முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.019.திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில்
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.019.திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில்
3.019.திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில்
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரிநாதேசுவரர்.
தேவியார் - பூங்குழனாயகியம்மை.
2998 | எரிதர
அனல்கையில் ஏந்தி யெல்லியில் நரிதிரி கானிடை நட்டம் ஆடுவர் அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க் குரிசில்செங் கண்ணவன் கோயில் சேர்வரே |
3.019.1 |
இறைவர் எரிகின்ற நெருப்பைக் கையில் ஏந்தி நள்ளிருளில், நரிகள் திரிகின்ற மயானத்தில் திருநடனம் புரிகின்றார். அப்பெருமானார் அரிசில் ஆறு பாய்வதால் நீர்வளமிக்க அம்பர் மாநகரில் பெருமையிற் சிறந்த, சிவந்த கண்களையுடைய கோச்செங்கட் சோழன் கட்டிய கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார்.
2999 | மையகண் மலைமகள் பாக மாயிருள் கையதோர் கனலெரி கனல ஆடுவர் ஐயநன் பொருபுனல் அம்பர்ச் செம்பியர் செய்யகண் ணிறைசெய்த கோயில் சேர்வரே |
3.019.2 |
மைபூசிய கண்ணையுடைய மலைமகளான உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டு, இருளில், இறைவர் கையில் கனன்று எரிகின்ற நெருப்பானது சுவாலை வீச, நடனம் ஆடுவார். அப்பெருமானார் கரையை மோதுகின்ற அரிசிலாற்றினால் நீர் வளமிக்க அழகிய நல்ல அம்பர் மாநகரில் கோச்செங்கட் சோழன் கட்டிய கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார்.
3000 | மறைபுனை பாடலர் சுடர்கை மல்கவோர் பிறைபுனை சடைமுடி பெயர ஆடுவர் அறைபுன னிறைவயல் அம்பர் மாநகர் இறைபுனை யெழில்வளர் இடம தென்பரே |
3.019.3 |
வேதங்களை அருளிப் பாடுகின்ற இறைவர், சுடர்விடு நெருப்பு கையில் விளங்கவும், பிறைச்சந்திரன் சடைமுடியில் அசையவும் ஆடுவார். ஒலிக்கின்ற அரிசிலாற்றினால் நீர் நிறைந்த வயல்களையுடைய அம்பர் மாநகரில், கோச்செங்கட்சோழ மன்னன் எழுப்பிய அழகுமிகு கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார்.
3001 | இரவுமல் கிளமதி சூடி யீடுயர் பரவமல் கருமறை பாடி யாடுவர் அரவமோ டுயர்செம்மல் அம்பர்க் கொம்பலர் மரவமல் கெழினகர் மருவி வாழ்வரே |
3.019.4 |
இரவில் ஒளிரும் இளம்பிறைச் சந்திரனைச் சூடி, தம் பெருமையின் உயர்வைத் துதிப்பதற்குரிய அருமறைகளை இறைவர் பாடி ஆடுவார். பாம்பணிந்து உயர்ந்து விளங்கும் சம்மலாகிய சிவபெருமான், கொம்புகளில் மலர்களையுடைய வெண்கடம்ப மரங்கள் நிறைந்து சோலைகளையுடைய அழகிய அம்பர் மாநகரில் வீற்றிருந்தருளுகின்றார்.
3002 | சங்கணி
குழையினர் சாமம் பாடுவர் வெங்கனல் கனல்தர வீசி யாடுவர் அங்கணி விழவமர் அம்பர் மாநகர்ச் செங்கணல் இறைசெய்த கோயில் சேர்வரே |
3.019.5 |
இறைவர் சங்கினாலாகிய குழை அணிந்த காதினர். சாமவேதத்தைப் பாடுவார். மிகுந்த வெப்பமுடைய நெருப்புச் சுவாலை வீசத் தோள்வீசி ஆடுவார். அழகிய திருவிழாக்கள் நடைபெறும் அம்பர் மாநகரில் கோச்செங்கட்சோழ மன்னன் எழுப்பிய திருக்கோயிலில் அப்பெருமானார் வீற்றிருந்தருளுகின்றார்.
3003 | கழல்வளர்
காலினர் சுடர்கை மல்கவோர் சுழல்வளர் குளிர்புனல் சூடி யாடுவர் அழல்வளர் மறையவர் அம்பர்ப் பைம்பொழில் நிழல்வளர் நெடுநகர் இடம தென்பரே |
3.019.6 |
இறைவர் வீரக்கழல்கள் அணிந்த திருவடிகள் உடையவர். சுடர்விட்டு எரியும் நெருப்பைக் கையில் ஏந்தியுள்ளவர். நீர்ச்சுழிகளையுடைய குளிர்ந்த கங்கையைச் சடையில் சூடி ஆடுவர். அப்பெருமானார், வேள்வித்தீ வளர்க்கும் அந்தணர்கள் வாழ்கின்ற அம்பர் மாநகரில் அழகிய சோலைகளையுடைய நிழல்தரும் பெருந் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார்.
3004 | இகலுறு
சுடரெரி யிலங்க வீசியே பகலிடம் பலிகொளப் பாடி யாடுவர் அகலிட மலிபுகழ் அம்பர் வம்பவிழ் புகலிட நெடுநகர் புகுவர் போலுமே |
3.019.7 |
இறைவர், வலிமைமிக்க சுடர்விட்டு எரியும் நெருப்பை ஏந்தித் தோள்களை வீசிப் பலி ஏற்கும் பொருட்டுப் பாடி ஆடுவர். அப்பெருமானார் அகன்ற இப்பூவுலகெங்கும் பரவிய மிகு புகழையுடைய அம்பர் மாநகரில், தெய்விக மணம் கமழும் திருக்கோயிலைத் தமது இருப்பிடமாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்றார்.
3005 | எரியன
மணிமுடி யிலங்கைக் கோன்தன கரியன தடக்கைகள் அடர்த்த காலினர் அரியவர் வளநகர் அம்பர் இன்பொடு புரியவர் பிரிவிலாப் பூதஞ் சூழவே |
3.019.8 |
சிவபெருமான், நெருப்புப் போன்று ஒளிவீசும் இரத்தினங்கள் பதிக்கப்பட்ட கிரீடம் அணிந்த இலங்கை மன்னனான இராவணனின் கரிய, பருத்த கைகளை அடர்த்த திருவடிகளை யுடையவர். அருந்தவத்தோர் வாழ்கின்ற வளம் பொருந்திய அம்பர் மாநகரில், தம்மைப் பிரிவில்லாத பூதகணங்கள் புடைசூழ இனிதே வீற்றிருந்தருளுகின்றார்.
3006 | வெறிகிளர்
மலர்மிசை யவனும் வெந்தொழிற் பொறிகிள ரவணைப் புல்கு செல்வனும் அறிகில அரியவர் அம்பர்ச் செம்பியர் செறிகழ லிறைசெய்த கோயில் சேர்வரே |
3.019.9 |
நறுமணம் கமழும் தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் பிரமனும், கொல்லும் தன்மையுடைய பாம்பைப் படுக்கையாகக் கொண்டுள்ள செல்வனாகிய திருமாலும், அறிதற்கு அரியரான இறைவர் திரு அம்பர் மாநகரில் கோச்செங்கட்சோழ மன்னன் கட்டிய திருக்கோயிலில் தம் கழலணிந்த திருவடி பொருந்த வீற்றிருந்தருளுகின்றார்.
3007 | வழிதலை
பறிதலை யவர்கள் கட்டிய மொழிதலைப் பயனென மொழியல் வம்மினோ அழிதலை பொருபுனல் அம்பர் மாநகர் உழிதலை யொழிந்துளர் உமையுந் தாமுமே |
3.019.10 |
மழித்த தலையையும், முடி பறித்த தலையையும் உடைய புத்தர்களும், சமணர்களும் கட்டுரையாகக் கூறியவற்றைப் பயனுடையவெனக் கொள்ள வேண்டா. கங்கையைச் சடையிலே தாங்கி, அங்குமிங்கும் சுற்றித் திரிதலை ஒழித்து, அம்பர் மாநகரில் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இறைவனைத் தரிசித்து அருள் பெற வாருங்கள்.
3008 | அழகரை
யடிகளை அம்பர் மேவிய நிழல்திகழ் சடைமுடி நீல கண்டரை உமிழ்திரை யுலகினில் ஓதுவீர் கொண்மின் தமிழ்கெழு விரகினன் தமிழ்செய் மாலையே |
3.019.11 |
அழகரை, அடிகளை, திரு அம்பர் மாநகரில் எழுந்தருளியிருக்கும் ஒளிர்கின்ற சடைமுடியுடைய நீலகண்டரான சிவபெருமானை, அலைவீசுகின்ற கடலுடைய இவ்வுலகினில், முத்தமிழ் விரகனாகிய ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்ப் பாமாலையாகிய திருப்பதிகத்தை ஓதிச் சிவகதி பெறுமின்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில் - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - அம்பர், மாநகரில், வீற்றிருந்தருளுகின்றார், இறைவர், ஆடுவர், அப்பெருமானார், ஆடுவார், கையில், யாடுவர், கட்டிய, கோயில், சேர்வரே, பொருபுனல், அணிந்த, கோயிலில், கோச்செங்கட்சோழ, திருக்கோயிலில், மன்னன், சோலைகளையுடைய, தலையையும், காலினர், சிவபெருமான், சுடர்விட்டு, எழுப்பிய, வாழ்கின்ற, அடர்த்த, கங்கையைச், எரியும், நெடுநகர், கமழும், அரியவர், அரிசிலாற்றினால், கோச்செங்கட், அம்பர்ச், நெருப்பைக், எரிகின்ற, திருமுறை, திருச்சிற்றம்பலம், செம்பியர், கொண்டு, சடைமுடி, மாநகர், மல்கவோர், சுடர்கை, சுவாலை, திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில், தென்பரே