முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.036.திருச்செம்பொன்பள்ளி
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.036.திருச்செம்பொன்பள்ளி
5.036.திருச்செம்பொன்பள்ளி
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர்.
தேவியார் - திருவதிகைநாயகி.
1427 | கான றாத கடிபொழில் வண்டினம் தேன றாத திருச்செம்பொன் பள்ளியான் ஊட றாததோர் வெண்டலை யிற்பலி தான றாததோர் கொள்கையன் காண்மினே. |
5.036.1 |
மணம் நீங்காத விளக்கம் உடைய பொழில்களில் வண்டினங்களின் தேன் நீங்காத திருச்செம்பொன் பள்ளி இறைவன், தசைவிட்டு நீங்காத ஒரு வெண்தலையில் பலியினைத் தான் ஏற்றலினின்றும் நீங்காத இயல்புடையவன்; காண்பீர்களாக.
1428 | என்பு மாமையும் பூண்டங் குழிதர்வர்க் கன்பு மாயிடும் ஆயிழை யீரினிச் செம்பொன் பள்ளியு ளான்சிவ லோகனை நம்பொன் பள்ளியுள் கவினை நாசமே. |
5.036.2 |
எலும்பும், ஆமையும் அணிந்து திரிதருகின்ற செம்பொன்பள்ளி இறைவனும் சிவலோகனுமாகிய பெருமானை அன்பு செய்யும் ஆராய்ந்த இழையை அணிந்த பெண்களே! அப் பெருமானை நம் அழகிய மனக்கோயிலின்கண்ணே நினைந்தால் நம் வினைகள் நாசமாகும்.
1429 | வேறு கோலத்த ராணலர் பெண்ணலர் கீறு கோவண வைதுகி லாடையர் தேற லாவதொன் றன்றுசெம் பொன்பள்ளி ஆறு சூடிய அண்ண லவனையே. |
5.036.3 |
வேறுகோலத்தோடு கூடியவரும், ஆண், பெண் அல்லாதவரும், கிழித்த கோவணத்துகிலாடையுடையவரும், செம்பொன் பள்ளியில் வீற்றிருந்து கங்கையாளைச் சடையிற் சூடிய அண்ணலாகிய அப்பெருமானைத் தௌத்துகொள்ளுதல் யார்க்கும் எளிதாம் ஒன்றன்று.
1430 | அருவ ராததோர் வெண்டலை யேந்திவந் திருவ ராயிடு வார்கடை தேடுவார் தெருவெ லாமுழல் வார்செம்பொன் பள்ளியார் ஒருவர் தாம்பல பேருளர் காண்மினே. |
5.036.4 |
அருவருப்புக்கொள்ளாது ஒரு வெண்டலையை ஏந்திவந்து தெருவெல்லாம் உழல்வார் செம்பொன் பள்ளி இறைவர்; திருமாலும் பிரமனுமாகிய இருவரால் திருமுடி, திருவடிகளின் எல்லை தேடப்பட்ட அவ்வொருவர் பலபெயர்களும் கொண்டு திகழ்வர்; காண்பீர்களாக.
1431 | பூவு லாஞ்சடை மேற்புனல் சூடினான் ஏவ லாலெயின் மூன்று மெரித்தவன் தேவர் சென்றிறைஞ் சுஞ்செம்பொன் பள்ளியான் மூவ ராய்முத லாய்நின்ற மூர்த்தியே. |
5.036.5 |
தேவர்கள் சென்று இறைஞ்சுகின்ற செம்பொன் பள்ளி இறைவர் கொன்றைப்பூப் பொருந்திய சடையில் கங்கையைச் சூடியவரும், ஓரம்பினால் முப்புரம் எரித்தவரும், மூவர்க்கும் முதலாய் நின்ற மூர்த்தியும் ஆவர்.
1432 | சலவ ராயொரு பாம்பொடு தண்மதிக் கலவ ராவதின் காரண மென்கொலோ திலக நீண்முடி யார்செம்பொன் பள்ளியார் குலவில் லாலெயில் மூன்றெய்த கூத்தரே. |
5.036.6 |
பெருமைக்குரிய வில்லால் மூன்றெயில்களை எய்த கூத்தரும் , பொட்டணிந்தவரும், நீண்ட சடாமுடி உடையவருமாகிய செம்பொன்பள்ளி இறைவர் கங்கையைச் சூடியவராய், பாம்பும் குளிர்பிறையும் கலந்தவராய் ஆவதன் காரணம் என்னையோ?.
1433 | கைகொள் சூலத்தர் கட்டுவாங் கத்தினர் மைகொள் கண்டத்த ராகி யிருசுடர் செய்ய மேனிவெண் ணீற்றர்செம் பொன்பள்ளி ஐயர் கையதோ ரைந்தலை நாகமே. |
5.036.7 |
கையிற்கொண்ட சூலம் உடையவரும், கட்டு வாங்கத்தை உடையவரும், திருநீலகண்டரும் ஆகி இருசுடர்களைப் போன்று சிவந்த திருமேனியும் அதிற்பூசிய வெண்ணீற்றினருமாகிய செம்பொன்பள்ளித் தலைவர் கையின்கண் உள்ளது ஓர் ஐந்தலை நாகமாகும்.
1434 | வெங்கண் நாகம் வெருவுற ஆர்த்தவர் பைங்கண் ஆனையி னீருரி போர்த்தவர் செங்கண் மால்விடை யார்செம்பொன் பள்ளியார் அங்க ணாயடைந் தார்வினை தீர்ப்பரே. |
5.036.8 |
வெவ்விய கண்ணையுடைய நாகத்தினை அஞ்சும்படி ஆர்த்துக்கட்டியவரும், பசுமையான கண்ணையுடைய ஆனையின் பச்சைத்தோலைப் போர்த்தவரும், செங்கண்ணையுடைய திருமாலைத் தமக்கு விடையாக உடையவரும் ஆகிய செம்பொன்பள்ளி இறைவர் தம்மை அடைக்கலமாக அடைந்தவர்களின் வினைகளைத் தீர்ப்பர்.
1435 | நன்றி நாரணன் நான்முக னென்றிவர் நின்ற நீண்முடி யோடடி காண்புற்றுச் சென்று காண்பரி யான்செம்பொன் பள்ளியான் நின்ற சூழலில் நீளெரி யாகியே. |
5.036.9 |
செம்பொன்பள்ளி இறைவர் நன்மை மிக்க நாரணனும், பிரமனும் ஆகிய இருவரும் நிலைபெற்ற திருமுடியையும் திருவடியையும் காணத்தொடங்கிச் சென்றும் காண்டலரியவராய் நின்ற அச்சூழ்நிலையில் நீண்டு அழலுருவாயினர்.
1436 | திரியும் மும்மதில் செங்கணை யொன்றினால் எரிய வெய்தன லோட்டி யிலங்கைக்கோன் நெரிய வூன்றியிட் டார்செம்பொன் பள்ளியார் அரிய வான மவரருள் செய்வரே. |
5.036.10 |
செம்பொன்பள்ளி இறைவர். திரிகின்ற மும்மதில்களைச் செங்கணை ஒன்றினால் எரியுமாறு எய்து அனலினால் ஓட்டி, இராவணன் நெரியுமாறு தம் திருவிரல் ஒன்றால் ஊன்றியவர்; தம்மையடைந்த அன்பர்க்கு அரிதாகிய வீட்டுலக இன்பத்தை அப்பெருமான் அருள்வர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 34 | 35 | 36 | 37 | 38 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருச்செம்பொன்பள்ளி - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - இறைவர், செம்பொன்பள்ளி, செம்பொன், நீங்காத, பள்ளியார், உடையவரும், பள்ளியான், கங்கையைச், சென்று, திருமுறை, யார்செம்பொன், செங்கணை, கண்ணையுடைய, நீண்முடி, பெருமானை, வெண்டலை, றாததோர், திருச்செம்பொன், காண்மினே, காண்பீர்களாக, திருச்சிற்றம்பலம், திருச்செம்பொன்பள்ளி, பொன்பள்ளி