முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » எட்டாம் திருமுறை - திருவாசகம், திருக்கோவையார் » பதினென்காம் அதிகாரம்
எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - பதினென்காம் அதிகாரம்
பதினென்காம் அதிகாரம்
14. இரவுக் குறி
பேரின்பக் கிளவி
இரவுக் குறித்துறை முப்பத்திமூன்றும் அருளே சிவத்தோ(டு) ஆக்கியல் அருமை தெரியவற் புறுத்திச் சிவனது கருணையின் இச்சை பலவும் எடுத்தெடுத்(து) அருளல். |
1. இரவுக் குறி வேண்டல்
மருந்துநம் அல்லற் பிறவிப் பிணிக்(குஅம் பலத்(து)அமிர்தாய் இருந்தனர் குன்றின்நின்(று) ஏங்கும் அருவிசென்(று) ஏர்திகழப் பொருந்தின மேகம் புதைத்திருள் தூங்கும் புனை இறும்பின் விருந்தின் யான்உங்கள் சீறூர் அதனுக்கு வெள்வளையே. |
148 |
கொளு நள்ளிருள் குறியை வள்ளல் நினைந்து வீங்கு மென்முலைப் பாங்கிற்(கு) உரைத்தது. |
2. வழியருமை கூறி மறுத்தல்
விசும்பினுக்(கு) ஏணி நெறியன்ன சின்னெறி மேல்மழைதூங்(கு) அசும்பினில் துன்னி அளைநுழைந் தால் ஒக்கும் ஐயமெய்யே இசும் பினில் சிந்தைக்கும் ஏறற்(கு) அரி(து)எழில் அம்பலத்துப் பசும்பனிக் கோடு மிலைந்தான் மலயத்(து)எம் வாழ்பதியே |
149 |
கொளு இரவரல் ஏந்தல் கருதி உரைப்பப் பருவரல் பாங்கி அருமை உரைத்தது. |
3. நின்று நெஞ்சுடைதல்
மாற்றேன் எனவந்த காலனை ஓலம் இடஅடர்த்த கோலதேன் குளிர்தில்லைக் கூத்தன் கொடுங்குன்றின் நீள்குடுமி மேல்தேன் விரும்பும் முடவனைப் போல மெலியும் நெஞ்சே ஆற்றேன் அரிய அரிவைக்கு நீவைத்த அன்பினுக்கே. |
150 |
கொளு பாங்கி விலங்கப் பருவரை நாடன் நீங்கி விலங்காது நெஞ்சு டைந்தது. |
4. இரவுக்குறி நேர்தல்
கூளி நிரைக்கநின்(று) அம்பலத்(து) ஆடி குறைகழற்கீழ்த் தூளி நிறைத்த சுடர்முடி யோஇவள் தோள்நசையால் ஆளி நிரைத்தடல் ஆனைகள் தேரும் இரவில்வந்து மீளி யுரைத்தி வினையேன் உரைப்பதென் மெல்லியற்கே. |
151 |
கொளு தடவரை நாடன் தளர்வு தீர மடநடைப் பாங்கி வகுத்துரைத்தது. |
5. உட்கோள் வினாதல்
வரையன்(று) ஒருகால் இருகால் வளைய நிமிர்ந்துவட்கார் நிரையன்(று) அழல்எழ எய்துநின் றோன்தில்லை அன்னநின்னூர் விரையென்ன மென்னிழல் என்ன வெறியறு தாதிவர்போ(து) உரையென்ன வோசிலம் பாநலம் பாவி ஒளிர்வனவே. |
152 |
கொளு நெறி விலக்(கு) உற்றவன் உறுதுயர் நோக்கி யாங்கொரு சூழல் பாங்கி பகர்ந்தது. |
6. உட்கொண்டு வினாதல்
செம்மலர் ஆயிரம் தூய்க்கரு மால்திருக் கண்அணியும் மொய்ம்மலர் ஈர்ங்கழல் அம்பலத் தோன்மன்னு தென்மலயத்(து) எம்மலர் சூடிநின்(று) எச்சாந்(து) அணிந்(து)என்ன நன்னிழல்வாய் அம்மலர் வாட்கண்நல் லாய்எல்லி வாய்நுமர் ஆடுவதே. |
153 |
கொளு தன்னை வினவத் தான்அவள் குறிப்பறிந்(து) என்னை நின்னாட்(டு) இயல்அணி என்றது. |
7. குறியிடங்கூறல்
பனைவளர் கைம்மாப் படாத்(து)அம் பலத்தரன் பாதம்விண்ணோர் புனைவளர் சாரல் பொதியின் மலைப்பொலி சந்தணிந்து கனைவளர் காவிகள் சூடிப்பைந் தோகை துயில்பயிலும் சினைவளர் வேங்கைகள் யாங்கள்நின்(று) ஆடும் செழும்பொழிலே. |
154 |
கொளு இரவுக் குறியிவண் என்று பாங்கி அரவக் கழலவற்(கு) அறிய வுரைத்தது. |
8. இரவுக் குறி ஏற்பித்தல்
மலவன் குரம்பையை மாற்றிஅம் மால்முதல் வானர்க்(கு) அப்பால் செலஅன்பர்க்(கு) ஒக்கும் சிவன்தில்லைக் கானலிற் சீர்ப்பெடையோ(டு) அலவன் பயில்வது கண்(டு)அஞர் கூர்ந்(து)அயில் வேல்உரவோன் செலஅந்தி வாய்க்கண் டனன்என்ன(து) ஆங்கொல்மன் சேர்துயிலே. |
155 |
கொளு அரவக் கழலவன் ஆற்றானென இரவுக் குறி ஏற்பித்தது. |
9. இரவரவு உரைத்தல்
மோட்டங் கதிர்முலைப் பங்குடைத் தில்லைமுன் னோன்கழற்கே கோட்டந் தரும்நம் குருமுடி வெற்பன் மழைகுழுமி நாட்டம் புதைத்தன்ன நள்ளிருள் நாகம் நடுங்கச் சிங்கம் வேட்டம் திரிசரி வாய்வரு வான்சொல்லு மெல்லியலே. |
156 |
கொளு குருவரு குழலிக்(கு) இரவர வுரைத்தது. |
10. ஏதங்கூறி மறுத்தல்
செழுங்கார் முழவதிர் சிற்றம் பலத்துப் பெருந்திருமால் கொழுங்கான் மலரிடக் கூத்தயர் வோன்கழல் ஏத்தலர்போல் முழங்கார் அரிமுரண் வாரண வேட்டைசெய் மொய்இருள்வாய் வழங்கா அதரின் வழங்கென்று மோஇன்(று)எம் வள்ளலையே. |
157 |
கொளு இழுக்கம் பெரி(து)இர வரின்என அழுக்கம் எய்தி அரிவை உரைத்தது. |
11. குறை நேர்தல்
ஓங்கும் ஒருவிடம் உண்(டு)அம் பலத்(து)உம்பர் உய்யஅன்று தாங்கும் ஒருவன் தடவரை வாய்த்தழங் கும்அருவி வீங்கும் கனைபுனல் வீழ்ந்(து)அன்(று) அழங்கப் பிடித்தெடுத்து வாங்கும் அவர்க்(கு)அறி யேன்சிறி யேன்சொல்லும் வாசகமே. |
158 |
கொளு அலைவேல் அண்ணல் நிலைமை கேட்டு கொலைவேற் கண்ணி குறைந யந்தது. |
12. குறை நேர்ந்தமை கூறல்
ஏனற் பசுங்கதிர் என்றூழ்க் கழிய எழிலியுன்னிக் கானக் குறவர்கள் கம்பலை செய்யும்வம் பார்சிலம்பா யான்இற்றை யாமத்து நின்னருள் மேல்நிற்க லுற்றுச் சென்றேன் தேனக்க கொன்றையன் தில்லை யுறார்செல்லும் செல்லல்களே. |
159 |
கொளு குறைந யந்தனள் நெறிகு ழலியென எறிவேல் அண்ணற்(கு) அறிய உரைத்தது. |
13. வரவுணர்ந்து உரைத்தல்
முன்னும் ஒருவர் இரும்பொழில் மூன்றற்கு முற்றும்இற்றால் பின்னும் ஒருவர்சிற் றம்பலத் தார்தரும் பேரருள்போல் துன்னுமோர் இன்பம்என் தோகைதம் தோகைக்குச் சொல்லுவபோல் மன்னும் அரவத்த வாய்த்துயில் பேரும் மயிலினமே. |
160 |
கொளு வளமயில் எடுப்ப இளமயிற் பாங்கி செருவேல் அண்ணல் வரவு ரைத்தது. |
14. தாய் துயில் அறிதல்
கூடார் அரண்எரி கூடக் கொடுஞ்சிலை கொண்டஅண்டன் சேடார் மதின்மல்லல் தில்லைஅன் னாய்சிறு கண்பெருவெண் கோடார் கரிகுரு மாமணி ஊசலைக் கோப்பழித்துத் தோடார் மதுமலர் நாகத்தை நூக்குநம் சூழ்பொழிற்கே. |
161 |
கொளு ஊசல் மிசைவைத்(து) ஒள்அ மளியில் தாய துதுயில் தான் அறிந்தது. |
15. துயிலெடுத்துச் சேறல்
விண்ணுக்கு மேல்வியன் பாதலக் கீழ்விரி நீர்உடுத்த மண்ணுக்கு நாப்பண் நயந்துதென் தில்லைநின் றோன் மிடற்றின் வண்ணக் குவளை மலர்க்கின் றனசிவ வாண்மிளிர்நின் கண்ணோர்க்கு மேற்கண்டு காண்வண்டு வாழும் கருங்குழலே. |
162 |
கொளு தாய்துயில் அறிந்(து)ஆய் தருபவள் மெல்லியற்குச் சொல்லியது. |
16. இடத்துய்த்து நீங்கல்
நந்தீ வரமென்னும் நாரணன் நாண்மலர்க் கண்ணிற்(கு) எ·கம் தந்தீ வரன்புலி யூரன்ன யாய்தடங் கண்கடந்த இந்தீ வரமிவை காணின் இருள்சேர் குழற்கெழில்சேர் சந்தீ வரமுறி யும்வெறி வீயும் தருகுவனே. |
163 |
கொளு மைத்தடங் கண்ணியை உய்த்திடத்து ஒருபால் நீங்கல் உற்ற பாங்கி பகர்ந்தது. |
17. தளர்வகன்று உரைத்தல்
காமரை வென்றகண் ணோன்தில்லைப் பல்கதி ரோன்அடைத்த தாமரை இல்லின் இதழ்க்கத வம்திறந் தோதமியே பாமரை மேகலை பற்றிச் சிலம்பொதுக் கிப்பையவே நாமரை யாமத்(து)என் னோவந்து வைகி நயந்ததுவே. |
164 |
கொளு வடுவகிர் அனைய வரிநெடுங் கண்ணியைத் நடுவரி அன்பொடு தளர்வகன்(று) உரைத்தது. |
18. மருங்கணைதல்
அகலின் புகைவிம்மி ஆய்மலர் வேய்ந்(து)அஞ் சனம்எழுதத் தகிலும் தனிவடம் பூட்டத் தகாள்சங் கரன்புலியூர் இகலும் அவரில் தளரும்இத் தேம்பல்இடைஞெமியப் புகலும் மிகஇங்ங னேயிறு மாக்கும் புணர்முலையே. |
165 |
கொளு அன்பு மிகுதியின் அளவளாய் அவளைப் பொன்புனை வேலோன் புகழ்ந்துரைத்தது. |
19. முகங்கொண்டு மகிழ்தல்
அழுந்தேன் நரகத்து யானென்(று) இருப்பவந்(து) ஆண்டுகொண்ட செழுந்தேன் திகழ்பொழில் தில்லைப் புறவில் செறுவகத்த கொழுந்தேன் மலர்வாய்க் குமுதம் இவள்யான் குருஉச்சுடர்கொண்(டு) எழுந்(து)ஆங் கதுமலர்த் தும்உயர் வானத்(து) இளமதியே. |
166 |
கொளு முகையவிழ் குழலி முகமதி கண்டு திகழ்வேல் அண்ணல் மகிழ்வுற்றது. |
20. பள்ளியிடத்து உய்த்தல்
கரும்புறு நீலம் கொய்யல் தமிநின்று துயில்பயின்மோ அரும்பெறல் தோழிய(டு) ஆயத்து நாப்பண் அமரர்ஒன்னார் இரும்புறு மாமதிப் பொன்இஞ்சி வெள்ளிப் புரிசையன்றோர் துரும்புறச் செற்றகொற் றத்(து)எம் பிரான்தில்லைச் சூழ்பொழிற்கே. |
167 |
கொளு பிரிவது கருதிய பெருவரை நாடன் ஒள்ளிழைப் பாங்கியடு பள்ளிகொள் கென்றது. |
21. வரவு விலக்கல்
நற்பகல் சோமன் எரிதரு நாட்டத்தன் தில்லையன்ன விற்பகைத்(து) ஓங்கும் புருவத்(து) இவளின் மெய்யேஎளிதே வெற்பகச் சோலையின் வேய்வளர் தீச்சென்று விண்ணினின்ற கற்பகச் சோலை கதுவுங்கல் நாடஇக் கல்லதரே. |
168 |
கொளு தெய்வம் அன் னாளைத் திருந்(து)அமளி சேர்த்தி மைவரை நாடனை வரவுவிலக் கியது. |
22. ஆற்றாது உரைத்தல்
பைவாய் அரவுஅரை அம்பலத்(து) எம்பரன் பைங்கயிலைச் செவ்வாய்க் கருங்கண் பெரும்பணைத் தோள்சிற் றிடைக்கொடியை மொய்வார் கமலத்து முற்றிழை இன்றென்முன் னைத்தவத்தால் இவ்வா(று) இருக்கும்என் றேநிற்ப(து) என்றும்என் இன்னுயிரே. |
169 |
கொளு வரைவு கடாய வாணுதல்தோழிக்(கு) அருவரை நாடன் ஆற்றா(து) உரைத்தது. |
23. இரக்கங்கூறி வரைவு கடாதல்
பைவாய் அரவும் மறியும் மழுவும் பயின்மலர்க்கை மொய்வார் சடைமுடி முன்னவன் தில்லையின் முன்னினக்கால் செவ்வாய் கருவுயிர்ச் சேர்த்திச் சிறியாள் பெருமலர்க்கண் மைவார் குவளை விடும்மன்ன நீண்முத்த மாலைகளே. |
170 |
கொளு அதிர்க ழலவன் அகன்றவழி எதிர்வ(து) அறியா(து) இரங்கி உரைத்தது. |
24. நிலவு வெளிப்பட வருந்தல்
நாகம் தொழஎழில் அம்பலம் நண்ணி நடம்வில்வோன் நாகம் இதுமதி யேமதி யேநவில் வேற்கைஎங்கள் நாகம் வரஎதிர் நாங்கொள்ளும் நள்ளிருள் வாய்நறவார் நாகம் மலிபொழில் வாயெழில் வாய்த்தநின் நாயகமே. |
171 |
கொளு தனிவே லவற்குத் தந்தளர்(வு) அறியப் பனிமதி விளக்கம் பாங்கி பகர்ந்தது. |
25. அல்லகுறி அறிவித்தல்
மின்அங்(கு) அலரும் சடைமுடி யோன்வியன் தில்லையன்னாய் என்அங்(கு) அலமரல் எய்திய தோஎழில் முத்தம்தொத்திப் பொன்அங்(கு) அலர்புன்னைச் சேக்கையின் வாய்ப்புலம் புற்றுமுற்றும் அன்னம் புலரும் அளவும் துயிலா(து) அழுங்கினவே. |
172 |
கொளு வள்ளி யன்னவள் அல்ல குறிப்பொடு அறைப்புனல் துறைவற்குச் சிறைப்புறத்(து) உரைத்தது. |
26. கடலிடை வைத்துத் துயர் அறிவித்தல்
சோத்துன் அடியம் என் றோரைக் குழுமித்தொல் வானவர்சூழ்ந்(து) ஏத்தும் படிநிற்ப வன்தில்லை யன்னாள் இவள்துவள ஆர்த்துண் அமிழ்தும் திருவும் மதியும் இழந்தவம்நீ பேர்த்தும் இரைப்பொழி யாய்பழி நோக்காய் பெருங்கடலே. |
173 |
கொளு எறிகடல் மேல்வைத்து இரவரு துயரம் அறைக ழலவற்(கு) அறிய உரைத்தது. |
27. காமம் மிக்க கழிபடர் கிளவி
மாதுற்ற மேனி வரையுற்ற வில்லிதில் லைநகர்சூழ் போதுற்ற பூம்பொழில் காள்கழி காள்எழிற் புள்ளினங்காள் ஏதுற்(று) அழிதிஎன் னீர்மன்னும் ஈர்ந்துறை வர்க்(கு) இவளோ தீதுற்ற(து) என்னுக்(கு)என் னீர்இது வோநன்மை செப்புமினே. |
174 |
கொளு தாமம் மிக்க தாழ்குழல் ஏழை காமம் மிக்க கழிபடர் கிளவி. |
28. காப்புச் சிறைமிக்க கையறு கிளவி
இன்னற வார்பொழில் தில்லை நகரிறை சீர்விழவில் பன்னிற மாலைத் தொகைபக லாம்பல் விளக்கிருளின் துன்னற வுய்க்கும்இல் லோரும் துயிலில் துறைவர்மிக்க கொன்னிற வேலொடு வந்திடின் ஞாளி குரை தருமே. |
175 |
கொளு மெய்யறு காவலில் கையறு கிளவி. |
29. ஆறுபார்த்துற்ற அச்சக் கிளவி
தாருறு கொன்றையன் தில்லைச் சடைமுடி யோன்கயிலை நீருறு கான்யா(று) அளவில் நீந்திவந் தால்நினது போருறு வேல்வயப் பொங்குரும் அஞ்சுகம் அஞ்சிவரும் சூருறு சோலையின் வாய்வரற் பாற்றன்று தூங்கிருளே. |
176 |
கொளு நாறு வார்குழல் நவ்வி நோக்கி ஆறுபார்த் துற்ற அச்சக் கிளவி. |
30. தன்னுள் கையாறு எய்திடு கிளவி
விண்டலை யாவர்க்கும் வேந்தர்வண் தில்லைமெல் லங்கழிசூழ் கண்டலை யேகரி யாக்கன்னிப் புன்னைக் கலந்தகள்வர் கண்டிலை யேவரக் கங்குல்எல் லாம்மங்குல் வாய்விளக்கும் மண்டல மேபணி யாய்தமி யேற்கொரு வாசகமே. |
177 |
கொளு மின்னுப் புரையும் அந்நுண் மருங்குல் தன்னுட் கையாறு எய்திடு கிளவி. |
31. நிலைகண்டு உரைத்தல்
பற்றொன்றி லார்பற்றும் தில்லைப் பரன்பரம் குன்றில்நின்ற புற்றொன்று அரவன் புதல்வ னெனநீ புகுந்துநின்றால் மற்றொன்று மாமலர் இட்டுன்னை வாழ்த்திவந் தித்திலன்றி மற்றொன்று சிந்திப்ப ரேல்வல்ல ளோமங்கை வாழ்வகையே. |
178 |
கொளு நின்னின் அழிந்தனள் மின்னிடை மாதென வரைவு தோன்ற வுரை செய்தது. |
32. இரவுறு துயரம் கடலொடு சேர்த்தல்
பூங்கணை வேளைப் பொடியாய் விழவிழித் தோன்புலியூர் ஓங்கணை மேவிப் புரண்டு விழுந்தெழுந்(து) ஓலமிட்டுத் தீங்கணைந் தோர்அல்லும் தேறாய் கலங்கிச் செறிகடலே ஆங்கணைந் தார்நின்னை யும்உள ரோசென்(று) அகன்றவரே. |
179 |
கொளு எறிவேற் கண்ணி இரவரு துயரம் செறிக டலிடைச் சேர்த்தி யுரைத்தது. |
33. அலர் அறிவுறுத்தல்
அலர்ஆ யிரம்தந்து வந்தித்து மால்ஆ யிரங்கரத்தால் அலரார் கழல்வழி பாடுசெய் தாற்(கு)அள வில்ஒளிகள் அலரா யிருக்கும் படைகொடுத் தோன்தில்லை யான்அருள்போன்(று) அலராய் விளைகின்ற(து) அம்பல்கைம் மிக்(கு)ஐய மெய்யருளே. |
180 |
கொளு அலைவேல் அண்ணல் மனம கிழருள் பலரால் அறியப் பட்ட(து) என்றது. |
இரவுக் குறி முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதினென்காம் அதிகாரம் - எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - உரைத்தது, பாங்கி, இரவுக், உரைத்தல், அண்ணல், துயரம், சடைமுடி, அம்பலத், நள்ளிருள், பகர்ந்தது