முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.018.திருக்கடம்பந்துறை
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.018.திருக்கடம்பந்துறை
5.018.திருக்கடம்பந்துறை
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
1244 | முற்றிலாமுலை யாளிவ ளாகிலும் அற்றந் தீர்க்கு மறிவில ளாகிலும் கற்றைச் செஞ்சடை யான்கடம் பந்துறைப் பெற்றம் ஊர்தியென் றாளெங்கள் பேதையே. |
5.018.1 |
எங்கள் பேதையாகிய இவள் முற்றாத இளமுலை உடையாள் ஆயினும், அற்றந் தீர்க்கும் அறிவில்லாதவள் ஆயினும், கற்றைச் செஞ்சடையானாகிய கடம்பந்துறைப் பெருமான் இவர்ந்து வரும் ஊர்தி இடபம் என்று கூறுகின்றாள். (செவிலி கூற்று).
1245 | தனகி ருந்ததொர் தன்மைய ராகிலும் முனகு தீரத் தொழுதெழு மின்களோ கனகப் புன்சடை யான்கடம் பந்துறை நினைய வல்லவர் நீள்விசும் பாள்வரே. |
5.018.2 |
நீங்கள் உள்ளக்களிப்பு மிக்கு உடையீராயினும். நுமது இழிவு நீங்குதற்கு முதல்வனைத் தொழுமின்கள்; கனகப் பொன்சடையான் வீற்றிருக்கும் கடம்பந்துறையை நினையும் வல்லமை பெற்றவர் விசும்பு ஆள்வர் ஆதலால்.
1246 | ஆரி யந்தமி ழோடிசை யானவன் கூரி யகுணத் தார்குறி நின்றவன் காரி கையுடை யான்கடம் பந்துறைச் சீரி யல்பத்தர் சென்றடை மின்களே. |
5.018.3 |
பெருமை மிக்க நல்லியல்புகள் பொருந்திய அன்பர்களே! ஆரியமும், தமிழும், இசையும் ஆனவனும் மிக்க குணத்தார் குறியாக நின்றவனும் ஒருபாற் பார்வதிதேவியாரை உடையவனுமாகிய பெருமான் வீற்றிருக்கும் கடம்பந்துறை சென்றடைவீர்களாக.
1247 | பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை வண்ண நன்மல ரான்பல தேவரும் கண்ண னும்மறி யான்கடம் பந்துறை நண்ண நம்வினை யாயின நாசமே. |
5.018.4 |
பண்ணின் இன்மொழி கேட்கும் விருப்புடைய பரமனும், நான்முகனும், தேவர்களும், திருமாலும், அறியப்படாதவனுமாகிய பெருமான் வீற்றிருக்கும் கடம்பந்துறையை நண்ணினால், நம்வினைகளாயவை நாசமாம்.
1248 | மறைகொண் டம்மனத் தானை மனத்துளே நிறைகொண் டந்நெஞ்சி னுள்ளுற வைம்மினோ கறைகண் டன்னுறை யுங்கடம் பந்துறை சிறைகொண் டவ்வினை தீரத் தொழுமினே. |
5.018.5 |
உபதேசப் பொருளைக் கொண்ட மனத்தே விளங்கித் தோன்றும் முதல்வனை ஒரு நெறிப்பட்ட நெஞ்சின் உள்ளூற வைப்பீர்களாக; திருநீலகண்டன் உறையும் கடம்பந்துறையை நுமது அறிவைக் கட்டுப்படுத்தும் இருவினை தீரத் தொழுவீர்களாக.
1249 | நங்கை பாகம்வைத் தந்நறுஞ் சோதியைப் பங்க மின்றிப் பணிந்தெழு மின்களோ கங்கைச் செஞ்சடை யான்கடம் பந்துறை அங்க மோதி யரனுறை கின்றதே. |
5.018.6 |
கங்கையைச் செஞ்சடையில் வைத்த பெருமானும் ஆறங்கங்களை ஓதியோரும் ஆகிய இறைவர் உறைகின்றது கடம்பந்துறையாதலால் நங்கையை ஒருபாகம் வைத்த அந்த ஒளியுருவை அவ்விடத்துக் கேடின்றிப் பணிந்தெழுவீர்களாக.
1250 | அரிய நான்மறை யாறங்க மாயைந்து புரியன்தேவர்க ளேத்தநஞ் சுண்டவன் கரிய கண்டத்தி னான்கடம் பந்துறை உரிய வாறு நினைமட நெஞ்சமே. |
5.018.7 |
அறியாமை உடைய நெஞ்சமே! அரிய நான் மறைகளாய் உள்ளவனும், அன்னமயகோசம் முதலிய ஐங்கோசங்களாகப் பேசப்பட்டவனும், தேவர்கள் வேண்ட நஞ்சுண்டவனும், அதனாற்கறுத்த கண்டத்தினானுமாகிய பெருமான் உறைகின்ற கடம்பந்துறையை விதிமுறைப்படி நினைப்பாயாக.
1251 | பூமென் கோதை யுமையொரு பாகனை ஓமஞ் செய்தும் உணர்மின்க ளுள்ளத்தால் காமற் காய்ந்த பிரான்கடம் பந்துறை நாம மேத்தநம் தீவினை நாசமே. |
5.018.8 |
பூவணிந்த மென்கோதை உடையவளாகிய உமையை ஒருபாகத்தில் உடையவனை வேள்விகள் செய்தும், உள்ளத்தால் உணர்வீர்களாக! மன்மதனைச் சினந்த பெருமான் உறையும் கடம்பந்துறையில் அத்திருநாமம் ஏத்த நம் தீவினைகள் நாசமாம்.
1252 | பார ணங்கி வணங்கிப் பணிசெய நார ணன்பிர மன்னறி யாததோர் கார ணன்கடம் பந்துறை மேவிய ஆர ணங்கொரு பாலுடை மைந்தனே. |
5.018.9 |
திருமாலும் பிரமனும் உலகில் விரும்பி வணங்கிப் பணிசெய்ய அறியாது தேடி இளைத்தற்குக் காரணனாக இருந்தவன் கடம்பந்துறை மேவியவனும், ஆரணங்கை ஒருபால் உடையவனுமாகிய புலன்களைந்தும் வென்ற பெரு வீரனாகிய இறைவனே.
1253 | நூலால் நன்றா நினைமின்கள் நோய்கெடப் பாலா னைந்துட னாடும் பரமனார் காலா லூன்றுகந் தான்கடம் பந்துறை மேலா னாஞ்செய்த வல்வினை வீடுமே. |
5.018.10 |
பாலோடு கூடிய ஆனைந்தும் ஆடும் பரமனும், அரக்கனைக் காலால் ஊன்றி உகந்த பெருமானும் ஆகிய இறைவனைக் கடம்பந்துறையிற் சென்று வழிபட்டால், நாம் செய்த மேலை வல்வினைகள் கெடும். ஆதலால், துன்பங்கெடும் படியாக நூல் அறிவால் நன்றாக நினைத்து வழிபடுவீர்களாக. (நூல் அறிவு - சிவாகம உணர்வு.)
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 16 | 17 | 18 | 19 | 20 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கடம்பந்துறை - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - பந்துறை, பெருமான், யான்கடம், கடம்பந்துறையை, வீற்றிருக்கும், திருமாலும், பரமனும், கேட்கும், இன்மொழி, நாசமாம், உறையும், வணங்கிப், செய்தும், நெஞ்சமே, பெருமானும், பண்ணின், உடையவனுமாகிய, ஆயினும், ளாகிலும், செஞ்சடை, கற்றைச், திருச்சிற்றம்பலம், மின்களோ, அற்றந், ஆதலால், திருக்கடம்பந்துறை, திருமுறை, கடம்பந்துறை