முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.095.திருஇன்னம்பர்
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.095.திருஇன்னம்பர்
3.095.திருஇன்னம்பர்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - எழுத்தறிந்தவீசுவரர்.
தேவியார் - கொந்தார்பூங்குழலம்மை.
3820 | எண்டிசைக்
கும்புகழி ன்னம்பர் மேவிய வண்டிசைக் குஞ்சடை யீரே வண்டிசைக் குஞ்சடை யீருமை வாழ்த்துவார் தொண்டிசைக் குந்தொழி லோரே |
3.095.1 |
எட்டுத் திசைகளிலும் புகழ்பரப்பும் திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, வண்டு இசைக்கும் மலர்மாலை அணிந்த சடையுடைய சிவபெருமானே! வண்டிசைக்கும் மலர்மாலை அணிந்துள்ள சடையுடைய உம்மை வாழ்த்தும் அடியவர்கள் தொண்டு நெறியில் சிறப்புடன் நின்று மேம்படுவரே.
3821 | யாழ்நரம்
பின்னிசை யின்னம்பர் மேவிய தாழ்தரு சடைமுடி யீரே தாழ்தரு சடைமுடி யீருமைச் சார்பவர் ஆழ்துய ரருவினை யிலரே |
3.095.2 |
யாழின் இனிய இசையை உடைய திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற நீண்ட தாழ்ந்த சடைமுடியுடைய சிவபெருமானே! நீண்டு தாழ்ந்த சடைமுடியுடைய உம்மைச் சார்ந்து பக்தியுடன் வழிபடுபவர்கள் பெருந்துன்பத்திலிருந்தும், அதற்குக் காரணமான அரிய வினையிலிருந்தும் நீங்கியவராவர்.
3822 | இளமதி
நுதலியொ டின்னம்பர் மேவிய வளமதி வளர்சடை யீரே வளமதி வளர்சடை யீருமே வாழ்த்துவார் உளமதி மிகவுடை யோரே |
3.095.3 |
பிறைச்சந்திரனைப் போன்ற நெற்றியையுடைய உமாதேவியோடு திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, குளிர்ச்சிபொருந்திய சந்திரனை அணிந்த நீண்ட சடையுடைய சிவபெருமானே! குளிர்ச்சி பொருந்திய சந்திரனை அணிந்த நீண்ட சடையுடைய உம்மை வாயால் வாழ்த்தி வழிபடுவோர் பேரறிவுடையவராவர்.
3823 | இடிகுர
லிசைமுர லின்னம்பர் மேவிய கடிகமழ் சடைமுடி யீரே கடிகமழ் சடைமுடி யீரும கழறொழும் அடியவ ரருவினை யிலரே |
3.095.4 |
இடிக்குரல் போன்று ஒலிக்கும் முரசு, முழவு போன்ற வாத்தியங்கள் ஒலிக்க, திரு இன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, நறுமணம் கமழும் சடைமுடி உடைய சிவபெருமானே! நறுமணம் கமழும் சடை முடியுடைய உம் திருவடிகளைத் தொழும் அடியவர்கள் வினைநீக்கம் பெற்றவராவர்.
3824 | இமையவர்
தொழுதெழு மின்னம்பர் மேவிய உமையொரு கூறுடை யீரே. உமையொரு கூறுடை யீருமை யுள்குவார் அமைகில ராகில ரன்பே |
3.095.5 |
உமையைத் திருமேனியின் ஓர் பாகத்திற் கொண்டவரே, தேவர்கள் தொழுது போற்றும் திரு இன்னம்பரில் எழுந்தருள்பவரே, உமை பாகராகிய உம்மை உள்ளத்தால் நினைந்து ஏத்துபவர் அன்பு அமையப் பெறாதவர் ஆகார்.
3825 | எண்ணரும்
புகழுடை யின்னம்பர் மேவிய தண்ணருஞ் சடைமுடி யீரே தண்ணருஞ் சடைமுடி யீருமைச் சார்பவர் விண்ணவ ரடைவுடை யோரே |
3.095.6 |
நினைத்தற்கரிய அளவில்லாத பெரும்புகழையுடைய திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற, குளிர்ந்த சடைமுடியுடைய சிவபெருமானே! குளிர்ந்த சடைமுடியுடைய உம்மைச் சார்ந்து வழிபடுபவர்கள் தேவர்களுக்குரிய சிறப்பினை அடைவர்.
3826 | எழிறிக
ழும்பொழி லின்னம்பர் மேவிய நிழறிகழ் மேனியி னீரே நிழறிகழ் மேனியி னீருமை நினைபவர் குழறிய கொடுவினை யிலரே |
3.095.7 |
அழகுடன் விளங்கும் சோலைகள் சூழ்ந்த திரு இன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, ஒளி விளங்கும் திருமேனியுடைய சிவபெருமானே! ஒளி விளங்கும் திருமேனியுடைய உம்மை நினைப்பவர்களுடைய, வாட்டும் குழம்பிய கொடுவினை கெட்டழியும்.
3827 | ஏத்தரும்
புகழணி யின்னம்பர் மேவிய தூர்த்தனைத் தொலைவுசெய் தீரே தூர்த்தனைத் தொலைவுசெய் தீருமைத் தொழுபவர் கூர்த்தநற் குணமுடை யோரே |
3.095.8 |
போற்றுதற்கு அரிய புகழுடைய அழகிய திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விருமபி வீற்றிருந்தருளுபவரும், தூர்த்தனான இராவணனை அடர்த்தவருமான சிவபெருமானே! தூர்த்தனான இராவணனை அடர்த்த உம்மைத் தொழுபவர் பேரறிவும், நற்குணம் உடையவராவர்.
3828 | இயலுளோர்
தொழுதெழு மின்னம்பர் மேவிய அயனுமா லறிவரி யீரே அயனுமா லறிவரி யீரும தடிதொழும் இயலுளார் மறுபிறப் பிலரே |
3.095.9 |
நல்லியல்புடையோர் தொழுது எழுகின்ற திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் சிவபெருமானே! பிரமனும், திருமாலும் அறிவதற்கரிய உம் திருவடிகளைத் தொழும் இயல்பு உடையவர்கட்கு மறுபிறப்பு இல்லை.
3829 | ஏரமர்
பொழிலணி யின்னம்பர் மேவிய தேரமண் சிதைவுசெய் தீரே தேரமண் சிதைவுசெய் தீருமைச் சேர்பவர் ஆர்துய ரருவினை யிலரே |
3.095.10 |
ஏர் எனப்படும் திருத்தலத்திற்கு அருகிலுள்ள சோலைகள் சூழ்ந்த அழகிய திரு இன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவராய், சமண, புத்த நெறிகளிலுள்ள குறைகளைக் காட்டித் தாழ்ச்சியுறச் செய்த சிவபெருமானே! சமண, புத்த நெறிகள் தாழ்வடையும்படி செய்த உம் திருவடிகளைப் போற்றி வணங்குபவர்கட்குத் துன்பமும், அதற்குக் காரணமான தீவினையும் இல்லை.
3830 | ஏடமர்
பொழிலணி யின்னம்பர் ரீசனை நாடமர் ஞானசம் பந்தன் நாடமர் ஞானசம் பந்தன நற்றமிழ் பாடவல் லார்பழி யிலரே |
3.095.11 |
இதழ்களையுடைய மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த அழகிய திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானைப் போற்றி, தேசமெல்லாம் விரும்புகின்ற ஞானசம்பந்தன் அருளிய நற்றமிழாலன இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் பழியற்றவர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 93 | 94 | 95 | 96 | 97 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருஇன்னம்பர் - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருத்தலத்தில், என்னும், சிவபெருமானே, திருஇன்னம்பர், விரும்பி, வீற்றிருந்தருளுகின்ற, சடைமுடி, யின்னம்பர், சடையுடைய, சடைமுடியுடைய, ரருவினை, சோலைகள், சூழ்ந்த, விளங்கும், அணிந்த, இன்னம்பர், தொழுது, கூறுடை, உமையொரு, தண்ணருஞ், கொடுவினை, திருமேனியுடைய, மேனியி, நிழறிகழ், குளிர்ந்த, தூர்த்தனான, சிதைவுசெய், தேரமண், போற்றி, நாடமர், ஞானசம், பொழிலணி, லறிவரி, தொழுபவர், தொலைவுசெய், மின்னம்பர், இராவணனை, அயனுமா, தூர்த்தனைத், கடிகமழ், அடியவர்கள், மலர்மாலை, தாழ்தரு, யீருமைச், சார்பவர், வாழ்த்துவார், யீருமை, திருமுறை, திருச்சிற்றம்பலம், வண்டிசைக், குஞ்சடை, தாழ்ந்த, உம்மைச், நறுமணம், லின்னம்பர், கமழும், திருவடிகளைத், தொழும், சந்திரனை, வளர்சடை, சார்ந்து, வழிபடுபவர்கள், அதற்குக், காரணமான, தொழுதெழு