முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.086.திருவாட்போக்கி
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.086.திருவாட்போக்கி
5.086.திருவாட்போக்கி
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - இரத்தினகிரீசுவரர்.
தேவியார் - சுரும்பார்குழலம்மை.
1914 | கால பாசம் பிடித்தெழு தூதுவர் பால கர்விருத் தர்பழை யாரெனார் ஆல நீழ லமர்ந்தவாட் போக்கியார் சீல மார்ந்தவர் செம்மையுள் நிற்பரே. |
5.086.1 |
காலபாசத்தைப் பிடித்தெழும் யமதூதுவர்கள் இவர் பாலகர், இவர் விருத்தர், இவர் பழையவர் என்று கூறிவிட்டுச் செல்லார்; கல்லால் நிழற்கீழ் அமர்ந்த வாட்போக்கியாரது சீலம் நிறைந்தவரே செம்மையுள் நின்று சிவகதிபெறுவர்.
1915 | விடுத்த தூதுவர் வந்து வினைக்குழிப் படுத்த போது பயனிலை பாவிகாள் அடுத்த கின்னரங் கேட்கும்வாட் போக்கியை எடுத்தும் ஏத்தியும் இன்புறு மின்களே. |
5.086.2 |
பாவிகளே! எமன் விடுத்த தூதுவர்கள் வந்து வினைக்குழியிலே படுவித்தபோது கதறிப் புலம்பிப் பயன் இல்லை;அடுத்த கின்னர இசை கேட்கும் வாட்போக்கியை எடுத்தேத்தி இன்புறுவீர்களாக.
1916 | வந்திவ் வாறு வளைத்தெழு தூதுவர் உந்தி யோடி நரகத் திடாமுனம் அந்தி யின்னொளி தாங்கும்வாட் போக்கியார் சிந்தி யாவெழு வார்வினை தீர்ப்பரே. |
5.086.3 |
வந்து இவ்வாறு வளைத்தெழுகின்ற எமதூதுவர்கள் மனம் உந்துதலால் ஓடி நரகத்து இடுவதன் முன்னம் அந்தியின் செவ்வொளி தாங்கிய மேனியராகிய வாட்போக்கியிறைவர் தம்மைச் சிந்தித்து எழுவார்களின் வினை தீர்ப்பர்.
1917 | கூற்றம் வந்து குமைத்திடும் போதினால் தேற்றம் வந்து தௌவுற லாகுமே ஆற்ற வும்மருள் செய்யும்வாட் போக்கிபால் ஏற்று மின்விளக் கையிருள் நீங்கவே. |
5.086.4 |
எமன் வந்து அழித்திடும்போதில் முடிவு வந்து தௌவுறல் ஆகாதன்றோ? மிகவும் அருள்செய்யும் வாட்போக்கி இறைவர்பால் விளக்கை இருள் நீங்க ஏற்றுவீராக.
1918 | மாறு கொண்டு வளைத்தெழு தூதுவர் வேறு வேறு படுப்பதன் முன்னமே ஆறு செஞ்சடை வைத்தவாட் போக்கியார்க் கூறி யூறி யுருகுமென் னுள்ளமே. |
5.086.5 |
மாறுபாடுகொண்டு வளைத்தெழும் எமதூதுவர் உடல் வேறு உயிர் வேறு படுப்பதன்முன்பே, கங்கையைச் சிவந்த சடையில் வைத்த வாட்போக்கி இறைவர்க்கு என் உள்ளம் ஊறி ஊறி உருகும்.
1919 | கான மோடிக் கடிதெழு தூதுவர் தான மோடு தலைபிடி யாமுனம் ஆனஞ் சாடி யுகந்தவாட் போக்கியார் ஊன மில்லவர்க் குண்மையில் நிற்பரே. |
5.086.6 |
இடுகாட்டிற்கு ஓடி, விரைந்து எழுந்த எம தூதுவர் இடத்தோடு தலையைப்பிடிப்பதற்கு முன்பே, பஞ்சகவ்வியம் ஆடுதலை உகந்த வாட்போக்கி இறைவர், குற்றமற்றவர்க்கு உண்மையில் முன்னின்றருள்வர்.
1920 | பார்த்துப் பாசம் பிடித்தெழு தூதுவர் கூர்த்த வேலாற் குமைப்பதன் முன்னமே ஆர்த்த கங்கை யடக்கும்வாட் போக்கியார் கீர்த்தி மைகள் கிளர்ந்துரை மின்களே. |
5.086.7 |
பார்த்துப் பாசம் பிடித்தெழுந்த எமதூதுவர் கூரிய வேலாற்குத்தி வருத்துவதன் முன்பே, ஆரவாரித்த கங்கையைச் சடையில் அடக்கும் வாட்போக்கி இறைவர் புகழ்த்தன்மைகளை உள்ளம் கிளர்ந்து உரைப்பீராக.
1921 | நாடி வந்து நமன்தமர் நல்லிருள் கூடி வந்து குமைப்பதன் முன்னமே ஆடல் பாட லுகந்தவாட் போக்கியை வாடி யேத்தநம் வாட்டந் தவிருமே. |
5.086.8 |
எமனைச் சார்ந்தோராகிய தூதுவர் நாடிவந்து, நள்ளிருளில் தாம் பலராய்க் கூடிவந்து வருத்துவதன் முன்பே, ஆடல் பாடல் உகந்த வாட்போக்கி இறைவரை வாடி வழிபட நம்வாட்டம் தீரும்.
1922 | கட்ட றுத்துக் கடிதெழு தூதுவர் பொட்ட நூக்கிப் புறப்படா முன்னமே அட்ட மாமலர் சூடும்வாட் போக்கியார்க் கிட்ட மாகி இணையடி யேத்துமே. |
5.086.9 |
கட்டுக்களை அறுத்து விரைந்து எழுந்த எமதூதுவர்கள் புறப்படுவதற்கு முன்பே, எட்டுப் பூக்களைச் சூடும் வாட்போக்கி இறைவர்க்கு விருப்பம் உடையவராகித் திருவடி ஏத்துவீராக.
1923 | இரக்க முன்னறி யாதெழு தூதுவர் பரக்க ழித்தவர் பற்றுதன் முன்னமே அரக்க னுக்கருள் செய்தவாட் போக்கியார் கரப்ப துங்கரப் பாரவர் தங்கட்கே. |
5.086.10 |
இரக்கமென்பதை முன்னும் அறியாது எழுந்த எமதூதுவர்கள் பரவிவந்து அழித்துப் பற்றிக்கொள்வதற்கு முன்பே, இராவணனுக்கு அருள்செய்த வாட்போக்கி இறைவர் அவர்கட்கு அகப்படாமல் தம்மடியாரை ஒளிக்கவும் ஒளிப்பர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 84 | 85 | 86 | 87 | 88 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவாட்போக்கி - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - தூதுவர், வாட்போக்கி, முன்பே, போக்கியார், முன்னமே, எமதூதுவர்கள், இறைவர், எழுந்த, கடிதெழு, உள்ளம், இறைவர்க்கு, சடையில், வருத்துவதன், விரைந்து, குமைப்பதன், பிடித்தெழு, கங்கையைச், பார்த்துப், எமதூதுவர், அடுத்த, விடுத்த, நிற்பரே, செம்மையுள், போக்கியை, மின்களே, போக்கியார்க், திருச்சிற்றம்பலம், திருவாட்போக்கி, வளைத்தெழு, திருமுறை