முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் » 1.00. பாயிரம்
பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 1.00. பாயிரம்
1.00. பாயிரம்
001 | உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்; நிலவு லாவிய நீர்மலி வேணியன், அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்; மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம். | 1.0.1 | 002 | ஊன் அடைந்த உடம்பின் பிறவியே தான் அடைந்த உறுதியைச் சாருமால்; தேன் அடைந்த மலர்ப் பொழில் தில்லையுள் மா நடஞ் செய் வரதர் பொற்றாள் தொழ. | 1.0.2 | 003 | எடுக்கும் மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய் நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத் தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக் கடக் களிற்றைக் கருத்துள் இருத்து வாம். | 1.0.3 | 004 | மதிவளர் சடைமுடி மன்றுளாரை முன் துதி செயும் நாயன்மார் தூய சொல்மலர்ப் பொதி நலன் நுகர்தரு புனிதர் பேரவை விதி முறை உலகினில் விளங்கி வெல்கவே. | 1.0.4 | 005 | அளவிலாத பெருமையராகிய அளவிலா அடியார் புகழ் கூறுகேன் அளவு கூட உரைப்பது அரிது ஆயினும் அளவிலாசை துரைப்ப அறைகுவேன். | 1.0.5 | 006 | தெரிவரும் பெருமைத் திருத் தொண்டர் தம் பொருவரும் சீர் புகலலுற்றேன் முற்றப் பெருகு தெண் கடல் ஊற்றுண் பெரு நசை ஒரு சுணங்கனை ஒக்கும் தகைமையேன். | 1.0.6 | 007 | செப்பலுற்ற பொருளின் சிறப்பினால் அப் பொருட்கு உரை யாவரும் கொள்வர் ஆல் இப் பொருட்கு என் உரை சிறிது ஆயினும் மெய்ப் பொருட்கு உரியார் கொள்வர் மேன்மையால். | 1.0.7 | 008 | மேய இவ் உரை கொண்டு விரும்புமாம் சேயவன் திருப் பேர் அம்பலம் செய்ய தூய பொன்னணி சோழன் நீடூழிபார் ஆய சீர் அநபாயன் அரசவை. | 1.0.8 | 009 | அருளின் நீர்மைத் திருத் தொண்டறிவரும் தெருளில் நீரிது செப்புதற்காம் எனின் வெருளில் மெய் மொழி வான் நிழல் கூறிய பொருளின் ஆகும் எனப் புகல்வாம் அன்றே. | 1.0.9 | 010 | இங்கிதன் நாமம் கூறின் இவ் உலகத்து முன்னாள் தங்கிருள் இரண்டில் மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற பொங்கிய இருளை ஏனைப் புற இருள் போக்கு கின்ற செங் கதிரவன் போல் நீக்கும் திருத் தொண்டர் புராணம் என்பாம். | 1.0.10 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
1.00. பாயிரம் - பன்னிரண்டாம் திருமுறை - திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - பொருட்கு, திருத், அடைந்த