முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.072.திருவலம்புரம்
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.072.திருவலம்புரம்
7.072.திருவலம்புரம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வலம்புரநாதர்.
தேவியார் - வடுவகிர்க்கண்ணம்மை.
729 |
எனக்கினித் தினைத்தனைப் புகலிட மறிந்தேன் பனைக்கனி பழம்படும் பரவையின் கரைமேல் எனக்கினி யவன்தமர்க் கினியவன் எழுமையும் மனக்கினி யவன்றன திடம்வலம் புரமே. |
7.072.1 |
எனக்கு இனியவனும், தனக்கு என்னைப்போலும் அன்பராய் உள்ளார்க்கு இனியவனும், எழுபிறப்பிலும் எங்கள் மனத்துக்கு இனியனாகின்றவனும் ஆகிய இறைவனது இடம், பனை மரத்தின்கண் பழுத்த பழங்கள் வீழ்கின்ற கடலினது கரைக்கண் உள்ள, 'திருவலம்புரம்' என்னும் தலமே. இதனை அறிந்தேனாகலின், எனக்கும் சிறிது புகலிடம் இங்கு உளதாதலை இப்பொழுது யான் அறிந்தேனாயினேன்.
730 |
புரமவை எரிதர வளைந்தவில் லினனவன் மரவுரி புலியதள் அரைமிசை மருவினன் அரவுரி நிரந்தயல் இரந்துண விரும்பிநின் றிரவெரி யாடிதன் இடம்வலம் புரமே. |
7.072.2 |
திரிபுரங்கள் எரியுமாறு வளைந்த வில்லை உடையவனும், புதியவனும், மரவுரியையும் புலித்தோலையும் அரையிற் பொருந்தியவனும், பாம்பின் தோல் பொருந்தப்பட்டவனும் இரந்து உண்ண விரும்புபவனும், இரவின்கண் தீயில் நின்று ஆடுபவனும் ஆகிய இறைவனது இடம், 'திருவலம்புரம்' என்னும் தலமே.
731 |
நீறணி மேனியன் நெருப்புமிழ் அரவினன் கூறணி கொடுமழு வேந்தியொர் கையினன் ஆறணி அவிர்சடை அழல்வளர் மழலைவெள் ஏறணி அடிகள்தம் இடம்வலம் புரமே. |
7.072.3 |
நீறணிந்த மேனியை யுடையவனும்., சினங் காரணமாகக் கண்களால் நெருப்பை உமிழ்கின்ற பாம்பை அணிந்தவனும், பிளத்தலைப் பொருந்திய கொடிய மழுவை ஏந்திய ஒரு கையை உடையவனும், நீரை அணிந்த, ஒளிவிடும் சடையாகிய நெருப்பு வளரப்பெற்றவனும் ஆகிய, இளமையான வெள்ளிய இடபக் கொடியை உயர்த்துள்ள இறைவனது இடம், 'திருவலம்புரம்' என்னும் தலமே.
732 |
கொங்கணை சுரும்புண நெருங்கிய குளிரிளந் தெங்கொடு பனைபழம் படும்இடந் தேவர்கள் தங்கிடும் இடந்தடங் கடற்றிரை புடைதர எங்கள தடிகள்நல் லிடம்வலம் புரமே. |
7.072.4 |
மலர்களில் உள்ள தேனை ஆங்கு வந்த வண்டுகள் உண்ண, நெருங்கிய, குளிர்ந்த, இளைய தென்னை மரங்களும், பனை மரங்களும் பழம் விளைகின்ற இடமும், பெரியகடலினது அலைகள் கரையை மோத, தேவர்கள் தங்கியிருக்கும் இடமும், எங்கள் இறைவனது நல்ல இடமும், 'திருவலம்புரம்' என்னும் தலமே.
733 |
கொடுமழு விரகினன் கொலைமலி சிலையினன் நெடுமதிள் சிறுமையின் நிரவவல் லவனிடம் படுமணி முத்தமும் பவளமும் மிகச்சுமந் திடுமணல் அடைகரை இடம்வலம் புரமே. |
7.072.5 |
கொடிய மழுவை எடுக்க வல்லவனும், கொலை பொருந்திய வில்லையுடையவனும், மூன்று பெரிய மதில்களை ஓர் இமைப்பொழுதில் பொடியாக்க வல்லவனும் ஆகிய இறைவனது இடம், கடலில் உண்டாகின்ற மாணிக்கங்களையும், முத்துக்களையும், பவளங்களையும் மிகுதியாகத் தாங்கி நிற்கின்ற மணல் பொருந்திய கடற்கரையாகிய இடமும், திருவலம்புரம் எனப்படுவதும் ஆகிய தலமே.
734 |
கருங்கடக் களிற்றுரிக் கடவுள திடங்கயல் நெருங்கிய நெடும்பெணை அடும்பொடு விரவிய மருங்கொடு வலம்புரி சலஞ்சலம் மணம்புணர்ந் திருங்கடல் அடைகரை இடம்வலம் புரமே. |
7.072.6 |
கரிய மதநீரையுடைய யானைத் தோலையுடைய இறைவனது இடம், நெருங்கிய, நீண்ட பனைமரங்கள், கயல் மீன்களோடும், அடும்பங் கொடிகளோடும் கலந்து நிற்கின்ற இடத்தின்கண், வலம்புரிச் சங்குகளும், சலஞ்சலச் சங்குகளும் தம் தம் பெண் சங்குகளோடு மணஞ்செய்து கொள்ளுதலைப் பொருந்தி, பெரிய கடலினின்றும் வருகின்ற கடற்கரையாகிய இடமும், 'திருவலம்புரம்' எனப்படுவதும் ஆகிய தலமே.
735 |
நரிபுரி காடரங் காநட மாடுவர் வரிபுரி பாடநின் றாடும்எம் மானிடம் புரிசுரி வரிகுழல் அரிவைஒர் பான்மகிழ்ந் தெரிஎரி யாடிதன் இடம்வலம் புரமே. |
7.072.7 |
நரிகள் விரும்புகின்ற காடே அரங்கமாக நடனம் ஆடுபவனும், யாழ் இசையைப்பாட நின்று ஆடுகின்ற எம்பெருமானும், பின்னிய, சுரிந்த, கட்டிய கூந்தலையுடைய மங்கையை ஒரு பாகத்தில் மகிழ்ந்து வைத்து, எரிகின்ற நெருப்பில் ஆடுபவனும் ஆகிய இறைவனது இடம், 'திருவலம்புரம்' என்னும் தலமே.
736 |
பாறணி முடைதலை கலனென மருவிய நீறணி நிமிர்சடை முடியினன் நிலவிய மாறணி வருதிரை வயலணி பொழிலது ஏறுடை யடிகள்தம் இடம்வலம் புரமே. |
7.072.8 |
பருந்தைக்கொண்ட, முடைநாற்றம் பொருந்திய தலையை உண்கலமாகப் பொருந்தியவனும், நீற்றை அணிந்தவனும், நீண்ட சடைமுடியை உடையவனும் இடபத்தை உடைய தலைவனும் ஆகிய இறைவனது இடம், விளங்குகின்ற, மாறிமாறியும் கூட்டமாயும் வருகின்ற அலைகளையுடைய கடலையும், வயல்களையும் அழகிய சோலைகளையும் உடையதாகிய, 'திருவலம்புரம்' என்னும் தலமே.
737 |
சடசட விடுபெணை பழம்படும் இடவகை படவட கத்தொடு பலிகலந் துலவிய கடைகடை பலிதிரி கபாலிதன் இடமது இடிகரை மணலடை இடம்வலம் புரமே. |
7.072.9 |
தோல் ஆடையை உடுத்துக்கொண்டும், சாம்பலைப் பூசிக்கொண்டும் உலாவுகின்றவனும், இல்லங்களின் வாயில் தோறும் பிச்சைக்குத் திரிகின்ற தலை ஓட்டினை உடையவனும் ஆகிய இறைவனது இடம், 'சடசட' என்னும் ஓசையை வெளிப்படுத்துகின்ற பனைமரங்கள் பழம் பழுக்கின்ற இடங்களின் வகை பலவும்மிகுமாறு, இடிகின்ற கரையை மணல்கள் அடைக்கின்ற இடமும், 'திருவலம்புரம்' எனப்படுவதும் ஆகிய தலமே.
738 |
குண்டிகைப் படப்பினில் விடக்கினை யொழித்தவர் கண்டவர் கண்டடி வீழ்ந்தவர் கனைகழல் தண்டுடைத் தண்டிதன் இனமுடை அரவுடன் எண்டிசைக் கொருசுடர் இடம்வலம் புரமே. |
7.072.10 |
கரகத்தையுடைய உறியை உடையசமணர்களது பொய்ம்மையை நன்குணர்ந்தவர்களும், உணர்ந்து தனது திருவடியில் வீழ்ந்து வணங்கியவர்களும், ஒலிக்கின்ற கழலை அணிந்த, தண்டேந்தி நிற்கும் தண்டி முதலிய சிவகணத்தவர்களும் செய்கின்ற, 'அரகர' என்னும் ஓசையுடன், எட்டுத் திசைகட்கும் ஒரு விளக்குப் போல்பவனாகிய இறைவன் எழுந்தருளியிருக்கும் இடம், 'திருவலம்புரம்' என்னும் தலமே.
739 |
வருங்கல மும்பல பேணுதல் கருங்கடல் இருங்குலப் பிறப்பர்த மிடம்வலம் புரத்தினை அருங்குலத் தருந்தமிழ் ஊரன்வன் றொண்டன்சொல் பெருங்குலத் தவரொடு பிதற்றுதல் பெருமையே. |
7.072.11 |
கரிய கடலின்கண் வருகின்ற மரக்கலங்கள் பலவற்றையும் பேணுதலுடைய உயர் குடிப் பிறப்பினரது இடமும், 'திருவலம்புரம்' எனப்படுவதும் ஆகிய தலத்தினை அரிய குலத்தில் தோன்றிய, அரிய தமிழ்ப் பாடலில் வல்ல, வன்றொண்டனாகிய நம்பியாரூரனது சொல்லால், பெரிய குழாமாகிய அடியவரோடும் கூடிநின்று துதித்தல், பெருமையைத் தருவதாம்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 70 | 71 | 72 | 73 | 74 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவலம்புரம் - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருவலம்புரம், என்னும், இறைவனது, இடம்வலம், இடமும், உடையவனும், எனப்படுவதும், பொருந்திய, நெருங்கிய, வருகின்ற, ஆடுபவனும், மரங்களும், வல்லவனும், பனைமரங்கள், கடற்கரையாகிய, சங்குகளும், நிற்கின்ற, தேவர்கள், அடைகரை, கொடுமழு, இனியவனும், பழம்படும், திருச்சிற்றம்பலம், திருமுறை, எங்கள், யாடிதன், அணிந்தவனும், நின்று, பொருந்தியவனும், அணிந்த