முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.082.திருவீழிமிழலை
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.082.திருவீழிமிழலை
1.082.திருவீழிமிழலை
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீழியழகர்.
தேவியார் - சுந்தரகுசாம்பிகை.
882 |
இரும்பொன் மலைவில்லா வெரியம்
பாநாணில் திரிந்த புரமூன்றுஞ் செற்றா னுறைகோயில் தெரிந்த வடியார்கள் சென்ற திசைதோறும் விரும்பி யெதிர்கொள்வார் வீழி மிழலையே. |
1.082.1 |
பெரிய பொன்மயமான மேருமலையை வில்லாக வளைத்து, அனலை அம்பாக அவ்வில் நாணில் பூட்டி வானில் திரிந்து கொண்டிருந்த முப்புரங்களையும் அழித்தவனாகிய சிவபிரான் உறையும் கோயில், கற்றுணர்ந்த அடியவர்கள் செல்லும் திசைகளில் எல்லாம் விரும்பி அவர்களை எதிர்கொள்ளும் மக்கள் வாழும் திருவீழிமிழலை ஆகும்.
883 |
வாதைப் படுகின்ற வானோர் துயர்தீர ஓதக் கடனஞ்சை யுண்டா னுறைகோயில் கீதத் திசையோடுங் கேள்விக் கிடையோடும் வேதத் தொலியோவா வீழி மிழலையே. |
1.082.2 |
துன்புறும் தேவர்களின் துயர்தீர, வெள்ள நீரொடு கூடிய கடலின்கண் எழுந்த நஞ்சினை உண்ட சிவபிரான் உறையும் கோயில், இசையமைப்போடு கூடியதும் சுருதி என்பதற்கேற்ப ஒருவர் ஓதக்கேட்டு ஓதப்பட்டு வருவதும் ஆகிய வேத பாராயணத்தின் ஒலி நீங்காமல் ஒலிக்கின்ற திருவீழிமிழலை ஆகும்.
884 |
பயிலும் மறையாளன் றலையிற் பலிகொண்டு துயிலும் பொழுதாடுஞ் சோதி யுறைகோயில் மயிலும் மடமானும் மதியும் மிளவேயும் வெயிலும் பொலிமாதர் வீழி மிழலையே. |
1.082.3 |
வேதங்களை ஓதிய பிரமனின், தலையோட்டில் பலியேற்று அனைவரும் துயிலும் நள்ளிரவில் ஆடும் ஒளிவடிவினனாகிய சிவபிரான் உறையும் கோயில், மயில், மடப்பம் பொருந்திய மான், மதி, இள மூங்கில், வெயில் ஆகியனவற்றைப் போன்று கண்ணுக்கு இனிய மென்மையும், மருளும் விழி, முகம், தோள்கள், உடல்ஒளி இவற்றால் பொலியும் மகளிர் வாழும் திருவீழிமிழலையாகும்.
885 |
இரவன் பகலோனு மெச்சத் திமையோரை நிரவிட் டருள்செய்த நிமலன் னுறைகோயில் குரவஞ் சுரபுன்னை குளிர்கோங் கிளவேங்கை விரவும் பொழிலந்தண் வீழி மிழலையே. |
1.082.4 |
தக்கன் செய்த யாகத்தில் சந்திரன், சூரியன் ஏனைய தேவர்கள் ஆகியோரை, வீரபத்திரரை அனுப்பித் தண்டம் செய்து செம்மைப்படுத்தி அருள்செய்த சிவபிரான் உறையும் கோயில் குரா, சுரபுன்னை, குளிர்ந்த கோங்கு, இளவேங்கை ஆகியன விரவிய பொழில்கள் சூழ்ந்த அழகிய தட்பமுடைய வீழிமிழலையாகும்.
886 |
கண்ணிற் கனலாலே காமன் பொடியாகப் பெண்ணுக் கருள்செய்த பெருமா னுறைகோயில் மண்ணிற் பெருவேள்வி வளர்தீப் புகைநாளும் விண்ணிற் புயல்காட்டும் வீழி மிழலையே. |
1.082.5 |
நெற்றி விழியில் தோன்றிய கனலால் காமனைப் பொடி செய்து, இரதிதேவிவேண்ட அவள் கண்களுக்கு மட்டும் புலனாகுமாறு அருள் செய்த பெருமான் உறையும் கோயில் மண்ணில் செய்யும் பெரிய வேள்விகளில் வளரும் தீப்புகை நாள்தோறும் விண்ணகத்தே மழை மேகங்களை உருவாக்கும் திருவீழிமிழலை யாகும்.
887 |
மாலா யிரங்கொண்டு மலர்க்கண்
ணிடவாழி ஏலா வலயத்தோ டீந்தா னுறைகோயில் சேலா கியபொய்கைச் செழுநீர்க் கமலங்கள் மேலா லெரிகாட்டும் வீழி மிழலையே. |
1.082.6 |
திருமால் ஆயிரம் தாமரைப் பூக்களைக் கொண்டு அருச்சித்தபோது ஒன்று குறையக் கண்டு, தன், மலர் போன்ற கண்ணைஇடந்து சாத்திய அளவில் பிறர் சுமக்கலாற்றாத சக்கராயுதம் ஆகிய ஆழியை அவனுக்கு ஈந்தருளிய பெருமான் உறையும் கோயில், சேல்மீன்கள் பொருந்திய செழுநீர்ப் பொய்கைகளில் முளைத்த தாமரை மலர்கள் தீப்பிழப்பு போலக் காணப்படும் திருவீழிமிழலையாகும்.
888 |
மதியால் வழிபட்டான் வாணாள்
கொடுபோவான் கொதியா வருகூற்றைக் குமைத்தா னுறைகோயில் நெதியான் மிகுசெல்வர் நித்த நியமங்கள் விதியா னிற்கின்றார் வீழி மிழலையே. |
1.082.7 |
மெய்யறிவால் தன்னை வழிபட்ட மார்க்கண்டேயனின் வாழ்நாளைக் கையகப் படுத்தச் சினந்து வந்த கூற்றுவனை அழித்த சிவபிரானது கோயில், நிதியால் மிகுந்த செல்வர்கள் நாள்தோறும் செய்யும் நியமங்களை விதிப்படி செய்து வாழும் திருவீழிமிழலையாகும்.
889 |
எடுத்தான் றருக்கினை யிழித்தான்
விரலூன்றிக் கொடுத்தான் வாளாளாக் கொண்டா னுறைகோயில் படித்தார் மறைவேள்வி பயின்றார் பாவத்தை விடுத்தார் மிகவாழும் வீழி மிழலையே. |
1.082.8 |
கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் செருக்கினைத் தன் கால்விரலை ஊன்றி அழித்தவனும், பின்அவன் பிழையுணர்ந்து வேண்ட, வாள் முதலியன கொடுத்து, அவனை அடிமையாக ஏற்றுக் கொண்டருளியவனுமாகிய சிவபிரான் உறையும் கோயில், வேதங்களைப் பயின்றவர்களும், வேள்விகள் பலவற்றைச் செய்பவர்களும், பாவங்களை விட்டவர்களுமாகிய அந்தணர்கள் மிகுதியாக வாழும், திருவீழிமிழலையாகும்.
890 |
கிடந்தா னிருந்தானுங் கீழ்மேல்
காணாது தொடர்ந்தாங் கவரேத்தச் சுடரா யவன்கோயில் படந்தாங் கரவல்குற் பவளத் துவர்வாய்மேல் விடந்தாங் கியகண்ணார் வீழி மிழலையே. |
1.082.9 |
பாம்பணையில் துயிலும் திருமாலும், தாமரை மலரில் உறையும் நான்முகனும் அடிமுடிகளைக் காணாது திரும்பித் தொடர்ந்து ஏத்த அழலுருவாய் நின்ற சிவபிரானது கோயில். அரவின் படம் போன்ற அல்குலையும், பவளம் போன்ற வாயினையும் விடம் பொருந்திய கண்களையும் உடைய மகளிர் மிகுதியாக வாழும் திருவீழிமிழலையாகும்.
891 |
சிக்கார் துவராடைச் சிறுதட் டுடையாரும் நக்காங் கலர்தூற்றுந் நம்பா னுறைகோயில் தக்கார் மறைவேள்வித் தலையா யுலகுக்கு மிக்கா ரவர்வாழும் வீழி மிழலையே. |
1.082.10 |
சிக்குப் பிடித்த காவி உடையையும் சிறிய ஓலைத் தடுக்குக்களையும் உடைய புத்தரும் சமணர்களும் ஏளனம் செய்துசிரித்துப் பழிதூற்றும் நம் இறைவர் தங்கும் கோயில், தக்கவராய், வேதவேள்விகள் செய்வதில் தலையாயவராய், உலகில் மேம்பட்டவராய் விளங்கும் மறையவர் வாழும் வீழிமிழலை ஆகும்.
892 |
மேனின் றிழிகோயில் வீழி மிழலையுள் ஏனத் தெயிற்றானை யெழிலார் பொழிற்காழி ஞானத் துயர்கின்ற நலங்கொள் சம்பந்தன் வாய்மைத் திவைசொல்ல வல்லோர் நல்லோரே. |
1.082.11 |
விண்ணிலிருந்து இழிந்து வந்துள்ள வீழிமிழலைக் கோயிலில், பன்றிப்பல் சூடியவனாய் எழுந்தருளி விளங்கும் சிவபிரானை, அழகிய பொழில்கள் சூழ்ந்த காழிப் பதியில் தோன்றிய ஞானத்தால் மேம்பட்ட அழகிய ஞானசம்பந்தன், உண்மையை உடையவனாய் ஓதிய இப்பதிகத்தைச் சொல்ல வல்லவர் நல்லவர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 80 | 81 | 82 | 83 | 84 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவீழிமிழலை - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - மிழலையே, கோயில், னுறைகோயில், உறையும், வாழும், திருவீழிமிழலை, சிவபிரான், திருவீழிமிழலையாகும், செய்து, பொருந்திய, துயிலும், காணாது, செய்யும், பெருமான், நாள்தோறும், விளங்கும், சிவபிரானது, தோன்றிய, மிகுதியாக, மகளிர், திருச்சிற்றம்பலம், திருமுறை, விரும்பி, துயர்தீர, பொழில்கள், சுரபுன்னை, சூழ்ந்த