முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » எட்டாம் திருமுறை - திருவாசகம், திருக்கோவையார் » பதினெட்டாம் அதிகாரம்
எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - பதினெட்டாம் அதிகாரம்
பதினெட்டாம் அதிகாரம்
18. வரை பொருட் பிரிதல்
பேரின்பக் கிளவி
வரைபொருட் பிரிதல் துறைமுப் பத்து மூன்றுங் கருணை தோன்ற அருளே உணர்த்தலும் உணர்தலும் திரோதையும் பரையும் தெரிசன மாகித் திவ்விய இன்பம் கூடும் குறியும் குலவி யுணர்தல். |
1. முலை விலை கூறல்
குறைவிற்கும் கல்விக்கும் செல்விற்கும் நின்குலத் திற்கும் வந்தோர் நிறைவிற்கும் மேதகு நீதிக்கும் ஏற்பின்அல் லால்நினையின் இறைவிற் குலாவரை யேந்திவண் தில்லையன் ஏழ்பொழிலும் உறைவிற் குலாநுத லாள்விலை யோமெய்ம்மை யோதுநர்க்கே. |
266 |
கொளு கொலைவேற் கண்ணிக்கு விலையிலை என்றது. |
2. வருமது கூறி வரைவுடம்படுத்தல்
வடுத்தன நீள்வகிர்க் கண்ணிவெண் நித்தில வாள்நகைக்குத் தொடுத்தன நீவிடுத் தெய்தத் துணியென்னைத் தன்தொழும்பிற் படுத்தநன் நீள்கழல் ஈசர்சிற் றம்பலம் தாம்பணியார்க்(கு) அடுத்தன தாம்வரின் பொல்லா(து) இரவின்நின் ஆரருளே. |
267 |
கொளு தொடுத்தன விடுத்துத் தோகை தோளெய்(து) இடுக்கண் பெரிது இரவரின் என்றது. |
3. வரைபொருட் பிரிவை உரையெனக் கூறல்
குன்றங் கிடையும் கடந்துமர் கூறும் நிதிகொணர்ந்து மின்தங் கிடைநும் மையும் வந்து மேவுவன் அம்பலம்சேர் மன்தங்(கு) இடைமரு(து) ஏகம்பம் வாஞ்சியம் அன்னபொன்னச் சென்(று)அங்(கு) இடைகொண்டு வாடா வகைசெப்பு தேமொழியே. |
268 |
கொளு ஆங்க வள்வயின் நீங்கல் உற்றவன் இன்னுயிர்த் தோழிக்கு முன்னி மொழிந்தது. |
4. நீயே கூறு என்றல்
கேழ்ஏ வரையும்இல் லோன்புலி யூர்பயில் கிள்ளையன்ன யாழேர் மொழியாள் இரவரி னும்பகற் சேறியென்று வாழேன் எனஇருக் கும்வரிக் கண்ணியை நீவருட்டித் தாழேன் எனஇடைக் கண்சொல்லி ஏகு தனிவள்ளலே. |
269 |
கொளு காய்கதிர் வேலோய் கனங்குழை அவட்கு நீயே உரை நின்செலவு என்றது. |
5. சொல்லாது ஏகல்
வருட்டின் திகைக்கும் வசிக்கின் துளங்கும் மனமகிழ்ந்து தெருட்டின் தெளியலள் செப்பும் வகையில்லை சீரருக்கன் குருட்டின் புகச்செற்ற கோன்புலி யூர்குரு கார்மனம் போன்(று) இருட்டிற் புரிகுழ லாட்(கு)எங்ங னேசொல்லி ஏகுவனே. |
270 |
கொளு நிரைவளை வாட உரையா(து) அகன்றது. |
6. பிரிந்தமை கூறல்
நல்லாய் நமக்குற்ற(து) என்னென்(று) உரைக்கேன் நமர்தொடுத்த எல்லா நிதியும் உடன்விடுப் பான்இமை யோர் இறைஞ்சும் மல்லார் கழல்அழல் வண்ணர்வண் தில்லை தொழார்கள் அல்லால் சொல்லா அழற்கடம் இன்றுசென் றார் சிறந்தவரே. |
271 |
கொளு தேங்கமழ் குழலிக்குப் பாங்கி பகர்ந்தது. |
7. நெஞ்சொடு கூறல்
அருந்தும் விடம்அணி யாம்மணிகண்டன்மற்(று) அண்டர்க்கெல்லாம் மருந்தும் அமிர்தமும் ஆகும்முன் னோன்தில்லை வாழ்த்தும்வள்ளல் திருந்தும் கடன்நெறி செல்லும்இவ் வாறு சிதைக்குமென்றால் வருந்தும் மடநெஞ்ச மேயென்ன யாம்இனி வாழ்வகையே. |
272 |
கொளு கல்வரை நாடன் சொல்லா(து) அகல மின்னொளி மருங்குல் தன்னொளி தளர்ந்து. |
8. நெஞ்சொடு வருந்தல்
ஏர்ப்பின்னை தோள்முன் மணந்தவன் ஏத்த எழில்திகழும் சீர்ப்பொன்னை வென்ற செறிகழ லோன்தில்லைச் சூழ்பொழில்வாய்க் கார்ப்புன்னை பொன்னவிழ் முத்த மணலிற் கலந்தகன்றார் தேர்ப் பின்னைச் சென்றஎன் நெஞ்(சு)என் கொலாம்இன்று செய்கின்றதே. |
273 |
கொளு வெற்பன் நீங்கப் பொற்பு வாடியது. |
9. வருத்தம் கண்டு உரைத்தல்
கானமர் குன்றர் செவியுற வாங்கு கணைதுணையா மானமர் நோக்கியர் நோக்கென மான்நல் தொடைமடக்கும் வானவர் வெற்பர்வண் தில்லையின் மன்னை வணங்கலர் போல் தேனமர் சொல்லிசெல் லார்செல்லல் செல்லல் திருநுதலே. |
274 |
கொளு அழலுறு கோதையின் விழுமுறு பேதையை நீங்கலரெனப் பாங்கி பகர்ந்தது. |
10. வழியழுகி வற்புறுத்தல்
மதுமலர்ச் சோலையும் வாய்மையும் அன்பும் மருவி வெங்கான் கதுமெனப் போக்கும் நிதியின் அருக்குமுன் னிக்கலுழ்ந்தால் நொதுமலர் நோக்கமொர் மூன்றுடை யோன்தில்லை நோக்கலர்போல் இதுமலர்ப் பாவைக்(கு)என் னோவந்த வாறென்பர் ஏந்திழையே. |
275 |
கொளு சூழிருங் கூந்தலைத் தோழி தெருட்டியது. |
11. வன்புறை எதிர் அழிந்து இரங்கல்
வந்(து)ஆய் பவரைஇல்லாமயில் முட்டை இளையமந்தி பந்தா(டு) இரும்பொழில் பல்வரை நாடன்பண் போஇனிதே கொந்தார் நறுங்கொன்றைக் கூத்தன்தென் தில்லை தொழார்குழுப்போல் சிந்தா குலமுற்றப் பற்றின்றி நையும் திருவினர்க்கே. |
276 |
கொளு வன்கறை வேலோன் வரைவு நீட வன்புறை அழிந்தவள் மனம்அழுங் கியது. |
12. வாய்மை கூறி வருத்தம் தணித்தல்
மொய்யென் பதேஇழை கொண்டவன் என்னைத்தன் மொய்கழற்(கு)ஆட் செய்என் பதேசெய் தவன்தில்லைச் சூழ்கடற் சேர்ப்பர்சொல்லும் பொய்என்ப தேகருத்தாயின் புரிகுழற் பொற்றொடியாய் மெய்என்ப(து) ஏதுமற்(று) இல்லைகொலாம்இவ் வியவிடத்தே. |
277 |
கொளு வேற்றடங் கண்ணியை ஆற்று வித்தது. |
13. தேறாது புலம்பல்
மன்செய்த முன்னாள் மொழிவழி யேஅன்ன வாய்மைகண்டும் என்செய்த நெஞ்சும் நிறையும்நில் லாஎன(து) இன்னுயிரும் பொன்செய்த மேனியன் தில்லை யுறாரின் பொறைஅரிதாம் முன்செய்த தீங்குகொல் காலத்து நீர்மைகொல் மொய்குழலே. |
278 |
கொளு தீதறு குழலி தேற்றத் தேறாது போதுறு குழலி புலம்பியது. |
14. காலம் மறைத்துரைத்தல்
கருந்தினை ஓம்பக் கடவுள் பராவி நமர்கலிப்பச் சொரிந்தன கொண்மூச் சுரந்ததன் பேரரு ளால்தொழும்பிற் பரிந்தெனை யாண்டசிற் றம்பலத் தான்பரங் குன்றில்துன்றி விரிந்தன காந்தள் வெருவரல் காரென வெள்வளையே. |
279 |
கொளு காந்தள் கருவுறக் கடவுள் மழைக்கென்(று) ஏந்திழைப் பாங்கி இனிதியம் பியது. |
15. தூது வர உரைத்தல்
வென்றவர் முப்புரம் சிற்றம் பலத்திற்நின் றாடும்வெள்ளிக் குன்றவர் குன்றா அருள்தரக் கூடினர் நம்மகன்று சென்றவர் தூதுகொல் லோஇருந் தேமையும் செல்லல்செப்பா நின்றவர் தூதுகொல் லோவந்து தோன்றும் நிரைவளையே. |
280 |
கொளு ஆங்கொரு தூதுவரப் பாங்கிகண் டுரைத்தது. |
16. தூது கண்டழுங்கல்
வருவன செல்வன தூதுகள் ஏதில வான்புலியூர் ஒருவனது அன்பரின் இன்பக் கலவிகள் உள்ளுருகத் தருவன செய்தன(து) ஆவிகொண்(டு) ஏகிஎன் நெஞ்சில்தம்மை இருவின காதலர் ஏதுசெய் வான்இன்(று) இருக்கின்றதே. |
281 |
கொளு அயலுற்ற தூதுவரக் கயலுற்றகண்ணி மயலுற்றது. |
17. மெலிவு கண்டு செவிலி கூறல்
வேயின மென்தோள் மெலிந்தோளி வாடி விழிபிறிதாய்ப் பாயின மேகலை பண்டையள் அல்லள் பவளச்செவ்வி ஆயின ஈசன் அமரர்க்(கு) அமரன்சிற் றம்பலத்தான் சேயின(து) ஆட்சியில் பட்டன ளாம்இத் திருந்திழையே. |
282 |
கொளு வண்டமர் புரிகுழல் ஒண்டொடி மேவிய வாடா நின்ற கோடாய் கூறியது. |
18. கட்டு வைப்பித்தல்
கணங்குற்ற கொங்கைகள் சூதுற் றிலசொல் தெளிவுற்றில குணங்குற்றம் கொள்ளும் பருவமு றாள்குறு காஅசுரர் நிணங்குற்ற வேல்சிவன் சிற்றம் பலநெஞ் சுறாதவர்போல் அணங்குற்ற நோய்அறி வுற்றுரை யாடுமின் அன்னையரே. |
283 |
கொளு மால்கொண்ட கட்டுக் கால்கொண்டது. |
19. கலக்கமுற்று நிறுத்தல்
மாட்டியன் றேஎம் வயின்பெரு நாணினி மாக்குடிமா சூட்டியன் றேநிற்ப(து) ஓடிய வா(று)இவள் உள்ளமெல்லாம் காட்டியன் றேநின்ற தில்லைச்தொல் லோனைக்கல் லாதவர்போல் வாட்டியன்(று) ஏர்குழ லார்மொழி யாதன வாய்திறந்தே. |
284 |
கொளு தெய்வத்தில் தெரியுமென எவ்வத்தின் மெலிவுற்றது. |
20. கட்டுவித்திக் கூறல்
குயிலிதன் றேயென்ன லாம்சொல்லி கூறன்சிற் றம்பலத்தான் இயலிதன் றேயென்ன லாகா இறைவிறற் சேய்கடவும் மயிலிதன் றேகொடி வாரணம் காண்கவன் சூர்தடிந்த அயிலிதன் றேயிதன் றேநெல்லில் தோன்றும் அவன்வடிவே. |
285 |
கொளு கட்டு வித்தி விட்டு ரைத்தது. |
21. வேலனை அழைத்தல்
வேலன் புகுந்து வெறியா டுகவெண் மறியறுக்க காலன் புகுந்(து)அவி யக்கழல் வைத்தெழில் தில்லைநின்ற மேலன் புகுந்தென்கண் நின்றான் இருந்தவெண் காடனைய பாலன் புகுந்திப் பரிசினின் நிற்பித்த பண்பினுக்கே. |
286 |
கொளு வெறியாடிய வேலனைக் கூஉய் நெறியார் குழலி தாயர் நின்றது. |
22. இன்னல் எய்தல்
அயர்ந்தும் வெறிமறி ஆவி செகுத்தும் விளர்ப்(பு)அயலார் பெயர்ந்தும் ஒழியா விடின்என்னை பேசுவ பேர்ந்திருவர் உயர்ந்தும் பணிந்தும் உணரான(து) அம்பலம் உன்னலரின் துயர்ந்தும் பிறிதின் ஒழியினென் ஆதும் துறைவனுக்கே. |
287 |
கொளு ஆடிய வெறியிற் கூடுவ(து) அறியாது நன்னறுங் கோதை இன்னல் எய்தியது. |
23. வெறி விலக்குவிக்க நினைதல்
சென்றார் திருத்திய செல்லல்நின் றார்கள் சிதைப்பரென்றால் நன்றா அழகிதன் றேஇறை தில்லை தொழாரின்நைந்தும் ஒன்றாம் இவட்கும் மொழிதல்இல் லேன்மொழி யாதும்உய்யேன் குன்றார் துறைவர்க்(கு) உறுவேன் உரைப்பன் இக் கூர்மறையே. |
288 |
கொளு அயல்திரு வெறியின் மயல்தரு மென விலக்கல் உற்ற குலக்கொடி நினைந்தது. |
24. அறத்தொடு நிற்றலை உரைத்தல்
யாயும் தெறுக அயலவர் ஏசுக ஊர்நகுக நீயும் முனிக நிகழ்ந்தது கூறுவல் என்னுடைய வாயும் மனமும் பிரியா இறைதில்லை வாழ்த்துநர்போல் தூயன் நினக்குக் கடுஞ்சூள் தருவன் சுடர்க்குழையே. |
289 |
கொளு வெறித்தலை வெரீஇ வெருவரு தோழிக்(கு) அறத்தொடு நின்ற ஆயிழை உரைத்தது. |
25. அறத்தொடு நிற்றல்
வண்டலுற் றேம்எங்கண் வந்தொரு தோன்றல் வரிவளையீர் உண்டலுற் றேமென்று நின்றதோர் போழ்(து)உடை யான்புலியூர்க் கொண்டலுற்(று) ஏறும் கடல்வர எம்உயிர் கொண்டுதந்து கண்டலுற்(று) ஏர்நின்ற சேரிச்சென் றான்ஓர் கழலவனே. |
290 |
கொளு செய்த வெறியின் எய்துவது அறியாது நிறத்தொடித் தோழிக்(கு) அறத்தொடு நின்றது. |
26. ஐயந்தீரக் கூறல்
குடிக்கலர் கூறினும் கூறா வியன்தில்லைக் கூத்தன்தாள் முடிக்(கு)அல ராக்கும்மொய் பூந்துறை வற்கு முரிபுருவ வடிக்கலர் வேற்கண்ணி வந்தன சென்றுநம் யாய்அறியும் படிக்கல ராம்இவை என்நாம் மறைக்கும் பரிசுகளே. |
291 |
கொளு விலங்குதல் விரும்பு மேதரு தோழி அலங்கற் குழலிக்(கு) அறிய உரைத்தது. |
27. வெறி விலக்கல்
விதியுடை யார்உண்க வேரி விலக்கலம் அம்பலத்துப் பதியுடை யான்பரங் குன்றினில் பாய்புனல் யாம் ஒழுகக் கதியுடை யான்கதிர்த் தோள்நிற்க வேறு கருதுநின்னின் மதியுண்டை யார்தெய்வ மேயில்லை கொல்இனி வையகத்தே. |
292 |
கொளு அறத்தொடு நின்ற திறத்தினிற் பாங்கி வெறி விலக்கப் பிறிதுரைத்தது. |
28. செவிலிக்குத் தோழி அறத்தொடு நிற்றல்
மனக்களி யாய்இன் றியான்மகிழ் தூங்கத்தன் வார்கழல்கள் எனக்களி யாநிற்கும் அம்பலத் தோன்இருந் தண்கயிலைச் சினக்களி யானை கடிந்தார் ஒருவர்செவ் வாய்ப்பசிய புனக்கிளி யாங்கடி யும்வரைச் சாரற் பொருப்பிடத்தே. |
293 |
கொளு சிறப்புடைச் செவிலிக்(கு) அறத்தொடு நின்றது. |
29. நற்றாய்க்குச் செவிலி அறத்தொடு நிற்றல்
இளையாள் இவளைஎன் சொல்லிப் பரவுதும் ஈர்எயிறு முளையா அளவின் முதுக்குறைந் தாள்முடி சாய்த்திமையோர் வளையா வழுத்தா வருதிருச் சிற்றம் பலத்துமன்னன் திளையா வரும்அரு விக்கயி லைப்பயில் செல்வியையே. |
294 |
கொளு கற்பினின் வழாமை நிற்பித்து எடுத்தோள் குலக்கொடி தாயர்க்(கு) அறத்தொடு நின்றது. |
30. தேர் வரவு கூறல்
கள்ளினம் ஆர்த்துண்ணும் வண்கொன்றை யோன்தில்லைக் கார்க்கடல்வாய்ப் புள்ளினம் ஆர்ப்பப் பொருதிரை யார்ப்பப் புலவர்கள்தம் வள்ளினம் ஆர்ப்ப மதுகரம் ஆர்ப்ப வலம்புரியின் வெள்ளினம் ஆர்ப்ப வரும்பெரும் தேரின்று மெல்லியலே. |
295 |
கொளு மணிநெடுந் தேரோன் அணிதிணின் வருமென யாழியல் மொழிக்குத் தோழி சொல்லியது. |
31. மணமுரசு கேட்டு மகிழ்ந்துரைத்தல்
பூரண பொற்குடம் வைக்க மணிமுத்தம் பொன்பொதிந்த தோரணம் நீடுக தூரியம் ஆர்க்கதொன் மால்அயற்கும் காரணன் ஏரணி கண்ணுத லோன்கடல் திலலையன்ன வாரண வும்முலை மன்றலென்(று) ஏங்கும் மணமுரசே. |
296 |
கொளு நிலங்காவலர் நீண்மணத்தின் நலங்கண்டவர் நயந்துரைத்தது. |
32. ஐயுற்றுக் கலங்கல்
அடற்களி யாவர்க்கும் அன்பர்க்(கு) அளிப்பவன் துன்பஇன்பம் படக்களி யாவண் டறைபொழில் தில்லைப் பரமன்வெற்பில் கடக்களி யானை கடிந்தவர்க் கோஅன்றி நின்றவர்க்கோ விடக்களி யாம்நம் விழுநகர் ஆர்க்கும் வியன்முரசே. |
297 |
கொளு நல்லவர் முரசுமற்(று) அல்லவர் முரசெனத் தெரிவ ரிதென அரிவை கலங்கியது. |
33. நிதி வரவு கூறா நிற்றல்
என்கடைக் கண்ணினும் யான்பிற ஏத்தா வகையிரங்கித் தன்கடைக் கண்வைத்த தண்தில்லைச் சங்கரன் தாழ்கயிலைக் கொன்கடைக் கண்தரும் யானை கடிந்தார் கொணர்ந்திறுத்தார் முன்கடைக் கண்ணிது காண்வந்து தோன்றும் முழுநிதியே. |
298 |
கொளு மகிழ்தரு மனத்தொடு வண்புகழ்த் தோழி திகழ் நிதி மடந்தைக்குத் தெரிய உரைத்தது. |
வரை பொருட் பிரிதல் முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதினெட்டாம் அதிகாரம் - எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - அறத்தொடு, நிற்றல், நின்றது, பாங்கி, தில்லை, ஆர்ப்ப, உரைத்தது, சிற்றம், என்றது, உரைத்தல், பிரிதல், தோன்றும்