முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.060.திருமாற்பேறு
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.060.திருமாற்பேறு
5.060.திருமாற்பேறு
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மால்வணங்குமீசர்.
தேவியார் - கருணைநாயகியம்மை.
1672 | ஏது மொன்று மறிவில ராயினும் ஓதி யஞ்செழுத் தும்முணர் வார்கட்குப் பேத மின்றி யவரவ ருள்ளத்தே மாதுந் தாமும் மகிழ்வர்மாற் பேறரே. |
5.060.1 |
திருமாற்பேற்றில் எழுந்தருளியிருக்கும் இறைவர் ஏதொன்றும் அறியாதவர்கள் ஆனாலும், திருவஞ்செழுத்தை ஓதி உணர்வார்கட்கு வேற்றுமையின்றி அவரவர் உள்ளத்தே தாமும் அம்பிகையுமாய் மகிழ்ந்து வீற்றிருப்பர்.
1673 | அச்ச மில்லைநெஞ் சேயரன் நாமங்கள் நிச்ச லுந்நினை யாய்வினை போயறக் கச்ச மாவிட முண்டகண் டாவென வைச்ச மாநிதி யாவர்மாற் பேறரே. |
5.060.2 |
நெஞ்சே! அரன் திருநாமங்களை வினைகள் விட்டு நீங்குவதற்காக, நித்தமும் நினைவாயாக; உனக்கு அச்சமில்லை. திருமாற்பேற்று இறைவர், கைப்புள்ள ஆலகால விடத்தை உண்டதிருநீலகண்டர் என்று அன்பொடுகூற, சேமித்து வைத்த மாநிதிபோலப் பயன்படுவர்.
1674 | சாத்தி ரம்பல பேசுஞ் சழக்கர்காள் கோத்தி ரமுங் குலமுங்கொண் டென்செய்வீர் பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல் மாத்தி ரைக்கு ளருளுமாற் பேறரே. |
5.060.3 |
சாத்திரங்கள் பலவற்றைப் பேசும் தீயவர்களே! கோத்திரம், குலம் முதலியவற்றைக் கொண்டு என்ன செய்வீர்! பணிதற்குரிய பொருள் சிவபரம்பொருளே என்று கொண்டு பணிவீராயின், திருமாற்பேற்று இறைவர் ஒருமாத்திரைப் பொழுதுக்குள் அருளுவர்.
1675 | இருந்து சொல்லுவன் கேண்மின்க ளேழைகாள் அருந்த வந்தரும் அஞ்செழுத் தோதினால் பொருந்து நோய்பிணி போகத் துரப்பதோர் மருந்து மாகுவர் மன்னுமாற் பேறரே. |
5.060.4 |
அறிவில்லாதவர்களே! சிந்தித்திருந்து சொல்லுவேன்; கேட்பீர்களாக! அரிய தவத்தினாலாய பயனைத்தரும் திருவஞ்செழுத்தை ஓதினால் திருமாற்பேற்று இறைவர் உம்மைப் பொருந்தியுள்ள நோய்களாகிய பிணிகள் போகும்படி துரத்துவதாகும் ஒப்பற்ற மருந்தும் ஆவர்.
1676 | சாற்றிச் சொல்லுவன் கேண்மின் தரணியீர் ஏற்றின் மேல்வரு வான்கழ லேத்தினால் கூற்றை நீக்கிக் குறைவறுத் தாள்வதோர் மாற்றி லாச்செம்பொ னாவர்மாற் பேறரே. |
5.060.5 |
உலகில் உள்ளவர்களே! எல்லோரும் அறியச் சொல்லுவேன் கேட்பீர்களாக; இடபத்தின் மேல் வருவாராகிய திருமாற்பேற்று இறைவர் திருவடிகளை ஏத்தினால், உம்மைக் கொள்ளவரும் கூற்றுவனை நீக்கி, குறைகளை அறுத்து, ஆள்கின்ற மாற்றில்லாத செம்பொன்னை ஒப்பர்.
1677 | ஈட்டும் மாநிதி சால இழக்கினும் வீட்டுங் காலன் விரைய அழைக்கினுங் காட்டில் மாநட மாடுவாய் காவெனில் வாட்டந் தீர்க்கவும் வல்லர்மாற்பேறரே. |
5.060.6 |
வருந்திச் சேர்த்த பெருஞ்செல்வத்தை மிகுதியாக இழந்தாலும், அழிக்கும் காலன் விரையவந்து அழைத்தாலும், சுடுகாட்டில் பெரிய நடனம் ஆடுகின்ற பெருமானே! காப்பாற்றுவாயாக! என்றழைத்தால், திருமாற்பேற்றிறைவர் வாட்டம் தீர்க்கவும் வல்லராவர்.
1678 | ஐய னேயர னேயென் றரற்றினால் உய்ய லாமுல கத்தவர் பேணுவர் செய்ய பாத மிரண்டும் நினையவே வையம் ஆளவும் வைப்பர்மாற் பேறரே. |
5.060.7 |
தலைவனே! சிவபெருமானே! என்று வாய்விட்டு அரற்றினால் உய்தி அடையலாம்; அதுவன்றியும் உலகத்திலுள்ளவர் பேணி மதிப்புச்செய்வர்; அப்பெருமானின் இரண்டு சிவந்த திருப்பாதங்களை நினைத்தால் திருமாற்பேற்று இறைவர் உலகத்தை ஆளவும் வைப்பர்.
1679 | உந்திச் சென்று மலையை யெடுத்தவன் சந்து தோளொடு தாளிற வூன்றினான் மந்தி பாய்பொழில் சூழுமாற் பேறென அந்த மில்லாதோ ரின்பம் அணுகுமே. |
5.060.10 |
செருக்கு தன்னை உந்தித்தள்ளுதலால் சென்று திருக்கயிலாயத்தை எடுத்தவனாகிய இராவணனது சந்தனம் பூசிய தோளும் தாள்களும் இறுமாறு திருவிரலால் ஊன்றிய பெருமானுக்குரியதும், பெண்குரங்குகள் பாயும் பொழில் சூழ்வதுமாகிய திருமாற்பேறு என்று கூறினால் முடிவில்லாத ஒப்பற்ற இன்பம் அணுகும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 58 | 59 | 60 | 61 | 62 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமாற்பேறு - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - இறைவர், திருமாற்பேற்று, திருமாற்பேறு, கேட்பீர்களாக, ஒப்பற்ற, தீர்க்கவும், சென்று, ஆளவும், சொல்லுவேன், கொண்டு, திருமுறை, தாமும், திருவஞ்செழுத்தை, மாநிதி, திருச்சிற்றம்பலம், சொல்லுவன்