அரசூர் பஞ்சாயத்து
1
அமிருதம் அரசூர் சின்னசாமிப் படையாச்சியின்
மூத்த தாரத்து மகள். சின்னசாமிப் படையாச்சி கொஞ்சம் சொத்துக்காரன். ஆகையால்
முதல் தாரம் செத்துப் போனதும் இரண்டாவது மனைவி கலியாணம் செய்து கொண்டான்.
இவளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. கொஞ்ச காலத்துக்கெல்லாம் சின்னசாமிப்
படையாச்சி இறந்து போனான். அப்போது அமிருதத்துக்கு வயது பதினாலு.
காமாட்சி - இதுதான் சிறிய தாயார் பெயர் - அமிருதத்தைப் பிரியமாய் வளர்த்து வந்தாள். அமிருதம் பார்வைக்கு லக்ஷணமாயிருப்பாள். பள்ளிக்கூடத்தில் நாலாவது வரையில் படித்திருந்தாள். அவளைத் தன் தம்பி வைத்தியலிங்கத்துக்குக் கலியாணம் செய்து வைக்க வேண்டுமென்று காமாட்சிக்கு ஆசை.
அமிருதத்துக்குச் சொந்தத் தாய் மாமனின் மகன் சந்திரகாசன். அமிருதமும் அவனும் குழந்தை பிராயம் முதல் கூடி விளையாடியவர்கள். அமிருதத்தின் தாயார் உயிர் வாழ்ந்தபோது சந்திரகாசு சில சமயம் அரசூருக்கு வருவான். சில சமயம் அமிருதம் சேமங்கலத்திற்குப் போவாள். அப்போதிருந்தே அமிருதத்தைச் சந்திரகாசனுக்குக் கொடுப்பதாகப் பேசி வந்தார்கள். அமிருதத்தின் தாயார் அடிக்கடி இதைப்பற்றிச் சொல்லுவாள். குழந்தைக்குப் பல் முளைப்பதற்கு முன்னிருந்து, - ஏன்? சில சமயம் கர்ப்பத்திலிருக்கும்போதே - கல்யாணப் பேச்சுப் பேசுவது நம் ஊர்களில் வழக்கமல்லவா?
வெகு நாளாகப் பழகி நேசங்கொண்ட சந்திரகாசனைத்தான் கல்யாணம் செய்து கொள்வேனென்று அமிருதம் பிடிவாதம் பிடித்தாள். வைத்தியலிங்கம் அவளுக்குத் திருட்டுத் தாலி கட்டிவிட எண்ணினான். ஆனால் காமாட்சி இதற்கு இடங் கொடுக்கவில்லை. அவள் அமிருதத்துக்கு எவ்வளவோ போதனை செய்து பார்த்தாள். ஒன்றும் பயன்படாமற் போகவே கடைசியில் அவள் சொன்னதாவது:- "நல்லது; உன் இஷ்டப்படியே செய். உன் மாமன் மகனையே கட்டிக்கொள். உங்கப்பனை உத்தேசித்துக் கல்யாணம் மட்டும் செய்து கொடுத்து விடுகிறேன். அதற்குப் பிறகு இந்த வீட்டு வழி நீ அடி எடுத்து வைக்கக்கூடாது. செருப்பாலடித்த சல்லிகூடக் கொடுக்க மாட்டேன். அப்புறம் என்மீது குறைப்படாதே. சந்திரகாசு கள்ளுக் குடிக்கிறான் என்று சொல்லுகிறார்கள். அவனுக்குச் சொத்து கிடையாது. ஓட்டைக்குச்சு வீடுதான் ஆஸ்தி. யோசித்து முடிவு செய்" என்றாள்.
அரசூரில் பாதிப் பேருக்குமேல் குடிப்பவர்கள். ஆகையால் சந்திரகாசு கள்ளுக் குடிப்பது அமிருதத்துக்குப் பெருங் குற்றமாகத் தோன்றவில்லை. இருந்தாலும் அவளுக்குக் கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருந்தது. இந்தக் குற்றம் அவன்மீது சிறிய தாயார் சொல்லும்படியாயிற்றே என்று எண்ணினாள். குடிக்காமலிருந்தால் நன்றாகத்தான் இருக்கும். எப்படியும் கல்யாணம் ஆகிவிட்டால் குடியை விடும்படி செய்துவிடலாம் என்று நினைத்தாள். கல்யாணம் ஆயிற்று.
*****
அமிருதம் ரொம்ப ரோஸக்காரி. சிற்றன்னையின் வார்த்தை அவள் மனதில் நன்றாய்ப் பதிந்திருந்தது. கல்யாணத்திற்குப் பிறகு அவள் தன் பிறந்தகத்தை எட்டிப் பார்க்கவே இல்லை. தம்பியின் கல்யாணத்துக்கு மட்டும் ஒரே ஒரு தடவை போனாள். அப்போது அவளுக்கு ஒரு பட்டுச் சேலை கொடுத்தார்கள். கல்யாணத்தன்று மாத்திரம் அதை உடுத்திக்கொண்டு உடனே திருப்பிக் கொடுத்துவிட்டாள். தம்பியும் சிறிய தாயாரும் எவ்வளவோ கெஞ்சியும் அவள் அதைத் தன்னுடன் எடுத்துவரவில்லை.
அவர்களுடைய வாழ்க்கை கூடியவரை சந்தோஷமாகவே இருந்து வந்தது. சந்திரகாசு ஒரு ஏர் பயிர்ச் செலவு செய்து வந்தான். சாகுபடி இல்லாத காலத்தில் கூலி வேலைக்குப் போவான். ஏதோ அரை வயிற்றுக் கஞ்சிக்குக் கிடைத்து வந்தது. ஏழை வீட்டில் பிறந்த அவன் பள்ளிக்கூடம் போனதில்லை. அமிருதத்தின் சகவாசத்தால் அவனுக்கு இப்போது படிப்பில் ருசி உண்டாயிற்று. கொஞ்ச காலம் இரவுப் பள்ளிக் கூடத்துக்குப் போய் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டான். அமிருதமும் சில சமயம் தெரிந்த வரையில் சொல்லிக் கொடுத்தாள். கள்ளுக்கடை ஒன்றுதான் அவர்கள் சந்தோஷத்துக்குத் தடையாயிருந்தது.
ஆனமட்டும் முயன்றும் சந்திரகாசுவினால் குடியை நிறுத்த முடியவில்லை. சில சமயம் ஒரு வாரம் இரண்டு வாரம் பல்லைக் கடித்துக் கொண்டிருப்பான். அப்புறம் ஒருநாள் புத்தி பேதலித்துவிடும். ஆயினும் அவன் பெருங் குடிகாரனாகவில்லை. அமிருதத்தின் அன்பு அவனை அடியோடு படுகுழியில் விழாமல் காப்பாற்றி வந்தது.
பிறகு அவர்களுக்குக் குழந்தை பிறந்தது. அன்று முதல் சந்திரகாசு குடியை எப்படி விடுவது. பணம் எப்படிச் சேர்ப்பது என்று ஓயாமல் சிந்தித்து வந்தான். ஒரு நாள் முருகப்பக் கங்காணி சேமங்கலத்துக்கு வந்ததும் கினாங்குக்குப் போவதுதான் வழியென்று தீர்மானித்து விட்டான்.
1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அரசூர் பஞ்சாயத்து - Arasur Panchayathu - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - செய்து, சமயம், அவள், அமிருதம், சந்திரகாசு, கல்யாணம், அமிருதத்தின், தாயார், குடியை, வந்தது, பிறகு, சின்னசாமிப், சிறிய, குழந்தை