முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.034.திருநெய்த்தானம்
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.034.திருநெய்த்தானம்
5.034.திருநெய்த்தானம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நெய்யாடியப்பர்.
தேவியார் - வாலாம்பிகையம்மை.
1407 | கொல்லி யான்குளிர் தூங்குகுற் றாலத்தான் புல்லி யார்புரம் மூன்றெரி செய்தவன் நெல்லி யானிலை யானநெய்த் தானனைச் சொல்லி மெய்தொழு வார்சுடர் வாணரே. |
5.034.1 |
கொல்லிமலையில் வீற்றிருப்பவனும், குளிர்ச்சி செறியும் குற்றாலத்தில் வீற்றிருப்பவனும், பகைவர் புரங்கள் மூன்றையும் எரிசெய்தவனும், திருநெல்லிக்காவில் உள்ளவனும், நிலைபெற்றிருக்கும் திருநெய்த்தானனுமாகிய பெருமானை வாயினாற் சொல்லி மெய்யினால் தொழுவார்கள் ஒளியோடு கூடி வாழும் உயர்நிலை பெறுவர்.
1408 | இரவ னையிடு வெண்தலை யேந்தியைப் பரவ னைப்படை யார்மதில் மூன்றையும் நிரவ னைநிலை யானநெய்த் தானனைக் குரவ னைத்தொழு வார்கொடி வாணரே. |
5.034.2 |
இரத்தலை உடையவனும், வெண்தலை ஏந்தியவனும், எல்லோராலும் பரவப்படுபவனும், படையுடையார் முப்புரங்களையும் எரியால் நிரந்தவனும், ஞானாசாரியனும் நிலைபெற்றிருக்கும் திருநெய்த்தான்னுமாகிய பெருமானைத் தொழுவார்கள் இவ்வுலகத்து நன்கு வாழ்வோராவர்.
1409 | ஆனிடை யைந்தும் ஆடுவ ராரிருள் கானிடை நடம் ஆடுவர் காண்மினோ தேனிடை மலர் பாயுநெய்த் தானனை வானி டைத்தொழு வார்வலி வாணரே. |
5.034.3 |
பஞ்சகவ்வியங்களை விரும்பித் திருமஞ்சனம் கொள்பவரும், நள்ளிருளில் இடுகாட்டிடை நடம் ஆடுபவரும் ஆவர்; காண்பீராக! மலரிடைத் தேன் பொழிந்து பாயும் திருநெய்த்தானனை வானிடைத் தொழுவார்கள் வலிமையோடு வாழ்பவராவர்.
1410 | விண்ட வர்புர மூன்றும்வெண் ணீறெழக் கண்ட வன்கடி தாகிய் நஞ்சினை உண்ட வன்னொளி யானநெய்த் தானனைத் தொண்ட ராய்த்தொழு வார்சுடர் வாணரே. |
5.034.4 |
பகைவர் புரமூன்றையும் வெள்ளிய சாம்பலாகியெழுமாறு கண்டு எரித்தவனும், கடிதாகிய ஆலகாலத்தை உண்ட வனும் ஆகிய ஒளியான ருநெய்த்தானனைத் தொண்டராகித் தொழுவார் ஒளியோடு கூடி வாழ்பவராவர்.
1411 | முன்கை நோவக் கடைந்தவர் நிற்கவே சங்கி யாது சமுத்திர நஞ்சுண்டான் நங்கை யோடு நவின்றநெய்த் தானனைத் தங்கை யால்தொழு வார்தலை வாணரே. |
5.034.5 |
தம் முன்கைகள் நோகுமாறு கடைந்த தேவர்களும் அசுரர்களும் அஞ்சிநிற்கச் சிறிதும் ஐயுறாது கடல் நஞ்சுண்டு அனைவரையும் காத்தவனும், உமாதேவியோடு விரும்பி எழுந்தருளியிருப்போனுமாகிய திருநெய்த்தானனைத் தம்கைகளால் தொழுவார் தலைமைத் தன்மையோடு கூட வாழ்பவராவர்.
1412 | சுட்ட நீறுமெய் பூசிச் சுடலையுள் நட்ட மாடுவர் நள்ளிருள் பேயொடே சிட்டர் வானவர் தேருநெய்த் தானனை இட்ட மாய்த்தொழு வாரின்ப வாணரே. |
5.034.6 |
உலகெல்லாவற்றையும் சுட்ட திருவெண்ணீற்றினைத் திருமேனியிற்பூசி, நள்ளிருளில் பேய்களோடு சுடுகாட்டில் நடம் ஆடுபவரும், உயர்ந்த முனிவர்களும் தேவர்களும் ஆராய்ந்து காணும் திருநெய்த்தானரும் ஆகிய பெருமானை விருப்பமாகத் தொழுவார் இன்பத்தோடு கூடி வாழ்பவராவர்.
1413 | கொள்ளித் தீயெரி வீசிக் கொடியதோர் கள்ளிக் காட்டிடை யாடுவர் காண்மினோ தௌளித் தேறித் தௌந்துநெய்த் தானனை உள்ளத் தால்தொழு வாரும்பர் வாணரே. |
5.034.7 |
தீக்கொள்ளியினின்று எரிவீசிக் கொடிதாகிய கள்ளிக்காட்டில் ஆடும் இயல்பினர் காண்பீராக; தௌவு அடைந்து தேறிப் பின்னும் தௌந்து அத்திருநெய்த்தானரை உள்ளத்தால் தொழுவார் தேவர்களோடு ஒத்த பேரின்பம் பொருந்தி வாழ்பவராவர்.
1414 | உச்சி மேல்விளங் கும்மிள வெண்பிறை பற்றி யாடர வோடுஞ்ச டைப்பெய்தான் நெற்றி யாரழல் கண்டநெய்த் தானனைச் சுற்ற மெய்தொழு வார்சுடர் வாணரே. |
5.034.8 |
சென்னியில் உச்சியின்மேல் விளங்கும் இள வெண்பிறையும் பற்றியாட்டற்குரிய பாம்பும் சடையின்கண் வைத்தவனும், நெற்றிக்கண்ணனுமாகிய திருநெய்த்தானனைச் சுற்றி வந்து மெய்யால் தொழுவார் ஒளி பொருந்தி வாழ்பவராவர்.
1415 | மாலொ டும்மறை யோதிய நான்முகன் காலொ டும்முடி காண்பரி தாயினான் சேலொ டுஞ்செருச் செய்யுநெய்த் தானனை மாலொ டுந்தொழு வார்வினை வாடுமே. |
5.034.9 |
திருமாலோடும் வேதங்களை ஓதிய பிரமனும் திருவடியும் திருமுடியும் காண்டற்கரியனாயினானும். சேல்மீன்கள் தம்மிற்பொரும் திருநெய்த்தானத்தில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய பெருமானை அன்புமயக்கத்தால் தொழுவார்களின் வினைகள் வாடிக்கெடும்.
1416 | வலிந்த தோள்வலி வாளரக் கன்றனை நெருங்க நீள்வரை யூன்றுநெய்த் தானனார் புரிந்து கைந்நரம் போடிசை பாடலும் பரிந்த னைப்பணி வார்வினை பாறுமே. |
5.034.10 |
வலிமை பெற்ற தோளாற்றல் உடைய இராவணனை நீண்டவரை நெருங்கும்படித் திருவிரலையூன்றிய திருநெய்த்தானனாரை விரும்பி கைநரம்புகளோடு இசையினால் அவன் பாடுதலும் அதற்கு விரும்பிய பெருமானைப் பணிவார்களின் வினைகள் கெடும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 32 | 33 | 34 | 35 | 36 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருநெய்த்தானம் - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - வாழ்பவராவர், தொழுவார், பெருமானை, வார்சுடர், தொழுவார்கள், யானநெய்த், தானனைத், திருச்சிற்றம்பலம், காண்பீராக, ஆடுபவரும், திருமுறை, தேவர்களும், வினைகள், வார்வினை, பொருந்தி, விரும்பி, நள்ளிருளில், காண்மினோ, பகைவர், வீற்றிருப்பவனும், தானனைச், மெய்தொழு, மூன்றையும், நிலைபெற்றிருக்கும், வெண்தலை, ஒளியோடு, திருநெய்த்தானம், சொல்லி