முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.055.திருமாற்பேறு
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.055.திருமாற்பேறு
1.055.திருமாற்பேறு
பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மால்வணங்குமீசர்.
தேவியார் - கருணைநாயகியம்மை.
591 |
ஊறி யார்தரு நஞ்சினை யுண்டுமை நீறு சேர்திரு மேனியர் சேறு சேர்வயற் றென்றிரு மாற்பேற்றின் மாறி லாமணி கண்டரே. |
1.055.1 |
சேற்று வளம் நிறைந்த வயல்கள் சூழ்ந்த அழகிய திருமாற்பேற்றில் ஒப்பற்ற நீலமணி போன்ற கண்டத்தை உடைய இறைவர், கடலிடத்தே ஊறிப் பொருந்திவந்த நஞ்சினை உண்டு உமையம்மையோடு கூடியவராய்த் திருநரறு பூசிய திருமேனியராய் விளங்குகிறார்.
592 |
தொடையார் மாமலர் கொண்டிரு போதும்மை அடைவா ராமடி கள்ளென மடையார் நீர்மல்கு மன்னிய மாற்பே றுடையீ ரேயுமை யுள்கியே. |
1.055.2 |
வாய்க்கால் மடைகளில் நீர் நிறைந்து விளங்கும் நிலையான திருமாற்பேற்றைத் தமது இருப்பிடமாக உடையவரே, உம்மை நினைந்து சிறந்த மாலைகளைத் தொடுத்து ஏந்திய கையின ராய்க் காலை, மாலை இருபோதும் உம்மைத் தலைவராக எண்ணி அடியவர் அடைகின்றனர்.
593 |
பையா ரும்மர வங்கொடு வாட்டிய கையா னென்று வணங்குவர் மையார் நஞ்சுண்டு மாற்பேற் றிருக்கின்ற ஐயா நின்னடி யார்களே. |
1.055.3 |
கருநிறம் பொருந்திய நஞ்சை உண்டு தேவர்களைக் காத்தருளிய நீலகண்டராய்த் திருமாற்பேற்றில் வீற்றிருக்கின்ற தலைவரே, உம் அடியவர்கள் படம் பொருந்திய பாம்பைப் பிடித்து ஆட்டும் கைகளை உடையவர் என்று உம்மை வணங்குவார்கள்.
594 |
சால மாமலர் கொண்டு சரணென்று மேலை யார்கள் விரும்புவர் மாலி னார்வழி பாடுசெய் மாற்பேற்று நீல மார்கண்ட நின்னையே. |
1.055.4 |
திருமால் வழிபாடு செய்து அருள் பெற்றதால் திருமாற்பேறு என வழங்கும் இத்தலத்தில் விளங்கும் நீலநிறம் பொருந்திய கண்டத்தை உடையவரே, நும்மை மேன்மை மிக்க பெரியோர்கள் மிகுதியான நறுமலர்களைக்கொண்டு அர்ச்சித்து உம்மையே சரண் என்று விரும்பி வழிபடுவர்.
595 |
மாறி லாமணி யேயென்று வானவர் ஏற வேமிக வேத்துவர் கூற னேகுல வுந்திரு மாற்பேற்றின் நீற னேயென்று நின்னையே. |
1.055.5 |
உமையம்மையை ஒரு கூற்றாகக் கொண்டவரே, விளங்கும் திருமாற்பேற்றில் வெண்ணீறு பூசி விளங்குபவரே, ஒப்பற்ற மாணிக்கமணியே என்று உம்மையே வானவர் மிகமிக ஏத்தி மகிழ்வர்.
596 |
உரையா தாரில்லை யொன்றுநின் றன்மையைப் பரவா தாரில்லை நாள்களும் திரையார் பாலியின் றென்கரை மாற்பேற் றரையா னேயரு ணல்கிடே. |
1.055.6 |
அலைகள் பொருந்திய பாலியாற்றின் தென்கரையில் விளங்கும் திருமாற்பேற்றில் விளங்கும் அரசனே, பொருந்திய நின் பெருந்தன்மையை வியந்து உரையாதார் இல்லை. நாள்தோறும் உன் பெருமைகளைப் பரவாதவர் இல்லை. அருள் நல்குவீராக.
இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 1.053.7 |
597 |
அரச ளிக்கு மரக்க னவன்றனை உரைகெ டுத்தவ னொல்கிட வரமி குத்தவெம் மாற்பேற் றடிகளைப் பரவி டக்கெடும் பாவமே. |
1.055.8 |
இலங்கை நாட்டை ஆளும் இராவணனின் புகழை மங்கச் செய்து, பின் அவன் பிழை உணர்ந்து வேண்டிய அளவில் அவனுக்கு வரங்கள் பலவற்றையும் மிகுதியாக அளித்தருளிய எமது திரு மாற்பேற்று அடிகளைப் பரவப் பாவம் கெடும்.
598 |
இருவர் தேவருந் தேடித் திரிந்தினி ஒருவ ராலறி வொண்ணிலன் மருவு நீள்கழன் மாற்பேற் றடிகளைப் பரவு வார்வினை பாறுமே. |
1.055.9 |
திருமால் பிரமன் ஆகிய இருவரும் அடிமுடி காணத்தேடித் திரிந்தும் ஒருவராலும் அறிய ஒண்ணாத இயல்பினனாகிய, திருமாற்பேற்றுள் விளங்கும் சிவபிரானுடைய பெருமை விரிந்த திருவடிகளைப் பரவித் துதிப்பார் வினைகள் கெடும்.
599 |
தூசு போர்த்துழல் வார்கையிற் றுற்றுணும் நீசர் தம்முரை கொள்ளெலும் தேச மல்கிய தென்றிரு மாற்பேற்றின் ஈச னென்றெடுத் தேத்துமே. |
1.055.10 |
ஆடையை மேனிமேற் போர்த்து உழல்வோரும், கைகளில் உணவை ஏற்று உண்ணும் இழிந்தோருமாகிய புத்த, சமணர்களின் உரைகளை மெய்யெனக் கொள்ளாதீர். புகழ் பொருந்திய அழகிய திருமாற்பேற்றுள் விளங்கும் ஈசன் என்று பெருமானைப் புகழ்ந்து போற்றுமின்.
600 |
மன்னி மாலொடு சோமன் பணிசெயும் மன்னு மாற்பேற் றடிகளை மன்னு காழியுண் ஞானசம் பந்தன்சொல் பன்ன வேவினை பாறுமே. |
1.055.11 |
திருமாலும் சந்திரனும் தங்கியிருந்து பணிசெய்து வழிபட்ட நிலைபேறுடைய திருமாற்பேற்றுள் விளங்கும் இறைவனை நிலைத்த காழி மாநகருள் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத்தை ஓதினால் வினைகள் கெடும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 53 | 54 | 55 | 56 | 57 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமாற்பேறு - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - விளங்கும், பொருந்திய, மாற்பேற், திருமாற்பேற்றில், திருமாற்பேறு, திருமாற்பேற்றுள், கெடும், மாற்பேற்றின், வினைகள், உம்மையே, வானவர், தாரில்லை, செய்து, றடிகளைப், பாறுமே, மாற்பேற்று, கண்டத்தை, ஒப்பற்ற, நஞ்சினை, மாமலர், திருமுறை, நின்னையே, திருச்சிற்றம்பலம், உடையவரே, திருமால்