முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » பதினெண் கீழ்க்கணக்கு » திருக்குறள் » 54.பொச்சாவாமை
திருக்குறள் - 54.பொச்சாவாமை
இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு. |
531 |
பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும்.
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு. |
532 |
நாள் தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வது போல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதிக் கொன்று விடும்.
பொச்சாப்பார்க்(கு) இல்லை புகழ்மை அதுவுலகத்(து) எப்பால்நூ லோர்க்கும் துணிவு. |
533 |
மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை, அஃது உலகத்தில் எப்படிப்பட்டநூலோர்க்கும் ஒப்ப முடிந்த முடிப்பாகும்.
அச்சம் உடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை பொச்சாப் புடையார்க்கு நன்கு. |
534 |
உள்ளத்தில் அச்சம் உடையவர்க்குப் புறத்திலே அரண் இருந்து பயன் இல்லை, அதுபோல் மறதி உடையவர்க்கு நல்ல நிலை வாய்த்தும் பயன் இல்லை.
முன்னுறக் காவா(து) இழுக்கியான் தன்பிழை பின்னூ(று) இரங்கி விடும். |
535 |
வரும் இடையூறுகளை முன்னே அறிந்துக் காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைத்து இரங்குவான்.
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் அதுவொப்பது இல். |
536 |
யாரிடத்திலும் எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்காதத் தன்மை தவறாமல் பொருந்தியிருக்குமானால், அதற்கு ஒப்பான நன்மை வேறொன்றும் இல்லை.
அரியவென் றாகாத இல்லைபொச் சாவாக் கருவியான் போற்றிச் செயின். |
537 |
மறவாமை என்னும் கருவிகொண்டு (கடமைகளைப்) போற்றிச் செய்தால், செய்வதற்கு அரியவை என்று ஒருவனால் முடியாத செயல்கள் இல்லை.
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யா(து) இகழ்ந்தார்க்(கு) எழுமையும் இல். |
538 |
சான்றோர் புகழ்ந்து சொல்லியச் செயல்களைப் போற்றிச் செய்யவேண்டும், அவ்வாறு செய்யாமல் மறந்து சோர்ந்தவர்க்கு ஏழுப் பிறப்பிலும் நன்மை இல்லை.
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. |
539 |
தாம் தம் மகிழ்ச்சியால் செருக்குக் கொண்டு கடமையை மறந்திருக்கும் போது, அவ்வாறு சோர்ந்திருந்த காரணத்தால் முற்காலத்தில் அழிந்தவரை நினைக்க வேண்டும்.
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின். |
540 |
ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
54.பொச்சாவாமை - Thirukural - திருக்குறள்- Pathinen Kezhkanakku - பதினெண் கீழ்க்கணக்கு - Sangam Literature's - சங்க இலக்கியங்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - போற்றிச், மறந்து, அவ்வாறு, உள்ளியது, அச்சம், விடும், இலக்கியங்கள், சோர்வு, மறதியால், விடாமல், literature