முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பத்தாம் திருமுறை - திருமந்திரம் » முதல் தந்திரம்
பத்தாம் திருமுறை - திருமந்திரம் - முதல் தந்திரம்
முதல் தந்திரம்
1. உபதேசம்
113 |
விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்க்கொண்டு தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து உண்ணின்று உருக்கியோர் ஒப்பிலா ஆனந்தக் கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே |
1 |
114 |
களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி களிம்பறுத் தான்அருள் கண்விழிப் பித்துக் களிம்பணு காத கதிரொளி காட்டிப் பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே |
2 |
115 |
பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில் பதியினைப் போற்பசு பாசம் அனாதி பதியினைச் சென்றணு காப்பசு பாசம் பதியணு கிற்பசு பாசம் நில் லாவே |
3 |
116 |
வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனும் கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்தி தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும் தோயம தாய் எழுஞ் சூரிய னாமே |
4 |
117 |
சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல் சூரியன் தோற்றமுன் அற்ற மலங்களே |
5 |
118 |
மலங்கள்ஐந் தாமென மாற்றி அருளித் தலங்கள்ஐந் தானற் சதாசிவ மான புலங்களைந் தான்அப் பொதுவினுள் நந்தி நலங்களைந் தான்உள் நயந்தான் அறிந்தே |
6 |
119 |
அறிவுஐம் புலனுட னேநான் றதாகி நெறியறி யாதுற்ற நீர்ஆழம் போல அறிவுஅறி வுள்ளே அழிந்தது போலக் குறியறி விப்பான் குருபர னாமே |
7 |
120 |
ஆமேவு பால்நீர் பிரிக்கின்ற அன்னம்போல் தாமே தனிமன்றில் தன்னந் தனிநித்தம் தீமேவு பல்கர ணங்களுள் உற்றன தாமேழ் பிறப்பெரி சார்ந்தவித் தாமே |
8 |
121 |
வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச் சுத்தத் துரியம் பிறந்து துடக்கற ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு செத்திட் டிருப்பார் சிவயோகி யார்களே |
9 |
122 |
சிவயோக மாவது சித்தசித் தென்று தவயோகத் துள்புக்குத் தன்னொளி தானாய் அவயோகஞ் சாராது அவன்பதி போக நவயோக நந்தி நமக்களித் தானே |
10 |
123 |
அளித்தான் உலகெங்கும் தானான உண்மை அளித்தான் அமரர் அறியா உலகம் அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள் அளித்தான் போன்பத்து அருள்வெளி தானே |
11 |
124 |
வெளியில் வெளிபோய் விரவிய வாறும் அளியில் அளிபோய் அடங்கிய வாறும் ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும் தெளியும் அவரே சிவ சித்தர் தாமே |
12 |
125 |
சித்தர் சிவலோகம் இங்கே தரிசித்தோர் சத்தமும் சத்த முடிவுந்தம் முள்கொண்டோ ர் நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர முத்தர்தம் முத்தி முதல்முப்பத் தாறே |
13 |
126 |
முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியாய் ஒப்பிலா ஆனந்தத் துள்ளொளி புக்குச் செப்ப அரிய சிவங்கண்டு தான்தெளிந்து அப்பரி சாக அமர்ந்திருந் தாரே |
14 |
127 |
இருந்தார் சிவமாகி எங்குந் தாமாகி இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கி இருந்தார் முக்காலத்து இயல்பைக் குறித்தங்கு இருந்தார் இழவுவந்து எய்திய சோம்பே |
15 |
128 |
சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடஞ் சோம்பர் கண் டார்அச் சுருதிக்கண் தூக்கமே |
16 |
129 |
தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்முள்ளே தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்முள்ளே தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்முள்ளே தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே |
17 |
130 |
எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை அவ்வாறு அருட்செய்வன் ஆதிஅரன் தானும் ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடும் செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கமே |
18 |
131 |
மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய் மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய் ஆணிப்பொன் மன்றில் ஆடுந் திருக்கூத்தைப் பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே |
19 |
132 |
பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன் பெற்றார் அம்மன்றில் பிரியாப் பெரும்பேறு பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே |
20 |
133 |
பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல் அருமை எளிமை அறிந்தறி வார்ஆர் ஒருமையுள் ஆமைபோல் உள்ஐந்து அடக்கி இருமையுங் கேட்டிருந் தார்புரை அற்றே |
21 |
134 |
புரைஅற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல் திரைஅற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும் உரையற்று உணர்வோர் உடம்பிங்கு ஒழிந்தால் கரையற்ற சோதி கலந்தசத் தாமே |
22 |
135 |
சத்த முதல் ஐந்துந் தன்வழித் தான்சாரில் சித்துக்குச் சித்தன்றி சேர்விடம் வேறுண்டோ சுத்த வெளியிற் சுடாற் சுடர்சேரும் அத்தம் இதுகுறித் தாண்டுகொள் அப்பிலே |
23 |
136 |
அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால் உப்பெனப் பேர்ப்பெற்று உருச்செய்த அவ்வுரு அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோல் செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே |
24 |
137 |
அடங்குபேர் அண்டத்து அணுஅண்டம் சென்றங்கு இடங்கொண்டது இல்லை இதுவன்றி வேறுண்டோ கடந்தொறும் நின்ற உயிர்க்கரை காணில் திடம்பெற நின்றான் திருவடி தானே |
25 |
138 |
திருவடி யேசிவ மாவது தோல் திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில் திருவடி யேசெல் கதியது செப்பில் திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே |
26 |
139 |
தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே |
27 |
140 |
தானே புலன்ஐந்துந் தன்வசம் ஆயிடும் தானே புலன்ஐந்துந் தன்வசம் போயிடும் தானே புலன்ஐந்துந் தன்னில் மடைமாறும் தானே தனித்துஎம் பிரான்தனைச் சந்தித்தே |
28 |
141 |
சந்திப் பதுநந்தி தன்திருத் தாளிணை சிந்திப் பதுநந்தி செய்ய திருமேனி வந்திப் பதுநந்தி நாமம்இன் வாய்மையால் புந்திக்குள் நிற்பது நந்திபொற் பாதமே |
29 |
142 |
போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப் போதந் தனில்வைத்துப் புண்ணியர் ஆயினார் நாதன் நடத்தால் நயனங் களிகூர வேதந் துதித்திடப் போயடைந்தார் விண்ணே |
30 |
2. யாக்கை நிலையாமை
143 |
மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம் திண்ணென்று இருந்தது தீவினைச் சேர்ந்தது விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானார்ப்போல் எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே |
1 |
144 |
பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால் உண்ட அப் பெண்டிரும் மக்களும் பின்செலார் கொண்ட விரதமும் ஞானமும் அல்லது மண்டி அவருடன் வழிநட வாதே |
2 |
145 |
ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் போனை நீக்கிப் பிணமென்று போட்டுச் சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே |
3 |
146 |
காலும் இரண்டு முகட்டலகு ஒன்றுள பாலுள் பருங்கழி முப்பத் திரண்டுள மேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன் போலுயிர் மீளப் புக அறி யாதே |
4 |
147 |
சீக்கை விளைந்தது செய்வினை மூட்டிற்ற ஆக்கை பிரிந்தது அலகு பழுத்தது மூக்கினிற் கைவைத்து மூடிட்டுக் கொண்டுபோய்க் காக்கைக் குப்பலி காட்டிய வாறே |
5 |
148 |
அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார் மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார் இடப்பக்க மேஇறை நொந்தது என்றார் கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே |
6 |
149 |
மன்றத்தே நம்பி மாடம் எடுத்தது மன்றத்தே நம்பி சிவிகைபெற் றேறினான் மன்றத்தே நம்பி முக்கோடி வழங்கினான் சென்றத்தா என்னத் திரிந்திலன் தானே |
7 |
150 |
வாசந்தி பேசி மணம்புணர்ந்து அப்பதி நேசந் தெவிட்டி நினைப்பொழி வார்பின்னை ஆசந்தி மேல்வைத்து அமைய அழுதிட்டுப் பாசந்தீச் சுட்டுப் பலியட்டி னார்களே |
8 |
151 |
கைவிட்டு நாடிக் கருத்தழிந் தச்சற நெய்யட்டிச் சோறுண்ணும் ஐவரும் போயினார் மையிட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே மெய்விட்டுப் போக விடைகொள்ளு மாறே |
9 |
152 |
பந்தல் பிரிந்தது பண்டாரங் கட்டற்ற ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தன துன்புறு காலந் துரிசுவர மேன்மேல் அன்புடை யார்கள் அழுதகன் றார்களே |
10 |
153 |
நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன் காட்டுச் சிவிகையொன்று ஏறிக் கடைமுறை நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே |
11 |
154 |
முப்பதும் முப்பதும் முப்பத் தறுவரும் செப்ப மதிளுடைக் கோயிலுள் வாழ்பவர் செப்ப மதிலுடைக் கோயில் சிதைந்தபின் ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே |
12 |
155 |
மதுவூர் குழலியும் மாடும் மனையும் இதுவூர் ஒழிய இதணம் தேறிப் பொதுவூர் புறஞ்சுடு காடது நோக்கி மதுவூர வாங்கியே வைத்தகன் றார்களே |
13 |
156 |
வைச்சகல் வுற்றது கண்டு மனிதர்கள் அச்சக லாதென நாடும் அரும்பொருள் பிச்சது வாய்ப்பின் தொடர்வுறு மற்றவர் எச்சக லாநின் றிளைக்கின்ற வாறே |
14 |
157 |
ஆர்த்தெழு சுற்றமும் பெண்டிரும் மக்களும் ஊர்த்துறைக் காலே ஒழிவர் ஒழிந்தபின் வேர்த்தலை போக்கி விறகிட்கு எரிமூட்டி நீர்த்தலை மூழ்குவர் நீதியி லோரே |
15 |
158 |
வளத்திடை முற்றத்தோர் மாநிலம் முற்றுங் குளத்தின் மண்கொண்டு குயவன் வனைந்தான் குடமுடைந் தால் அவை ஓடென்று வைப்பர் உடலுடைந் தால்இறைப் போதும் வையாரே |
16 |
159 |
ஐந்து தலைப்பறி ஆறு சடையுள சந்தவை முப்பது சார்வு பதினெட்டுப் பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து வெந்து கிடந்தது மேலறி யோமே |
17 |
160 |
அத்திப் பழமும் அறைக்கீரை நல்வித்தும் கொத்தி உலைபெய்து கூழட்டு வைத்தனர் அத்திப் பழத்தை அறைக்கீரை வித்துண்ணக் கத்தி எடுத்தவர் காடுபுக் காரே |
18 |
161 |
மேலும் முகடில்லை கீழும் வடிம்பில்லை காலும் இரண்டு முகட்டலக் கொன்றுண்டு ஓலையான் மேய்ந்தவர் ஊடு வாயாமை வேலையான் மேய்ந்ததோர் வெள்ளித் தளிகையே |
19 |
162 |
கூடம் கிடந்தது கோலங்கள் இங்கில்லை ஆடும் இலையமும் அற்றது அறுதலும் பாடுகின் றார்சிலர் பண்ணில் அழுதிட்டுத் தேடிய தீயினில் தீயவைத் தார்க்களே |
20 |
163 |
முட்டை பிறந்தது முந்_று நாளினில் இட்டது தானிலை ஏதேனும் ஏழைகாள் பட்டது பார்மணம் பன்னிரண்டி ஆண்டினில் கெட்டது எழுபதில் கேடறி யீரே |
21 |
164 |
இடிஞ்சில் இருக்க விளக்கொ கொண்டான் முடிஞ்ச தறியார் முழங்குவர் மூடர் விடிஞ்சுஇரு ளாவது அறியா உலகம் படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே |
22 |
165 |
மடல்விரி கொன்றையன் மாயன் படைத்த உடலும் உயிரும் உருவந் தொழாமல் இடர்ப்படந்து ஏழா நரகிற் கிடப்பர் குடர்ப்பட வெந்தமர் கூப்பிடு மாறே |
23 |
166 |
குடையும் குதிரையும் கொற்றவா ளுங்கொண்டு இடையும்அக் காலம் இருந்தது நடுவே புடையு மனிதனார் போக்கும்அப் போதே அடையும் இடம்வலம் ஆருயி ராமே |
24 |
167 |
காக்கை கவாலென் கண்டார் பழிக்கிலென் பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென் தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டுங் கூத்தன் புறப்பட்டுப் போன இக்கூட்டையே |
25 |
3. செல்வம் நிலையாமை
168 |
அருளும் அரசனும் ஆனையம் தேரும் பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னம் தெருளும் உயிரொடும் செல்வனைச் சோன் மருளும் பினையவன் மாதவ மன்றே |
1 |
169 |
இயக்குறு திங்கள் இரும்பிழப்பு ஒக்கும் துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா மயக்கற நாடுமின் வானவர் கோனைப் பெயற்கொண்டல் போலப் பெருஞ்செல்வ மாமே |
2 |
170 |
தன்னது சாயை தனக்குத வாதுகண்டு என்னது மாடென்று இருப்பர்கள் ஏழைகள் உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது கண்ணது காணொளி கண்டுகொ ளீரே |
3 |
171 |
ஈட்டிய தேன்பூ மணங்கண் டிரதமும் கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும் ஓட்டித் துரந்திட்டு அதுவலி யார்கொளக் காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே |
4 |
172 |
தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின் ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே மாற்றிக் களைவீர் மறுத்துங்கள் செல்வத்தைக் கூற்றன் வருங்கால் குதிக்கலு மாமே |
5 |
173 |
மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லும் கலம்போல் அவிழ்கின்ற ஆக்கைக்கோர் வீடுபே றாகச் சிமிழொன்று வைத்தமை தேர்ந்தறி யாரே |
6 |
174 |
வாழ்வும் மனைவியும் மக்கள் உடன்பிறந் தாரும் அளவு ஏது எமக்கென்பர் ஒண்பொருள் மேவும் அதனை விரிவுசெய் வார்கட்குக் கூவும் துணையொன்று கூடலு மாமே |
7 |
175 |
வேட்கை மிகுத்தது மெய்கொள்வார் இங்கிலை பூட்டுந் தறியொன்று போம்வழி ஒன்பது நாட்டிய தாய்தமர் வந்து வணங்கிப்பின் காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே |
8 |
176 |
உடம்போடு உயிரிடை விட்டோ டும் போது அடும்பரிசு ஒன்றில்லை அண்ணலை எண்ணும் விடும்பரி சாய்நின்ற மெய்ந்நமன் தூதர் சுடும்பரி சத்தையுஞ் சூழகி லாரே |
9 |
4. இளமை நிலையாமை
177 |
கிழக்கெழுந்த் தோடிய ஞாயிறு மேற்கே விழக்கண்டும் தேறார் விழியிலா மாந்தர் குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில் விழக்கண்டும் தேறார் வியனுல கோரே |
1 |
178 |
ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப் பூண்டுகொண் டாரும் புகுந்தறி வாரில்லை நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும் தூண்டு விளக்கின் சுடரறி யாரே |
2 |
179 |
தேய்ந்தற் றொழிந்த இளமை கடைமுறை ஆய்ந்தற்ற பின்னை அரிய கருமங்கள் பாய்ந்தற்ற கங்கைப் படர்சடை நந்தியை ஓர்ந்துற்று கொள்ளும் உயிருள்ள போதே |
3 |
180 |
விரும்புவர் முன்என்னை மெல்லியன் மாதர் கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல் அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்கும் கரும்பொத்துக் காஞ்சிரங் காயுமொத் தேனே |
4 |
181 |
பாலன் இளையன் விருத்தன் எனநின்ற காலங் கழிவன கண்டும் அறிகிலார் ஞாலம்கடந்து அண்டம் ஊடறுத் தான்அடி மேலுங் கிடந்து விரும்புவன் நானே |
5 |
182 |
காலை ஏழுந்தவர் நித்தலும் நித்தலும் மாலை படுவதும் வாணாள் கழிவதும் சாலும்அவ் ஈசன் சலவிய னாகிலும் ஏல நினைப்பவர்ககு இன்பம்செய் தானே |
6 |
183 |
பருவூசி ஐந்துமோர் பையினுள் வாழும் பருவூசி ஐந்தும் பறக்கும் விருகம் பருவூசி ஐந்தும் பனித்தலைப் பட்டால் பருவூசிப் பையும் பறக்கின்ற வாறே |
7 |
184 |
கண்ணதும் காய்கதி ரோனும் உலகினை உண்ணின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார் விண்ணுறு வாரையும் வினையுறு வாரையும் எண்ணுறும் முப்பதில் ஈர்ந்தொழிந் தாரே |
8 |
185 |
ஒன்றிய ஈரெண் கலையும் உடனுற நின்றது கண்டு நினைக்கிலர் நீசர்கள் கன்றிய காலன் கருக்குழி வைத்தபின் சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே |
9 |
186 |
எய்திய நாளில் இளமை கழியாமை எய்திய நாளில் இசையினால் ஏத்துமின் எய்திய நாளில் எறிவ து அறியாமல் எய்திய நாளில் இருந்துகண் டேனே |
10 |
5. உயிர் நிலையாமை
187 |
தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில் இழைக்கின்றது எல்லாம் இறக்கின்ற கண்டும் பிழைப்பின்றி எம்பெரு மானடி ஏத்தார் அழைக்கின்ற போதுஅறி யாரவர் தாமே |
1 |
188 |
ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே |
2 |
189 |
மத்தளி ஒன்றுள தாளம் இரண்டுள அத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன் அத்துள்ளெ வாழும் அரசன் புறப்பட்டால் மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே |
3 |
190 |
வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை வேங்கடத் துள்ளே விளையாடு நந்தியை வேங்கடம் என்றே விரகுஅறி யாதவர் தாங்கவல் லாருயிர் தாமறி யாரே |
4 |
191 |
சென்றுணர் வாந்திசை பத்துந் திவாகரன் அன்றுணர் வால் அளக் கின்ற தறிகிலர் நின்றுண ரார்இந் நிலத்தின் மனிதர்கள் பொன்றுணர் வாரிற் புணர்க்கின்ற மாயமே |
5 |
192 |
மாறு திருத்தி வரம்பிட்ட பட்டிகை பீறும் அதனைப் பெரிதுணர்ந் தாரிலை கூறும் கருமயிர் வெண்மயி ராவது ஈறும் பிறப்புமொ ராண்டெனும் நீரே |
6 |
193 |
துடுப்பிடு பானைக்கும் ஒன்றே அரிசி அடுப்பிடு மூன்றிற்கும் அஞ்சொ கொள்ளி அடுத்தொ யாமற் கொடுமின் அரிசி விடுத்தன நாள்களும் மேற்சென் றனவே |
7 |
194 |
இன்புறு வண்டிங்கு இனமலர் மேற்போய் உண்பது வாச மதுபோல் உயிர்நிலை இன்புற நாடி நினைக்கிலும் மூன்றொளி கண்புற நின்ற கருத்துள்நில் லானே |
8 |
195 |
ஆம்விதி நாடி அறஞ்செய்மின் அந்நிலம் போம்விதி நாடிப் புனிதனைப் போற்றுமின் நாம்விதி வேண்டும் அதென்சொலின் மானிடர் ஆம்விதி பெற்ற அருமைவல் லார்க்கே |
9 |
196 |
அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின் வெவ்விய னாகிப் பிறர்ப்பொருள் வவ்வன்மின் செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போதொரு தவ்விகொ டுண்மின் தலைப்பட்ட போதே |
10 |
6. கொல்லாமை
197 |
பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர் மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர் நற்றார் நடுக்கற்ற தீபமும் சித்தமும் உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே |
1 |
198 |
கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை வல்லடிக் காரர் வலிக்கயிற் றாற்கட்டிச் செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே, 2 |
7. புலால் மறுத்தல்
199 |
பொல்லாப் புலாலை நுகரும் புலையரை எல்லாரும் காண இயமன்றன் தூதுவர் செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில் மல்லாக்கத் தள்ளி முறித்துவைப் பாரே |
1 |
200 |
கொலையே களவுகள் காமம் பொய்கூறல் மலைவான பாதகமாம் அவை நீக்கித் தலையாம் சிவனடி சார்ந்தின்பம் சார்ந்தோர்க்கு இலையாம் இவைஞானா னந்தத் திருத்தலே |
2 |
8. பிறன்மனை நயவாமை
201 |
ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே காத்த மனையாளைக் காமுறுங் காளையர் காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல் ஈச்சம் பழத்துக்கு இடருற்ற வாறே |
1 |
202 |
திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை அருத்தமென் றெண்ணி அறையில் புதைத்துப் பொருத்தம் இலாத புளிமாங் கொம்பேறிக் கருத்தறி யாதவர் காலற்ற வாறே |
2 |
203 |
பொருள்கொண்ட கண்டனும் போதத்தை யாளும் இருள்கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும் மருள்கொணட மாதர் மயலுறு வார்கள் மருள்கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே |
3 |
9. மகளிர் இழிவு
204 |
இலைநல வாயினும் எட்டி பழுத்தால் குலைநல வாங்கனி கொண்டுண லாகா முலைநலங் கொண்டு முறுவல்செய் வார்மேல் விலகுறு நெஞ்சினை வெய்துகொள் ளீரே |
1 |
205 |
மனைபுகு வார்கள் மனைவியை நாடில் சுனைபுகு நீர்போல் சுழித்துடன் வாங்கும் கனவது போலக் கசிந்தெழும் இன்பம் நனவது போலவும் நாடவொண் ணாதே |
2 |
206 |
இயலுறும் வாழ்க்கை இளம்பிடி மாதர் புயலுறும் புல்லின் புணர்ந்தவ ரேயினும் மயலுறும் வானவர் சாரஇரும் என்பார் அயலுறப் பேசி அகன்றொழிந் தாரே |
3 |
207 |
வையகத் தேமட வாரொடும் கூடியென் மெய்யகத் தோடும் வைத்த விதியது கையகத் தேகரும் பாலையின் சாறுகொள் மெய்யகத் தேபெரு வேம்பது வாமே |
4 |
208 |
கோழை ஒழுக்கம் குளமூடு பாசியில் ஆழ நடுவர் அளப்புறு வார்களைத் தாழத் துடக்கித் தடுக்ககில் லாவிடில் பூழை நுழைந்தவர் போகின்ற வாறே |
5 |
10.நல்குரவு
209 |
புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை அடையப்பட் டார்களும் அன்பில ராயினார் கொடையில்லை கோளில்லை கொண்டாட்ட மில்லை நடையில்லை நாட்டில் இயங்குகின் றார்கட்கே |
1 |
210 |
பொய்க்குழி தூர்ப்பான் புலா புலருதென்று அக்குழி தூர்க்கும் அரும்பண்டம் தேடுவீர் எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின் அக்குழி தூரும் அழுக்கற்ற போதே |
2 |
211 |
கற்குழி தூரக் கனகமும் தேடுவர் அக்குழி தூர்க்கை யாவர்க்கும் அரியது அக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின் அக்குழி தூரும் அழுக்கற்ற வாறே |
3 |
212 |
தொடர்ந்தெழு சுற்றம் வினையினுந் தீய கடந்தோர் ஆவி கழிவதன் முன்னே உடந்தொரு காலத்து உணர்விளக்கு ஏற்றித் தொடர்ந்துநின்று அவ்வழி தூர்க்கலு ம் ஆமே |
4 |
213 |
அறுத்தன ஆறினும் ஆனினம் மேவி அறுத்தனர் ஐவரும் எண்ணிலி துன்பம் ஒறுத்தன வல்வினை ஒன்றல்ல வாழ்வை வெறுத்தனன் ஈசனை வேண்டிநின் றானே |
5 |
11. அக்கினி காரியம்
214 |
வசையில் விழுப்பொருள் வானும் நிலனும் திசையும் திசைபெறு தேவர் குழாமும் விசையும் பெருகிய வேத முதலாம் அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே |
1 |
215 |
ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர் போகதி நாடிப் புறங்கொடுத்து உண்ணுவர் தாம்விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறி தாமறி வாலே தலைப்பட்ட வாறே |
2 |
216 |
அணைதுணை அந்தணர் அங்கியுள் அங்கி அணைதுணை வைத்ததின் உட்பொரு ளான இணைதுணை யாமத்து இயங்கும் பொழுது துணையணை யாயதோர் தூய்நெறி யாமே |
3 |
217 |
போதிரண் டோ திப் புரிந்தருள் செய்திட்டு மாதிரண் டாகி மகிழ்ந்துட னேநிற்குந் தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள் வேதிரண் டாகி வெறிக்கின்ற வாறே |
4 |
218 |
நெய்நின்று எரியும் நெடுஞ்சுட ரேசென்று மைநின்று எரியும் வகையறி வார்க்கட்கு மைநின்று அவிழ்தரும் அத்தின மாம் என்றும் செய்நின்ற செல்வம் தீயது வாமே |
5 |
219 |
பாழி அகலும் எரியும் திரிபோலிட்டு ஊழி அகலும் உறுவினை நோய்பல வாழிசெய்து அங்கி உதிக்க அவைவிழும் வீழிசெய்து அங்கி வினைசுடு மாமே |
6 |
220 |
பெருஞ்செல்வம் கேடென்று முன்னே படைத்த வருஞ்செல்வம் தந்த தலைவனை நாடும் வருஞ்செல்வதது இன்பம் வரஇருந் தெண்ணி அருஞ்செல்வத்து ஆகுதி வேட்கநின் றாரே |
7 |
221 |
ஒண்சுட ரானை உலப்பிலி நாதனை ஒண்சுட ராகிஎன் உள்ளத்து இருக்கின்ற கண்சுட ரோன் உலகு ஏழும் கடந்த அத் தண்சுடர் ஓமத் தலைவனு மாமே |
8 |
222 |
ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்மிறை ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன் வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல் கோமத்துள் அங்கி குரைகடல் தானே |
9 |
223 |
அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரணத்து தங்கி இருக்கும் வகையருள்செய்தவர் எங்கும் நிறுத்தி இளைப்பப் பெரும்பதி பொங்கி நிறுத்தும் புகழது வாமே |
10 |
12. அந்தண ரொழுக்கம்
224 |
அந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டுளோர் செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ்செய் தந்தவ நற்கரு மத்துநின்று ஆங்கிட்டுச் சந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே |
1 |
225 |
வேதாந்தங் கேட்க விருப்பொடு முப்பதப் போதாந்த மான பிரணவத் துள்புக்கு நாதந்த வேதாந்த போதாந்த நாதனை ஈதாந்தம் எனாதுகண்டு இன்புறு வோர்க்களே |
2 |
226 |
காயத் திரியே கருதுசா வித்திரி ஆய்தற்கு உவப்பர் மந்திரம் ஆங்கு உன்னி நேயத் தேரேறி நினைவுற்று நேயத்தாய் மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே |
3 |
227 |
பெருநெறி யான பிரணவம் ஓர்ந்து குருநெறி யாலுரை கூடிநால் வேதத் திருநெறி யான கிரியை யிருந்து சொரூபமது ஆனோர் துகளில்பார்ப் பாரே |
4 |
228 |
சத்திய மும்தவம் தானவன் ஆதலும் எய்த்தரும் இந்தியம் ஈட்டியே வாட்டலும் ஒத்த உயிர்கள் உண்டா யுணர்வுற்று பெத்தம் அறுத்தலும் ஆகும் பிரமமே |
5 |
229 |
வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர் வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர் வேதாந்த மாவது வேட்கை ஒழிந்திடம் வேதாந்தங் கேட்டவர் வேட்கை விட்டாரே |
6 |
230 |
நூலும் சிகையும் நுவலிற் பிரமமோ நூலது கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம் நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம் நூலுடை அந்தணர் காணும் நுவலிலே |
7 |
231 |
சத்தியம் இன்றித் தனிஞானம் தானின்றி ஒத்த விடயம்விட் டோ டும் உணர்வின்றிப் பத்தியும் இன்றிப் பரன் உண்மை யின்றிப் பித்தேறும் மூடர் பிராமணர் தாமன்றே |
8 |
232 |
திருநெறி யாகிய சித்தசித் தின்றிக் குருநெறி யாலே குருபதம் சேர்ந்து கரும நியமாதி கைவிட்டுக் காணும் துரிய சமாதியாந் தூய்மறை யோர்க்கே |
9 |
233 |
மறையோர் அவரே மறையவர் ஆனால் மறையோர்தம் வேதாந்த வாய்மையினால் தூய்மை குறையோர்தன் மற்றுள்ள கோலா கலமென்று அறிவோர் மறைதொந்து அந்தண ராமே |
10 |
234 |
அந்தண்மை பூண்ட அருமறை அந்தத்துச் சிந்தைசெய் அந்தணர் சேரும் செழும்புவி நந்துதல் இல்லை நரபதி நன்றாகும் அந்தியும் சந்தியும் ஆகுதி பண்ணுமே |
11 |
235 |
வேதாந்த ஞானம் விளங்க விதியிலோர் நாதாந்த போதம் நணுகிய போக்கதுபோதாந்த மாம்பரன் பாற்புகப் புக்கதால் நாதாந்த முத்தியும் சித்தியும் நண்ணுமே |
12 |
236 |
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து நன்றும் இருந்தும் நலம்பல பேசினும் வென்று விளங்கும் விகிர்தனை நாடுவர் சென்று வணங்குந் திருவுடை யோரே |
13 |
237 |
தானே விடும்பற்று இரண்டும் தரித்திட நானே விடப்படும் ஏதொன்றை நாடாது பூமேவு நான்முகன் புண்ணிய போகனாய் ஓமேவும் ஓர்ஆ குதிஅவி உண்ணவே |
14 |
13. அரசாட்சி முறை
(இராச தோடம்)
(இராச தோடம்)
238 |
கல்லா அரசனும் காலனும் நேரொப்பர் கல்லா அரசனிற் காலன் மிகநல்லன் கல்லா அரசன் அறம் ஓரான் கொல்லென்பான் நல்லாரைக் காலன் நணுகநில் லானே |
1 |
239 |
நாள்தோறும் மன்னவன் நாட்டில் தவநெறி நாள்தோறும் நாடி அவன்நெறி நாடானேல் நாள்தோறும் நாடு கெடுமூட நண்ணுமால் நாள்தோறும் செல்வம் நரபதி குன்றுமே |
2 |
240 |
வேட நெறிநில்லார் வேடம்பூண் டென்பயன் வேட நெறிநிற்பார் வேடம்மெய் வேடமே வேட நெறிநில்லார் தம்மை விறல்வேந்தன் வேட நெறிசெய்தால் வீடது வாமே |
3 |
241 |
மூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில் வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும் பீடுஒன் றிலனாகும் ஆதலாற் பேர்த்துணர்ந்து ஆடம் பரநூல் சிகையறுத் தால்நன்றே |
4 |
242 |
ஞானமி லாதார் சடைசிகை நூல்நண்ணி ஞானிகள் போல நடிக்கின் றவர் தம்மை ஞானிக ளாலே நரபதி சோதித்து ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே |
5 |
243 |
ஆவையும் பாவையும் மற்றுஅற வோரையும் தேவர்கள் போற்றும் திருவேடத் தாரையும் காவலன் காப்பவன் காவாது ஒழிவனேல் மேவும் மறுமைக்கு மீளா நரகமே |
6 |
244 |
திறந்தரு முத்தியும் செல்வமும் வேண்டின் மறந்தும் அறநெறி யேஆற்றல் வேண்டும் சிறந்தநீர் ஞாலம் செய்தொழில் யாவையும் அறைந்திடில் வேந்தனுககு ஆறில் ஒன் றாமே |
7 |
245 |
வேந்தன் உலகை மிகநன்று காப்பது வாய்ந்த மனிதர்கள் அவ்வழி யாநிற்பர் போந்திவ் வுலகைப் பிறர்க்கொள்ளத் தாங்கொள்ளப் பாய்ந்த புலியன்ன பாவகத் தானே |
8 |
246 |
கால்கொண்டு கட்டிக் கனல்கொண்டு மேலேற்றிப் பால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர் மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரை மேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன் கடனே |
9 |
247 |
தத்தம்சமயத் தகுதிநில் லாதாரை அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல்நெறி எத்தண் டமுஞ்செயும் அம்மையில் இம்மைக்கே மெய்த்தண்டம் செய்வதுஅவ் வேந்தன் கடனே |
10 |
14. வானச் சிறப்பு
248 |
அமுதூறு மாமழை நீரத னாலே அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும் கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை அமுதூறுங் காஞ்சிரை ஆங்கது வாமே |
1 |
249 |
வரையிடை நின்றிழி வான்நீர் அருவி உரையில்லை உள்ளத் தகத்துநின் றூறும் நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர் கரையில்லை எந்தை கழுமணி யாறே |
2 |
15. தானச் சிறப்பு
250 |
ஆர்க்கும் இடுமின் அவாவர் என்னன்மின் பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின் வேட்கை உடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின் காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே |
1 |
16. அறஞ்செய்வான் திறம்
251 |
தாமறி வார்அண்ணல் தாள்பணி வார்அவர் தாமறி வார்அறம் தாங்கிநின் றார்அவர் தாமறி வார்சில தத்துவர் ஆவர்கள் தாமறி வார்க்குத் தமர்பர னாமே |
1 |
252 |
யாவர்க்கு மாம்இறை வற்குஒரு பச்சிலை யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை யாவர்க்கு மாம் உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே |
2 |
253 |
அற்றுநின் றார்உண்ணும் ஊணே அறன்என்னும் கற்றன போதம் கமழ்பவர் மானிடர் உற்றுநின்று ஆங்கொரு கூவல் குளத்தினில் பற்றிவந் துண்ணும் பயனறி யாரே |
3 |
254 |
அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர் தழுக்கிய நாளில் தருமமும்செய்யீர் விழித்திருந்து என்செய்வீர் வெம்மை பரந்து விழிக்கஅன்று என்செய்வீர் ஏழைநெஞ்சீரே |
4 |
255 |
தன்னை அறியாது தான்நலன் என்னாதுஇங்கு இன்மை அறியாது இளையர்என்று ஓராது வன்மையில் வந்திடும்கூற்றம் வருமுன்னம் தன்மையில் நல்ல தவஞ்செய்யும் நீரே |
5 |
256 |
துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லை இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன் அறந்தான் அறியும் அளவறி வாரே |
6 |
257 |
தான்தவம் செய்வதாம் செய்தவத்து அவ்வழி மான்தெய்வ மாக மதிக்கும் மனிதர்கள் ஊன் தெய்வ மாக உயிர்க்கின்ற பல்லுயிர் நான்தெய்வம் என்று நமன்வரு வானே |
7 |
258 |
திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு கிளைக்கும் தனக்கும் அக் கேடில் புகழோன் விளைக்கும் தவமறம் மேற்றுணை யாமே |
8 |
259 |
பற்றது வாய்நின்ற பற்றினைப் பார்மிசை அற்றம் உரையான் அறநெறிக் கல்லது உற்று உங்களால் ஒன்றும் ஈந்தது வேதுணை மற்றண்ணல் வைத்த வழிகொள்ளு மாறே |
9 |
17. அறஞ்செயான் திறம்
260 |
எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன ஒட்டிய நல்லறம் செய்யா தவர்செல்வம் வட்டிகொணடு ஈட்டியே மண்ணில் முகந்திடும் பட்டிப் பதகர் பயன்அறி யாரே |
1 |
261 |
ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின கழிந்தன கற்பனை நாளுங் குறுகிப் பிழிந்தன போலத்தம் போடர் ஆக்கை அழிந்தன கண்டும் அறம்அறி யாரே |
2 |
262 |
அறம்அறி யார்அண்ணல் பாதம் நினையுந் திறம்அறி யார்சிவ லோக நகர்க்குப் புறம்அறி யார்பலர் பொய்மொழி கேட்டு மறம்அறி வார்பகை மன்னிநின் றாரே |
3 |
263 |
இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும் தருமஞ்செய் யாதவர் தம்பால தாகும் உருமிடி நாகம் உரோணி கழலை தருமம்செய் வார்பக்கல் தாழகி லாவே |
4 |
264 |
பரவப் படுவான் பரமனை ஏத்தார் இரவலர்க்கு ஈதலை யாயினும் ஈயார் கரகத்தால் நீராட்டிக் காவை வளர்க்கார் நரகத்தில் நிற்றிரோ நல்நெஞ்சி னீரே |
5 |
265 |
வழிநடப் பாரின்றி வானோர் உலகம் கழிநடப் பார்நடந் தார்கருப் பாரும் மழிநடக் கும்வினை மாசற ஓட்டிட்டு வழிநடப் பார்வினை ஓங்கிநின் றாரே |
6 |
266 |
கனிந்தவர் ஈசன் கழலடி காண்பர் துணிந்தவர் ஈசன் துறக்கமது ஆள்வர் மலிந்தவர் மாளும் துணையும்ஒன் றின்றி மெலிந்த சினத்தினுள் வீழ்ந்தொழிந் தாரே |
7 |
267 |
இன்பம் இடரென்று இரண்டுற வைத்தது முன்பவர் செய்கையி னாலே முடிந்தது இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள் அன்பிலார் சிந்தை அறமறி யாரே |
8 |
268 |
கெடுவதும் ஆவதும் கேடில் புகழோன் நடுவல்ல செய்து இன்பம் நாடவும் ஒட்டான் இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம் படுவது செய்யின் பசுவது வாமே |
9 |
269 |
செல்வம் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும் புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல் இல்லங் கருதி இறைவனை ஏத்துமின் வில்லி இலக்கெய்த விற்குறி யாமே |
10 |
18. அன்புடைமை
270 |
அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே |
1 |
271 |
பொன்னைக் கடந்திலங் கும்புலித் தோலினன் மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறை துன்னிக் கிடந்த சுடுபொடி யாடிக்குப் பின்னிக் கிடந்ததென் பேரன்பு தானே |
2 |
272 |
என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப் பொன்போற் கனலிற் பெரிய வறுப்பினும் அன்போடு உருகி அகங்குழை வார்க்கன்றி என்போல் மணியினை எய்தஒண் ணாதே |
3 |
273 |
ஆர்வம் உடையவர் காண்பார் அரன்தன்னை ஈரம் உடையவர் காண்பார் இணையடி பாரம் உடையவர் காண்பார் பவந்தன்னைக் கோர நெறிகொடு கொங்குபுக் காரே |
4 |
274 |
என்அன் புருக்கி இறைவனை ஏத்துமின் முன்அன் புருக்கி முதல்வனை நாடுமின் பின்அன் புருக்கிப் பெருந்தகை நந்தியும் தன்அன் பெனக்கே தலைநின்ற வாறே |
5 |
275 |
தானொரு காலம் சயம்பு என் றேத்தினும் வானொரு காலம் வழித்துணை யாய்நிற்கும் தேனொரு பால்திகழ் கொன்றை அணிசிவன் தானொரு வண்ணம்என் அன்பில்நின் றானே |
6 |
276 |
முன்படைத்து இன்பம் படைத்த முதலிடை அன்புஅடைத்து எம்பெரு மானை அறிகிலார் வன்படைத்து இந்த அகலிடம் வாழ்வினில் அன்புஅடைத் தான்தன் அகலிடத் தானே |
7 |
277 |
கருத்துறு செம்பொன்செய் காய்கதிர்ச் சோதி இருத்தியும் வைத்தும் இறைவன் என்று ஏத்தியும் அருத்தியுள் ஈசனை யாரருள் வேண்டில் விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே |
8 |
278 |
நித்தலும் துஞ்சும் பிறப்பையும் செய்தவன் வைத்த பரிசு அறிந் தேயும் மனிதர்கள் இச்சையு ளேவைப்பர் எந்தை பிரானென்று நச்சியே அண்ணலை நாடுகி லாரே |
9 |
279 |
அன்பின் உள் ளான்புறத்தான் உட லாயுளான் முன்பின்உள் ளான்முனி வர்க்கும் பிரானவன் அன்பின்உள் ளாகி அமரும் அரும்பொருள் அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே |
6 |
19. அன்பு செய்வாரை அறியும் சிவன்
280 |
இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும் உகந்தருள் செய்திடும் உத்தம நாதன் கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்கு மகிழ்ந்தன்பு செய்யும் அருளது வாமே |
1 |
281 |
இன்பப் பிறவிக்கு இயல்வது செய்தவன் துன்பப் பிறவித் தொழில்பல என்னினும் அன்பிற் கலவிசெய்து ஆதிப் பிரான்வைத்த முன்பிப் பிறவி முடிவது தானே |
2 |
282 |
அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளி இன்புறு கண்ணியொடு ஏற்க இசைந்தன துன்புறு கண்ணி ஐந் தாடும் துடக்கற்று நண்புறு சிந்தையை நாடுமின் நீரே |
3 |
283 |
புணர்ச்சியுள் ஆயிழை மேல்அன்பு போல உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கவல் லாருக்கு உணர்ச்சியில் லாது குலாவி உலாவி அணைத்தலும் இன்பம் அதுவிது வாமே |
4 |
284 |
உற்றுநின் றாரொடும் அத்தகு சோதியைச் சித்தர்கள் என்றும் தொந்தறி வாரில்லை பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ முத்தி கொடுத்தவர் முன்புநின் றானே |
5 |
285 |
கண்டேன் கமழ்தரு கொன்றையி னான்அடி கண்டேன் கரியுரி யான்தன் கழலிணை கண்டேன் கமல மலர்உறை வானடி கண்டேன் கழலதென் அன்பினுள் யானே |
6 |
286 |
நம்பனை நானா விதப்பொரு ளாகுமென்று உம்பரில் வானவர் ஓதுந் தலைவனை இன்பனை இன்பத் திடைநின்று இரதிக்கும் அன்பனை யாரும் அறியகி லாரே |
7 |
287 |
முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார் அன்பில் இறைவனை யாம்அறி வோம்என்பர் இன்பப் பிறப்பும் இறப்பும் இலான்நந்தி அன்பில் அவனை அறியகி லாரே |
8 |
288 |
ஈசன் அறியும் இராப்பக லுந்தன்னைப் பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத் தேசுற்று இருந்து செயலற் றிருந்திடில் ஈசன்வந்து எம்மிடை ஈட்டிநின் றானே |
9 |
289 |
விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத் தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை எட்டும் என் ஆருயி ராய்நின்ற ஈசனை மட்டுக் கலப்பது மஞ்சனம் ஆமே |
10 |
20. கல்வி
290 |
குறிப்பறிந் தேன்உடல் உயிரது கூடிச் செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை மறிப்பறி யாதுவந்துஉள்ளம் புகுந்தான் கறிப்பறி யாமிகுங் கல்விகற் றேனே |
1 |
291 |
கற்றறி வாளர் கருதிய காலத்துக் கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டு கற்றறி வாளர் கருதி உரைசெய்யுங் கற்றறி காட்டக் கயல்உள வாக்குமே |
2 |
292 |
நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல் கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள் சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின் மற்றொன்று இலாத மணிவிளக் காமே |
3 |
293 |
கல்வி யுடையார் கழிந்தோடிப் போகின்றார் பல்லி யுடையார் பாம்பரிந்து உண்கின்றார் எல்லியுன் காலையும் ஏத்தும் இறைவனை வல்லியுள் வாதித்த காயமும் ஆமே |
4 |
294 |
துணையது வாய்வரும் தூயநற் சோதி துணையது வாய்வரும் தூயநற் சொல்லாம் துணையது வாய்வரும் தூயநற் கந்தம் துணையது வாய்வரும் தூயநற் கல்வியே |
5 |
295 |
நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார் பாலொன்று பற்றினால் பண்பின் பயங்கெடும் கோலொன்று பற்றினால் கூடாப் பறவைகள் மாலொன்று பற்றி மயங்குகின் றார்க்களே |
6 |
296 |
ஆய்ந்துகொள் வார்க்குஅரன் அங்கே வெளிப்படும் தோய்ந்த நெருப்பது தூய்மணி சிந்திடும் ஏய்ந்த இளமதி எட்டவல் லார்கட்கு வாய்ந்த மனமல்கு நூலேணி யாமே |
7 |
297 |
வழித்துணை யாய்மருந் தாயிருந் தார்முன் கழித்துணை யாம்கற் றிலாதவர் சிந்தை ஒழித்துணை யாம்உம் பராய்உல கேழும் வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே |
8 |
298 |
பற்றது பற்றில் பரமனைப் பற்றுமின் முற்றது எல்லா முதல்வன் அருள்பெறில் கிற்ற விரகிற் கிளரொளி வானவர் கற்றவர் போன்பம் உற்றுநின் றாரே |
9 |
299 |
கடலுடை யான்மலை யான்ஐந்து பூதத்து உடலுடை யான்பல ஊழிதொ றூழி அடல்விடை யேறும் அமரர்கள் நாதன் இடமுடை யார்நெஞ்சத் தில்லிருந் தானே |
10 |
21. கேள்வி கேட்டமைதல்
300 |
அறங்கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும் மறங்கேட்டும் வானவர் மந்திரங் கேட்டும் புறங்கேட்டும் பொன்னுரை மேனிஎம் ஈசன் திறங்கேட்டும் பெற்ற சிவகதி தானே |
1 |
301 |
தேவர் பிரானைத் திவ்விய மூர்த்தியை யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின் ஓதுமின் கேள்மின் உணர்மின் உணர்ந்தபின் ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே |
2 |
302 |
மயன்பணி கேட்பது மாநந்தி வேண்டின் அயன்பணி கேட்பது அரன்பணி யாலே சிவன்பணி கேட்பவர் தேவரும் ஆவர் பயன்பணி கேட்பது பற்றது வாமே |
3 |
303 |
பெருமான் இவனென்று பேசி இருக்கும் திருமானிடர் பின்னைத் தேவரும் ஆவர் வருமா தவர்க்கு மகிழ்ந்தருள் செய்யும் அருமா தவத்தெங்கள் ஆதிப் பிரானே |
4 |
304 |
ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும் பேசி யிருந்து பிதற்றி மகிழ்வெய்தி நேசமு மாகும் நிகழொளி யாய்நின்று வாச மலர்க்கந்தம் மன்னிநின் றானே |
5 |
305 |
விழுப்பமும் கேள்வியும் மெய்நின்ற ஞானத்து ஒழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது வழுக்கி விடாவிடில் வானவர் கோனும் இழுக்கின்றி எண்ணிலி காலம தாமே |
6 |
306 |
சிறியார் மணற்சோற்றில் தேக்கிடு மாபோல் செறிவால் அனுபோகம் சித்திக்கும் என்னில் குறியாதது ஒன்றைக் குறியாதார் தம்மை அறியாது இருந்தார் அவராவார் அன்றே |
7 |
307 |
உறுதுணை யாவது உயிரும் உடம்பும் உறுதுணை யாவது உலகுறு கேள்வி செறிதுணை யாவது சிவனடிச் சிந்தை பெறுதுணை கேட்கிற் பிறப்பில்லை தானே |
8 |
308 |
புகழநின் றார்க்கும் புராணன்எம் ஈசன் இகழநின் றார்க்கும் இடும்பைக்கு இடமாம் மகிழநின் றாதியை ஓதி உணராக் கழியநின் றார்க்கொரு கற்பசு வாமே |
9 |
309 |
வைத்துணர்ந் தான்மனத் தொடும்வாய் பேசி ஒத்துணர்ந் தான்உரு ஒன்றொடொன்று ஒவ்வாது அச்சுஉழன்று ஆணி கலங்கினும் ஆதியை நச்சு உணர்ந் தார்க்கே நணுகலு மாமே |
10 |
22. கல்லாமை
310 |
கல்லா தவரும் கருத்தறி காட்சியை வல்லார் எனில்அருட் கண்ணான் மதித்துளோர் கல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோரும் கல்லாதார் இன்பம் காணுகி லாரே |
1 |
311 |
வல்லார்கள் என்றும் வழியொன்றி வாழ்கின்றார் அல்லா தவர்கள் அறிவு பலஎன்பார் எல்லா இடத்தும் உளன்எங்கள் தம் இறை கல்லா தவர்கள் கலப்பறி யாரே |
2 |
312 |
நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து நில்லாக் குரம்பை நிலையென்று உணர்வீர்காள் எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும் கல்லாதார் நெஞ்சத்துக் காணஒண் ணாதே |
3 |
313 |
கில்லேன் வினைத்துய ராக்கும் மயலானேன் கல்லேன் அரநெறி அறியாத் தகைமையின் வல்லேன் வழங்கும் பொருளே மனத்தினுள் கல்லேன் கழியநின்று ஆடவல் லேனே |
4 |
314 |
நில்லாது சீவன் நிலையன்று எனஎண்ணி வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார் கல்லா மனித்தர் கயவர் உலகினில் பொல்லா வினைத்துயர் போகஞ்செய் வாரே |
5 |
315 |
விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி கண்ணினின் உள்ளே கலந்துஅங் கிருந்தது மண்ணினின் உள்ளே மதித்து மதித்துநின் றெண்ணி எழுதி இளைத்துவிட் டாரே |
6 |
316 |
கணக்கறிந் தார்க்கு அன்றிக் காணஒண் ணாதது கணக்கறிந் தார்க்கு அன்றிக் கைகூடாக் காட்சி கணக்கறிந்து உண்மையைக் கண்டுஅண்ட நிற்கும் கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே |
7 |
317 |
கல்லாத மூடரைக் காணவும் ஆகாது கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன்அன்று கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம் கல்லாத மூடர் கருத்தறி யாரே |
8 |
318 |
கற்றும் சிவஞானம் இல்லாக் கலதிகள் சுற்றமும் வீடார் துரிசுஅறார் மூடர்கள் மற்றும் பலதிசை காணார் மதியிலோர் கற்றன்பில் நிற்போர் கணக்கறிந் தார்களே |
9 |
319 |
ஆதிப் பிரான்அம ரர்க்கும் பரஞ்சுடர் சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம் ஓதி உணரவல் லோம்என்பர் உள்நின்ற சோதி நடத்தும் தொடர்வறி யாரே |
10 |
23. நடுவு நிலைமை
320 |
நடுவுநின் றார்க்கு அன்றி ஞானமும் இல்லை நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை நடுவுநின் றார்நல்ல தேவரும் ஆவர் நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே |
1 |
321 |
நடுவுநின் றான்நல்ல கார்முகில் வண்ணன் நடுவுநின் றான்நல்ல நான்மறை யோதி நடுவுநின் றார்ச்சிலர் ஞானிகள் ஆவோர் நடுவுநின் றார்நல்ல நம்பனு மாமே |
2 |
322 |
நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவார் நடுவுநின் றார்சிலர் தேவரு மாவார் நடுவுநின் றார்சிலர் நம்பனு மாவார் நடுவுநின் றாரொடு நானும்நின் றேனே |
3 |
323 |
தோன்றிய எல்லாம் துடைப்பன் அவனன்றி ஏன்றுநின் றாரென்றும் ஈசன் இணையடி மூன்றுநின் றார்முதல் வன்திரு நாமத்தை நான்றுநின் றார்நடு வாகிநின் றாரே |
4 |
24. கள்ளுண்ணாமை
324 |
கழுநீர்ப் பசுப்பெறிற் கயந்தொறும் தேரா கழுநீர் விடாய்த்துத்தம் காயம்சுருக்கும் முழுநீர்க் கள்ளுண்போர் முறைமை அகன்றோர் செழுநீர்ச் சிவன்தன் சிவானந்தத் தேறலே |
1 |
325 |
சித்தம் உருக்கிச் சிவமாம் சமாதியில் ஒத்த சிவானந்தம் ஓவாத தேறலைச் சுத்த மதுவுண்ணச் சிவானந்தம் விட்டிடா நித்தல் இருத்தல் கிடத்தல் கீழ்க் காலே |
2 |
326 |
காமமும் கள்ளும் கலதிகட் கேயாகும் மாமல மும்சம யத்துள் மயலுறும் போமதி யாகும் புனிதன் இணையடி ஓமய ஆனந்தத் தேறல் உணர்வுண்டே |
3 |
327 |
வாமத்தோர் தாமும் மதுவுண்டு மாள்பவர் காமத்தோர் காமக்கள் ளுண்டே கலங்குவர் ஓமத்தோர் உள்ளொளிக் குள்ளே உணர்வர்கள் நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமே |
4 |
328 |
உள்ளுண்மை ஓரார் உணரார் பசுபாசம் வள்ளன்மை நாதன் அருளினன் வாழ்வுறார் தெள்ளுண்மை ஞானச் சிவயோகம் சேர்வுறார் கள்ளுண்ணும் மாந்தர் கருத்தறி யாரே |
5 |
329 |
மயக்கும் சமய மலமன்னு மூடர் மயக்கு மதுவுண்ணும் மாமூடர் தேரார் மயக்குறு மாமாயை மாயையின் வீடு மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே |
6 |
330 |
மயங்குந் தியங்கும் கள்வாய்மை அழிக்கும் இயங்கும் மடவார்தம் இன்பமே எய்தி முயங்கும் நயங்கொண்ட ஞானத்து முந்தார் இயங்கும் இடையறா ஆனந்தம் எய்துமே |
7 |
331 |
இராப்பகல் அற்ற இடத்தே இருந்து பராக்கற ஆனந்தத் தேறல் பருகார் இராப்பகல் அற்ற இணையடி இன்பத்து இராப்பகல் மாயை இரண்டிடத் தேனே |
8 |
332 |
சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர் சத்தி அழிந்தது தம்மை மறத்தலால் சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச் சத்திய ஞானஆ னந்தத்திற் சார்தலே |
9 |
333 |
சத்தன் அருள்தரின் சத்தி அருளுண்டாம் சத்தி அருள்தரின் சத்தன் அருளுண்டாம் சத்தி சிவமாம் இரண்டும் தன் உள்வைக்கச் சத்தியம் எண்சித்தித் தன்மையு மாமே |
10 |
334 |
தத்துவம் நீக்கி மருள்நீக்கித் தானாகிப் பொய்த்தவம் நீக்கிமெய்ப் போகத்துட் போகியே மெய்த்த சகமுண்டு விட்டுப் பரானந்தச் சித்திய தாக்கும் சிவானந்தத் தேறலே |
11 |
335 |
யோகிகள் கால்கட்டி ஒண்மதி ஆனந்தப் போத அமுதைப் பொசித்தவர் எண்சித்தி மோகியர் கள்ளுண்டு மூடராய் மோகமுற்று ஆகும் மதத்தால் அறிவழிந் தாரே |
12 |
336 |
உண்ணீர் அமுத முறும் ஊறலைத்திறந்து எண்ணீர் குரவன் இணையடித் தாமரை நண்ணீர் சமாதியின் நாடிநீ ரால்நலம் கண்ணாற் றொடேசென்று கால்வழி காணுமே |
13 |
முதல் தந்திரம் முற்றிற்று
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் தந்திரம் - பத்தாம் திருமுறை - திருமந்திரம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - நடுவுநின், இன்பம், அந்தணர், வானவர், நாளில், திருவடி, வேட்கை, மனிதர்கள், இறைவனை, அக்குழி, எய்திய, இருந்தார், அறியும், றார்சிலர், கணக்கறிந், செல்வம், சிந்தை, ஏத்துமின், அறிகிலார், நாள்தோறும், வேதாந்தங், அளித்தான், யாவர்க்கு, கல்லாத, கல்லாதார், கருத்தறி, தூயநற், வாய்வரும், தெளிவு, சோம்பர், தூங்கிக்கண், பெற்றார், இணையடி, துணையது, ஐவரும், கண்டேன், வேதாந்த, கற்றறி, நிலையாமை, இயங்கும், அணைதுணை, என்றும், எரியும், உடையவர், இறப்பும், கேட்பது, தேவரும், இராப்பகல், வழித்துணை, காண்பார், வேந்தன், அறியாது, வழிமுதல், பற்றது, இரண்டும், பருவூசி, மாந்தர், பதுநந்தி, புலன்ஐந்துந், தார்களே, இரண்டு, மாடும், மன்றத்தே, குருவின், துள்ளே, வாறும், களிம்பறுத், முப்பதும், ஆனந்தத், தம்முள்ளே, டார்சிவ, ஒன்பது, முன்னே, வாழும், காட்டிக், ஒன்றும், யாதவர், அறிந்தபின், இன்புறு, நித்தலும், கண்டும், கிடந்தது, சுற்றமும், கிடந்து, படைத்த, நாடுமின், அரசனும், அவ்வழி