சிறுபஞ்சமூலம் - பதினெண் கீழ்க்கணக்கு
அறம் நட்டான் நல்-நெறிக்கண் நிற்க, அடங்காப் புறம் நட்டான் புல்-நெறி போகாது! - புறம் நட்டான் கண்டு எடுத்து கள், களவு, சூது, கருத்தினால், பண்டு எடுத்துக் காட்டும், பயின்று. |
26 |
அறத்திற்குப் புறமாகிய பாவவினைகளை யுலகத்தின்கண்ணே நட்டான் சொல்லியடங்காத புல்லிய நெறியிற் போகாதே குற்றமில்லாத அறத்தினைச் சொல்லு நூலினை யுலகத்துள்ளே நட்ட முழுதுணர்ந்த அறிவினாற் சொல்லப்பட்ட நன்னெறியின் கண்ணே நின்றொழுகுக; பாவநெறியினை நட்டவன் ஆராய்ந்தெடுத்துக் கள்ளினையும் களவினையும் சூதினையும் தன் கருத்தினாலே பயின்று பண்டு செய்தாரை எடுத்துக் காட்டுமாதலால்.
கருத்துரை: அறவழி நடப்பவன் தீவழி புகான், தீவழிசெல்லோன் தீத்தொழிற் பழகி அதனாலாகும் பலன்களையெல்லாம் உலக்குக்குக் காட்டுவோன் ஆவன்.
ஆண் ஆக்கம் வேண்டாதான் ஆசான்; அவற்கு இயைந்த மாணாக்கன், அன்பான், வழிபடுவான்; மாணாக்கன் கற்பு அனைத்து மூன்றும் கடிந்தான்; கடியாதான் நிற்பு அனைத்தும், நெஞ்சிற்கு ஓர் நோய். |
27 |
ஒருவகை யாசிரியனாவான் பிரமசரியங்காப்பான், அவனுக்கு இயைந்த மாணாக்கன் அன்பு படுவோனும் வழிபட்டேவியது செய்வானும் என இவ்விரு வரன்றியும், மாணாக்கனாவான் கற்குமளவும் காமம் வெகுளி மயக்கங்களைக் கடிவான், இவையிற்றைக் கடியாதான் நிற்குமளவுந் தன்னாசிரியன் நெஞ்சிற்கு ஒரு நோயாம்.
கருத்துரை: பிரமசரியங் காப்பவன் ஆசிரியனாவான். அவனை அன்பு செய்து வழிபடுவோர் முதலியோர் மாணாக்கராவர்.
நெய்தல் முகிழ்த் துணை ஆம், குடுமி; நேர் மயிரும் உய்தல் ஒரு திங்கள் நாள் ஆகும்; செய்தல், நுணங்கு நூல் ஓதுதல், கேட்டல், மாணாக்கர், வணங்கல், வலம் கொண்டு வந்து. |
28 |
நெய்தல் மொட்டினளவினதாம் மாணாக்கர்க்குக் குடுமி, தலையின்கண் நீண்டமயிரு மண்ணாதொழிவது ஒருதிங்கணாளாகும், இனி அவர்கள் செய்கை ஆசானை வலங்கொண்டுவந்து வணங்குதலும், நூல்களைப் பாடமோதலும், ஓதியவற்றின் பொருள் கேட்டலுமாக மூன்று.
கருத்துரை: மாணாக்கன் குடுமி நெய்தல் மொட்டளவாக இருக்க வேண்டும், அவன் மாதம் ஒருமுறை தலை முழுகலாம்; ஆசிரியரை வணங்குதல் ஓதுதல் கேட்டல் அவனுக்குரிய கடமையாம்.
ஒருவன் அறிவானும் எல்லாம், யாதொன்றும் ஒருவன் அறியாதவனும், ஒருவன் குணன் அடங்க, குற்றம் இலானும், ஒருவன் கணன் அடங்கக் கற்றானும், இல். |
29 |
எல்லாவற்றையும் அறிவானொருவனும், யாதொன்று மறியாதானொருவனும், குணனடங்க வில்லாதானொருவனும், குற்ற மில்லாதானொருவனும், எல்லா நூற்றொகைகளும் ஒழியாமற் கற்றானொருவனும் உலகத்தின்கண் இல்லை.
கருத்துரை: எல்லாவற்றையும், எதுமறியாதவனும் நல்லியல்பேயில்லாதவனும், குற்றமேயில்லாதவனும், எல்லாக் கல்விகளையுங் கற்றவனும் இவ்வுலகில் இல்லை.
உயிர் நோய் செய்யாமை, உறு நோய் மறத்தல், செயிர் நோய் பிறர்கண் செய்யாமை, செயிர் நோய் விழைவு, வெகுளி, இவை விடுவான் ஆயின்,- இழவு அன்று, இனிது தவம். |
30 |
பிறிதோருயிர்க் கொரு நோயுஞ் செய்யாமை, தனக்குப் பிறரால் வந்துற்ற நோயை மறத்தல், கோபத்தால் தான் பிறர்மாட்டு இன்னாதன செய்யாமை, குற்றத்தைச் செய்யு நோயைப்பண்ணுங் காதலையும், மனத்தின்கட் பிறர்மேலுள்ள செற்றத்தையும் விடுவானாயின், அவன் செய்யுந்தவம் இழிவன்றி இன்பத்தைத் தரும்.
கருத்துரை: பிற உயிர்கட்குத் துன்பஞ் செய்யாமை முதலியன மேற்கொண்டு விழைவு வெகுளி முதலியவற்றை விட்டுவிடுவானாயின், அவன் செய்யுந் தவம் இனிமையுடையதே யாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிறுபஞ்சமூலம் - பதினெண் கீழ்க்கணக்கு, செய்யாமை, கருத்துரை, நோய், ஒருவன், மாணாக்கன், நட்டான், இலக்கியங்கள், வெகுளி, சிறுபஞ்சமூலம், குடுமி, அவன், நெய்தல், பதினெண், கீழ்க்கணக்கு, விழைவு, தவம், செயிர், மறத்தல், கேட்டல், இல்லை, எல்லாவற்றையும், அன்பு, எடுத்துக், பண்டு, புறம், பயின்று, இயைந்த, சங்க, நெஞ்சிற்கு, கடியாதான், ஓதுதல்