மலைபடுகடாம் - பத்துப்பாட்டு, அவன், நன்னன், என்றும், அவனது, உடையவன், இலக்கியங்கள், மலைபடுகடாம், பெயர், கண்ணுளர், பத்துப்பாட்டு, இவர்கள், உழவர், அவனிடம், வரும், கொண்டவன், வலிமை, என்னும், உழவு, செய்பவர்கள், மகன், உங்களுக்கு, கொடுத்தாலும், மக்கள், தந்த, நாடு, புள்ளினிர், அறிவு, நன்று, உணர், சேய், மழைபோல், துன்பம், நன்னனை, நல்ல, குளத்தில், நிழலில், விறலியர், கலம்பெறு, கொண்ட, மீமிசை, நல்யாறு, கணவன், பொழியும், சாயல், கானம், இங்கு, சுமந்துகொண்டு, சங்க, சூழ்ச்சி