முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.032.திருக்கோடிக்குழகர்
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.032.திருக்கோடிக்குழகர்
7.032.திருக்கோடிக்குழகர்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அமுதகடநாதர்.
தேவியார் - மையார்தடங்கணம்மை.
320 |
கடிதாய்க்கடற் காற்றுவந் தெற்றக் கரைமேல் குடிதான் அய லேஇருந் தாற்குற்ற மாமோ கொடியேன்கண்கள் கண்டன கோடிக் குழகீர் அடிகேள்உமக் கார்துணை யாஇருந் தீரே. |
7.032.1 |
கோடிக்குழகரே, அடிகளே, கடற்காற்றுக் கடிதாய் வந்து வீச, இக் கடற்கரையின்மேல், உமக்கு, யார் துணையாய் இருக்க இருக்கின்றீர்? நீர் இங்குத் தனித்து இருத்தலையே கொடியேனது கண்கள் கண்டன; குடிதான் வேறோர் இடத்திலே இருந்தால் யாதேனும் குற்றம் உண்டாகுமோ? சொல்லீர்.
321 |
முன்றான்கடல் நஞ்சமுண் டவ்வத னாலோ பின்றான்பர வைக்குப காரஞ்செய் தாயோ குன்றாப்பொழில் சூழ்தரு கோடிக் குழகா என்றான்றனி யேஇருந் தாய்எம்பி ரானே. |
7.032.2 |
குறையாத சோலைகள் சூழ்ந்த கோடிக்கரையில் உள்ள அழகனே, எம்பெருமானே, முன்பு கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட அதனால், மீட்டும் அவ்வாறு தோன்றின் அதனை உண்டற்பொருட்டோ? அல்லது கடல் தனியே இருத்தல் கருதி அதற்குத் துணையிருத்தற் பொருட்டோ? எக்காரணத்தால் இங்கு நீ தனியே இருக்கின்றாய்? சொல்.
322 |
மத்தம்மலி சூழ்மறைக் காடதன் தென்பால் பத்தர்பலர் பாட இருந்த பரமா கொத்தார்பொழில் சூழ்தரு கோடிக் குழகா எத்தால்தனி யேஇருந் தாய்எம் பிரானே. |
7.032.3 |
களிப்புடையவர் நிறையச் சூழ்ந்த திருமறைக் காட்டிற்குத் தென்பால், அடியார்கள் பலர் பாடித் துதிக்க எழுந்தருளியிருக்கும் பரமனே, பூங்கொத்துக்கள் பொருந்திய சோலைகள் சூழ்ந்த கோடிக்கரையின்கண் உள்ள அழகனே, எம்பெருமானே, எக்காரணத்தால் நீ இங்குத் தனியே இருக்கின்றாய்? சொல்.
323 |
காடேல்மிக வாலிது காரிகை யஞ்சக் கூடிப்பொந்தில் ஆந்தைகள் கூகை குழறல் வேடித்தொண்டர் சாலவுந் தீயர் சழக்கர் கோடிக்குழ காஇடங் கோயில்கொண் டாயே. |
7.032.4 |
கோடிக்கரைக்கண் உள்ள அழகனே! இங்குள்ள காடோ மிகப் பெரிது; எப்பொழுதும் உன் தேவி அச்சங்கொள்ளுமாறு மரப் பொந்தில் உள்ள ஆந்தைகளும், கூகைகளும் பல கூடிக் கூக்குரலிடுதல் இடையறாது; வேட்டைத் தொழில் செய்து இங்கு வாழ்பவர் மிகவுங் கொடியவர்; வஞ்சனையுடையவர்; இவ்விடத்தில் உறைவிடத்தைக் கொண்டாயே; இஃது என்?
324 |
மையார்தடங் கண்ணிபங் காகங்கை யாளும் மெய்யாகத் திருந்தனள் வேறிட மில்லை கையார்வளைக் காடுகா ளோடு முடனாய்க் கொய்யார்பொழிற் கோடியே கோயில்கொண் டாயே. |
7.032.5 |
மை பொருந்திய கண்களையுடைய இறைவியின் பாகத்தை உடையவனே, 'கங்கை' என்பவளும் உனது அழிவில்லாத திருமேனியில் இருக்கின்றாளேயன்றி அவளுக்கு வேறிடம் இல்லை; இங்ஙனமாக, கையில் நிறைந்த வளைகளையுடைய காடுகாளோடும் கூடி, பூக்களைக் கொய்தல் பொருந்திய சோலைகளையுடைய கோடிக்கரையையே உறைவிடமாகக் கொண்டாய்; இஃது எவ்வாறு?
325 |
அரவேரல்கு லாளையொர் பாக மமர்ந்து மரவங்கமழ் மாமறைக் காடதன் தென்பால் குரவம்பொழில் சூழ்தரு கோடிக் குழகா இரவேதுணை யாயிருந் தாய்எம்பி ரானே. |
7.032.6 |
குங்கும மரத்தின் பூக்கள் மணம் வீசுகின்ற பெருமை பொருந்திய திருமறைக்காட்டிற்குத் தென்பால் குராமரச் சோலை சூழ்ந்த கோடிக்கரைக்கண் உள்ள அழகனே, எம்பெருமானே,
326 |
பறையுங்குழ லும்மொலி பாடல் இயம்ப அறையுங்கழ லார்க்கநின் றாடும் அமுதே குறையாப்பொழில் சூழ்தரு கோடிக் குழகா இறைவாதனி யேஇருந் தாய்எம்பி ரானே. |
7.032.7 |
பறையும், குழலும், ஒலிக்கின்ற பாடலும் முழங்க, ஒலிக்கின்ற கழல் ஆரவாரிக்கும்படி அம்பலத்தில் தோன்றி நின்று ஆடுகின்ற அமுதம்போல்பவனே, றைதல் இல்லாத சோலைகள் சூழ்ந்த கோடிக்கரைக்கண் உள்ள அழகனே, இறைவனே, எம்பெருமானே, நீ ஏன் இங்குத் தனியாய் இருக்கின்றாய்?
327 |
ஒற்றியூரென்ற ஊனத்தி னாலது தானோ அற்றப்பட ஆரூர தென்றகன் றாயோ முற்றாமதி சூடிய கோடிக் குழகா எற்றால்தனி யேஇருந் தாய்எம்பி ரானே. |
7.032.8 |
முற்றாத சந்திரனைச் சூடியுள்ள கோடிக்கரைக்கண் உள்ள அழகனே, எம்பெருமானே, ஒற்றி என்ற குறையினால் ஒற்றியூரையும், ஆருடையது என்ற காரணத்தால் ஆருரையும் அறுதியாக நீங்கிவிட்டாயோ? எதனால் இங்குத் தனியேவந்து இருக்கின்றாய்?
328 |
நெடியானொடு நான்முக னும்மறி வொண்ணாப் படியான்பலி கொள்ளு மிடங்குடி யில்லை கொடியார்பலர் வேடர்கள் வாழுங் கரைமேல் அடிகேள்அன்ப தாய்இடங் கோயில்கொண் டாயே. |
7.032.9 |
திருமாலும் பிரமனும்அறிய இயலாத தன்மையை உடையவனே, தலைவனே, நீ பிறரது வழிபாட்டினை ஏற்க நினைக்குமிடத்து, அதனைச் செய்தற்கு இங்கு நற்குடி ஒன்றேனும் இல்லை; அதற்கு மாறாக கொடிய வேடர்கள் பலர் வாழ்கின்றனர்; இத்தன்மையதான இக்கடற்கரைமேல் விருப்பம் உடையையாய், இவ்விடத்தை உறைவிடமாகக் கொண்டாயே; இஃது என்?
329 |
பாரூர்மலி சூழ்மறைக் காடதன் தென்பால் ஏரார்பொழில் சூழ்தரு கோடிக் குழகை ஆரூரன் உரைத்தன பத்திவை வல்லார் சீரூர்சிவ லோகத் திருப்பவர் தாமே. |
7.032.10 |
உலகில் உள்ள ஊர்களில் மகிழ்ச்சி பொருந்துதற்குக் காரணமான திருமறைக்காட்டின் தென்பால், அழகு நிறைந்த சோலைகள் சூழ்ந்த கோடிக்கரைக்கண் உள்ள அழகனை நம்பியாரூரன் பாடியவையாகிய இப்பத்துப் பாடல்களையும் நன்கு பாட வல்லவர், சிறப்புப் பொருந்திய சிவலோகத்தில் இருப்பவர்களேயாவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 30 | 31 | 32 | 33 | 34 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கோடிக்குழகர் - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கோடிக், தென்பால், சூழ்ந்த, சூழ்தரு, எம்பெருமானே, பொருந்திய, கோடிக்கரைக்கண், சோலைகள், இருக்கின்றாய், தாய்எம்பி, இங்குத், யேஇருந், கோயில்கொண், காடதன், ஒலிக்கின்ற, வேடர்கள், உறைவிடமாகக், நிறைந்த, உடையவனே, கொண்டாயே, எக்காரணத்தால், திருச்சிற்றம்பலம், திருமுறை, கரைமேல், குடிதான், திருக்கோடிக்குழகர், சூழ்மறைக்