முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.023.திருக்கோலக்கா
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.023.திருக்கோலக்கா
1.023.திருக்கோலக்கா
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சத்தபுரீசர்.
தேவியார் - ஓசைகொடுத்தநாயகியம்மை.
239 |
மடையில் வாளை பாய மாதரார் குடையும் பொய்கைக் கோலக் காவுளான் சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீள் உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ. |
1.023.1 |
நீரைத் தேக்கி வெளிவிடும் மடையில் வாளை மீன்கள் துள்ளிப் பாயுமாறு பெண்கள் கையால் குடைந்து நீராடும் பொய்கைகளை உடைய திருக்கோலக்காவில் எழுந்தருளியுள்ள இறைவன், சடைமுடியையும், அதன்கண் பிறையையும், திருமேனி முழுவதும் திருநீற்றுப் பூச்சையும் இடையில் ஆடையாகக் கீள் உடையையும் கொண்ட உருவம் உடையவனாய் இருப்பது ஏனோ?
240 |
பெண்டான் பாக மாகப் பிறைச்சென்னி கொண்டான் கோலக் காவு கோயிலாக் கண்டான் பாதங் கையாற் கூப்பவே உண்டா னஞ்சை யுலக முய்யவே. |
1.023.2 |
உமையம்மையைத் தன் திருமேனியில் இடப்பாதியாகக்கொண்டு, கலைகள் ஒன்றொன்றாகக் குறைந்து வந்த இளம் பிறையைச் சடைமுடி மீது ஏற்றுக் கொண்டவனாகிய சிவபிரான், கோலக்காவிலுள்ள கோயிலைத் தன் இருப்பிடமாகக் கொண்டவன். திருப்பாற்கடலில் நஞ்சு தோன்றியபோது காவாய் என அனைவரும் கைகூப்பி வணங்க உலகம் உய்யுமாறு அந்நஞ்சினை உண்டு அருளியவன்.
241 |
பூணற் பொறிகொ ளரவம் புன்சடை கோணற் பிறையன் குழகன் கோலக்கா மாணப் பாடி மறைவல் லானையே பேணப் பறையும் பிணிக ளானவே. |
1.023.3 |
அழகிய புள்ளிகளை உடைய பாம்பை அணிகலனாகக் கொண்டு, சிவந்த சடையின்மேல் வளைந்த பிறைமதியைச் சூடிய, என்றும் மாறா இளமைத் தன்மை உடைய சிவபிரான் எழுந்தருளி விளங்கும் திருக்கோலக்காவை மாட்சிமை தங்கப் பாடி, வேதங்களை அருளிய அப்பெருமானைப் பேணித் தொழப் பிணிகளானவை நீங்கும்.
242 |
தழுக்கொள் பாவந் தளர வேண்டுவீர் மழுக்கொள் செல்வன் மறிசே ரங்கையான் குழுக்கொள் பூதப் படையான் கோலக்கா இழுக்கா வண்ண மேத்தி வாழ்மினே. |
1.023.4 |
பல்வேறு சமயங்களிலும் செய்த பாவங்கள் நீங்க வேண்டும் என்று விரும்புகின்றவர்களே! மழுவாயுதத்தைப் படைக்கலனாகக் கொண்ட செல்வனும், மானை ஏந்திய அழகிய கையை உடையவனும், பூதங்களின் குழுக்களை உடையவனும் ஆகிய சிவபிரானது கோலக்காவைத் தவறாமல் சென்று தரிசித்து வாருங்கள். நும் பாவங்கள் அகலும்.
243 |
மயிலார் சாயன் மாதோர் பாகமா எயிலார் சாய வெரித்த வெந்தைதன் குயிலார் சோலைக் கோலக் காவையே பயிலா நிற்கப் பறையும் பாவமே. |
1.023.5 |
ஆண்மயில் போலும் கட்புலனாகிய மென்மையை உடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவனும், அசுரர்களின் முப்புரங்கள் கெடுமாறு அவற்றை எரித்தவனும் ஆகிய எம் தந்தையாகிய சிவபிரானது, குயில்கள் நிறைந்து வாழும் சோலைகளை உடைய திருக்கோலக்காவைப் பலகாலும் நினைக்கப் பாவங்கள் நீங்கும்.
244 |
வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர் கடிகொள் கொன்றை கலந்த சென்னியான் கொடிகொள் விழவார் கோலக் காவுளெம் அடிகள் பாத மடைந்து வாழ்மினே. |
1.023.6 |
ஒன்றிலிருந்து பிறிதொன்று கிளைக்கும் வினைப்பகையை நீக்கிக் கொள்ள விரும்புகின்றவர்களே! மணம் பொருந்திய கொன்றை மலர் விரவிய சென்னியை உடையோனும், கொடிகள் கட்டப்பெற்று விழாக்கள் பலவும் நிகழ்த்தப்பெறும் கோலக்காவில் விளங்கும் எம் தலைவனும் ஆகிய பெருமான் திருப்பாதங்களை அடைந்து வாழ்வீர்களாக.
245 |
நிழலார் சோலை நீல வண்டினங் குழலார் பண்செய் கோலக் காவுளான் கழலான் மொய்த்த பாதங் கைகளால் தொழலார் பக்கல் துயர மில்லையே. |
1.023.7 |
நிழல் செறிந்த சோலைகளில் நீல நிறம் பொருந்திய வண்டினங்கள் வேய்ங்குழல் போல இசை வழங்கும் திருக்கோலக்காவில் விளங்கும் சிவபிரானுடைய வீரக்கழல் செறிந்த திருவடிகளைக் கை கூப்பித் தொழுபவர் பக்கம் துயரம் வாராது.
246 |
எறியார் கடல்சூ ழிலங்கைக் கோன்றனை முறியார் தடக்கை யடர்த்த மூர்த்திதன் குறியார் பண்செய் கோலக் காவையே நெறியாற் றொழுவார் வினைகள் நீங்குமே. |
1.023.8 |
அலைகள் எறியும் கடலால் சூழப்பட்ட இலங்கை மன்னனாகிய இராவணனை, அவன் நீண்ட கைகள் முரிதலைப் பொருந்துமாறு அடர்த்த சிவபிரானைச் சுரத்தானங்களைக் குறித்த பண்ணிசையால் கோலக்காவில் சிவாகம நெறிகளின்படி வழிபடுவார் வினைகள் நீங்கும்.
247 |
நாற்ற மலர்மே லயனு நாகத்தில் ஆற்ற லணைமே லவனுங் காண்கிலாக் கூற்ற முதைத்த குழகன் கோலக்கா ஏற்றான் பாத மேத்தி வாழ்மினே. |
1.023.9 |
மணம் பொருந்திய தாமரை மலர் மேல் விளங்கும் நான்முகனும், ஆற்றல் பொருந்திய ஆதிசேடனாகிய அணையில்உறங்கும் திருமாலும் காணுதற்கு இயலாத, இயமனை உதைத்த குழகன் ஆகிய கோலக்காவில் விளங்கும் ஆன்ஏற்றை வாகனமாகக் கொண்ட இறைவன் திருவடிகளைப் போற்றி வாழ்வீர்களாக.
248 |
பெற்ற மாசு பிறக்குஞ் சமணரும் உற்ற துவர்தோ யுருவி லாளருங் குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப் பற்றிப் பரவப் பறையும் பாவமே. |
1.023.10 |
நீராடாமல் தம் உடலிற் சேர்ந்த மாசுடன் தோன்றும் சமணரும், தம் உடலிற் பொருந்திய கல்லாடையால் தம் உருவை மறைத்துக் கொள்ளும் புத்தர்களும், குற்றமுடைய சமய நெறியை மேற்கொண்டவராவர். அவர்கள் தம் தெய்வம் என்று ஏற்றுக்கொள்ளாத கோலக்கா இறைவனைப் பற்றிப் போற்றப் பாவம் தீரும்.
249 |
நலங்கொள் காழி ஞானசம் பந்தன் குலங்கொள் கோலக் காவு ளானையே வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார் உலங்கொள் வினைபோ யோங்கி வாழ்வரே. |
1.023.11 |
இயற்கை நலங்கள் யாவும் நிறைந்த சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், பண்பால் உயர்ந்த குலத்தினரைக் கொண்டுள்ள கோலக்காவில் விளங்கும் இறைவனைப் பாடிய திருவருள் வென்றியைக் கொண்ட இத்திருப்பதிகப் பாடல்களை ஓதி வழிபடவல்ல வாய்மையாளர், மலை போலும் திண்ணிய வினைகள் நீங்கப் பெற்றுச் சிறந்து வாழ்வர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 21 | 22 | 23 | 24 | 25 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கோலக்கா - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - விளங்கும், பொருந்திய, கோலக்கா, கோலக்காவில், பறையும், நீங்கும், உடையவனும், வினைகள், வாழ்மினே, பாவங்கள், குழகன், பண்செய், வாழ்வீர்களாக, மடையில், செறிந்த, திருச்சிற்றம்பலம், திருமுறை, இறைவனைப், உடலிற், பற்றிப், சமணரும், கொன்றை, போலும், மேத்தி, வேண்டுவீர், இறைவன், சிவபிரான், திருக்கோலக்காவில், திருக்கோலக்கா, சிவபிரானது, காவுளான், விரும்புகின்றவர்களே, காவையே