முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.019.திருநெல்லிக்கா
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.019.திருநெல்லிக்கா
2.019.திருநெல்லிக்கா
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நெல்லிவனேசுவரர்.
தேவியார் - மங்களநாயகியம்மை.
1666 | அறத்தா
லுயிர்கா வலமர்ந் தருளி மறத்தான் மதின்மூன் றுடன்மாண் பழித்த திறத்தால் தெரிவெய் தியதீ வெண்திங்கள் நிறத்தா நெல்லிக்கா வுள்நிலா யவனே. |
2.019. 1 |
நெல்லிக்காவுள் விளங்கும் இறைவன், உயிர்களைக் காத்தலாகிய அறத்தை மேற் கொண்டருளி, அறநெறிக்கு மாறாக நடந்த அசுரர்களின் மும்மதில்களின் பெருமைகளை அழித்த திறத்தால் பலராலும் நன்கறியப்பட்டு வெண்திங்கள் போன்ற வெள்ளிய திருநீற்றைப் பூசிய அழல் போலும் வண்ணனாய் விளங்குபவன்.
1667 | பதிதா னிடுகா
டுபைங்கொன் றைதொங்கல் மதிதா னதுசூ டியமைந் தனுந்தான் விதிதான் வினைதான் விழுப்பம் பயக்கும் நெதிதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. |
2.019. 2 |
நெல்லிக்காவுள் எழுந்தருளிய இறைவன் இடுகாட்டைவாழும் இடமாகவும், கொன்றைமலரைத் தான் விரும்பும் மாலையாகவும் கொண்டவன், மதிசூடிய வீரன், விதியாகவும் வினையாகவும் மேன்மையளிக்கும் நிதியாகவும் விளங்குபவன்.
1668 | நலந்தா
னவன்நான் முகன்தன் தலையைக் கலந்தா னதுகொண் டகபா லியுந்தான் புலந்தான் புகழா லெரிவிண் புகழும் நிலந்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. |
2.019. 3 |
நெல்லிக்காவுள் எழுந்தருளிய இறைவன், நன்மைகளைத் தருபவன். நான்முகனின் தலையை உண்கலனாகக் கொண்டு கபாலி எனப் பெயர் பெற்றவன். ஞானமே வடிவமானவன். புகழால் விளங்கும் வானோர் போற்றும் வீட்டுலகாக விளங்குபவன்.
1669 | தலைதா
னதுஏந் தியதம் மடிகள் கலைதான் திரிகா டிடம்நா டிடமா மலைதா னெடுத்தான் மதின்மூன் றுடைய நிலைதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. |
2.019. 4 |
நிலையாக நெல்லிக்காவுள் எழுந்தருளிய சிவபெருமான், பிரமனது தலையோட்டைக் கையில் ஏந்திய தலைவன், தான் விரும்பும் இடமாக மான்கள் திரியும் காட்டைக் கொண்டவன், முப்புரங்களும் அழிய மேருமலையை வில்லாக எடுத்தவன்.
1670 | தவந்தான்
கதிதான் மதிவார் சடைமேல் உவந்தான் சுறவேந் தனுரு வழியச் சிவந்தான் செயச்செய் துசெறுத் துலகில் நிவந்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. |
2.019. 5 |
நெல்லிக்காவுள் விளங்கும் சிவபெருமான், நாம் செய்யத்தக்க தவமாகவும், அடையத்தக்க கதியாகவும் விளங்குபவன். நீண்ட சடைமுடி மீது பிறை மதியை உவந்து சூடியவன். மீனக்கொடியை உடைய மன்மதனைச் சினந்தழித்தவன். உலக மக்கள் செயற்படத்தான் ஐந்தொழில்களைச் செய்து அனைத்தையும் அழித்து வீடருள்பவனாய் உயர்ந்து தோன்றுபவன்.
1671 | வெறியார்
மலர்க்கொன் றையந்தார் விரும்பி மறியார் மலைமங் கைமகிழ்ந் தவன்றான் குறியாற் குறிகொண் டவர்போய்க் குறுகும் நெறியான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. |
2.019.6 |
நெல்லிக்காவுள் நிலவும் இறைவன், மணம் கமழும் கொன்றைமாலையை விரும்புபவன். மான்கள் விளையாடும் மலையினிடம் தோன்றிய உமையம்மையை மணங்கொண்டு மகிழ்ந்தவன். குரு ஆனவர் காட்டும் குறியைத் தியானித்து நாம் போய் அடையும் வீட்டுநெறியை உடையவன்.
1672 | பிறைதான்
சடைச்சேர்த் தியஎந் தைபெம்மான் இறைதான் இறவாக் கயிலைம் மலையான் மறைதான் புனலொண் மதிமல் குசென்னி நிறைதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. |
2.019.7 |
நெல்லிக்காவுள் நிலாவிய இறைவன், சடையின் கண் இளம் பிறையை அணிந்து எம் தந்தையாக விளங்கும் பெருமான் சிறிதும் அழிவற்ற கயிலை மலையில் உறைபவன். மறைந்துறையும் கங்கையோடு ஒளி பொருந்திய மதி நிறைந்த சென்னியை உடைய பூரணன்.
1673 | மறைத்தான்
பிணிமா தொருபா கந்தன்னை மிறைத்தான் வரையா லரக்கன் மிகையைக் குறைத்தான் சடைமேற் குளிர்கோல் வளையை நிறைத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. |
2.019. 8 |
நெல்லிக்காவுள் நிலாவிய சிவபெருமான் உமையம்மையை ஒருபாகமாகப் பிணித்துத் தன்னோடு இணைத்துக் கொண்டவன். இராவணன் கயிலை மலைமீது பறந்து சென்ற குற்றத்திற்காக அக்கயிலை மலையைக் கொண்டே வருத்தி அவன் வலிமையைக் குறைத்தவன். குளிர்ந்த திரண்ட வளையல்களை அணிந்த கங்கையைச் சடைமேல் அடக்கியவன்.
1674 | தழல்தா
மரையான் வையந்தா யவனும் கழல்தான் முடிகா ணியநா ணொளிரும் அழல்தான் அடியார்க் கருளாய்ப் பயக்கும் நிழல்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. |
2.019. 9 |
நெல்லிக்காவுள் எழுந்தருளிய இறைவன் தழல் போலச் சிவந்த தாமரைமலர் உறையும் பிரமனும், உலகனைத்தையும் அளந்த திருமாலும் திருவடி திருமுடி அகியவற்றைக் காணமுயன்று நாண, ஒளிரும் அழல் வடிவாய் நின்றவன். அடியவர்கட்கு அருளைத்தரும் ஒளி வடிவினன்.
1675 | கனத்தார்
திரைமாண் டழற்கான் றநஞ்சை எனத்தா வெனவாங் கியதுண் டகண்டன் மனத்தாற் சமண்சாக் கியர்மாண் பழிய நினைத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. |
2.019. 10 |
நெல்லிக்காவுள் எழுந்தருளிய இறைவன், மேகங்களால் உண்ணப்படும் அலைகளோடு கூடிய பெரிய கடலில் பெருகி எழுந்து அழலை உமிழ்ந்த நஞ்சைக் கண்டு அஞ்சிய தேவர்கள் என் அத்தனே காப்பாற்று என வேண்ட, அந்நஞ்சினை எடுத்து வரச்செய்து அதனை வாங்கி உண்ட கண்டத்தினன். சமணபுத்தர்களின் செல்வாக்கு நாட்டில் அழியுமாறு மனத்தால் நினைத்தவன்.
1676 | புகரே
துமிலா தபுத்தே ளுலகில் நிகரா நெல்லிக்கா வுள்நிலா யவனை நகரா நலஞா னசம்பந் தன்சொன்ன பகர்வா ரவர்பா வமிலா தவரே. |
2.019. 11 |
குற்றமற்ற தேவர்கள் உலகில் யாவரும் தனக்கு ஒப்பாகாதவனாய் விளங்கி, இம்மண்ணுலகை வாழ்விக்க நெல்லிக்காவுள் எழுந்தருளிய இறைவனைப் பற்றி அழிவற்ற நன்மைகளைக் கொண்ட ஞானசம்பந்தன் அருளிய இப்பாமாலையைப்பாடித் தொழுபவர் பாவம் அற்றவர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருநெல்லிக்கா - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - நெல்லிக்கா, வுள்நிலா, நெல்லிக்காவுள், இறைவன், எழுந்தருளிய, விளங்கும், விளங்குபவன், கொண்டவன், சிவபெருமான், சடைமேல், மான்கள், நிலாவிய, தேவர்கள், அழிவற்ற, உமையம்மையை, விரும்பும், மதின்மூன், திறத்தால், திருச்சிற்றம்பலம், திருநெல்லிக்கா, திருமுறை, பயக்கும், வெண்திங்கள்