முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.084.திருக்காட்டுப்பள்ளி
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.084.திருக்காட்டுப்பள்ளி
5.084.திருக்காட்டுப்பள்ளி
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆரணியசுந்தரர்.
தேவியார் - அகிலாண்டநாயகியம்மை.
1900 | மாட்டுப் பள்ளி மகிழ்ந்துறை வீர்க்கெலாம் கேட்டுப் பள்ளிகண் டீர்கெடு வீரிது ஓட்டுப் பள்ளிவிட் டோட லுறாமுனம் காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே. |
5.084.1 |
செல்வத்திடத்து மகிழ்ந்து உறைவீர்; கேட்டுப் பள்ளிகண்டீர். உடம்பை விட்டு உயிர் ஓடலுறுவதற்கு முன்பு காட்டுப்பள்ளியிறைவன் திருவடிகளைச் சேர்வீராக.
1901 | மாட்டைத் தேடி மகிழ்ந்துநீர் நும்முளே நாட்டுப் பொய்யெலாம் பேசிடு நாணிலீர் கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமே காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே. |
5.084.2 |
செல்வத்தையே தேடி நீர் உமக்குள்ளே மகிழ்ந்து நாட்டிலுள்ள பொய்யெல்லாம் பேசிடும் நாணமற்றவர்களே! இந்தக் கூடாகிய உடம்பைவிட்டு உயிர் போவதற்கு முன்பே காட்டுப்பள்ளியுள்ளான் திருவடி சேர்வீராக.
1902 | தேனை வென்றசொல் லாளொடு செல்வமும் ஊனை விட்டுயிர் போவதன் முன்னமே கான வேடர் கருதுங்காட் டுப்பள்ளி ஞான நாயக னைச்சென்று நண்ணுமே. |
5.084.3 |
தேனை வென்ற சொல்லை உடையவளாகிய மனைவியோடு செல்வமும் கெட்டு உடலைவிட்டு உயிர் போவதற்கு முன்பே காட்டு வேடர்கள் கருதும் காட்டுப்பள்ளியின் ஞானநாயகனைச் சென்று நண்ணுவீராக.
1903 | அருத்த மும்மனை யாளொடு மக்களும் பொருத்த மில்லைபொல்லாதது போக்கிடும் கருத்தன் கண்ணுத லண்ணல்காட் டுப்பள்ளித் திருத்தன் சேவடி யைச்சென்று சேர்மினே. |
5.084.4 |
பொருளும், மனைவியோடு மக்களும் பொருத்தம் இல்லை; பொல்லாத தீமை போக்கிடும் கருத்தனும், நெற்றிக்கண்ணுடைய அண்ணலும் ஆகிய காட்டுப்பள்ளித் திருத்தன் சேவடியைச் சென்று சேர்வீராக.
1904 | சுற்ற முந்துணை யும்மனை வாழ்க்கையும் அற்ற போதணை யாரவ ரென்றென்றே கற்ற வர்கள் கருதுங்காட் டுப்பள்ளிப் பெற்ற மேறும் பிரானடி சேர்மினே. |
5.084.5 |
சுற்றத்தாரும் துணைவியும் மனைவாழ்க்கையும், உயிர் உடலைவிட்டு நீங்கியபோது பொருந்தாதவர்கள் என்று, கற்றவர்கள் கருதுகின்ற காட்டுப்பள்ளியில் இடபம் ஏறிய பெருமான் அடி சேர்வீராக.
1905 | அடும்புங் கொன்றையும் வன்னியும் மத்தமும் துடும்பல் செய்சடைத் தூமணிச் சோதியான் கடம்பன் தாதை கருதுங்காட் டுப்பள்ளி உடம்பி னார்க்கோர் உறுதுணை யாகுமே. |
5.084.6 |
அடும்பும், கொன்றையும், வன்னியும், ஊமத்தமுமாகிய மலர்கள் சூடியிருக்கும் புனைதல் செய்யப்பட்ட சடையுடைய தூமணிச் சோதியானும், கடம்பணிந்த முருகன் தந்தையும் ஆகிய பெருமானே உடம்பை உடையவர்க்கெல்லாம் உறுதுணை ஆவான்; ஆதலின் காட்டுப்பள்ளியையே கருதுவீர்களாக.
1906 | மெய்யின் மாசுடை யாருடல் மூடுவார் பொய்யை மெய்யென்று புக்குடன் வீழன்மின் கையின் மானுடை யான்காட்டுப் பள்ளியெம் ஐயன் தன்னடி யேயடைந் துய்ம்மினே. |
5.084.7 |
உடம்பில் அழுக்குடையவரும், உடல் மூடுவாருமாகிய புத்தரது பொய்யை மெய்யென்று கருதிப் புகுந்து அவர்களுடன் வீழாதீர்; கையின்கண் மான் உடையான் ஆகிய காட்டுப் பள்ளியில் எம் ஐயன் திருவடிகளையே அடைந்து உய்வீராக.
1907 | வேலை வென்றகண் ணாரை விரும்பிநீர் சீலங் கெட்டுத் திகையன்மின் பேதைகாள் காலையேதொழுங் காட்டுப்பள் ளிய்யுறை நீல கண்டனை நித்தல் நினைமினே. |
5.084.8 |
அறிவற்றவர்களே! வேலை, அழகால் வென்ற கண்ணை உடைய பெண்டிரை விரும்பி, நீர் ஒழுக்கம் கெட்டுத் திகையாதீர்; காட்டுப்பள்ளியில் உறையும் திருநீலகண்டனை நித்தமும் நினைந்து காலத்தே சென்று தொழுவீராக.
1908 | இன்று ளார்நாளை யில்லை யெனும்பொருள் ஒன்றும் ஓரா துழிதரு மூமர்காள் அன்று வானவர்க் காக விடமுண்ட கண்ட னார்காட்டுப் பள்ளிகண் டுய்ம்மினே. |
5.084.9 |
ஊமர்களே! இன்றைக்கிருப்பார் நாளைக்கில்லை எனும் பொருள் ஒன்றும் உணராது திரிதருவோரே! அன்று தேவர்களின் பொருட்டு விடமுண்டதிருக்கழுத்தினரது காட்டுப்பள்ளி கண்டு உய்வீராக.
1909 | எண்ணி லாஅரக் கன்மலை யேந்திட எண்ணி நீண்முடி பத்து மிறுத்தவன் கண்ணு ளார்கரு துங்காட்டுப் பள்ளியை நண்ணு வாரவர் தம்வினை நாசமே. |
5.084.10 |
நல்லெண்ணமில்லாத இராவணன் மலையை எடுக்க, அவன் திருந்துமாறு திருவுளத்து எண்ணி, அவன் நீண்ட முடிகள் பத்தையும் இறுத்தவனுக்குரிய ஞானக்கண்ணுடையவர் கருதி உணரும் காட்டுப்பள்ளியை நண்ணுவாருடைய வினைகள் நாசம் அடையும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 82 | 83 | 84 | 85 | 86 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்காட்டுப்பள்ளி - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - சேர்வீராக, சேர்மினே, சென்று, காட்டுப், கருதுங்காட், காட்டுப்பள்ளியில், கொன்றையும், உடலைவிட்டு, திருத்தன், போக்கிடும், மக்களும், தூமணிச், உய்வீராக, கெட்டுத், ஒன்றும், மெய்யென்று, பொய்யை, மனைவியோடு, உறுதுணை, வன்னியும், செல்வமும், பள்ளியு, ளான்கழல், பள்ளிகண், கேட்டுப், திருமுறை, திருச்சிற்றம்பலம், மகிழ்ந்து, உடம்பை, முன்பே, திருக்காட்டுப்பள்ளி, போவதற்கு, முன்னமே, விட்டுயிர், போவதன், டுப்பள்ளி