தமிழ் - தமிழ் அகரமுதலி - முகவுரை
நிகண்டுகளும் அகராதிகளும்:
நிகண்டுகள் மனப்பாடம்செய்து போற்றுவதற்காகவே அமைந்தவை. எனவேதான், அவையெல்லாம் பல்வேறு வகையான பாடல்களில் அமைக்கப்பெற்றன. இவற்றில் ஒரு சொல்லின் பொருளை அறியப் பாடல்களின் சொற்பொருள்களும் நன்கு உணரப்படவேண்டும். சொற்பொருளை மட்டுமல்லாது பாடல்களில் ஓசை நிரப்புவதற்காகச் சேர்த்த அடைமொழிகள் அசைச்சொற்கள் முதலியனவும் இடைப்பிறவரல்போன்று தடையாய் நிற்கும் . மனப்பாடம் செய்யும் பழக்கம் குறைந்துவரவே நிகண்டுகளைக் கற்றுப்போற்றுவதும் குறைந்துபோயிற்று .
நிகண்டுகளில் தெய்வப்பெயர் , மக்கட்பெயர் முதலியவாகப் பல்வேறு தொகுதிகளில் சொற்பொருள்கள் விரவிக் கிடக்கின்றன . ஆதலால், ஒரு சொல்லுக்குப் பொருள் தெரிய வேண்டுமாயின் அச் சொல் எந்தத் தொகுதியைச் சேர்ந்தது என்பது தெரியவேண்டும் . அவ்வாறு தெரிந்த பின்னும் குறிப்பிட்ட தொகுதியிலுள்ள பாடல்களையெல்லாம் துருவிப்பார்த்தே அச் சொல்லைக் காணவேண்டும் . நிகண்டு மனப்பாடம் இல்லாவிடின் குறித்த ஒரு சொல்லையோ பொருளையோ அத்துணை எளிதில் கண்டுகொள்ள இயலாது . இத்தகு பெருமுயற்சி நிகண்டுவழிச் சொற்பொருள் காண்பதற்கு வேண்டியிருக்கிறது . அகராதியோ அப்படியன்று . ஒவ்வொரு சொல்லும் அ , ஆ முதலிய நெடுங்கணக்கு வரிசையிலேயே அமைக்கப்பட்டிருக்கும் . எனவே , எழுத்துநிரல் தெரிந்தார் அகராதிகளில் சொற்பொருள்களை எளிதில் கண்டு கொள்ளலாம் . எனவேதான் , நிகண்டுகள் இருக்கவும் அகரமுதலிகள் சிறியவும் பெரியவுமாய்ப் பல தோன்றலாயின.
முதல் உரைநடை அகரமுதலி:
முதன்முதலாக உரைநடையில் சொற்பொருள் விளக்கங்களைக்கொண்டு தோன்றிய அகரமுதலி சதுரகராதி . இதனை ஆக்கியவர் இத்தாலி தேசத்திலிருந்து கிறித்தவ சமயம் பரப்பத் தமிழ்நாட்டுக்கு வந்த பெஸ்கி பாதிரியாராவார் . இவர் தமிழ்நாட்டுக்கு வந்தபின் தமிழைத் தக்க புலவர் துணையுடன் கற்றுப் பெரும்புலவராய்ச் செய்யுளிலும் உரைநடையிலும் தம் சமயச்சார்பான பல நூல்களை இயற்றினார் . மேலைநாட்டிலிருந்து இங்கு வரும் பாதிரிமார்களுக்கு நல்ல தமிழ்நடையையும் பேச்சுவழக்கு முறையினையும் அறிவுறுத்த முறையே செந்தமிழ் , கொடுந்தமிழ் என்னும் நூல்களை ஆக்கியுள்ளார் . பிறமொழியாளர் தமிழ் கற்கும் வகையில் தமிழ்-இலத்தீன் அகராதி , தமிழ்-போர்ச்சுகீசு அகராதிகளையும் தொகுத்து அமைத்தார். தேம்பாவணிக் காவியத்தையும், திருக்காவலூர்க் கலம்பகம், கித்தேரி அம்மாள் அம்மானை முதலிய சிற்றிலக்கியங்களையும் , தொன்னூல் விளக்கம் என்னும் ஐந்திலக்கண நூலையும் தமிழில் படைத்தளித்தார் . உரைநடை நூல்கள் மிகுதியாயில்லாத அந் நாளில் கிறித்தவ சமய விளக்கமான பல நூல்களையும் படைத்துள்ளார். ' அவிவேக பூரண குரு கதை ' என்னும் நகைச்சுவை நிரம்பிய கதைநூலையும் தந்துள்ளார் . இதிலுள்ள கதைகள் இளைஞரும் முதியரும் கற்று இன்புறுதற்குரியன .
இவ்வாறாகத் தமிழுக்குப் பலவகையான ஆக்கப்பணிகள் புரிந்துவந்த பெஸ்கி பாதிரியார் தமிழ் - தமிழ் அகரமுதலி ஒன்றையும் படைத்தளித்துள்ளார் . நிகண்டுகளிலே செய்யுள் வடிவில் அமைந்திருந்த சொற்பொருள் விளக்கங்களை உரைநடையில் மாற்றி அகராதியாக 1732ஆம் ஆண்டு அமைத்தார். திவாகரம், பிங்கலம், உரிச்சொல் நிகண்டு, சூடாமணி நிகண்டு முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ள இவர், தாம் தொகுத்து முறைப்படுத்திய அகராதிக்குச் ' சதுரகராதி ' எனப் பெயரிட்டார் .
சதுரகராதி:
சதுரகராதி என்றால் நான்கு வகையான அகராதிகள் அடங்கிய தொகுதி என்பது பொருள் . முதலாவது உள்ளது பெயரகராதி . இதில் ஒரு சொல்லுக்குரிய பல பொருள்களும் தரப்பட்டுள்ளன . இரண்டாவது பொருளகராதி . இதில் தெய்வப் பெயர் , மக்கட்பெயர் முதலிய பொருட்பெயர்களை அகரநிரலில் வைத்து அவ்வப் பொருட்கு உரிய பல பெயர்களும் அகரநிரலில் சுட்டப்பட்டுள்ளன . மூன்றாவதாகத் தொகையகராதியில் இருசுடர் , முக்குணம் என்றாற் போல எண்தொகையாய் வரும் பொருள்களுக்குரிய விளக்கங்கள் அகரநிரலில் அமையக் காணலாம் .
நான்காவதான தொடையகராதியில் செய்யுள்களில் வரும் எதுகைத் தொடர்களை அகரநிரலில் தருகின்றார் . இதில் குறிற்கீழெதுகை , நெடிற்கீழெதுகை என இருபகுதி உண்டு . இவற்றில் படித்தல் , பிடித்தல் , பொடித்தல் , வடித்தல் , முடித்தல் என்றாற்போலவும் ஊராண்மை , ஏராண்மை , பேராண்மை என்றாற்போலவும் சொற்களை அமைத்துப் பொருளும் சுட்டியுள்ளார் . இப் பகுதி சூடாமணி நிகண்டில் ககர எதுகை முதல் னகர எதுகை வரையிலும் சொற்களை எதுகையடைவில் கோத்துப் பொருள் விளக்கிய பான்மையில் உள்ளது .
இந்தச் சதுரகராதி 18 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டபோதிலும் முழுமையாய் அச்சில் வந்தது 19ஆம் நூற்றாண்டில் 1824 ஆம் ஆண்டிலேயே ஆகும் . இந்த அகராதிக்குக் காலந்தோறும் பல பதிப்புகள் - பத்துப் பதிப்புகளுக்கு மேல் - வந்துள்ளன . பின்னால் வளர்ந்து பெருகிய தமிழ் - தமிழ் அகரமுதலிகளுக்கு எல்லாம் மூலநூலாய் விளங்குவது சதுரகராதியே .
மானிப்பாய் அகராதி:
சதுரகராதிக்கு அடித்துவைத்துப் போற்றத்தக்க பேரகராதி , 1842 ஆம் ஆண்டில் வெளிவந்த ' யாழ்ப்பாணத்து அகராதி ' என்றும் ' மானிப்பாய் அகராதி ' என்றும் சொல்லப்பெறும் அகராதியாகும் . இதனைத் தொகுத்து அளித்தவர் சந்திரசேகர பண்டிதராவார். இவர் தம் அகராதிக்குப் 'பெயரகராதி' என்றே பெயர் சூட்டினார் . ஏனென்றால் , இது சதுரகராதியின் முதல் அகராதியாகிய பெயரகராதியின் விரிவேயாகும் . இந்த அகராதி யாழ்ப்பாணத்துக்குச் சேர்ந்த மானிப்பாய் அமெரிக்க மிசியோன் அச்சுக்கூடத்தில் அச்சிற் பதிப்பிக்கப்பட்ட காரணத்தால்தான் ஊர்ப்பெயரை முன்னிட்டு முன்னர்ச் சுட்டியவாறு இந்த அகராதியை வழங்கலாயினர் .
இதில் சதுரகராதி முழுமையிலும் இடம்பெற்ற சொற்களைவிட நான்கு மடங்குச் சொற்கள் - 58,500 சொற்கள் - அடங்கியுள்ளன . எனவே , இஃது ஒரு பெரிய அகராதியேயாகும் . இதில் பொருள் , தொகை , தொடை அகராதிகள் இல்லை . ஆயினும் , பின்னர் அச்சிட்டோர் சதுரகராதியில் உள்ளபடி அவற்றையும் அச்சிட்டுச் சேர்த்து இணைப்பாராயினர் . பின்னர் வந்த தமிழ் - தமிழ் அகரமுதலிகள் பெயரகராதியை விரிவுபடுத்தியபோதிலும் ஏனைய மூன்று பகுதிகளையும் விரிவுபடுத்தாது சதுரகராதியுற் கண்டபடியே உடன்சேர்த்துத் தருவாராயினர் .
பின்வந்த தமிழ் தமிழ் அகரமுதலிகள்:
பின்வந்த தமிழ்-தமிழ் அகரமுதலிகள் எல்லாம் மானிப்பாய் அகராதியின் விரிவேயாகும் . மானிப்பாய் அகராதிக்குக் களத்தூர் சாமி வேதகிரி முதலியார் ஓர் அனுபந்த அகராதியைச் சேர்த்தார் . இதில் ஏறத்தாழ 6,500 சொற்கள் காணப்படுகின்றன . இதன்பின் காஞ்சிபுரம் - இராமசாமி நாயுடு மானிப்பாய் அகராதியுடன் வேதகிரி முதலியாரின் அனுபந்த அகராதியையும் சேர்த்து விரிவுபடுத்தினார் ; தாமும் பற்பல புதுச் சொற்களை உடன் சேர்த்தார் . இவர் தொகுத்த அகரமுதலி ' பேரகராதி ' என்னும் பெயருடன் 1893 ஆம் ஆண்டுக்குள் இருபதிப்புகளைப் பெற்றுள்ளது . யாழ்ப்பாணத்து மேலைப் புலோலி வித்துவான் நா.கதிரைவேற்பிள்ளை என்பார் 1899-ல் ' தமிழ்ப் பேரகராதி ' என்னும் பெருந்தொகுப்பினைக் கொண்டுவந்தார் . இது இராமசாமி நாயுடுவின் பேரகராதியின் விரிவு . இவர் முந்திய அகராதிகளில் இடம் பெறாத பல நூல்களிலிருந்து தெரிந்தெடுத்த புதுச் சொற்களுக்கு உடுக்குறி (*) இட்டுக் காட்டியுள்ளார் .
இதனை மேலும் புதுக்கித் தமிழ்ப் பேரகராதியை 1901-ல் இவர் மீண்டும் வெளியிட்டார் . 1905-ல் இரண்டாம் பதிப்பும் வந்துள்ளது .
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முகவுரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், தமிழ், இவர், இதில், மானிப்பாய், சதுரகராதி, அகராதி, என்னும், அகரநிரலில், அகரமுதலி, அகரமுதலிகள், பொருள், சொற்கள், நிகண்டு, சொற்களை, பேரகராதி, தொகுத்து, வரும், முதலிய, சொற்பொருள்