முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » பதினெண் கீழ்க்கணக்கு » திருக்குறள் » 124.உறுப்பு நலன் அறிதல்
திருக்குறள் - 124.உறுப்பு நலன் அறிதல்
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி நறுமலர் நாணின கண். |
1231 |
இத்துன்பத்தை நமக்கு விட்டு விட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை நினைந்து அழுதமையால் கண்கள் அழகு இழந்து நறுமலர்களுக்கு நாணி விட்டன.
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனிவாரும் கண். |
1232 |
பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் ( பிறர்க்குச்) சொல்வன போல் உள்ளன.
தணந்தமை சால அறிவிப்ப போலும் மணந்தநாள் வீங்கிய தோள். |
1233 |
கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள், ( இப்போது மெலிந்தும்) காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவை போல் உள்ளன.
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள். |
1234 |
துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன.
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு தொல்கவின் வாடிய தோள். |
1235 |
வளையல்களும் கழன்று பழைய அழகும் கெட்டு, வாடிய தோள்கள் (என் துன்பம் உணராத) கொடியவரி்ன கொடுமையைப் பிறர் அறியச் சொல்கின்றன.
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து. |
1236 |
வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றைக் காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன்.
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோள பூசல் உரைத்து. |
1237 |
நெஞ்சே! கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ?
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது பைந்தொடிப் பேதை நுதல். |
1238 |
தழுவிய கைகளைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி, ( அவ்வளவு சிறியதாகிய பிரிவையும் பொறுக்காமல்) பசலை நிறம் அடைந்தது.
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற பேதை பெருமழைக் கண். |
1239 |
தழுவுதலுக்கு இடையே குளி்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிய மழை போன்ற கண்கள் பசலை நிறம் அடைந்தன.
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே ஒண்ணுதல் செய்தது கண்டு. |
1240 |
காதலியின் ஒளி பொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு, அவளுடைய க்ண்களில் பசலையும் துன்பம் அடைந்து விட்டது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
124.உறுப்பு நலன் அறிதல் - Thirukural - திருக்குறள்- Pathinen Kezhkanakku - பதினெண் கீழ்க்கணக்கு - Sangam Literature's - சங்க இலக்கியங்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - காதலியின், கண்கள், கெட்டு, கொடியவர், துன்பம், கழன்று, நெஞ்சே, உரைத்து, நெற்றி, இலக்கியங்கள், தொடியொடு, வளையல்களும், போலும், நமக்கு, அடைந்து, தோள்கள், literature, தொல்கவின், விட்டு