முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.120.திருவையாறு - திருவிராகம்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.120.திருவையாறு - திருவிராகம்
1.120.திருவையாறு - திருவிராகம்
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செம்பொன்சோதீசுரர்.
தேவியார் - அறம்வளர்த்தநாயகியம்மை.
1293 |
பணிந்தவ ரருவினை பற்றறுத் தருள்செயத் துணிந்தவன் தோலொடு நூல்துதை மார்பினில் பிணிந்தவ னரவொடு பேரெழி லாமைகொண் டணிந்தவன் வளநக ரந்தணை யாறே. |
1.120.1 |
தன்னை வணங்கும் அடியவர்களின் நீக்குதற்கரிய வினைகளை அடியோடு அழித்து அவர்கட்கு அருள் வழங்கத் துணிந்திருப்பவனும், மார்பின்கண் மான்தோலோடு விளங்கும் முப்புரி நூல் அணிந்தவனும், பாம்போடு பெரிய அழகிய ஆமை ஓட்டைப் பூண்டவனும், ஆகிய சிவபிரானது வளநகர் அழகிய குளிர்ந்த ஐயாறாகும்.
1294 |
கீர்த்திமிக் கவனகர் கிளரொளி யுடனடப் பார்த்தவன் பனிமதி படர்சடை வைத்துப் போர்த்தவன் கரியுரி புலியத ளரவரை ஆர்த்தவன் வளநக ரந்தணை யாறே. |
1.120.2 |
புகழ்மிக்கவனும், பகைவர்களாகிய அவுணர்களின் முப்புரங்களைப் பேரொளி தோன்ற எரியுமாறு அழிந்தொழிய நெற்றி விழியால் பார்த்தவனும், குளிர்ந்த திங்களை விரிந்த சடைமுடிமீது வைத்துள்ளவனும், யானையின் தோலை உரித்துப் போர்த்தவனும், புலித்தோலைப் பாம்போடு இடையில் கட்டியவனும் ஆகிய சிவபிரானது வளநகர் அழகிய குளிர்ந்த ஐயாறாகும்.
1295 |
வரிந்தவெஞ் சிலைபிடித் தவுணர்தம்
வளநகர் எரிந்தற வெய்தவ னெழில்திகழ் மலர்மேல் இருந்தவன் சிரமது விமையவர் குறைகொள அரிந்தவன் வளநக ரந்தணை யாறே. |
1.120.3 |
இருமுனைகளும் இழுத்துக் கட்டப்பட்ட கொடிய வில்லைப் பிடித்து, அசுரர்களின் வளமையான முப்புரங்கள் எரிந்து அழியுமாறு கணை எய்தவனும், தேவர்கள் வேண்ட அழகிய தாமரை மலர்மேல் எழுந்தருளிய பிரமன் தலைகளில் ஒன்றைக் கொய்தவனுமாகிய சிவபிரானது வளநகர் அழகும் தண்மையும் உடைய ஐயாறாகும்.
1296 |
வாய்ந்தவல் லவுணர்தம் வளநக ரெரியிடை மாய்ந்தற வெய்தவன் வளர்பிறை விரிபுனல் தோய்ந்தெழு சடையினன் தொன்மறை யாறங்கம் ஆய்ந்தவன் வளநக ரந்தணை யாறே. |
1.120.4 |
வலிமை வாய்ந்த அவுணர்களின் வளமையான முப்புரங்களும் தீயிடை அழிந்தொழியுமாறு கணை எய்தவனும், வளரத்தக்க பிறை, பரந்து விரிந்து வந்த கங்கை ஆகியன தோய்ந்தெழும் சடையினனும், பழமையான நான்கு வேதங்கள் ஆறு அங்கங்கள் ஆகியவற்றை நன்கு ஆய்வு செய்தருளியவனும் ஆகிய சிவபிரானது நகர் அழகும் தண்மையும் உடைய திருவையாறாகும்.
1297 |
வானமர் மதிபுல்கு சடையிடை யரவொடு தேனமர் கொன்றையன் திகழ்தரு மார்பினன் மானன மென்விழி மங்கையொர் பாகமும் ஆனவன் வளநக ரந்தணை யாறே. |
1.120.5 |
வானின்கண் விளங்கும் பிறைமதி பொருந்திய சடையின்மேல் பாம்பையும், தேன் நிறைந்த கொன்றையையும் அணிந்தவனும், விளங்கும் மார்பினை உடையவனும், மான்போன்ற மென்மையான விழிகளை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனுமாகிய சிவபிரானது நகர் அழகும் தண்மையும் உடைய திருவையாறாகும்.
1298 |
முன்பனை முனிவரோ டமரர்க ளடிதொழும் இன்பனை யிணையில விறைவனை யெழ்ல்திகழ் என்பொனை யேதமில் வேதியர் தாந்தொழும் அன்பன வளநக ரந்தணை யாறே. |
1.120.6 |
வலிமையுடையவனும் முனிவர்களும் அமரர்களும் தொழும் திருவடிகளை உடைய இன்ப வடிவினனும், ஒப்பற்ற முதல்வனும், அழகு விளங்கும் என் பொன்னாக இருப்பவனும், குற்றமற்ற வேதியர்களால் தொழப்பெறும் அன்பனும் ஆகிய சிவபிரானது வளநகர் அழகும் தண்மையும் உடைய ஐயாறாகும்.
1299 |
வன்றிற லவுணர்தம் வளநக ரெரியிடை வெந்தற வெய்தவன் விளங்கிய மார்பினில் பந்தமர் மெல்விரல் பாகம தாகிதன் அந்தமில் வளநக ரந்தணை யாறே. |
1.120.7 |
பெருவலி படைத்த அவுணர்களின் வளமையான முப்புர நகர்களும் தீயிடையே வெந்தழியுமாறு கணை எய்தவனும், விளங்கிய மார்பகத்தே பந்தணை மெல் விரலியாகிய உமையம்மையைப் பாகமாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரானது அழிவற்ற வளநகர் அழகும் தண்மையுமுடைய ஐயாறாகும்.
1300 |
விடைத்தவல் லரக்கனல் வெற்பினை யெடுத்தலும் அடித்தலத் தாலிறை யூன்றிமற் றவனது முடித்தலை தோளவை நெரிதர முறைமுறை அடர்த்தவன் வளநக ரந்தணை யாறே. |
1.120.8 |
செருக்கோடு வந்த வலிய இராவணன் நல்ல கயிலை மலையைப் பெயர்த்த அளவில் தனது அடித்தலத்தால் சிறிது ஊன்றி, அவ்விராவணனின் முடிகள் அணிந்த தலைகள், தோள்கள் ஆகியவற்றை முறையே நெரித்தருளிய சிவபிரானது வளநகர் அழகும் தண்மையும் உடைய ஐயாறாகும்.
1301 |
விண்ணவர் தம்மொடு வெங்கதி ரோனல் எண்ணிலி தேவர்க ளிந்திரன் வழிபடக் கண்ணனும் பிரமனும் காண்பரி தாகிய அண்ணல்தன் வளநக ரந்தணை யாறே. |
1.120.9 |
வானகத்தே வாழ்வார் தம்மோடு, சூரியன், அக்கினி, எண்ணற்ற தேவர்கள், இந்திரன் முதலானோர் வழிபட, திருமால் பிரமர்கள் காணுதற்கு அரியவனாய் நின்ற தலைவனாகிய சிவபிரானது வளநகர், அழகும் தண்மையும் உடைய ஐயாறாகும். வெங்கதிரோன் அனல் என்று பாடம் ஓதுவாரும் உளர்.
1302 | . மருளுடை மனத்துவன் சமணர்கண் மாசறா இருளுடை யிணைத்துவர்ப் போர்வையி னார்களும் தெருளுடை மனத்தவர் தேறுமின் திண்ணமா அருளுடை யடிகள்தம் அந்தணை யாறே. |
1.120.10 |
தௌந்த மனத்தினை உடையவர்களே! மருட்சியை உடைய மனத்தவர்களாகிய வலிய சமணர்களும், குற்றம் நீங்காத இரண்டு துவர்நிற ஆடைகளைப் பூண்ட புத்தர்களும் கூறுவனவற்றைத் தௌயாது சிவபிரானை உறுதியாகத் தௌவீர்களாக. கருணையாளனாக விளங்கும் சிவபிரானது இடம் அழகும் தண்மையும் உடைய ஐயாறாகும்.
1303 |
நலமலி ஞானசம் பந்தன தின்றமிழ் அலைமலி புனல்மல்கு மந்தணை யாற்றினைக் கலைமலி தமிழிவை கற்றுவல் லார்மிக நலமலி புகழ்மிகு நன்மையர் தாமே. |
1.120.11 |
அலைகள் வீசும் ஆறு குளம் முதலிய நீர் நிலைகளால் சூழப்பட்ட ஐயாற்று இறைவனை, நன்மைகள் நிறைந்த ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய இன்தமிழால் இயன்ற கலைநலம் நிறைந்த இத்திருப்பதிகத்தைக் கற்று வல்லவராயினார் நன்மை மிக்க புகழாகிய நலத்தைப் பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 118 | 119 | 120 | 121 | 122 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவையாறு - திருவிராகம் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - சிவபிரானது, ரந்தணை, ஐயாறாகும், வளநகர், அழகும், தண்மையும், விளங்கும், எய்தவனும், நிறைந்த, குளிர்ந்த, வளமையான, அவுணர்களின், ஆகியவற்றை, வெய்தவன், ரெரியிடை, திருவையாறாகும், திருவிராகம், விளங்கிய, பாகமாகக், லவுணர்தம், திருமுறை, மலர்மேல், திருவையாறு, அணிந்தவனும், மார்பினில், திருச்சிற்றம்பலம், தேவர்கள், பாம்போடு