முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.119.திருக்கள்ளில்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.119.திருக்கள்ளில்
1.119.திருக்கள்ளில்
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சிவானந்தேசுவரர்.
தேவியார் - ஆனந்தவல்லியம்மை.
1281 |
வெண்செநெல் விளைகழனி பண்செலப் பலபாட நன்சொலி னாற்பரவு ஒண்சொலி னிவைமாலை |
1.119.1 |
வெண்ணெல், செந்நெல் ஆகிய இருவகை நெற்பயிர்களும் விளைவுதரும் வயல்களையுடையதும் விழாக்களின் ஆரவாரம் மிகுந்து தோன்றுவதுமாகிய கழுமலத்தில் அவதரித்தவனாய்ப் பண்ணோடு பொருந்திய பாடல்கள் பலவற்றால் இசைபாடி இறைவனைப் பரவிவரும் ஞானசம்பந்தன், திருப்பருப்பதத்தை நல்ல சொற்கள் அமைந்த பாடலால் பாடிய ஒளி பொருந்திய இத்திருப்பதிகப் பாமாலையைப் பலகாலும் எண்ணிப் பரவ, அதுவே தவமாகிப் பயன்தரும்.
1282 |
முள்ளின்மேன் முதுகூகை முரலுஞ் சோலை வெள்ளின்மேல் விடுகூறைக் கொடி விளைந்த கள்ளின்மே யவண்ணல் கழல்க ணாளும் உள்ளுமே லுயர்வெய்த லொரு தலையே. |
1.119.2 |
முள்ளுடைய மரங்களின்மேல் இருந்து முதிய கூகைகள் ஒலிக்கும் சோலைகள் சூழ்ந்ததும், விளமரங்களின்மேல் படர்ந்த கூறைக் கொடிகள் விளைந்து தோன்றுவதுமாய கள்ளில் என்னும் இத்தலத்தில் எழுந்தருளிய சிவபிரான் திருவடிகளை நாள்தோறும் நினைவோமானால் உயர்வெய்துதல் உறுதியாகும்.
1283 |
ஆடலான் பாடலா னரவங்கள் பூண்டான் ஓடலாற் கலனில்லா னுறை பதியால் காடலாற் கருதாத கள்ளின் மேயான் பாடெலாம் பெரியார்கள் பரசு வாரே. |
1.119.3 |
ஆடல் பாடல்களில் வல்லவனும், பாம்புகள் பலவற்றை அணிந்தவனும், தலையோட்டையன்றி வேறு உண்கலன் இல்லாதவனும், சுடுகாட்டைத் தவிர வேறோர் இடத்தைத் தனது இடமாகக் கொள்ளாதவனும் ஆகிய சிவபிரான், பெரியோர்கள் அருகிலிருந்து அவன் புகழைப் பரவக் கள்ளில் என்னும் தலத்தைத் தான் உறையும் பதியாகக் கொண்டுள்ளான்.
1284 |
எண்ணார்மும் மதிலெய்த விமையா முக்கண் பண்ணார்நான் மறைபாடும் பரம யோகி கண்ணார்நீ றணிமார்பன் கள்ளின் மேயான் பெண்ணாணாம் பெருமானெம் பிஞ்ஞ கனே. |
1.119.4 |
பகைவர்களாகிய அசுரர்களின் மும்மதில்களை எய்து அழித்தவனும், இமையாத மூன்று கண்களை உடையவனும் இசையமைப்போடு கூடிய நான்மறைகளைப் பாடி மகிழும் மேலான யோகியும், கண்களைக் கவரும் வண்ணம் திருநீறு அணிந்த மார்பினனும், பெண் ஆண் என இருபாலாகக் கருதும் உமைபாகனும் ஆகிய பெருமான், கள்ளில் என்னும் இத்தலத்தில் எழுந்தருளியுள்ளான்.
1285 |
பிறைபெற்ற சடையண்ணல் பெடைவண் டாலும் நறைபெற்ற விரிகொன்றைத் தார்ந யந்த கறைபெற்ற மிடற்றண்ணல் கள்ளின் மேயான் நிறைபெற்ற வடியார்கள் நெஞ்சு ளானே. |
1.119.5 |
பிறை சூடிய சடையை உடைய அண்ணலும், பெண்வண்டுகளோடு ஆண் வண்டுகள் கூடி ஒலிக்கும் தேன் நிறைந்த விரிந்த கொன்றை மாலையை விரும்பிச் சூடிய, விடக்கறை பொருந்திய கண்டத்தை உடையவனும், மனநிறைவு பெற்ற அடியவர்களின் நெஞ்சங்களில் நிறைந்து நிற்பவனுமாகிய சிவபிரான், கள்ளில் என்னும் இத்தலத்தே எழுந்தருளியுள்ளான்.
1286 |
விரையாலு மலராலும் விழுமை குன்றா உரையாலு மெதிர்கொள்ள வூரா ரம்மாக் கரையார்பொன் புனல்வேலிக் கள்ளின் மேயான் அரையார்வெண் கோவணத்த வண்ணல் தானே. |
1.119.6 |
இடையில் வெண்ணிறமான கோவணத்தை உடுத்த சிவபிரான் மணம் கமழும் ஐவகை மணப் பொருள்களாலும் மலர்களாலும் சீர்மை குன்றாத புகழுரைகளாலும் ஊர் மக்கள் எதிர்கொள்ள, அழகியவும் பெரியவுமான கரைகளை உடைய பொன்னி நதியின் கிளையாறு சூழ்ந்துள்ள கள்ளில் என்னும் இத்தலத்தே எழுந்தருளியுள்ளான்.
1287 |
நலனாய பலிகொள்கை நம்பா னல்ல வலனாய மழுவாளும் வேலும் வல்லான் கலனாய தலையோட்டான் கள்ளின் மேயான் மலனாய தீர்த்தெய்து மாதவத் தோர்க்கே. |
1.119.7 |
மக்கட்கு நன்மைகள் உண்டாகத் தான் பலியேற்கும் கொள்கையனாகிய நம்பனும், அழகிய வெற்றியைத் தரும் மழு வாள் வேல் ஆகியவற்றில் வல்லவனும், உண்கலனாகிய தலை யோட்டை உடையவனும் ஆகிய சிவபிரான், தன்னை எய்தும் மாதவத் தோர்க்கு மும்மலங்களைத் தீர்த்து அருள்பவனாய்க் கள்ளில் என்னும் இத்தலத்தில் எழுந்தருளியுள்ளான்.
1288 |
பொடியார்மெய் பூசினும் புறவி னறவம் குடியாவூர் திரியினும் கூப்பி டினும் கடியார்பூம் பொழிற்சோலைக் கள்ளின் மேயான் அடியார்பண் பிகழ்வார்க ளாதர் களே. |
1.119.8 |
மணம் கமழும் அழகிய பொழில்களும் சோலைகளும் சூழ்ந்த கள்ளிலில் எழுந்தருளிய இறைவன் அடியவர்கள் திருநீற்றுப் பொடியை உடலில் பூசினும், சோலைகளில் எடுத்த தேனைஉண்டு திரியினும் பலவாறு பிதற்றினும் அவர்கள் மனம் இறைவன் திருவருளிலேயே அழுந்தியிருக்குமாதலின் அடியவர்களின் குணம் செயல்களை இகழ்பவர்கள் அறியாதவர்களாவர்.
1289 |
திருநீல மலரொண்கண் டேவி பாகம் புரிநூலுந் திருநீறும் புல்கு மார்பில் கருநீல மலர்விம்மு கள்ளி லென்றும் பெருநீல மிடற்றண்ணல் பேணு வதே. |
1.119.9 |
அழகிய நீலமலர் போன்ற ஒளி பொருந்திய கண்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு, முப்புரி நூலும் திருநீறும் பொருந்திய மார்பினனாய் விளங்கும் கரிய மிடற்று அண்ணலாகிய சிவபிரான் என்றும் விரும்புவது கருநீலமலர்கள் மிகுந்து பூத்துள்ள கள்ளில் என்னும் தலமாகும்.
1290 |
வரியாய மலரானும் வையந் தன்னை உரிதாய வளந்தானு முள்ளு தற்கங் கரியானு மரிதாய கள்ளின் மேயான் பெரியானென் றறிவார்கள் பேசு வாரே. |
1.119.10 |
சிவந்த வரிகளைக் கொண்ட தாமரை மலர்மேல் உறையும் பிரமனும், உலகங்களைத் தனக்கு உரியதாகுமாறு அளந்த திருமாலும், நினைத்தற்கும் அரியவனாய் விளங்கும் பெரியோனாகிய இறைவன், அரியதலமாய் விளங்கும் கள்ளிலில் எழுந்தருளி உள்ளான். அறிந்தவர்கள் அவனையே பெரியோன் எனப் போற்றிப் புகழ்வர்.
1291 |
ஆச்சியப் பேய்களோ டமணர் குண்டர் பேச்சிவை நெறியல்ல பேணு மின்கள் மாச்செய்த வளவயன் மல்கு கள்ளில் தீச்செய்த சடையண்ணல் திருந்த டியே. |
1.119.11 |
பரிகசிக்கத்தக்க பேய்கள் போன்றவர்களாகிய அமணர்களும், புத்தர்களும், கூறும் உரைகள் உண்மையான நெறிகளை மக்கட்கு உணர்த்தாதவை. எனவே அவர்தம் உரைகளைக் கேளாது விடுத்து, பெருமைக்குரிய வள வயல்கள் நிறைந்த கள்ளிலில் விளங்கும் தீத்திரள் போன்ற சடைமுடியை உடைய சிவபிரானுடைய அழகிய திருவடிகளையே பேணுவீர்களாக.
1292 |
திகைநான்கும் புகழ்காழிச் செல்வ
மல்கு பகல்போலும் பேரொளியான் பந்த னல்ல முகைமேவு முதிர்சடையன் கள்ளி லேத்தப் புகழோடும் பேரின்பம் புகுது மன்றே. |
1.119.12 |
நாற்றிசை மக்களாலும் புகழப்பெறும் சீகாழிப் பதியில் செல்வவளம் நிறைந்த பகல் போன்ற பேரொளியினனாகிய ஞான சம்பந்தன், நறுமணம் கமழும் மலர் அரும்புகள் நிறைந்த, முதிர்ந்த சடைமுடி உடையவனாகிய சிவபிரானது கள்ளிலைப் போற்றிப் பாடிய இத்திருப்பதிகத்தைப் பாடி ஏத்தினால், புகழோடு பேரின்பம் அடையலாம்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 117 | 118 | 119 | 120 | 121 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கள்ளில் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கள்ளில், மேயான், கள்ளின், என்னும், சிவபிரான், பொருந்திய, நிறைந்த, விளங்கும், எழுந்தருளியுள்ளான், கமழும், இறைவன், கள்ளிலில், உடையவனும், இத்தலத்தில், திரியினும், பூசினும், மக்கட்கு, மிகுந்து, திருச்சிற்றம்பலம், பேரின்பம், போற்றிப், திருமுறை, திருநீறும், மாதவத், ஒலிக்கும், திருக்கள்ளில், கண்களை, உறையும், எழுந்தருளிய, சடையண்ணல், இத்தலத்தே, அடியவர்களின், மிடற்றண்ணல், வல்லவனும்