சிறுபஞ்சமூலம் - பதினெண் கீழ்க்கணக்கு
நட்டாரை ஆக்கி, பகை தணித்து, வை எயிற்றுப் பட்டு ஆர் அணி அல்குலார்ப் படிந்து ஒட்டி, துடங்கினார், இல்லகத்து, அன்பின் துறவாது; - உடம்பினான் ஆய பயன். |
16 |
தம்மோடு நட்புக் கொண்டாரைச் செல்வத்தின்கண் இணயாக்கி, பகையைக் குறைத்து, கூரிய எயிற்றுப்பட்டாரக்கலல்குலாரைச் சேரந்து முயங்கிப் பொருந்தி, அச்சுற்றமாய்த் தொடர்பு பட்டு, முறையாயினார் மாட்டும், தாம் பிறந்த குடியிற் பிறந்தார் மாட்டும் அன்பினானீங்காது இப்பேற்றிப்பட்ட ஐந்தும் உடம்பு பெற்ற தனானாய பயன்.
கருத்துரை: நட்டாரையுயரத்தல், பகைவரைக் தாழ்த்தல், மாதரைச் சேர்தல், அவரிடத்தும் தங்குடியிர் பிறந்தாரிடத்தும் அன்போடிருத்தல் ஆகியவைந்தும், மக்கட் பிறப்பின் பயன்.
பொய்யாமை பொன் பெறினும், கள்ளாமை, மெல்லியார் வையாமை, வார் குழலார் நச்சினும் நையாமை, ஓர்த்து உடம்பு பேரும் என்று, ஊன் அவாய் உண்ணானேல்,- பேர்த்து உடம்பு கோடல் அரிது. |
17 |
பொன்பெற்றானாயினும், பொய் சொல்லாதும், பிறர்பொருளைக் களவு கொள்ளாதும், எளியாரை வையாதும், வார்குழலார் தம்மைக் காதலிப்பினும் தன் மனந்தளராதும், தன்னுடம்பு தளருமென்றோர்ந்து பிறிதொன்றனூனைக் காதலித் தொருவ னுண்ணானாயின் மறித்துப் பிறிதுடம்பு கோடல் அரிது.
கருத்துரை: பொய்யாமை கள்ளாமை முதலியவற்றையுடையவன் பிறப்படையான் என்பது.
தேவரே, கற்றவர்; கல்லாதார் தேருங்கால், பூதரே; முன் பொருள் செய்யாதார் ஆதரே; 'துன்பம் இலேம், பண்டு, யாமே வனப்பு உடையேம்!' என்பர், இரு கால் எருது. |
18 |
நூலைக்கற்றார் தேவரோ டொப்பர், கல்லாதார் ஆராயுங்காற் பூதபசாசுகளோடொப்பர், தமக்கு மூப்பு வருவதற்கு முன்பே பொருளைத்தேடித் தமக்கு வைப்பாக வையாதார் ஒன்று மறியாது ஒரு பற்றின்றித் திரியுமாந்தரோ டொப்பர், பண்டு செல்வமுடையேமாதலால் ஒரு துனபமும் இலோ மென்பாரும், பண்டியாமே யழகியோம் என்பாரும் இருகாலுடைய எருதுகளோ டொப்பர்.
கருத்துரை: படித்தவர் தேவர், படியாதவர் பூதபசாசுகள், முதுமைக்கு இளமையிலேயே பொருள் தேடாதவர் அறிவிலார், முன்பு பொருளுடைமையால் துன்பமற்றோம், முன்பு அழகுடையவரா யிருந்தோம் என்பவர் இரண்டுகால் மாடுகள்.
கள்ளான், சூது என்றும் கழுமான், கரியாரை நள்ளான், உயிர் அழுங்க நா ஆடான், எள்ளானாய், ஊன் மறுத்துக் கொள்ளானேல், ஊன் உடம்பு எஞ் ஞான்றும் தான் மறுத்துக் கொள்ளான், தளர்ந்து. |
19 |
பிறர் பொருளைக் களவு காணாது, சூதினைப் பற்றி காதலியாது, கீழ்மக்களுடன் நட்புக் கொள்ளாது, பிறர் மனந் துன்புறும்படி வன்சொற் சொல்லாது கடைப்பிடியுடையனாய் ஊனுணவை மறுத்து விரும்பானாயின் எஞ்ஞான்று மொழுக்கத்திற் றளர்ந்து மாறிப்பிறந்து ஊனுடம்பினைக் கொள்ளான்.
கருத்துரை: கள்ளாமலும் சூதாடாமலும் கயவருடன் நட்புக் கொள்ளாமலும் பிறர் வருந்தவன்சொற் கூறாமலும் ஊனுண்ணாமலும் ஒருவ னிருப்பானாயின் அவன் மீட்டும் பிறக்கமாட்டான் என்பதாம்.
பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார், மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா, விதையாமை நாறுவ வித்து உள; மேதைக்கு உரையாமைச் செல்லும் உணர்வு. |
20 |
பூவாதே காயக்கும் பலா முதலாயின மரமுள, நன்மையை அறிவார். ஆண்டுகளால் மூத்திலராயினும் மூத்தாரோடொப்பர், நூல்கற்று வல்லரும் அப்பெற்றியர், நிலத்தில் விளையாது முளைக்கும் வித்து முள, மதியுடையவர்க்குப் பிறர் அறிவியாமலே செல்லும் உணர்வு.
கருத்துரை: பூவாது காய்க்கு மரம்போல் ஆண்டுகளால் மூவாதாரும் அறிவினால் மூத்தாராவர். நூல்வல்லாரும் அங்ஙனமே பாத்திகட்டி விதைக்காமலே முளைக்கிற விதைபோல பிறர் அறிவிக்காமலே அறிவுடையார்க்கு அறிவு தோன்றும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிறுபஞ்சமூலம் - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்துரை, பிறர், இலக்கியங்கள், உடம்பு, சிறுபஞ்சமூலம், கீழ்க்கணக்கு, பதினெண், நட்புக், டொப்பர், பயன், கொள்ளான், முன்பு, மறுத்துக், வித்து, செல்லும், உணர்வு, தமக்கு, ஆண்டுகளால், அறிவார், பூவாது, களவு, பொய்யாமை, மாட்டும், பட்டு, சங்க, கள்ளாமை, கோடல், பொருள், கல்லாதார், அரிது, பண்டு