அரசூர் பஞ்சாயத்து
4
கடிதம் ஒன்று வந்தது. "ரூபாய் நூறு மணியார்டர்
செய்திருக்கிறேன்" என்ற வார்த்தைகளை படித்தபோது அமிருதத்தால் நம்பவே
முடியவில்லை. உண்மையாகவே அப்படி எழுதியிருக்கிறதாவென்று திரும்பி திரும்பிப்
படித்தாள். பிறகு ஓடிப்போய்த் தபால்காரனை வழிமறித்துக் கேட்டாள். "கடிதம்
முதலில் வந்துவிடும். பணம் மெதுவாய்த்தான் வரும். பதினைந்து நாள் ஆகும்"
என்று தபால்காரன் சொன்னான்.
ஒரு வாரத்திற் கெல்லாம் குழந்தைக்கு வைசூரி வார்த்தது. அமிருதம் பெரிதும் கவலைப்பட்டாள். பணம் வந்ததும் ஊர்க் கோயில்களுக்கெல்லாம் அபிஷேகம் செய்து வைப்பதாய் வேண்டிக் கொண்டாள். ஒவ்வொரு நாள் காலையும் தூக்கம் விழித்ததும், 'இன்று பணம் வராதா?' என்று எண்ணிக் கொண்டே எழுந்திருந்தாள்.
வெள்ளிக்கிழமை வந்தது. "ஐயோ! இன்று பணம் வந்தால் மாரியம்மனுக்கு மாவிளக்கு ஏற்றலாமே?" என்று நினைத்தாள். தபால்காரன் வருகிறானாவென்று எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தாள். கடைசியாக, உச்சி வேளையில் தபால்காரன் வந்தான். மணியார்டரும் கொண்டு வந்தான். அமிருதம் தன் கலி தீர்ந்துவிட்டது, தான் தெய்வங்களை வேண்டியதெல்லாம் வீண் போகவில்லையென்று எண்ணினாள்.
தபால்காரன் சாட்சி போடுவதற்கு ஒருவனைக் கூட அழைத்து வந்திருந்தான். அவன் அந்த ஊர்க் கள்ளுக்கடைக் குத்தகைக்காரன். தபால்காரன் அமிருதத்தினிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு குத்தகைக்காரனிடம் சாட்சியும் வாங்கிக்கொண்டான். பிறகு, தொண்ணூற்றெட்டு ரூபாய் எண்ணிக் குத்தகைக்காரனிடம் கொடுத்தான். பிறகு அமிருதத்தைப் பார்த்து, "நூறு ரூபாய் வந்தால் ஐந்து ரூபாய் வாங்குவது வழக்கம். நீங்கள் ஏழையானதால் இரண்டு ரூபாய் எடுத்துக் கொண்டேன்" என்றான் தபால்காரன்.
அமிருதம் அவர்கள் செய்தது, சொன்னது, ஒன்றும் புரியாமல், பணம் பெற்றுக் கொள்வதற்காகக் கையை நீட்டினாள்.
குத்தகைக்காரன் "அம்மா! இது எனக்குச் சேர வேண்டிய பணம். உன் புருஷன் எனக்கு நாற்பது ரூபாய்க்குப் பத்திரம் எழுதிக் கொடுத்தான். வட்டியும் முதலும் சேர்ந்து இப்பொழுது நூற்றுப் பத்து ரூபாய் ஆகிறது. தொண்ணூற்றெட்டு ரூபாய் போனால் பாக்கி பன்னிரண்டு ரூபாய்" என்று சொன்னான்.
இடி விழுந்ததுபோல் அமிருதம் திகைத்துப் போனாள். அவள் தலை கிறுகிறுவென்று சுழன்றது. எங்கேயோ அவளையே உயரத் தூக்கிக்கொண்டு போவதுபோல் இருந்தது. அப்போது குத்தகைக்காரன், "உன்னை அடியோடு வயிற்றிலடிக்க எனக்கு மனமில்லை. இதை வாங்கிக் கொள்ளு" என்று சொல்லி, நாலு ரூபாய் எடுத்துக் கொடுக்க வந்தான். அமிருதத்துக்கு அப்போதுதான் நிலைமை என்னவென்பது கொஞ்சம் விளங்கிற்று. "ஐயோ! இதென்ன அநியாயம்! இந்த ஊரிலே கேட்பாரில்லையா?" என்று அவள் கூச்சலிட்டாள்.
கூக்குரல் போட்டதும் கூட்டம் சேர்ந்துவிட்டது. ஊர் நாட்டாண்மைக்காரரில் ஒருவன் வந்தான். "இதைப் பஞ்சாயத்துப் பண்ணித்தான் தீர்க்க வேண்டும். அதுவரையில் பணம் என்னிடம் இருக்கட்டும்" என்று சொல்லி வாங்கிக் கொண்டான். அன்று சாயங்காலம் ஊர்ச் சாவடியில் பஞ்சாயத்துக் கூடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
அந்த ஊரில் வழக்க மென்னவென்றால், எந்த வழக்குக்காகப் பஞ்சாயத்துக் கூடினாலும் வாதி பிரதிவாதி இரண்டு பேரும் சேர்ந்து பஞ்சாயத்துக்காரர்களுக்காகக் கள்ளு வாங்கி வைத்துவிட வேண்டும். வெள்ளையப்பன் உள்ளே போனால் தான் நியாயம் நன்றாய் விளங்குமென்பது அந்த ஊர்ப் பிரமுகர்கள் அபிப்பிராயம். ஆனால் இந்த வழக்கிலே வாதி ஏழைப் பெண்பிள்ளை யானதினாலும், பிரதிவாதி கள்ளுக் கடைக்காரனாதலாலும் பிரதிவாதியே எல்லாருக்கும் கள்ளு 'சப்ளை' செய்ய வேண்டியதென்று தீர்மானித்தார்கள்.
ஊர்ச் சாவடியில் பஞ்சாயத்துக் கூடிற்று. மொந்தைகள் ஏராளமாய் உருண்டன. பஞ்சாயத்துக்காரர்களுக்கு மட்டுமின்றி வேடிக்கை பார்க்க வந்தவர்களுக்குங்கூட அன்று வெகு 'மஜா'. நெடு நேரம் நியாயம் பேசியான பிறகு, பத்திரம் காலாவதியாகி இருந்தாலும் வாங்கிய கடனைக் கொடுக்கத்தான் வேண்டுமென்றும், ஆகையால் பணம் கள்ளுக் குத்தகைகாரனுக்கே சேர வேண்டுமென்றும், இருந்தாலும் அமிருதத்தின் ஏழ்மையை உத்தேசித்து, அவளுக்குப் பத்து ரூபாய் கொடுத்து விட்டு 88 ரூபாய் அவன் எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும், பத்திரத்தைக் காது கிள்ளி அவளிடம் கொடுத்து விட வேண்டுமென்றும் பஞ்சாயத்து சபையார் தீர்ப்பளித்தார்கள்.
அமிருதத்தின் அம்மை வார்த்த பையன் நாலு நாளைக்கெல்லாம் இறந்து போனான். பஞ்சாயத்துச் செய்தவர்கள் உள்பட ஊரார் மிகவும் இரக்கப் பட்டுப் பொதுச் செலவில் பிரேதத்தை எடுத்து அடக்கம் செய்தார்கள். அன்றைய தினமே அமிருதத்துக்கு ஒரு கடிதம் வந்தது. சந்திரகாசன் மிகவும் நீளமாய் எழுதியிருந்தான். ஆனால் கரை காணாத துக்கத்தில் மூழ்கியிருந்த அமிருதத்துக்குப் பின்வரும் விஷயங்கள் தான் அதில் புலப்பட்டன:- "பணம் அனுப்பியதும், ஊருக்கு வந்து உன்னையும் குழந்தையையும் பார்க்க வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று - வெறி பிடித்தாற்போல் இருந்தது - கையில் பணமில்லை - ஐம்பது ரூபாய் திருடிக் கொண்டு கிளம்பினேன் - பிடித்து ஜெயிலில் போட்டு விட்டார்கள் - இரண்டு வருஷம் கடுங்காவல் - இதுவும் நல்லதுதான் - ஜெயிலில் கள்ளு சாராயம் கிடையாது - இரண்டு வருஷத்தில் மறந்து விடுவேன் - விடுதலையானதும் உன்னைப் பார்க்க ஊருக்கு ஒரே ஓட்டமாய் ஓடி வருவேன்."
*****
மறுநாள் அமிருதம் காணாமற் போனாள். அரசூருக்கு எட்டு மைல் கிழக்கே ஒரு ஸ்திரீயின் பிரேதம் ஆற்றில் மிதந்து வந்து ஒதுங்கிற்று. அவ்வூர் கிராமாதிகாரி அதை எடுக்க ஏற்பாடுகள் செய்துவிட்டு, விஷயத்தைப் போலீசுக்குத் தெரியப் படுத்தினார்.
*****
இரண்டு வருஷம் கழித்துச் சந்திரகாசு வெகு ஆவலாக ஊருக்குத் திரும்பிவந்து சேர்ந்தபோது தன் குடிசை இருந்த இடத்தில் குப்பைமேடு போடப்பட்டிருப்பதைக் கண்டான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அரசூர் பஞ்சாயத்து - Arasur Panchayathu - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - ரூபாய், பணம், தபால்காரன், அமிருதம், இரண்டு, பிறகு, வந்தான், வேண்டுமென்றும், எடுத்துக், பஞ்சாயத்துக், கள்ளு, பார்க்க, தான், கொண்டு, வந்தது, கடிதம், அந்த, குத்தகைக்காரன், வாங்கிக்