முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.063.திருக்குரங்காடுதுறை
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.063.திருக்குரங்காடுதுறை
5.063.திருக்குரங்காடுதுறை
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - குலைவணங்குநாதர்.
தேவியார் - அழகுசடைமுடியம்மை.
1700 | இரங்கா வன்மனத் தார்க ளியங்குமுப் புரங்கா வல்அழி யப்பொடி யாக்கினான் தரங்கா டுந்தட நீர்ப்பொன்னித் தென்கரைக் குரங்காடு துறைக் கோலக்க பாலியே. |
5.063.1 |
அலைகள் ஆடுகின்ற பெரிய நீரினை உடைய காவிரியின் தென்கரையில் உள்ள குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் அழகிய கபாலம் கைக்கொண்ட பெருமான், இரங்காத வலிய மனத்தவர்களாகிய அரக்கர்கள் இயங்குகின்ற முப்புரங்காவல் அழியுமாறு பொடியாக்கியவன் ஆவன்.
1701 | முத்தி னைமணி யைப்பவ ளத்தொளிர் தொத்தி னைச்சுடர்ச் சோதியைச் சோலைசூழ் கொத்த லர்குரங் காடு துறையுறை அத்த னென்னஅண் ணித்திட்டிருந்ததே. |
5.063.2 |
முத்தும், மணியும், பவளத்தொடு ஒளிர்கின்ற கொத்தும், சுடர்விடும் சோதியும், சோலைகள் சூழ்ந்த பூங்கொத்துக்கள்மலர்கின்ற குரங்காடுதுறை உறையும் அத்தனும் என்று கூற உள்ளத்தில் தித்தித்திருந்தனன் அப்பெருமான்.
1702 | குளிர்பு னற்குரங் காடுது றையனைத் தளிர்நி றத்தையல் பங்கனைத் தண்மதி ஒளிய னைந்நினைந் தேனுக்கென் னுள்ளமும் தௌவி னைத்தௌ யத்தௌந் திட்டதே. |
5.063.3 |
குளிர்கின்ற நீர் சூழ்ந்த குரங்காடுதுறையில் இருப்பவனும், மாந்தளிரைப் போன்ற நிறம் உடைய மேனியினளாகிய உமாதேவியைப் பங்கிற்கொண்டவனும் தண்ணியமதி ஒளியனும் ஆகிய பெருமானை நினைந்த அடியேனுக்கு என் உள்ளமும் தௌவுறும்படித் தௌவினைத் தௌந்தது.
1703 | மணவன் காண்மலை யாள்நெடு மங்கலக் கணவன் காண்கலை ஞானிகள் காதலெண் குணவன் காண்குரங் காடுதுறைதனில் அணவன் காண்அன்பு செய்யு மடியர்க்கே. |
5.063.4 |
அன்புசெய்யும் அடியார்க்கு மணவாளக்கோலம் உடையவனும், மலைமகளாகிய உமாதேவிக்கு மங்கலக்கணவனும், கலைஞானிகளாற் காதலிக்கப்பெறுவானும். எண் குணத்தானும், குரங்காடுதுறையில், அண்ணியவனும், ஆவன்.
1704 | ஞாலத் தார்தொழு தேத்திய நன்மையன் காலத் தான்உயிர் போக்கிய காலினன் நீலத் தார்மிடற் றான்வெள்ளை நீறணி கோலத் தான்குரங் காடு துறையனே. |
5.063.5 |
குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் இறைவன் உலகத்தாராற் றொழுதேத்தப்பட்ட நன்மை உடையவனும், காலன் உயிர்போகச் செய்த திருக்காலை உடையவனும், நீலநிறம் நிறைந்த திருமிடற்றை உடையவனும், வெண்ணீறணிந்த கோலத்தை உடையவனும் ஆவன்.
1705 | ஆட்டி னான்முன் அமணரோ டென்றனைப் பாட்டி னான்றன பொன்னடிக் கின்னிசை வீட்டி னான்வினை மெய்யடி யாரொடும் கூட்டி னான்குரங் காடு துறையனே. |
5.063.6 |
குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் இறைவன், முன்னர் என்னை அமணர்களோடு ஆட்டுவித்தவனும், பின்னர்த் தன் பொன்னார் திருவடிகளுக்கு இனிய பண்ணிசையை என்னைப் பாட்டுவித்தவனும், வினையை வீட்டியவனும், மெய்யடியார்களோடு என்னைக் கூட்டுவித்தவனும் ஆவன்.
1706 | மாத்தன் தான்மறை யார்முறை யான்மறை ஓத்தன் தாரகன் றன்னுயி ருண்டபெண் போத்தன் தானவன் பொங்கு சினந்தணி கூத்தன் தான்குரங் காடு துறையனே. |
5.063.7 |
வேதங்களில் கூறிய முறையால் மாற்றுயர்ந்த பொன்போன்றவனும், வேதசாகைகளை அருளிச்செய்தவனும், தாரகனை அடக்கிய காளியைவென்ற வீரனும், முயலகனது சினத்தைத் தணித்த கூத்தனுமாய் விளங்குபவன் குரங்காடுதுறை இறைவன்.
1707 | நாடி நந்தம ராயின தொண்டர்காள் ஆடு மின்அழு மின்தொழு மின்னடி பாடு மின்பர மன்பயி லும்மிடம் கூடு மின்குரங் காடு துறையையே. |
5.063.8 |
நம் தமராகிய தொண்டர்களே! பரமன் பயிலும் இடமாகிய குரங்காடுதுறையையே மனத்தால் நாடி ஆடுவீர்களாக; அழுவீர்களாக; தொழுவீர்களாக; அவன் அடியே பாடுவீர்களாக; அத்தலத்தையே கூடுவீர்களாக.
1708 | தென்றல் நன்னெடுந் தேருடை யானுடல் பொன்ற வெங்கனல் பொங்க விழித்தவன் அன்ற வந்தக னைஅயிற் சூலத்தால் கொன்ற வன்குரங் காடு துறையனே. |
5.063.9 |
குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் 'இறைவன், தென்றலாகிய நல்ல நீண்டுயர்ந்த தேரை உடையானாகிய காமன் உடல் அழியுமாறு வெவ்விய அனல் பொங்க விழித்தவனும், அன்று காலனைக் கூரிய சூலத்தாற் கொன்றவனும் ஆவன்.
1709 | நற்ற வம்செய்த நால்வர்க்கு நல்லறம் உற்ற நன்மொழி யாலருள் செய்தநல் கொற்ற வன்குரங் காடு துறைதொழுப் பற்றுந் தீவினை யாயின பாறுமே. |
5.063.10 |
நல்ல தவம் புரிந்தவர்களாகிய சனகர் முதலிய நான்கு முனிவர்களுக்கும் நல் அறம் மிகுந்த நன்மொழியால் அருள் செய்தவனாகிய நல்ல கொற்றவனுறைகின்ற குரங்காடுதுறையைத் தொழுதால் பற்றுகின்ற தீவினையாகியவை கெடும்.
1710 | கடுத்த தோரரக் கன்கயி லைம்மலை எடுத்த தோள்தலை யிற்றல றவ்விரல் அடுத்த லும்மவ னின்னிசை கேட்டருள் கொடுத்த வன்குரங் காடு துறையனே. |
5.063.11 |
குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் இறைவன், சினந்த தேரை உடைய இராவணனது, திருக்கயிலையை எடுக்கலுற்ற தோள்களும் தலையும் இற்று, அவன் அலறும்படியாகத் திருவிரலை அடுத்தவன்; பின் அவன் இன்னிசை கேட்டு அருள்கொடுத்தவன் ஆவன்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 61 | 62 | 63 | 64 | 65 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்குரங்காடுதுறை - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - குரங்காடுதுறையில், துறையனே, வீற்றிருக்கும், உடையவனும், இறைவன், வன்குரங், தான்குரங், சூழ்ந்த, திருமுறை, திருச்சிற்றம்பலம், அழியுமாறு, திருக்குரங்காடுதுறை, குரங்காடுதுறை