முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.057.திருவேற்காடு
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.057.திருவேற்காடு
1.057.திருவேற்காடு
பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேற்காட்டீசுவரர்.
தேவியார் - வேற்கண்ணியம்மை.
612 |
ஒள்ளி துள்ளக் கதிக்கா மிவனொளி வெள்ளி யானுறை வேற்காடு உள்ளி யாருயர்ந் தாரிவ் வுலகினில் தௌளி யாரவர் தேவரே. |
1.057.1 |
மிகவும் சிறந்த மெய்ப்பொருளை அன்போடு எண்ணினால் அவ்வெண்ணம் நற்கதிக்கு வாயிலாம். அத்தகைய மெய்ப்பொருளாய் வெண்மையான ஒளி வடிவினனாய் திருவேற்காட்டில் எழுந்தருளியுள்ள இவ்விறைவனை நினைந்தவர்கள் இவ்வுலகினில் உயர்ந்தவர் ஆவர். அவனைக் கண்டு தௌந்த அவர்கள் தேவர்களாவர்.
613 |
ஆட னாக மசைத்தள வில்லதோர் வேடங் கொண்டவன் வேற்காடு பாடி யும்பணிந் தாரிவ் வுலகினில் சேட ராகிய செல்வரே. |
1.057.2 |
ஆடுதற்குரிய பாம்பினை இடையிற் கட்டிய, அளவற்ற பல்வேறு வடிவங்களைக் கொண்டருளிய திருவேற்காட்டு இறைவனைப் பாடிப் பணிந்தவர்கள், இவ்வுலகினில் பெருமை பொருந்திய செல்வர்கள் ஆவர்.
614 |
பூதம் பாடப் புறங்காட் டிடையாடி வேத வித்தகன் வேற்காடு போதுஞ் சாந்தும் புகையுங் கொடுத்தவர்க் கேத மெய்துத லில்லையே. |
1.057.3 |
பூதகணங்கள் பாட, சுடுகாட்டின்கண் நடனம் ஆடி, வேதங்களை அருளிய வித்தகனாக விளங்கும் திருவேற்காட்டு இறைவற்கு மலர்களும், சந்தனமும், நறும்புகை தரும் பொருள்களும் கொடுத்தவர்களுக்குத் துன்பங்கள் வருதல் இல்லையாம்.
615 |
ஆழ்க டலெனக் கங்கைக ரந்தவன் வீழ்ச டையினன் வேற்காடு தாழ்வு டைமனத் தாற்பணிந் தேத்திடப் பாழ் படும்மவர் பாவமே. |
1.057.4 |
ஆழமான கடல் என்று சொல்லத்தக்க கங்கை நதியை மறைத்துக்கொண்ட, விழுது போன்ற சடைமுடியினை உடைய திருவேற்காட்டு இறைவனைப் பணிவான மனத்தோடு வணங்கித்துதிப்பவர்களின் பாவங்கள் அழிந்தொழியும்.
616 |
காட்டினாலு மயர்த்திடக் காலனை வீட்டி னானுறை வேற்காடு பாட்டி னாற்பணிந் தேத்திட வல்லவர் ஓட்டி னார்வினை யொல்லையே. |
1.057.5 |
மார்க்கண்டேயர், சிவனே முழுமுதல்வன் எனக் காட்டினாலும், அதனை உணராது மயங்கி அவர் உயிரைக் கவர வந்த அக்காலனை அழித்த சிவபிரான் உறையும் திருவேற்காட்டைப் பாடல்கள் பாடிப் பணிந்து வழிபட வல்லவர் தம் வினைகளை விரைவில் ஓட்டியவர் ஆவர்.
617 |
தோலி னாலுடை மேவவல் லான்சுடர் வேலி னானுறை வேற்காடு நூலி னாற்பணிந் தேத்திட வல்லவர் மாலி னார்வினை மாயுமே. |
1.057.6 |
தான் கட்டியும் போர்த்தும் உள்ள ஆடைகளைத் தோலினால் அமைந்தனவாகக் கொண்டுள்ள இறைவன் ஒளி பொருந்திய வேலோடு உறையும் திருவேற்காட்டை, ஆகம நூல்களில் விதித்தவாறு வழிபட்டுத் துதிக்க வல்லவர்களாகிய ஆன்மாக்களைப் பற்றிய மயங்கச் செய்யும் வினைகள், மாய்ந்தொழியும்.
618 |
மல்லன் மும்மதின் மாய்தர வெய்ததோர் வில்லி னானுறை வேற்காடு சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர் செல்ல வல்லவர் தீர்க்கமே. |
1.057.7 |
வளமை பொருந்திய முப்புரங்களும் அழிந்தொழியுமாறு கணை எய்த ஒப்பற்ற மேரு வில்லை ஏந்திய சிவபிரான் உறையும் திருவேற்காட்டைப் புகழ்ந்து சொல்ல வல்லவர்கள் சுருங்கா மனத்தினராவர். அங்குச் சென்று தரிசிக்க வல்லவர் நீண்ட ஆயுள் பெறுவர்.
619 |
மூரல் வெண்மதி சூடுமுடியுடை வீரன் மேவிய வேற்காடு வார மாய்வழி பாடுநி னைந்தவர் சேர்வர் செய்கழல் திண்ணமே. |
1.057.8 |
மிக இளைய வெண்மையான பிறைமதியைச் சூடும் திருமுடியை உடைய வீரனாகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள திருவேற்காட்டை, அன்போடு வழிபட நினைந்தவர். அப்பெருமானின் சிவந்த திருவடிகளைத் திண்ணமாகச் சேர்வர்.
620 |
பரக்கி னார்படு வெண்டலை யிற்பலி விரக்கி னானுறை வேற்காட்டூர் அரக்க னாண்மை யடரப்பட் டானிறை நெருக்கி னானை நினைமினே. |
1.057.9 |
பிரமனின் தலையோட்டில் பலியேற்கின்ற சமர்த்த னாகிய சிவபிரான் உறையும் திருவேற்காட்டில் அரக்கன் ஆகிய இராவணனின் ஆண்மையை அடர்த்துக் கால்விரலால் சிறிதே ஊன்றி நெருக்கிய அவனை நினைமின்கள்.
621 |
மாறி லாமல ரானொடு மாலவன் வேற லானுறை வேற்காடு ஈறிலாமொழி யேமொழி யாவெழில் கூறி னார்க்கில்லை குற்றமே. |
1.057.10 |
ஒப்பற்ற தாமரை மலர் மேல் உறையும் நான்முகன், திருமால் ஆகியவர்களை வெற்றி கொள்வானாகிய சிவன் உறையும் திருவேற்காட்டு இறைவனைப் பற்றிய மொழியை ஈறிலா மொழியாக, அப்பெருமானுடைய அழகிய நலங்களைக் கூறுபவர்களுக்குக் குற்றமில்லை.
622 |
விண்ட மாம்பொழில் சூழ்திரு வேற்காடு கண்டு நம்பன் கழல்பேணிச் சண்பை ஞானசம் பந்தன் செந்தமிழ் கொண்டு பாடக் குணமாமே. |
1.057.11 |
விரிந்த மலர்களையுடைய மாஞ்சோலைகள் சூழ்ந்த திருவேற்காட்டை அடைந்து, அங்கெழுந்தருளியுள்ள இறைவன் திருவடிகளைப் பரவி, சீகாழிப் பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் உரைத்த இப்பதிகச் செந்தமிழ் கொண்டு பாடிப் போற்றுவார்க்கு நன்மைகள் விளையும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 55 | 56 | 57 | 58 | 59 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவேற்காடு - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - வேற்காடு, உறையும், வல்லவர், சிவபிரான், திருவேற்காட்டு, னானுறை, பொருந்திய, திருவேற்காட்டை, பாடிப், இறைவனைப், கொண்டு, இறைவன், திருவேற்காட்டைப், திருமுறை, பற்றிய, செந்தமிழ், சுருங்கா, திருச்சிற்றம்பலம், சேர்வர், ஒப்பற்ற, தாரிவ், இவ்வுலகினில், எழுந்தருளியுள்ள, திருவேற்காட்டில், வெண்மையான, வுலகினில், திருவேற்காடு, அன்போடு, தேத்திட, னாற்பணிந், னார்வினை