முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.036.திருக்காளத்தி
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.036.திருக்காளத்தி
3.036.திருக்காளத்தி
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காளத்திநாதர்.
தேவியார் - ஞானப்பூங்கோதையாரம்மை.
3181 | சந்தமா ரகிலொடு சாதிதேக் கம்மரம் உந்துமா முகலியின் கரையினி லுமையொடும் மந்தமார் பொழில்வளர் மல்குவண் காளத்தி எந்தையா ரிணையடி யென்மனத் துள்ளவே |
3.036.1 |
சந்தனம், அகில், சாதிக்காய், தேக்கு ஆகிய மரங்களை அலைகளால் உந்தித் தள்ளிவரும் சிறப்பான பொன்முகலி என்னும் ஆற்றின் கரையில், தென்றல் காற்றும் வீசும் சோலைகள் வளர்ந்து பெருக, வள்ளல் தன்மையுடைய எம் தந்தையாகிய காளத்திநாதர் உமாதேவியோடு, அவருடைய திருவடிகள் எம் மனத்தில் பதியுமாறு வீற்றிருந்தருளுகின்றார்.
3182 | ஆலமா மரவமோ டமைந்தசீர்ச் சந்தனம் சாலமா பீலியுஞ் சண்பக முந்தியே காலமார் முகலிவந் தணைதரு காளத்தி நீலமார் கண்டனை நினையுமா நினைவதே |
3.036.2 |
ஆல், மா, குங்கும மரம், சந்தனம் ஆகிய மரங்களும், மிகுதியான மயிற்பீலியும், சண்பகமும் அலைகளால் தள்ளப்பட்டுப் பருவக்காலங்களில் நிறைகின்ற பொன்முகலி என்னும் ஆற்றின் கரையில் அமைந்துள்ள திருக்காளத்தி என்னும் திருத்தளத்தில் வீற்றிருந்தருளும் நீலகண்டனான இறைவனை எவ்வகையில் நினைந்து வழிபடுதல் பொருந்துமோ அத்தன்மையில் நினைந்து வழிபடுதல் நம் கடமையாகும்.
3183 | கோங்கமே குரவமே கொன்றையம் பாதிரி மூங்கில்வந் தணைதரு முகலியின் கரையினில் ஆங்கமர் காளத்தி யடிகளை யடிதொழ வீங்குவெந் துயர்கெடும் வீடௌ தாகுமே |
3.036.3 |
கோங்கு, குரவம், கொன்றை, பாதிரி, மூங்கில் ஆகிய மரங்களைத் தள்ளிக் கொண்டுவரும் பொன்முகலி ஆற்றின் கரையில் வீற்றிருக்கும் காளத்திநாதரின் திருவடிகளைத் தொழுது போற்ற, பெருகிவரும் கொடிய துன்பம் கெடும். முத்திப்பேறு எளிதாகக் கைகூடும்.
3184 | கரும்புதேன் கட்டியுங் கதலியின் கனிகளும் அரும்புநீர் முகலியின் கரையினி லணிமதி ஒருங்குவார் சடையினன் காளத்தி யொருவனை விரும்புவா ரவர்கடாம் விண்ணுல காள்வரே |
3.036.4 |
கரும்பு, தேன் கட்டி, வாழைக்கனி ஆகியவற்றை விளைவிக்கும் நீர்வளமுடைய பொன்முகலி ஆற்றின் கரையில், அழகிய பிறைச்சந்திரனை நீண்ட சடையில் சூடி வீற்றிருந்தருளும் ஒப்பற்ற காளத்திநாதரை விரும்பிப் பணிபவர்கள் விண்ணுலகை ஆள்வார்கள்.
3185 | வரைதரு மகிலொடு மாமுத்த முந்திய திரைதரு முகலியின் கரையினிற் றேமலர் விரைதரு சடைமுடிக் காளத்தி விண்ணவன் நிரைதரு கழலிணை நித்தலும் நினைமினே |
3.036.5 |
மலையில் வளரும் அகிலும் முத்துக்களும் அலைகளால் தள்ளப்பட்டு வரும் பொன்முகலி ஆற்றின் கரையில், தேன் துளிக்கின்ற நறுமண மலர்களைச் சடைமுடியில் அணிந்து விளங்கும், காளத்தியிலுள்ள தேவாதி தேவனாகிய சிவபெருமானின் ஒலிக்கின்ற வீரக்கழல்களை அணிந்த திருவடிகளைத் தினந்தோறும் நினைந்து போற்றி வழிபடுவீர்களாக.
3186 | முத்துமா மணிகளு முழுமலர்த் திரள்களும் எத்துமா முகலியின் கரையினி லெழில்பெறக் கத்திட வரக்கனைக் கால்விர லூன்றிய அத்தன்றன் காளத்தி அணைவது கருமமே |
3.036.8 |
இராவணன் கயிலைமலையின் கீழ் நெரியும்படி தன் காற்பெருவிரலை ஊன்றிய சிவபெருமான், முத்துக்களும், மணிகளும், மலர்க்கொத்துக்களும் அலைகளால் தள்ளப்பட்டு வரும் பொன்முகலி ஆற்றின் கரையில் அமைந்துள்ள அழகிய திருக்காளத்தி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான். அத்திருத்தலத்தை அடைந்து அப்பெருமானை வணங்குதல் நம் கடமையாகும்.
3187 | மண்ணுமா வேங்கையும் மருதுகள் பீழ்ந்துந்தி நண்ணுமா முகலியின் கரையினி னன்மைசேர் வண்ணமா மலரவன் மாலவன் காண்கிலா அண்ணலார் காளத்தி யாங்கணைந் துய்ம்மினே |
3.036.9 |
வேங்கை, மருது ஆகிய மரங்கள் வேருடன் வீழ்த்தப்பட்டுச் சேற்று மண்ணுடன் கலந்து தள்ளப்பட்டு வரும் பொன்முகலியாற்றின் கரையில், அழகிய தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் காண்பதற்கு அரியவனும், எவ்வுயிர்கட்கும் நன்மையே செய்கின்றவனுமான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அத்திருத்தலத்தை அடைந்து வணங்கிப் போற்றி உய்தி பெறுங்கள்.
3188 | வீங்கிய வுடலினர் விரிதரு துவருடைப் பாங்கிலார் சொலைவிடும் பரனடி பணியுமின் ஓங்குவண் காளத்தி யுள்ளமோ டுணர்தர வாங்கிடும் வினைகளை வானவர்க் கொருவனே |
3.036.10 |
பருத்த உடலுடைய சமணர்களும், புத்தர்களும் இறையுண்மையை உணராது கூறும் சொற்களைக் கை விடுக. இறைவனுடைய திருவடிகளை வணங்கிப் போற்றுங்கள். வளமுடன் ஓங்கும் வள்ளலாகிய திருக்காளத்திநாதனை உள்ளத்தால் உணர்ந்து மனம் ஒன்றி வழிபட்டால் தேவர்களுக்கெல்லாம் தலைவனான அச்சிவபெருமான், வழிபடும் உயிர்களின் வினைகளைத் தீர்த்து நன்மை செய்வான்.
3189 | அட்டமா சித்திகள் அணைதரு காளத்தி வட்டவார் சடையனை வயலணி காழியான் சிட்டநான் மறைவல ஞானசம் பந்தன்சொல் இட்டமாப் பாடுவார்க் கில்லையாம் பாவமே |
3.036.11 |
அட்டமா சித்திகளைத் தரும் திருக்காளத்தியில் வீற்றிருந்தருளும் நீண்ட சடைமுடியுடைய சிவபெருமானைப் போற்றி, வயல் வளமிக்க அழகிய சீகாழியில் அவதரித்த நான்கு வேதங்களையும் நன்கு கற்றுவல்ல ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை விரும்பி ஓதவல்லவர்கட்குப் பாவம் இல்லை.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 34 | 35 | 36 | 37 | 38 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்காளத்தி - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - காளத்தி, கரையில், முகலியின், பொன்முகலி, ஆற்றின், என்னும், அலைகளால், கரையினி, திருக்காளத்தி, போற்றி, நினைந்து, தள்ளப்பட்டு, வீற்றிருந்தருளும், சந்தனம், வீற்றிருந்தருளுகின்றான், சிவபெருமான், அத்திருத்தலத்தை, திருமுறை, அடைந்து, அட்டமா, வணங்கிப், திருச்சிற்றம்பலம், திருவடிகளைத், வழிபடுதல், காளத்திநாதர், அமைந்துள்ள, கடமையாகும், பாதிரி, தணைதரு, வீற்றிருக்கும், முத்துக்களும்