பொரும்பாணாற்றுப்படை - பத்துப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
நூல்
இசைவாணனை அக்காலத்தில் பாணன் என்றனர். பாணனது குடும்பத்திலுள்ள அனைவரும் இசைத்தமிழை வளர்ப்பதில் இன்பம் கண்டனர். வறுமைக் காலத்தில் அவர்களது பிழைப்பே இசையால்தான் நடந்துவந்தது. பேரியாழ் மீட்டுபவன் பெரும்பாண். பொரும்பாணன் தொண்டைமானிடம் ஆற்றுப்படுத்தப்படுகிறான். அவன் தன் யாழை இடப்பக்கத் தோளில் மாட்டிக்கொண்டு செல்கிறான். அவனது யாழின் உறுப்புக்கேஃ எப்படி இருந்தன என்பதை இந்தப் பகுதி காட்டுகிறது.
பாணனது யாழின் வருணனை
அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப் பகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பருதி காய்சினந் திருகிய கடுந்திறல் வேனிற் பாசிலை யொழித்த பராஅரைப் பாதிரி வள்ளிதழ் மாமலர் வயிற்றிடை வகுத்தத |
5 |
னுள்ளகம் புரையு மூட்டுறு பச்சைப் பரியரைக் கமுகின் பாளையம் பசும்பூக் கருவிருந் தன்ன கண்கூடு செறிதுளை யுருக்கி யன்ன பொருத்துறு போர்வைச் சுனைவறந் தன்ன விருடூங்கு வறுவாய்ப |
10 |
பிறைபிறந் தன்ன பின்னேந்து கவைக்கடை நெடும்பணைத் திரடோண் மடந்தை முன்கைக் குறுந்தொடி யேய்க்கும் மெலிந்துவீங்கு திவவின் மணிவார்ந் தன்ன மாயிரு மருப்பிற் பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின் |
15 |
றொடையமை கேள்வி யிடவயிற் றழீஇ |
கேள்வி (யாழ்) - நாம் எடுத்துக்கொண்ட பாடலில் கூறப்படும் பாணன் தனது யாழை இடப்பக்கம் தொங்கவிட்டுக் கொண்டிருந்தான். பாடல்களைப் பாடும்போது இசையைத் தொடுத்தமைத்துக் கேட்கச் செய்வதால் யாழைத் தொடையமை கேள்வி என்றனர். வயிறு - பாதிரிமரம் வேனில் காலத்தில் தன் பசுமையான இலைகள் உதிர்ந்து போய் பூத்துக் குலுங்கும் காட்சி யாழின் வயிற்றுப் பகுதியில் வரையப்பட்டிருந்தது. வேனில் காலத்தின் மலர்ச்சியைக் காட்டிக் கொண்டு தொடங்கும் இந்தப் பாடல் பாணன் வாழ்வும் மலரப் போவதைக் குறிப்பால் உணர்த்துகின்றது. அகன்ற பெரிய விசும்பு. அதில் பாய்ந்து கொண்டிருந்த இருளை யெல்லாம் குடித்துவிட்டுப் பகலை வீசிக்கொண்டு பல்கதிர் பருதி எழுந்து கொண்டிருந்த வேனில் காலம் அது. கதிரவனின் வாயில் சினம். அது பாதிரியின் இலைகளை உதிர்த்தது. ஆனால் அதில் மலர்ந்த பூக்கள் வெயிலின் சின வலிமையைத் திருகி வீசி எறிந்து கொண்டிருந்தன. பாதிரிப்பூ பெரியது. வளமான இதழ்களைக் கொண்டது. கண்கூடு செறிதுளை - பாக்குப் பாளையின் இளம்பூக்கள் கருவிலிருந்து வெளிவருவதுபோல் யாழின் நரம்புக்கண் கூடும் துளைகள் நரம்புகளால் முடுக்கப்பட்டிருந்தன. அடி - பருத்திருக்கும் பச்சைப் பாக்குமரம் போல மீட்டும்போது யாழ் குந்தும் அடிப்பகுதி இருக்கும் போலும். போர்வை - உருகிய நீர்மம் பொருளோடு பொருந்தி வழிவது போல் யாழின்மீது போர்த்தப்பட்டிருந்த போர்வை யாழின் உருவத்தைப் புலப்படுத்துவது போல் அதன்மீது படிந்து கிடந்தது. வறுவாய் - அதன் திறந்த வாயானது நீர் இல்லாமல் வறண்டுபோன சுனைபோல இருண்டு காணப்பட்டது. சவைக்கடை - காய்ந்து போயிருந்த அதன் வளைவுத் தண்டு பிறந்த நாளில் தெரியும் பிறை நிலாவைப் போல வளைந்திருந்தது. திவவு - நீண்ட மூங்கில்போல் திரண்டிருக்கும் தோளையுடைய பருவப் பெண்ணின் முன்கையில் இருக்கும் வளையல்களைப் போல யாழின் திவவுப் பூண்கள் அமைந்திருந்தன. நரம்பு - மணியை நீட்டி வைத்தாற் போல நரம்பைக் கட்டும் அதன் சிற்றாணிக் குச்சிகள் யாழில் செருகப்பட்டிருந்தன. முறுக்கு இல்லாமல் பொன்னில் நீட்டிய கம்பி போன்ற நரம்புகள் யாழில் தொய்வு இல்லாமல் இறுக்கிக் கட்டப்பட்டிருந்தன. விளக்கம் விபுலானந்த அடிகள் எழுதியுள்ள யாழ்நூலில் காணலாம்.
பாணனது வறுமை
வெந்தெறற் கனலியொடு மதிவலந் திரிதருந் தண்கடல் வரைப்பிற் றாங்குநர்ப் பெறாது பொழிமழை துறந்த புகைவேய் குன்றத்துப் பழுமரந் தேரும் பறவை போலக். |
20 |
கல்லென் சுற்றமொடு கால்கிளர்ந்து திரிதரும் புல்லென் யாக்கைப் புலவுவாய்ப் பாண! |
ஆற்றுப்படுத்தும் புலவர் பாணனே கேள் என்று கூறத்தொடங்குகிறார். உன் உடம்பு புல்லின் துரும்பு போல இளைத்துள்ளது. இந்த நிலையில் உன் சுற்றத்தாரோடு கால்போன பக்கமெல்லாம் திரிகிறாய். உன் வாயிலிருந்து புலவு வாடை வருகிறது. உண்ண உணவு இல்லையே என்று பல்லைக்கூடத் துளக்க மறந்துவிட்டாய் போலும். ஞாயிறும் திங்களும் வலம் வந்து கொண்டிருக்கும் கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் உன்னையும். உன் குடும்பத்தையும் தாங்கிப் பாதுகாக்கக்கூடியவர் யார் என்று தெரியாமல் திரிந்து கொண்டிருக்கிறாய். பழுத்திருக்கும் மரத்தைத் தேடும் பறவைகள் போல் அலைகிறாய். மழை பெய்யாமல் மழையைப் போலப் புகைமூட்டம் போட்டிருக்கும் மலைகளில் உள்ள மரங்கள் பழம் தருமா? திரிய வேண்டா. இதோ நான் சொல்வதைக் கேள்.
பரிசு பெற்றோன் தன் செல்வ நிலையை எடுத்து உரைத்தல்
பெருவறங் கூர்ந்த கானங் கல்லெனக் கருவி வானந் துளிசொரிந் தாங்குப் பழம்பசி கூர்ந்தவெம் மிரும்பே ரொக்கலொடு |
25 |
வழங்கத் தவாஅப் பெருவள னேய்தி வாலுளைப் புரவியொடு வயக்களிறு முகந்துகொண் டியாமவ ணின்றும் வருதும், நீயிரு |
ஆற்றுப்படுத்தும் புலவர் தான் பெற்றுவந்த செல்வ வளம் பற்றிக் கூறுகிறார். நான் காஞ்சி நகரிலிருந்து வருகிறேன். அந்நகர்த் தலைவன் (தொண்டைமான் இளந்திரையன் ) நல்கிய பெருஞ்செல்வத்தோடு வருகிறேன். நிலம் வறண்டு கிடக்கும் காலத்தில் கருமேகத் தொகுதி இடியுடன் கூடிய பெருமழை பொழிந்தது போல அவன் எங்களுக்குப் பல செல்வ வளங்களை நல்கியுள்ளான். அவற்றைக் குதிரைகள்மீதும், யானைகள்மீதும் ஏற்றிக்கொண்டு வருகிறேன். நான் மட்டும் அன்று. எனது சுற்றத்தாரின் பெருங்கூட்டமும் யானைமீதும், குதிரைமீதும் வந்துகொண்டிருப்பதைப் பார்.
திரையனது சிறப்பை அறிவித்தல்
மிருநிலங் கடந்த திருமறு மார்பின் முந்நீர் வண்ணன் பிறங்கடை யந்நீர்த |
30 |
திரைதரு மரபி னுரவோ னும்பல் மலர்தலை யுலகத்து மன்னுயிர் காக்கும் முரசுமுழங்கு தானை மூவ ருள்ளு மிலங்குநீர்ப் பரப்பின் வளைமீக் கூறும் வலம்புரி யன்ன வசைநீங்கு சிறப்பி |
35 |
னல்லது கடிந்த வறம்புரி செங்கோற் பல்வேற் றிரையற் படர்குவி ராயிற் |
திரையன் திருமாலின் வலம்புரிச் சங்கம் போன்றவன். அவன் திரையர் குடியில் தோன்றிய திரையன். பலவகையான வேல்களைப் பல்வேறு விசைப் பாங்குகளில் வீசக்கூடியவன். அவன் திருமாலின் பிறங்கடை (வாரிசு). திருமால் நிலத்தைக் கடந்தவர். செல்வத் திருமகள் அமர்ந்து மணம் வீசும் மார்பினை உடையவர். கடல் நிறத்தில் காட்சி தருபவர். கடலின் திரையில் (அலையில்) மிதந்து வந்து அரசுக்கட்டில் ஏறிய அரச மரபினரின் கால்வழியினர் திரையர் எனப்பட்டனர். அம்மரபில் வந்தவர்களில் உயர்ந்தோங்கிய யானை போன்றவன், இந்தத் தொண்டைமான் இளந்திரையன். (தொண்டைமான் இளந்திரையன் கடலில் தொண்டைக் கொடியுடன் மிதந்து வந்தான் என்னும் கதைக்குத் தளப்பகுதி இது) உலகிலுள்ள உயிரினங்களைக் காக்கும் மூவேந்தர்களைச் சங்கு என்றால் இந்த இளந்திரையன் அச் சங்குகளிலே சிறந்து விளங்கும் வலம்புரிச் சங்கு போன்றவன். மறப்போரை விலக்கிவிட்டு அறத்தை மட்டுமே செய்யும் செங்கோல்தான் அவன் ஆட்சி. நீங்களும் அவனை நினைத்துக்கொண்டு செல்லுங்கள். (வறுமை தீரும் வளங்களைப் பெறலாம்).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொரும்பாணாற்றுப்படை - பத்துப்பாட்டு, யாழின், அவன், தன்ன, இலக்கியங்கள், இளந்திரையன், தொண்டைமான், நான், பொரும்பாணாற்றுப்படை, கேள்வி, வேனில், போல், வருகிறேன், போன்றவன், காலத்தில், பாணனது, பாணன், செல்வ, இல்லாமல், பத்துப்பாட்டு, வந்து, புலவர், கடல், கேள், காக்கும், திரையர், சங்கு, மிதந்து, வலம்புரிச், திருமாலின், திரையன், ஆற்றுப்படுத்தும், பிறங்கடை, கொண்டிருந்த, பருதி, பச்சைப், கண்கூடு, இந்தப், யாழை, சங்க, என்றனர், செறிதுளை, யன்ன, போலும், போர்வை, யாழில், இருக்கும், அதில், யாழ், காட்சி, வறுமை