முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.059.திருமாற்பேறு
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.059.திருமாற்பேறு
5.059.திருமாற்பேறு
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மால்வணங்குமீசர்.
தேவியார் - கருணைநாயகியம்மை.
1662 | பொருமாற் றின்படை வேண்டிநற் பூம்புனல் வருமாற் றின்மலர் கொண்டு வழிபடும் கருமாற் கின்னருள் செய்தவன் காண்தகு திருமாற் பேறு தொழவினை தேயுமே. |
5.059.1 |
போரிடுகின்ற நெறியிற் படைக்கலம் வேண்டி நல்ல பூம்புனல் பாய்ந்துவரும் ஆற்றில் மூழ்கி, மலர் கொண்டு வழிபடுவோனாகிய கருநிறத்துத் திருமாலுக்கு இனிய அருள் செய்தவனுக்குரிய காணத்தக்க திருமாற்பேறு தொழ வினைகள் தேயும்.
1663 | ஆலத் தார்நிழ லில்லற நால்வர்க்குக் கோலத் தாலுரை செய்தவன் குற்றமில் மாலுக் காரருள் செய்தவன் மாற்பேறு ஏலத் தான்தொழு வார்க்கிட ரில்லையே. |
5.059.2 |
கல் ஆலமரத்தின் பொருந்திய நிழலில் நால்வர்க்கு அறம் அழகுபட உரைத்தவனும், குற்றமற்ற திருமாலுக்கு நிறைந்த பேரருள் செய்தவனும் ஆகிய பெருமான் உறையும் திருமாற்பேற்றைப் பொருந்தத் தாம் தொழுவார்க்கு இடர்கள் இல்லை.
1664 | துணிவண் ணச்சுட ராழிகொள் வானெண்ணி அணிவண் ணத்தலர் கொண்டடி யர்ச்சித்த மணிவண் ணற்கருள் செய்தவன் மாற்பேறு பணிவண் ணத்தவர்க் கில்லையாம் பாவமே. |
5.059.3 |
தீவினை செய்தாரைத் துணிக்கின்ற வண்ணத்தையும், ஒளியையும் உடைய சக்கரப்படையினைக் கொள்வதற்காக எண்ணி, அழகு வண்ணம் உடைய மலர்களைக் கொண்டு திருவடிகளை அருச்சித்த நீலமணிபோலும் நிறமுடையானாகிய திருமாலுக்கு அருள் செய்தவன் உறையும் திருமாற்பேற்றைப் பணிகின்ற இயல்புடையார்க்குப் பாவங்கள் இல்லையாம்.
1665 | தீதவை செய்து தீவினை வீழாதே காதல் செய்து கருத்தினில் நின்றநன் மாத வர்பயில் மாற்பேறு கைதொழப் போது மின்வினை யாயின போகுமே. |
5.059.4 |
தீயவற்றையே செய்து தீவினையில் பின்னும் வீழாது, கருத்தினில் நிலைபெறுமாற்றை உடைய காதல் புரிந்தோராகிய நல்ல மாதவர் பயில்கின்ற மாற்பேற்றைக் கைதொழப் போது வீராக; உம் வினையாயின போகும்.
1666 | வார்கொள் மென்முலை மங்கையொர் பங்கினன் வார்கொள் நன்முர சம்மறை யவ்வறை வார்கொள் பைம்பொழில் மாற்பேறு கைதொழு வார்கள் மன்னுவர் பொன்னுல கத்திலே. |
5.059.5 |
கச்சினைக்கொண்ட மென்முலை உடைய உமையொரு பங்கினன் உறைவதும், இழுத்துக் கட்டப் பெற்ற நல்ல முரசுகளும், நான்மறைகளும் அழகுற ஒலிக்கப்பெறுவதும், நெடிய பசும் பொழில்களை உடையதுமாகிய திருமாற்பேற்றைக்கை தொழும் அடியார்கள் பொன்னுலகத்தில் நிலைபெற வீற்றிருப்பர்.
1667 | பண்டை வல்வினை பற்றறுக் கும்வகை உண்டு சொல்லுவன் கேண்மி னொளிகிளர் வண்டு சேர்பொழில் சூழ்திரு மாற்பேறு கண்டு கைதொழத் தீருங் கவலையே. |
5.059.6 |
பழையவல்வினைகளது பற்று அறுக்கும் வகை ஒன்று உண்டு; அதனைச் சொல்லுவேன் கேட்பீராக; ஒளிகிளர்கின்றதும், வண்டுகள் சேரும் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய திருமாற்பேறு கண்டு கைதொழக் கவலைகள் தீரும்.
1668 | மழுவ லான்திரு நாமம் மகிழ்ந்துரைத் தழவ லார்களுக் கன்புசெய் தின்பொடும் வழுவி லாவருள் செய்தவன் மாற்பேறு தொழவ லார்தமக் கில்லை துயரமே. |
5.059.7 |
மழுவினை ஏந்திய வெற்றி உடையானது திருநாமத்தை மகிழ்ந்துரைத்து அழவல்ல அடியார்களுக்கு அன்பு செய்து இன்பமொடும் வழுவில்லாத அருள் செய்தவன் உறையும் திருமாற்பேறு தொழவல்ல அடியார்களுக்குத் துயரங்கள் இல்லை.
1669 | முன்ன வன்னுல குக்கு முழுமணிப் பொன்ன வன்திகழ் முத்தொடு போகமாம் மன்ன வன்திரு மாற்பேறு கைதொழும் அன்ன வரெமை யாளுடை யார்களே. |
5.059.8 |
உலகினுக்கு முன்னேதோன்றியவனும், முழுமணியும், பொன்னும், விளங்கும் முத்தும், போகங்களும் ஆக விளங்கும். மன்னவனும் ஆகிய திருமாற்பேற்றில் உறையும் இறைவனைக் கைதொழும் அத்தன்மையவர் எம்மை ஆளுடையார்கள்.
1670 | வேட னாய்விச யன்னொடும் எய்துவெம் காடு நீடுகந் தாடிய கண்ணுதல் மாட நீடுய ருந்திரு மாற்பேறு பாடு வார்பெறு வார்பர லோகமே. |
5.059.9 |
அருச்சுனனோடும் வேடனாய் வந்து அம்பு எய்து, வெவ்விய சுடுகாட்டை நீண்டு உகந்து ஆடிய கண்ணுதற் பெருமான் உறைவதும், மாடங்கள் நீண்டு உயருஞ் சிறப்புடையதுமாகிய திருமாற்பேறு பாடுவார்கள் பரலோகம் அடையப் பெறுவார்கள்.
1671 | கருத்த னாய்க்கயி லாய மலைதனைத் தருக்கி னாலெடுத் தானைத் தகரவே வருத்தி யாரருள் செய்தவன் மாற்பேறு அருத்தி யால்தொழு வார்க்கில்லை யல்லலே. |
5.059.10 |
கயிலாயமலையை எடுக்கும் கருத்து உடையவனாய்ச் செருக்கினோடு எடுக்கலுற்ற இராவணனைச் சிதையும் வண்ணம் வருத்திப் பின் நிறைந்த அருள் செய்தவன் உறையும் திருமாற்பேற்றை விருப்பத்தினோடு தொழுவார்க்கு அல்லல் இல்லை.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 57 | 58 | 59 | 60 | 61 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமாற்பேறு - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - செய்தவன், மாற்பேறு, திருமாற்பேறு, உறையும், செய்து, வார்கொள், திருமாலுக்கு, கொண்டு, மென்முலை, கைதொழப், உறைவதும், கைதொழும், நீண்டு, கருத்தினில், விளங்கும், பங்கினன், தொழுவார்க்கு, பூம்புனல், திருச்சிற்றம்பலம், திருமுறை, நிறைந்த, பெருமான், தீவினை, திருமாற்பேற்றைப், வண்ணம்