முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.020.திருஅழுந்தூர்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.020.திருஅழுந்தூர்
2.020.திருஅழுந்தூர்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதபுரீசுவரர்.
தேவியார் - சவுந்தராம்பிகையம்மை.
1677 | தொழுமா
றுவல்லார் துயரதீ ரநினைந் தெழுமா றுவல்லார் இசைபா டவிம்மி அழுமா றுவல்லார் அழுந்தை மறையோர் வழிபா டுசெய்மா மடம்மன் னினையே. |
2.020.1 |
தொழும் வகையிலும், பிறவித்துயர் தீர நினைந்தெழும் வகையிலும், பிறர் இசைபாட விம்மி அழும் வகையிலும் வல்லவராய மறையவர் வழிபாடு செய்ய, பெருமானே நீ அழுந்தையில் சிறந்துள்ள மடம் எனப் பெயரிய கோயிலில் எழுந்தருளியுள்ளாய்.
1678 | கடலே
றியநஞ் சமுதுண் டவனே உடலே உயிரே உணர்வே யெழிலே அடலே றுடையாய் அழுந்தை மறையோர் விடலே தொழமா மடமே வினையே. |
2.020. 2 |
கடலின்கண் எழுந்த நஞ்சை அமுதாக உண்டவனே! உடல், உயிர், உணர்வாக இருப்பவனே! அழகனே! வலிமை பொருந்திய ஆனேற்றை உடையவனே! அழுந்தையில் வாழும் மறையவர் தலைவனே! எனத் தொழ, பெருமானே! நீ சிறந்த மடம் எனப் பெயரிய கோயிலில் எழுந்தருளியுள்ளாய்.
1679 | கழிகா
டலனே கனலா டலினாய் பழிபா டிலனே யவையே பயிலும் அழிபா டிலராய் அழுந்தை மறையோர் வழிபா டுசெய்மா மடமன் னினையே. |
2.020. 3 |
பலரும் வெறுக்கும் சுடுகாட்டில் உறைபவனே! கனலில் நின்று ஆடுபவனே! பிறரால் பழிக்கப்படும் இயல்புகள் இல்லாதவனே! எனப்பலவாறு உன்புகழையே பலகாலும் சொல்லும் அழிவுபாடற்ற அந்தணர் வழிபாடு செய்யும் அழுந்தை என்னும் தலத்தில், பெருமானே! நீ எழுந்தருளியுள்ளாய்.
1680 | வானே
மலையே யெனமன் னுயிரே தானே தொழுவார் தொழுதாள் மணியே ஆனே சிவனே அழுந்தை யவரெம் மானே யெனமா மடமன் னினையே. |
2.020. 4 |
அன்பர்கள் வானே! மலையே! என்று கூற மன்னிய உயிரே! தாமே வணங்குவார் வணங்குதற்குரிய திருவடிகளை உடைய மணியே! ஆன் (பசு) வடிவாக விளங்குபவனே! சிவனே! அழுந்தை என்னும் பதியில் வாழும் மறையவர் எம் தலைவனே எனப் போற்றப், பெருமானே! நீ மடம் எனப் பெயரிய கோயிலுள் விளங்குகின்றாய்.
1681 | அலையார் புனல்சூழ் அழுந்தைப் பெருமான் நிலையார் மறியுந் நிறைவெண் மழுவும் இலையார் படையும் மிவையேந் துசெல்வ நிலையா வதுகொள் கெனநீ நினையே. |
2.020.5 |
அலைகள் வீசும் ஆறுகள் சூழ்ந்த அழுந்தைப் பதியில் உறையும் பெருமானை அவன் கையில் ஏந்திய நிலையான மான், கையில் ஏந்திய வெண்மையான மழு, இலைவடிவமான சூலம் ஆகியவற்றோடு, உள்ளத்தில் ஏந்துதலே நிலையான செல்வம் எனக் கொள்க. அவனையே நீ நினைக.
1682 | நறவார்
தலையின் நயவா வுலகில் பிறவா தவனே பிணியில் லவனே அறையார் கழலாய் அழுந்தை மறையோர் மறவா தெழமா மடமன் னினையே. |
2.020.6 |
அடியவர் கட்டிய மலர்களால் தலையில் தேன் பொருந்திய நயம் உடையவனே! உலகில் பிறவாதவனே! நோயற்றவனே! ஒலிக்கின்ற வீரக்கழலை அணிந்தவனே! அழுந்தையில் வாழும் மறையவர் மறவாது எழுந்து தொழ, அங்குள்ள சிறந்த மடம் எனப் பெயரிய கோயிலில் உள்ளாய்.
1683 | தடுமாறு
வல்லாய் தலைவா மதியம் சுடுமாறு வல்லாய் சுடரார் சடையில் அடுமாறு வல்லாய் அழுந்தை மறையோர் நெடுமா நகர்கை தொழநின் றனையே. |
2.020. 7 |
உன்னை உணர்வதில் தடுமாற்றத்தை விளைப்பவனே! தலைவனே! காதல் வயப்பட்ட மகளிரை நீ சூடிய மதியால் சுடும் படி செய்பவனே! ஒளிபொருந்திய சடையின்மேல் உலகை அடவந்த கங்கையாற்றைச் சூடியவனே! அழுந்தையில் மறையவர் கைகளால் தொழ நீண்டுயர்ந்த பெரிய கோயிலில் எழுந்தருளியுள்ளாய்.
1684 | பெரியாய்
சிறியாய் பிறையாய் மிடறு கரியாய் கரிகா டுயர்வீ டுடையாய் அரியாய் ஒளியாய் அழுந்தை மறையோர் வெரியார் தொழமா மடம்மே வினையே. |
2.020.8 |
பெரியவனே! நுண்ணியனே! பிறை சூடியவனே! கண்டம் கரியவனே! சுடுகாட்டை உயர்ந்த வீடாகக் கொண்டவனே! அறிதற்கு அரியவனே! அன்பர்க்கு எளியவனே! அழுந்தையில் பழிபாவங்கட்கு அஞ்சும் மறையவர் வணங்க நீ சிறந்த மடம் என்னும் கோயிலில் விளங்குகின்றாய்.
1685 | மணிநீள்
முடியான் மலையை அரக்கன் தணியா தெடுத்தான் உடலம் நெரித்த அணியார் விரலாய் அழுந்தை மறையோர் பணிமா மடம்மன் னியிருந் தனையே. |
2.020. 9 |
மணிகள் இழைத்த நீண்ட மகுடம் சூடியமுடியனாகிய இராவணன் கயிலைமலையைப் பொறுமையின்றி எடுத்தபோது, அவனது உடலை நெரித்த அழகிய கால் விரலை உடையவனே! அழுந்தைப் பதியில் மறையவர் போற்ற அழகிய மடம் என்னும் கோயிலில் நீ நிலையாக எழுந்தருளியுள்ளாய்.
1686 | முடியார்
சடையாய் முனம்நா ளிருவர் நெடியான் மலரான் நிகழ்வா லிவர்கள் அடிமே லறியார் அழுந்தை மறையோர் படியால் தொழமா மடம்பற் றினையே. |
2.020. 10 |
சடைமுடியை உடையவனே! முற்காலத்தே திருமால் பிரமன், ஆகிய இருவர் தம்முள் செருக்கி உன் அடிமுடிகளை அறிய முற்பட்டு அறியாதவர் ஆயினர். அழுந்தைப்பதியுள் மறையவர் விதிமுறைப்படி வழிபட வணங்கிப் போற்ற, சிறந்த மடம் எனப்பெயரிய கோயிலில் நீ விளங்குகின்றாய்.
1687 | அருஞா
னம்வல்லார் அழுந்தை மறையோர் பெருஞா னமுடைப் பெருமா னவனைத் திருஞா னசம்பந் தனசெந் தமிழ்கள் உருஞா னமுண்டாம் உணர்ந்தார் தமக்கே. |
2.020. 11 |
எய்தற்கரிய திருவருள் ஞானம் பெற்றவர்களாகிய மறையவர் வணங்கிப் போற்ற அழுந்தைப் பதியில் விளங்கும் பெரிய ஞானமே வடிவாக உடைய பெருமானை, திருஞானசம்பந்தன் திருச்சிற்றம்பலம் போற்றிப் பாடியதான இத்திருப்பதிகத்தை ஓதி உணர்ந்தவர்க்கு உண்மை உணர்வு உண்டாகும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 18 | 19 | 20 | 21 | 22 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருஅழுந்தூர் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - அழுந்தை, மறையவர், மறையோர், கோயிலில், அழுந்தையில், என்னும், அழுந்தைப், பெயரிய, சிறந்த, உடையவனே, பதியில், னினையே, வாழும், வல்லாய், றுவல்லார், 145பெருமானே, வகையிலும், திருச்சிற்றம்பலம், எழுந்தருளியுள்ளாய், பெருமானை, கையில், வணங்கிப், நெரித்த, விளங்குகின்றாய், சூடியவனே, நிலையான, ஏந்திய, பொருந்திய, மடம்மன், டுசெய்மா, திருமுறை, வழிபாடு, எழுந்தருளியுள்ளாய்&, தலைவனே&, திருஅழுந்தூர், வினையே, வடிவாக