முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.089.திரு எருக்கத்தம்புலியூர்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.089.திரு எருக்கத்தம்புலியூர்
1.089.திரு எருக்கத்தம்புலியூர்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நீலகண்டேசுரர்.
தேவியார் - நீலமலர்க்கண்ணம்மை.
959 |
படையார் தருபூதப் பகடா
ருரிபோர்வை உடையா னுமையோடு முடனா யிடுகங்கைச் சடையா னெருக்கத்தம் புலியூர்த் தகுகோயில் விடையா னடியேத்த மேவா வினைதானே. |
1.089.1 |
படைகளாக அமைந்த பூத கணங்களை உடையவனும், யானையின் தோலைப் போர்வையாகக் கொண்டவனும், உமையம்மையோடு உடனாய் விளங்குபவனும், வந்து பொருந்திய கங்கையை ஏற்ற சடையை உடையவனும் ஆகிய எருக்கத்தம்புலியூரில் விளங்கும் தகுதி வாய்ந்த கோயிலில் எழுந்தருளிய விடை ஏற்றை உடைய பெருமான் திருவடிகளை ஏத்துவாரை, வினைகள் வந்து சாரா.
960 |
இலையார் தருசூலப் படையெம்
பெருமானாய் நிலையார் மதின்மூன்று நீறாய் விழவெய்த சிலையா னெருக்கத்தம் புலியூர்த் திகழ்கோயில் கலையா னடியேத்தக் கருதா வினைதானே. |
1.089.2 |
இலை வடிவமாக அமைந்த சூலப்படையை உடையவனும், எம் பெருமானும், நிலைபெற்ற முப்புரங்களையும் நீறாய்ப் பொடிபடுமாறு கணை எய்த வில்லை உடையவனும், எருக்கத்தம்புலியூரில் விளங்கும் கோயிலில் மேவியிருப்பவனும் ஆகிய கலைகளின் வடிவான சிவபிரானின் திருவடிகளை ஏத்தி வாழ்த்துவோரை, வினைகள் கருதா.
961 |
விண்ணோர் பெருமானே விகிர்தா
விடையூர்தீ பெண்ணா ணலியாகும் பித்தா பிறைசூடீ எண்ணா ரெருக்கத்தம் புலியூ ருறைகின்ற அண்ணா வெனவல்லார்க் கடையா வினைதானே. |
1.089.3 |
விண்ணவர் தலைவனே. வேறுபட்ட வடிவும் பண்பும் உடையவனே, விடைமீது ஏறிவருபவனே! பெண், ஆண், அலி என்னும் திணை பால் பாகுபாடுகளைக் கடந்துள்ளவனே, பித்தனே, பிறை சூடியவனே, எல்லோராலும் எண்ணத்தகும் எருக்கத்தம் புலியூரில் உறைகின்ற தலைவனே என்றுரைத்துப் போற்ற வல்லவரை, வினைகள் அடையா.
962 |
அரையார் தருநாக மணிவா னலர்மாலை விரையார் தருகொன்றை யுடையான் விடையேறி வரையா னெருக்கத்தம் புலியூர் மகிழ்கின்ற திரையார் சடையானைச் சேரத் திருவாமே. |
1.089.4 |
இடையிலே பாம்பைப் பொருந்துமாறு அணிந்துள்ளவனும், மணம் கமழும் கொன்றை மலர் மாலையை அணிந்துள்ளவனும், விடைமீது ஏறி வருபவனும், கயிலை மலையைத் தனக்குரிய இடமாகக் கொண்டவனும், எருக்கத்தம்புலியூரில் மகிழ்ந்து உறைபவனும் ஆகிய அலைகள் வீசும் கங்கை நதியை, சடைமிசைத் தரித்த சிவபிரானைச் சேர்வோர்க்குச் செல்வங்கள் வந்து சேரும்.
963 |
வீறார் முலையாளைப் பாக மிகவைத்துச் சீறா வருகாலன் சினத்தை யழிவித்தான் ஏறா னெருக்கத்தம் புலியூ ரிறையானை வேறா நினைவாரை விரும்பா வினைதானே. |
1.089.5 |
வேறொன்றற்கில்லா அழகினை உடைய தனங்களைக் கொண்ட உமையம்மையை, இடப்பாகமாக சிறப்புடன் வைத்துக் கொண்டருளியவனும், சீறி வந்த காலனின் சினம் அடங்கச் செய்தவனும், இடப ஊர்தியை உடையவனும், எருக்கத்தம்புலியூரில் எழுந்தருளியுள்ள இறைவனும் ஆகிய சிவபிரானைத் தனித்திருந்து தியானிப்பவரை வினைகள் விரும்பா.
964 |
நகுவெண் டலையேந்தி நானாவிதம் பாடிப் புகுவா னயம்பெய்யப் புலித்தோல் பியற்கிட்டுத் தகுவா னெருக்கத்தம் புலியூர்த் தகைந்தங்கே தொகுவான் கழலேத்தத் தொடரா வினைதானே. |
1.089.6 |
சிரிக்கும் வெள்ளிய தலையோட்டைக் கையில் ஏந்திப் பலவிதமாகப் பாடிக் கொண்டு மகளிர் இடும் பிச்சையை ஏற்கப் புகுபவனாய்ப் புலித்தோலைத் தோளில் இட்டுக்கொண்டு தகுதிவாய்ந் தவனாய் எருக்கத்தம்புலியூரில் தங்கி அங்கே நிலைத்திருப்பவனாகிய இறைவன் கழல்களை ஏத்த வினைகள் தொடரா.
இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 1.053.7 |
965 |
ஆவா வெனவரக்க னலற வடர்த்திட்டுத் தேவா வெனவருளார் செல்வங் கொடுத்திட்ட கோவே யெருக்கத்தம் புலியூர் மிகுகோயில் தேவே யெனவல்லல் தீர்தல் திடமாமே. |
1.089.8 |
ஆ ஆ என்ற இரக்கக் குறிப்போடு இராவணன் அலறுமாறு அவனை அடர்த்து, பின் தேவா என அவன் வேண்ட அருள் நிறைந்த செல்வங்கள் பலவற்றை வழங்கியருளிய தலைவனே, எருக்கத்தம்புலியூரில் விளங்கும் சிறப்புமிக்க கோயிலில் எழுந்தருளும் தேவனே என்று போற்ற, நம் அல்லல்கள் தீர்தல் உறுதியாகும்.
966 |
மறையா னெடுமால்காண் பரியான் மழுவேந்தி நிறையா மதிசூடி நிகழ்முத் தின்தொத்தே இறையா னெருக்கத்தம் புலியூ ரிடங்கொண்ட கறையார் மிடற்றானைக் கருதக் கெடும்வினையே. |
1.089.9 |
வேதங்களை ஓதும் நான்முகனும், நெடுமாலும் காணுதற்கு அரியவனே, மழுவைக் கையில் ஏந்தியவனே, கலை நிறையாத பிறை மதியைச் சூடியவனே, முத்துக்களின் கொத்துப் போன்ற இறையோனே என்று போற்றி, எருக்கத்தம்புலியூரை இடமாகக் கொண்ட கறைமிடற்று அண்ணலை நினைந்தால், வினை கெடும்.
967 |
புத்த ரருகர்தம் பொய்கள்
புறம்போக்கிச் சுத்தி தரித்துறையுஞ் சோதி யுமையோடும் நித்த னெருக்கத்தம் புலியூர் நிகழ்வாய அத்த னறவன்றன் னடியே யடைவோமே. |
1.089.10 |
புத்தர் சமணர் ஆகியோர்தம் பொய்யுரைகளை விலக்கித் தூய்மையைத் தழுவி விளங்கும் ஒளி வடிவினனாய், உமையம்மையாருடன் நித்தம் மணாளனாக விளங்குவோனாய், எருக்கத்தம்புலியூரில் விளங்கிக் கொண்டிருக்கும் அறவடிவினனாகிய தலைவன் அடிகளை, நாம் அடைவோம்.
968 |
ஏரா ரெருக்கத்தம் புலியூ ருறைவானைச் சீரார் திகழ்காழித் திருவார் சம்பந்தன் ஆரா வருந்தமிழ் மாலையிவை வல்லார் பாரா ரவரேத்தப் பதிவா னுறைவாரே. |
1.089.11 |
அழகிய எருக்கத்தம்புலியூரில் விளங்கும் இறைவனை, சீர்மிகு காழிப்பதியில் தோன்றிய திருவார் சம்பந்தன் அருளிய சுவை குன்றாத அருந்தமிழ் மாலையாகிய இத்திருப்பதிகப் பாடல்களை ஓதுபவர்கள் உலகவர் ஏத்த வானகம் எய்துவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 87 | 88 | 89 | 90 | 91 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திரு எருக்கத்தம்புலியூர் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - எருக்கத்தம்புலியூரில், னெருக்கத்தம், உடையவனும், வினைதானே, விளங்கும், வினைகள், புலியூ, புலியூர், கோயிலில், தலைவனே, புலியூர்த், செல்வங்கள், இடமாகக், அணிந்துள்ளவனும், விரும்பா, கையில், சம்பந்தன், திருவார், தீர்தல், சூடியவனே, எருக்கத்தம்புலியூர், திருவடிகளை, திருச்சிற்றம்பலம், ரெருக்கத்தம், கொண்டவனும், விடைமீது, அமைந்த, திருமுறை