முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.016.திருமணஞ்சேரி
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.016.திருமணஞ்சேரி
2.016.திருமணஞ்சேரி
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மணவாளநாயகர்.
தேவியார் - யாழ்மொழியம்மை.
1634 | அயிலாரு
மம்பத னாற்புர மூன்றெய்து குயிலாரு மென்மொழி யாளொரு கூறாகி மயிலாரு மல்கிய சோலை மணஞ்சேரிப் பயில்வானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே. |
2.016. 1 |
கூரிய அம்பினால் முப்புரங்களையும் எய்து அழித்து, குயில் போலும் இனிய மென்மையான மொழிபேசும் உமையம்மையை ஒரு கூற்றில் உடையவனாகி, மயில்கள் வாழும் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருமணஞ்சேரியில் எழுந்தருளிய இறைவனைப் பற்றி நின்றார்க்குப் பாவம் இல்லை.
1635 | விதியானை
விண்ணவர் தாந்தொழு தேத்திய நெதியானை நீள்சடை மேனிகழ் வித்தவான் மதியானை வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப் பதியானைப் பாடவல் லார்வினை பாறுமே. |
2.016.2 |
நீதி நெறிகளின் வடிவினன். தேவர்கள் வணங்கித் தமது நிதியாகக் கொள்பவன். நீண்ட சடைமீது வானத்து மதியைச் சூடியவன். வளமான பொழில்கள் சூழ்ந்த திருமணஞ்சேரியைத் தனது பதியாகக் கொண்டவன். அவனைப் பாடவல்லார் வினைகள் அழியும்.
1636 | எய்ப்பானார்க்
கின்புறு தேனளித் தூறிய இப்பாலா யெனையு மாள வுரியானை வைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி மெய்ப்பானை மேவிநின் றார்வினை வீடுமே. |
2.016. 3 |
வறுமையால் இளைத்தவர்க்குப் பெருகிய இன்பம் தரும் தேன் அளித்து இவ்வுலகத்துள்ளோனாய் அருள்புரிபவன். என்னையும் ஆட்கொண்டருளும் உரிமையன். செல்வங்களாக உள்ள மாடவீடுகள் சூழ்ந்த திருமணஞ்சேரியில் உண்மைப்பொருளாய் விளங்குபவன். அவனை மேவி வழிபடுவார் வினைகள் நீங்கும்.
1637 | விடையானை
மேலுல கேழுமிப் பாரெலாம் உடையானை யூழிதோ றூழி யுளதாய படையானைப் பண்ணிசை பாடு மணஞ்சேரி அடைவானை யடையவல் லார்க்கில்லை யல்லலே. |
2.016. 4 |
விடை ஊர்தியன். மேலே உள்ள ஏழு உலகங்களையும் இம்மண்ணுலகையும் தன் உடைமையாகக் கொண்டவன். பல்லூழிக்காலங்களாய் விளங்கும் படைகளை உடையவன். அடியவர் பண்ணிசை பாடி வழிபடும் திருமணஞ்சேரியை அடைந்து வாழ்பவன். அவனை அடையவல்லார்க்கு அல்லல் இல்லை.
1638 | எறியார்பூங்
கொன்றையி னோடு மிளமத்தம் வெறியாருஞ் செஞ்சடை யார மிலைத்தானை மறியாருங் கையுடை யானை மணஞ்சேரிச் செறிவானைச் செப்பவல் லார்க்கிடர் சேராவே. |
2.016.5 |
ஒளிபொருந்திய கொன்றைமலர்களோடு புதிய ஊமத்தம் மலர்களை மணம் கமழும் தன் செஞ்சடை மீது பொருந்தச் சூடியவன். மான் கன்றை ஏந்திய கையினன். திருமணஞ்சேரியில் செறிந்து உறைபவன். அவனைப் புகழ்ந்து போற்ற வல்லவர்களை இடர்கள் அடையா.
1639 | மொழியானை
முன்னொரு நான்மறை யாறங்கம் பழியாமைப் பண்ணிசை யான பகர்வானை வழியானை வானவ ரேத்து மணஞ்சேரி இழியாமை யேத்தவல் லார்க்கெய்து மின்பமே. |
2.016.6 |
முற்காலத்தே நான்மறைகளையும், ஆறு அங்கங்களையும் அருளியவன். அவற்றைப் பண்ணிசையோடு பிறர் பழியாதவாறு பகர்பவன். வேதாகம விதிகளைப் பின்பற்றி, வானவர்கள் வந்து துதிக்குமாறு திருமணஞ்சேரியில் விளங்குபவன். அத்தலத்தை இகழாமல் போற்ற வல்லவர்க்கு இன்பம் உளதாம்.
1640 | எண்ணானை
யெண்ணமர் சீரிமை யோர்கட்குக் கண்ணானைக் கண்ணொரு மூன்று முடையானை மண்ணானை மாவயல் சூழ்ந்த மணஞ்சேரிப் பெண்ணானைப் பேசநின் றார்பெரி யோர்களே. |
2.016. 7 |
யாவராலும் மனத்தால் எண்ணி அறியப் படாதவன். தம் உள்ளத்தே வைத்துப்போற்றும் புகழ்மிக்க சிவஞானிகட்குக் கண் போன்றவன். மூன்று கண்கள் உடையவன். அட்டமூர்த்தங்களில் மண் வடிவானவன். சிறந்த வயல்களால் சூழப்பட்ட திருமணஞ்சேரியில் உமையம்மையோடு கூடியவனாய் விளங்கும் அவ்விறைவன் புகழைப் பேசுவோர் பெரியோர் ஆவர்.
1641 | எடுத்தானை
யெழின்முடி யெட்டு மிரண்டுந்தோள் கெடுத்தானைக் கேடிலாச் செம்மை யுடையானை மடுத்தார வண்டிசை பாடு மணஞ்சேரி பிடித்தாரப் பேணவல் லார்பெரி யோர்களே. |
2.016. 8 |
கயிலைமலையைப் பெயர்த்து எடுத்த இராவணனின் அழகிய பத்துத் தலைகளையும் இருபது தோள்களையும் அடர்த்தவன். மாறுபாடற்ற செம்மை நிலையை உடையவன். வண்டுகள் தேனை மடுத்து உண்ணுதற்கு இசைபாடிச் சூழும் திருமணஞ்சேரியில் உறையும் அவ்விறைவன் திருவடிகளைப் பற்றுக்கோடாகக் கொள்வார் பெரியார்கள்.
1642 | சொல்லானைத்
தோற்றங்கண் டானு நெடுமாலும் கல்லானைக் கற்றன சொல்லித் தொழுதோங்க வல்லார்நன் மாதவ ரேத்து மணஞ்சேரி எல்லாமா மெம்பெரு மான்கழ லேத்துமே. |
2.016. 9 |
வேதாகமங்களைச் சொல்லியவன். உலகைப் படைக்கும் நான்முகன் திருமால் ஆகியோர்களாற் கற்றுணரப்படாத பெருமையன். தாம் அறிந்தவற்றைச் சொல்லித் தொழுது உயர்வுறும் அன்பர்களும் பெரிய தவத்தினை உடையவர்களும் தொழுது வணங்கும் திருமணஞ்சேரியில் உலகப் பொருள்கள் எல்லாமாக வீற்றிருக்கும் அப் பெருமான் திருவடிகளை ஏத்துவோம்.
1643 | சற்றேயுந்
தாமறி வில்சமண் சாக்கியர் சொற்றேயும் வண்ணமொர் செம்மை யுடையானை வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி பற்றாக வாழ்பவர் மேல்வினை பற்றாவே. |
2.016. 10 |
சிறிதேனும் தாமாக அறியும் அறிவு இல்லாத சமண புத்தர்களின் உரைகள் பொருளற்றனவாய் ஒழியும் வண்ணம் ஒப்பற்ற செம்பொருளாய் விளங்கும் சிவபெருமானை வற்றாத நீர்நிலைகள் சூழ்ந்த திருமணஞ்சேரியை அடைந்து வழிபட்டு அவனையே பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்பவர்களை வினைகள் பற்றா.
1644 | கண்ணாருங்
காழியர் கோன்கருத் தார்வித்த தண்ணார்சீர் ஞானசம் பந்தன் றமிழ்மாலை மண்ணாரு மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி பண்ணாரப் பாடவல்லார்க் கில்லை பாவமே. |
2.016. 11 |
கண்களுக்கு விருந்தாய் அமையும் சீகாழிப் பதியில் விளங்கும் சிவபிரானின் திருவுள்ளத்தை நிறைவித்த இனிய புகழ்பொருந்திய ஞானசம்பந்தன் பாடிய இத்தமிழ்மாலையை, வளம் நிறைந்த மண்சேர்ந்த வயல்களால் சூழப்பட்ட திருமணஞ்சேரியை அடைந்து பண் பொருந்தப்பாடிப் போற்றுவார்க்குப் பாவம் இல்லை.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமணஞ்சேரி - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - சூழ்ந்த, திருமணஞ்சேரியில், மணஞ்சேரி, விளங்கும், பண்ணிசை, உடையவன், அடைந்து, செம்மை, வினைகள், திருமணஞ்சேரியை, மணஞ்சேரிப், சூழப்பட்ட, வயல்களால், யோர்களே, மாவயல், அவ்விறைவன், மூன்று, தொழுது, சொல்லித், யுடையானை, வற்றாத, ரேத்து, கொண்டவன், விளங்குபவன், இன்பம், திருமுறை, திருமணஞ்சேரி, சூடியவன், செஞ்சடை, திருச்சிற்றம்பலம், நிறைந்த, அவனைப்