முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.047.திருஆலவாய்
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.047.திருஆலவாய்
3.047.திருஆலவாய்
பண் - கௌசிகம்
திருச்சிற்றம்பலம்
பண் - கௌசிகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே மதுரை.
சுவாமிபெயர் - சொக்கநாதசுவாமி.
தேவியார் - மீனாட்சியம்மை.
3298 | காட்டு மாவ துரித்துரி போர்த்துடல் நாட்ட மூன்றுடை யாயுரை செய்வனான் வேட்டு வேள்விசெய் யாஅமண் கையரை ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே |
3.047.1 |
காட்டிலுள்ள யானையின் தோலை உரித்துப் போர்த்திய இறைவனே! மூன்று கண்ணுடைய பெருமானே! நல்வேள்வியைப் புரியாதவர்களாகிய சமணர்களுடன் நான் வாதம் செய்து அவரை விரட்டுவதற்குத் திருவுளக்குறிப்பு யாது? உரை செய்வாயாக!
3299 | மத்த யானையின் ஈருரி மூடிய அத்த னேயணி ஆலவா யாய்பணி பொய்த்த வன்தவ வேடத்த ராஞ்சமண் சித்த ரையழிக் கத்திரு வுள்ளமே |
3.047.2 |
மதம் பொருந்திய யானையின் தோலை உரித்துப் போர்த்திய அத்தனே! அழகிய ஆலவாயில் விளங்கும் நாதனே! பொய்த்தவ வேடம் கொண்ட சமணரிடம் வாது செய்து அழிப்பதற்குத் திருவுள்ளம் யாதோ? உரைப்பாயாக.
3300 | மண்ண கத்திலும் வானிலு மெங்குமாம் திண்ண கத்திரு வாலவா யாயருள் பெண்ண கத்தெழிற் சாக்கியப் பேயமண் தெண்ணர் கற்பழிக் கத்திரு வுள்ளமே |
3.047.3 |
இப் பூவிலகத்திலும், விண்ணுலகத்திலும் மற்றும் எல்லா இடங்களிலும் உறுதியாய் விளங்கும் ஆலவாயில் வீற்றிருக்கின்ற இறைவனே! பௌத்தர்களும் சமணர்களும் வாதம் புரியும் தன்மையில் அவர்தம் கல்வியைத் தகுதியற்றதாக அழிதல் செய்வதற்குத் திருவுள்ளம் யாது! உரைத்தருள்வாயாக.
3301 | ஓதி யோத்திறி யாவம ணாதரை வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே ஆதி யேதிரு வாலவா யண்ணலே நீதி யாக நினைந்தருள் செய்திடே |
3.047.4 |
வேதங்களை ஓதி உணரும் ஞானம் அற்றவராகிய சமணர்களை வாதில் வெற்றி கொள்ளத் திருவுள்ளம் யாது? ஆதி மூர்த்தியாய்த் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அண்ணலே! நடுநிலையிலிருந்து அருள் செய்வாயாக!
3302 | வைய மார்புக ழாயடி யார்தொழும் செய்கை யார்திரு வாலவா யாய்செப்பாய் கையி லுண்டுழ லுமமண் கையரைப் பைய வாது செயத்திரு வுள்ளமே |
3.047.5 |
உலகெங்கும் பரவிய புகழை உடையவனே! அடியவர்கள் தொழுது போற்றும் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் இறைவனே! கையில் உணவு வாங்கி உண்டு திரியும் அமணராகிய கீழ்மக்களுடன் மெதுவாக நான் வாதம் புரிவதற்குத் திருவுள்ளம் யாது? உரைத்தருள்வாயாக!
3303 | நாறு சேர்வயற் றண்டலை மிண்டிய தேற லார்திரு வாலவா யாய்செப்பாய் வீறி லாத்தவ மோட்டமண் வேடரைச் சீறி வாதுசெ யத்திரு உள்ளமே |
3.047.6 |
நாற்றுக்கள் நடப்பட்ட வயல்களிலும், சோலைகளிலும் பெருக்கெடுத்து வழியும் தேன் நிறைந்த திருவாலவாயில் வீற்றிருந்தருளும் சிவபெருமானே! பெருமையில்லாத தவத்தைப் புரியும் முரடர்களாகிய சமணர்களைச் சினந்து வாது செய்ய உன்னுடைய திருவுள்ளம் யாது? சொல்லியருள்வாயாக!
3304 | பண்ட டித்தவத் தார்பயில் வாற்றொழும் தொண்ட ருக்கௌ யாய்திரு வாலவாய் அண்ட னேயமண் கையரை வாதினில் செண்ட டித்துள றத்திரு வுள்ளமே |
3.047.7 |
தொன்றுதொட்டுப் பலகாலும் பழகிய திறத்தால் உம்முடைய திருவடிகளையே வணங்கி வருகின்ற தொண்டர்களுக்கு எளியவரே! திருவாலவாயில் வீற்றிருந்தருளுபவரே! அண்டப் பொருளாக விளங்கும் பெருமையுடையவரே! சமணர்களை வாதில் வளைத்து அடித்து அழிக்க எண்ணுகிறேன். உமது திருவுளம் யாது?
3305 | அரக்கன் தான்கிரி யேற்றவன் றன்முடிச் செருக்கி னைத்தவிர்த் தாய்திரு வாலவாய்ப் பரக்கு மாண்புடை யாயமண் பாவரைக் கரக்க வாதுசெ யத்திரு வுள்ளமே |
3.047.8 |
கயிலைமலையைப் பெயர்த்தவனாகிய இராவணனின் முடிகளை நெரித்து, அவனது செருக்கினை அழித்தவரே! திருவாலவாயில் வீற்றிருந்தருளும் சிவபெருமானே! எங்கும் பரவிய புகழை உடையவரே! இறைவனை நினைந்து வழிபடும் பேறு பெறாதவர்களான சமணர்களை அடக்குவதற்கு அவர்களுடன் அடியேன் வாது செய்யத் தங்கள் திருவுள்ளம் யாது?
3306 | மாலும் நான்முக னும்மறி யாநெறி ஆல வாயுறை யும்மண்ண லேபணி மேலை வீடுண ராவெற்ற ரையரைச் சால வாதுசெ யத்திரு யுள்ளமே |
3.047.9 |
திருமாலும், பிரமனும் அறியாத தன்மையராய்த் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் தலைவரான சிவபெருமானே! இறைவனுக்குத் தொண்டு செய்து உயர்ந்த வீட்டுநெறியினை அடைவதற்குரிய வழியை உணராது ஆடையின்றித் திரியும் சமணர்களோடு மிகவும் வாது செய்யத் தங்கள் திருவுள்ளம் யாது?
3307 | கழிக்க ரைப்படு மீன்கவர் வாரமண் அழிப்ப ரையழிக் கத்திரு வுள்ளமே தெழிக்கும் பூம்புனல் சூழ்திரு வாலவாய் மழுப்ப டையுடை மைந்தனே நல்கிடே |
3.047.10 |
நீர்நிலைகளிலுள்ள மீன்களைக் கவர்ந்து உண்ணும் புத்தர்களையும், நன்மார்க்கங்களை அழித்த வரும் சமணர்களையும் அடக்க எண்ணுகிறேன். ஒலிக்கும் அழகிய ஆறு சூழ்ந்த திருவாலவாயில் வீற்றிருந்தருளும் இறைவரே! மழுப்படையை உடைய மைந்தரே! உமது திருவுள்ளம் யாது?
3308 | செந்தெ னாமுர லுந்திரு வாலவாய் மைந்த னேயென்று வல்லம ணாசறச் சந்த மார்தமிழ் கேட்டமெய்ஞ் ஞானசம் பந்தன் சொற்பக ரும்பழி நீங்கவே |
3.047.11 |
வண்டுகள் முரலும் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் மைந்தனே என்று விளித்து வலிய அமணர்களின் நெறிகளிலுள்ள குற்றங்கள் நீங்கச் சந்தமுடைய தழிழால் இறைவன் திருவுள்ளம் யாது எனக் கேட்ட மெய்ஞ்ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தைப் பழிநீங்க ஓதுவீர்களாக!
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 45 | 46 | 47 | 48 | 49 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருஆலவாய் - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருவுள்ளம், வுள்ளமே, வீற்றிருந்தருளும், கத்திரு, திருஆலவாயில், திருவாலவாயில், யத்திரு, வாதுசெ, வாலவாய், வாதில், சமணர்களை, சிவபெருமானே, விளங்கும், செய்து, யானையின், இறைவனே, திருச்சிற்றம்பலம், திருமுறை, எண்ணுகிறேன், மைந்தனே, தங்கள், செய்யத், திரியும், உரித்துப், செய்வாயாக, திருஆலவாய், ஆலவாயில், புரியும், உரைத்தருள்வாயாக, ரையழிக், போர்த்திய, யாய்செப்பாய்