முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.054.திருஓத்தூர்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.054.திருஓத்தூர்
1.054.திருஓத்தூர்
பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதநாதர்.
தேவியார் - இளமுலைநாயகியம்மை.
580 |
பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி ஏத்தா தாரில்லை யெண்ணுங்கால் ஓத்தூர் மேய வொளிமழு வாளங்கைக் கூத்தீ ரும்ம குணங்களே. |
1.054.1 |
திருஓத்தூரில் அழகிய கையில் ஒளி பொருந்திய மழுவாகிய வாளை ஏந்தியவராய் எழுந்தருளிய கூத்தரே, ஆராயுமிடத்து பூசைக்குரிய நறுமலர்களைத் தேர்ந்து பறித்தும் ஏனைய உபகரணங்களைச் சேகரித்துக் கொண்டு, உம் குணநலங்களைப் போற்றி பொன் போன்ற திருவடிகளை ஏத்தி, வணங்காதார் இல்லை.
581 |
இடையீர் போகா விளமுலை யாளையோர் புடையீ ரேபுள்ளி மானுரி உடையீ ரேயும்மை யேத்துது மோத்தூர்ச் சடையீ ரேயும தாளே. |
1.054.2 |
திருஓத்தூரில் சடைமுடியோடு விளங்கும் இறைவரே, ஈர்க்கு இடையில் செல்லாத நெருக்கமான இளமுலைகளை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவரே, புள்ளிமான் தோலை ஆடையாக உடுத்தியவரே, உம் திருவடிகளை நாங்கள் வணங்குகிறோம்.
582 |
உள்வேர் போல நொடிமையி னார்திறம் கொள்வீ ரல்குலோர் கோவணம் ஒள்வா ழைக்கனி தேன்சொரி யோத்தூர்க் கள்வீ ரேயும காதலே. |
1.054.3 |
ஒளிசிறந்த வாழைக் கனிகள் தேன் போன்ற சாற்றைச் சொரியும் திருவோத்தூரில் அரையிற் கோவணம் உடுத்தியவராய் விளங்கும் கள்வரே, உம் காதல் மிக நன்று. பொய் பேசும் இயல்பினராய் அடியார்களை நினைப்பவரைப் போலக் காட்டி அவரை ஏற்றுக் கொள்வீர்.
583 |
தோட்டீ ரேதுத்தி யைந்தலை நாகத்தை ஆட்டீ ரேயடி யார்வினை ஓட்டீ ரேயும்மை யேத்துது மோத்தூர் நாட்டீ ரேயரு ணல்குமே. |
1.054.4 |
செங்காந்தட்பூவை அணிந்தவரே! படப்பொறிகளை உடைய ஐந்து தலை நாகத்தை ஆட்டுபவரே! அடியவர் வினைகளை ஓட்டுபவரே! திருவோத்தூர் நாட்டில் எழுந்தருளியவரே! உம்மைத் துதிக்கின்றோம்; அருள்புரிவீராக.
584 |
குழையார் காதீர் கொடுமழு வாட்படை உழையாள் வீர்திரு வோத்தூர் பிழையா வண்ணங்கள் பாடிநின் றாடுவார் அழையா மேயரு ணல்குமே. |
1.054.5 |
குழையணிந்த காதினை உடையவரே, கொடிய மழு என்னும் வாட்படையை ஒருபாலுள்ள கரத்தில் ஏந்தி ஆள்பவரே, திருவோத்தூரில் பிழை நேராதபடி வண்ணப் பாடல்கள் பல பாடி நின்று ஆடும் அடியார்க்கு அழையாமலே வந்து அருள் நல்குவீராக.
585 |
மிக்கார் வந்து விரும்பிப் பலியிடத் தக்கார் தம்மக்க ளீரென் றுட்கா தாருள ரோதிரு வோத்தூர் நக்கீ ரேயரு ணல்குமே. |
1.054.6 |
திருவோத்தூரில் மகிழ்ந்து உறையும் இறைவரே, நீர் பலி கொள்ள வருங்காலத்து, உம் திருமுன் அன்பு மிக்கவராய் விரும்பி வந்து பலியிடுதற்குத் தம் மக்களுள் மகளிரை அனுப்புதற்கு அஞ்சாத தந்தை தாயர் உளரோ? எவ்வாறேனும் ஆக, அவர் தமக்கு அருள் நல்குவீராக.
586 |
தாதார் கொன்றை தயங்கு முடியுடை நாதா வென்று நலம்புகழ்ந் தோதா தாருள ரோதிரு வோத்தூர் ஆதீ ரேயரு ணல்குமே. |
1.054.7 |
திருவோத்தூரில் முதற்பொருளாக விளங்குபவரே! மகரந்தம் பொருந்திய கொன்றை மலர் விளங்கும் திருமுடியை உடைய தலைவரே! என்றழைத்து உமது அழகினைப்புகழ்ந்து ஓதாதவர் உளரோ? அருள் நல்குவீராக.
587 |
என்றா னிம்மலை யென்ற வரக்கனை வென்றார் போலும் விரலினால் ஒன்றார் மும்மதி லெய்தவ னோத்தூர் என்றார் மேல்வினை யேகுமே. |
1.054.8 |
இக்கயிலைமலை எம்மாத்திரம் என்று கூறிய இராவணனைக் கால்விரலால் வென்றவரும், தம்மோடு மனம் பொருந்தாத திரிபுரத்தசுரர்தம் மும்மதில்களைக் கணையால் எய்து அழித்தவருமாகிய சிவபிரானது திருவோத்தூர் என்று ஊர்ப் பெயரைச் சொன்ன அளவில் சொல்லிய அவர்மேல் உள்ள வினைகள் போகும்.
588 |
நன்றா நான்மறை யானொடு மாலுமாய்ச் சென்றார் போலுந் திசையெலாம் ஒன்றா யொள்ளெரி யாய்மிக வோத்தூர் நின்றீ ரேயுமை நேடியே. |
1.054.9 |
திருவோத்தூரில் விளங்கும் இறைவரே! நல்லன செய்யும் நான்கு வேதங்களை ஓதுபவனாகிய பிரமன், திருமால் ஆகியோர் எரியுருவாய் நீர் ஒன்றுபட்டுத் தோன்றவும், அறியாராய் திசையனைத்தும் தேடித் திரிந்து எய்த்தனர் அவர்தம் அறிவுநிலையாதோ?
589 |
கார மண்கலிங் கத்துவ ராடையர் தேரர் சொல்லவை தேறன்மின் ஓரம் பாலெயி லெய்தவ னோத்தூர்ச் சரீ வன்கழல் சேர்மினே. |
1.054.10 |
கரிய நிறத்தவராகிய சமணர்களும், கலிங்க நாட்டுத்துவர் ஏற்றிய ஆடையை அணிந்த புத்தத் துறவியரும் கூறும் பொய் மொழிகளை நம்பாதீர். முப்புரங்களை ஓரம்பினால் எய்து அழித்தவனாகிய, திருவோத்தூரில் விளங்கும் சிறப்பு மிக்க சிவபிரானின் கழல்களைச் சேர்வீர்களாக.
590 |
குரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர் அரும்பு கொன்றை யடிகளைப் பெரும்பு கலியுண் ஞானசம்பந் தன்சொல் விரும்பு வார்வினை வீடே. |
1.054.11 |
திருவோத்தூரில், ஆண் பனைகள் குரும்பைக் குலைகளை ஈனும் அற்புதத்தைச் செய்தருளிய கொன்றை அரும்பும் சடைமுடி உடைய இறைவரைப் பெருமை மிக்க திருப்புகலி என்னும் பெயருடைய சீகாழிப் பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் போற்றியுரைத்த இப்பாமாலையை விரும்பும் அன்பர்களின் வினைகள் அழியும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 52 | 53 | 54 | 55 | 56 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருஓத்தூர் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருவோத்தூரில், விளங்கும், கொன்றை, வோத்தூர், ணல்குமே, இறைவரே, நல்குவீராக, வினைகள், திருவோத்தூர், லெய்தவ, ரோதிரு, என்னும், கோவணம், திருஓத்தூரில், திருச்சிற்றம்பலம், திருமுறை, பொருந்திய, திருவடிகளை, திருஓத்தூர், யேத்துது, ரேயும்மை, நாகத்தை