முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.094.திருச்சோற்றுத்துறை
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.094.திருச்சோற்றுத்துறை
7.094.திருச்சோற்றுத்துறை
பண் - கௌசிகம்
திருச்சிற்றம்பலம்
பண் - கௌசிகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தொலையாச்செல்வர்.
தேவியார் - ஒப்பிலாம்பிகை.
954 |
அழல்நீர் ஒழுகி யனைய சடையும் உழையீர் உரியும் முடையான் இடமாம் கழைநீர் முத்துங் கனகக் குவையும் சுழல்நீர்ப் பொன்னிச் சோற்றுத் துறையே. |
7.094.1 |
மூங்கில்களிடத்து உளவாகிய சிறந்த முத்துக்களும், பொற்குவியல்களும் சுழிகளில் சுழல்கின்ற நீரையுடைய காவிரி யாற்றையுடைய, 'திருச்சோற்றுத்துறை' என்னும் தலமே, நெருப்பு நீர்த் தன்மையுடையதாய் ஒழுகினாற்போலும் சடையையும், மானையும், யானை, புலி இவைகளை உரித்த தோலையும் உடையவனாகிய இறைவனது இடமாகும்.
955 |
பண்டை வினைகள் பறிய நின்ற அண்ட முதல்வன் அமலன் னிடமாம் இண்டை கொண்டன் பிடைஅ றாத தோண்டர் பரவுஞ் சோற்றுத் துறையே. |
7.094.2 |
அன்பு, இடையில் அற்றுப்போதல் இல்லாத அடியார்கள், இண்டை மாலை முதலியவைகளைக் கொண்டுவழி படுகின்ற, 'திருச்சோற்றுத்துறை' என்னும் தலமே, உயிர்கள் செய்த பழைய, வலிமையான வினைகள் நீங்குமாறு நிற்கின்ற, உலகிற்கு முதல்வனும், தூயவனும் ஆகிய இறைவனது இடமாகும்.
956 |
கோல அரவுங் கொக்கின் இறகும் மாலை மதியும் வைத்தான் இடமாம் ஆலும் மயிலும் ஆடல் அளியும் சோலை தருநீர்ச் சோற்றுத் துறையே. |
7.094.3 |
சோலைகள், ஆடுகின்ற மயில்களையும், சுழலுதல் உடைய வண்டுகளையும் கொண்டு காட்டுகின்ற மிக்க நீரையுடைய, 'திருச்சோற்றுத்துறை' என்னும் தலமே, அழகிய பாம்பையும், கொக்கின் இறகையும், மாலைக் காலத்தில் தோன்றுகின்ற பிறையையும் முடியில் வைத்துள்ளவனாகிய இறைவனது இடமாகும்.
957 |
பளிக்குத் தாரை பவள வெற்பில் குளிக்கும் போல்நூற் கோமாற் கிடமாம் அளிக்கும் ஆர்த்தி அல்லால் மதுவம் துளிக்கும் சோலைச் சோற்றுத் துறையே. |
7.094.4 |
தேனை வண்டுகள் நிரம்ப உண்ணச்செய்து, மேலும் நிலத்திற் சிந்துகின்ற சோலைகளையுடைய, 'திருச்சோற்றுத்துறை' என்னும் தலமே, பவளமலையின்மேல் பதிந்து ஓடுகின்ற பளிங்கு அருவிபோலும் முப்புரி நூலை அணிந்த தலைவனாகிய இறைவனுக்கு இடமாகும்.
958 |
உதையுங் கூற்றுக் கொல்கா விதிக்கு வதையுஞ் செய்த மைந்தன் இடமாம் திதையுந் தாதுந் தேனுஞ் ஞிமிறும் துதையும் பொன்னிச் சோற்றுத் துறையே. |
7.094.5 |
நிலைபெற்ற மகரந்தமும், தேனும், வண்டும் சோலைகளில் நெருங்கியிருக்கின்ற, காவிரி யாற்றையுடைய, 'திருச்சோற்றுத்துறை' என்னுந் தலமே, கூற்றுவனுக்கு உதையையும், ஒன்றற்கும் தோலாத ஊழிற்கு அழிவையும் ஈந்த வலிமை உடையவனாகிய இறைவனுக்கு இடமாகும்.
959 |
ஓதக் கடல்நஞ் சினைஉண் டிட்ட பேதைப் பெருமான் பேணும் பதியாம் சீதப் புனல்உண் டெரியைக் காலும் சூதப் பொழில்சூழ் சோற்றுத் துறையே. |
7.094.6 |
குளிந்த நீரை உண்டு, தீயை உமிழ்கின்ற மாஞ் சோலைகள் சூழ்ந்த, 'திருச்சோற்றுத்துறை' என்னும் தலமே, மிக்க நீரையுடைய கடலில் உண்டாகிய நஞ்சினை உண்ட, அருள்மிகுந்த பெருமான் விரும்பும் ஊராகும்.
960 |
இறந்தார் என்பும் எருக்குஞ் சூடிப் புறங்காட் டாடும் புனிதன் கோயில் சிறந்தார் சுற்றந் திருவென் றின்ன துறந்தார் சேருஞ் சோற்றுத் துறையே. |
7.094.7 |
உயிர்போலச் சிறந்த மனைவி மக்களும், ஏனைய சுற்றத்தாரும், செல்வமும் என்று சொல்லப்பட்ட இன்னோரன்ன வற்றைத் துறந்த ஞானியர் சேர்கின்ற, 'திருச்சோற்றுத்துறை' என்னும் தலமே, இறந்தவரது எலும்புகளையும்' எருக்கம் பூவையும் அணிந்து கொண்டு, புறங்காட்டில் ஆடுகின்ற தூயவனாகிய இறைவனது இடம்.
961 |
காமன் பொடியாக் கண்ஒன் றிமைத்த ஓமக் கடலார் உகந்த இடமாம் தேமென் குழலார் சேக்கை புகைத்த தூமம் விசும்பார் சோற்றுத் துறையே. |
7.094.8 |
தேன் பொருந்திய, மெல்லிய கூந்தலையுடைய மகளிர், தம் இருக்கையில் இட்ட நறும்புகைகள், வானத்தில் சென்று நிறைகின்ற, 'திருச்சோற்றுத்துறை' என்னும் தலமே மன்மதன் சாம்பராகுமாறு கண் ஒன்றைத் திறந்த, வேள்வியாகிய கடலையுடைய வராகிய இறைவர் விரும்பும் இடமாகும்.
962 |
இலையால் அன்பால் ஏத்தும் அவர்க்கு நிலையா வாழ்வை நீத்தார் இடமாம் தலையால் தாழுந் தவத்தோர்க் கென்றும் தொலையாச் செல்வச் சோற்றுத் துறையே. |
7.094.9 |
தன்னைத் தலையால் வணங்குகின்ற தவத்தினை உடையோர்க்கு, எஞ்ஞான்றும் அழியாத செல்வத்தைத் தரும், 'திருச்சோற்றுத்துறை' என்னுந் தலமே, இலையாலாயினும் அன்போடு துதிக்கின்ற அவர்கட்கு, நிலையாத இவ்வுலக வாழ்வை நீக்குபவராகிய இறைவனது இடமாகும்.
963 |
சுற்றார் தருநீர்ச் சோற்றுத் துறையுள் முற்றா மதிசேர் முதல்வன் பாதத் தற்றார் அடியார் அடிநாய் ஊரன் சொற்றான் இவைகற் றார்துன் பிலரே. |
7.094.10 |
பற்றற்றவராகிய அடியார்களது அடிக்கு நாய் போலும் நம்பியாரூரன், சுற்றிலும் நிறைந்த நீரையுடைய திருச்சோற்றுத்துறையில் எழுந்தருளியிருக்கின்ற, இளமையான சந்திரனைச் சூடிய முதல்வனது திருவடிக்கண் இப்பாடல்களைப் பாடினான்; இவைகளைக் கற்றவராவார், யாதொரு துன்பமும் இல்லாதவராவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 92 | 93 | 94 | 95 | 96 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருச்சோற்றுத்துறை - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருச்சோற்றுத்துறை, சோற்றுத், துறையே, என்னும், இடமாகும், இறைவனது, இடமாம், நீரையுடைய, இறைவனுக்கு, கொண்டு, சோலைகள், என்னுந், ஆடுகின்ற, பெருமான், வாழ்வை, விரும்பும், தருநீர்ச், தலையால், முதல்வன், யாற்றையுடைய, காவிரி, சிறந்த, உடையவனாகிய, திருச்சிற்றம்பலம், பொன்னிச், வினைகள், திருமுறை, கொக்கின்