கம்பர் நூல்கள் - சரசுவதி அந்தாதி
இராமாயணம் இயற்றிய கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் சரசுவதி அந்தாதியும் ஒன்றாகும். இது கலைமகளைச் சிறப்பித்துக் கூறும் நூலாகும்
நூல்
காப்பு
ஆய கலைக ளறுபத்து நான்கினையும் ஏய வுணர்விக்கு மென்னம்மை - தூய வுருப்பளிங்கு போல்வாளென் னுள்ளத்தி னுள்ளே யிருப்பளிங்கு வாரா திடர். |
படிக நிறமும் பவளச்செவ் வாயும் கடிகமழ்பூந் தாமரைபோற் கையுந் - துடியிடையும் அல்லும் பகலும் அனவரத முந்துதித்தால் கல்லுஞ்சொல் லாதோ கவி. |
கலித்துறை
சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கமலா சனத்தேவி செஞ்சொற் றார்தந்த வென்மனத் தாமரையாட்டி சரோருக மேற் பார்தந்த நாத னிசைதந்த வாரணப் பங்கயத்தாள் வார்தந்த சோதி யம்போருகத் தாளை வணங்குதுமே. | 1 |
வணங்குஞ் சிலைநுதலுங் கழைத்தோளும் வனமுலை மேற் சுணங்கும் புதிய நிலவெழு மேனியுந் தோட்டுடனே பிணங்குங் கருந்தடங் கண்களு நோக்கிப் பிரமனன்பால் உணங்குந் திருமுன் றிலாய் மறைநான்கு முரைப்பவளே. | 2 |
உரைப்பா ருரைக்குங் கலைகளெல்லா மெண்ணி லுன்னையன்றித் தரைப்பா லொருவர் தரவல்ல ரோதண் டரளமுலை வரைப்பா லமுதுதந் திங்கெனை வாழ்வித்த மாமயிலே விரைப்பா சடைமலர் வெண்டா மரைப்பதி மெல்லியலே. | 3 |
இயலா னதுகொண்டு நின்றிரு நாமங்க ளேத்துதற்கு முயலா மையாற்றடு மாறுகின்றே னிந்த மூவுலகும் செயலா லமைத்த கலைமகளே நின்றிரு வருளுக்கு அயலா விடாம லடியேனையு முவந் தாண்டருளே. | 4 |
அருக்கோ தயத்தினும் சந்திரோ தயமொத் தழகெறிக்கும் திருக்கோல நாயகி செந்தமிழ்ப் பாவை திசைமுகத்தான் இருக்கோ துநாதனுந் தானுமெப் போதுமினி திருக்கு மருக்கோல நாண்மல ராளென்னை யாளு மடமயிலே. | 5 |
மயிலே மடப்பிடியே கொடியே யிளமான் பிணையே குயிலே பசுங்கிளியே யன்னமே மனக்கூ ரிருட்கோர் வெயிலே நிலவெழு மேனிமின் னேயினி வேறுதவம் பயிலேன் மகிழ்ந்து பணிவே னுனதுபொற் பாதங்களே. | 6 |
பாதாம் புயத்திற் பணிவார் தமக்குப் பலகலையும் வேதாந்த முத்தியுந் தந்தருள் பாரதிவெள் ளிதழ்ப்பூஞ் சீதாம் புயத்தி லிருப்பா ளிருப்பவென் சிந்தையுள்ளே ஏதாம் புவியிற் பெறலரி தாவதெனக் கினியே. | 7 |
இனிநா னுணர்வ தெண்ணெண் கலையாளை இலகுதொண்டைக் கனிநாணுஞ் செவ்விதழ் வெண்ணிறத் தாளைக் கமலவயன் றனிநாயகியை யகிலாண்ட மும்பெற்ற தாயைமணப் பனிநாண் மலருறை பூவையை யாரணப் பாவையையே. | 8 |
பாவுந் தொடையும் பதங்களும் சீரும் பலவிதமா மேவுங் கலைகள் விதிப்பா ளிடம்விதியின் முதிய நாவும் பகர்ந்ததொல் வேதங்க ணான்கு நறுங்கமலப் பூவுந் திருப்பதம் பூவா லணிபவர் புந்தியுமே. | 9 |
புந்தியிற் கூரிரு ணீக்கும்புதிய மதிய மென்கோ வந்தியிற் றோன்றிய தீபமென்கோ நல்லரு மறையோர் சந்தியிற் றோன்றுந் தபனனென் கோமணித்தா மமென்கோ உந்தியிற் றோன்றும் பிரான்புயந் தோயு மொருத்தியையே. | 10 |
ஒருத்தியை யொன்றுமி லாவென் மனத்தினு வந்துதன்னை இருத்தியை வெண்கமலத் திப்பாளை யெண்ணெண் கலைதோய் கருத்தியை யைம்புலனுங் கலங்காமற் கருத்தை யெல்லாம் திருத்தியை யான்மற வேன்றிசை நான்முகன் தேவியையே. | 11 |
தேவருந் தெய்வப் பெருமானு நான்மறை செப்புகின்ற மூவருந் தானவரா கியுள் ளோருமுனி வரரும் யாவரு மேனையவெல் லாவுயிரு மிதழ் வெளுத்த பூவரு மாதினருள் கொண்டுஞா னம்புரி கின்றதே. | 12 |
புரிகின்ற சிந்தையி னூடே புகுந்துபுகுந் திருளை அரிகின்ற தாய்கின்ற வெல்லா வறிவினரும் பொருளைத் தெரிகின்ற வின்பங் கனிந்தூறி நெஞ்சந்தெ ளிந்துமுற்ற விரிகின்ற தெண்ணெண் கலைமா னுணர்த்திய வேதமுமே. | 13 |
வேதமும் வேதத்தி னந்தமு மந்தத்தின் மெய்ப்பொருளாம் பேதமும் பேதத்தின் மார்க்கமு மார்க்கப் பிணக்கறுக்கும் போதமும் போதவுரு வாகியெங் கும்பொதிந் தவிந்து நாதமு நாதவண் டார்க்கும்வெண் டாமரை நாயகியே. | 14 |
நாயக மான மலரக மாவதுஞான வின்பச் சேயக மான மலரக மாவதுந் தீவினையா லேயக மாறி விடுமக மாவது மெவ்வுயிர்க்குந் தாயக மாவதுந் தாதார்சு வேதச ரோருகமே. | 15 |
சரோருக மேதிருக் கோயிலுங் கைகளுந் தாளிணையும் உரோரு கமுந்திரு வல்குலு நாபியுமோங் கிருள்போற் சிரோருகஞ் சூழ்ந்த வதனமு நாட்டமுஞ் சேயிதழும் ஒரோருக மீரரை மாத்திரை யானவுரை மகட்கே. | 16 |
கருந்தா மரைமலர் கட்டாமரை மலர்கா மருதாள் அருந்தா மரைமலர் செந்தாமரை மலரா லயமாத் தருந்தா மரைமலர் வெண்டாமரை மலர்தாவி லெழிற் பெருந்தா மரைமணக்குங் கலைக்கூட்டப் பிணைதனக்கே. | 17 |
தனக்கே துணிபொரு ளென்னுந் தொல்வேதஞ் சதுர்முகத்தோன் எனக்கே சமைந்த வபிடேக மென்னு மிமையவர்தா மனக்கேத மாற்றுமருந் தென்ப சூடுமலரென் பன்யான் கனக்கேச பந்திக் கலைமங்கை பாத கமலங்களே. | 18 |
கமலந்தனி லிருப்பாள் விருப்போ டங்கரங் குவித்துக் கமலங்கடவுளர் போற்றுமென் பூவை கண்ணிற் கருணைக் கமலந்தனைக் கொண்டுகண் டொருகாற் றங்கருத்துள் வைப்பார் கமலங் கழிக்குங் கலைமங்கை யாரணி காரணியே. | 19 |
காரணன் பாகமுஞ் சென்னியுஞ் சேர்தரு கன்னியரும் நாரண னாக மகலாத் திருவுமொர் நான்மருப்பு வாரணன் தேவியு மற்றுள்ள தெய்வ மடந்தையரும் ஆரணப் பாவை பணித்தகுற் றேவ லடியவரே. | 20 |
அடிவேத நாறுஞ் சிறப்பார்ந்த வேத மனைத்தினுக்கு முடிவே தவளமுளரி மின்னே முடியா விரத்தின வடிவே மகிழ்ந்து பணிவார் தமது மயலிரவின் விடிவே யறிந்தென்னை யாள்வார் தலந்தனில் வேறிலையே. | 21 |
வேறிலை யென்று னடியாரிற் கூடி விளங்குநின்பேர் கூறிலை யானுங் குறித்துநின்றே னைம்புலக் குறும்பர் மாறிலை கள்வர் மயக்காம னின்மலர்த்தா ணெறியிற் சேறிலை யீந்தருள் வெண்டா மரைமலர்ச் சேயிழையே. | 22 |
சேதிக்க லாந்தர்க்க மார்க்கங்க ளெவ்வெவர் சிந்தனையும் சோதிக்க லாமுறப் போதிக்க லாம்சொன்ன தேதுணிந்து சாதிக்க லாமிகப் பேதிக்க லாமுத்திதா னெய்தலா மாதிக்க லாமயில் வல்லிபொற் றாளை யடைந்தவரே. | 23 |
அடையாள நாண்மல ரங்கையி லேடு மணிவடமும் உடையாளை நுண்ணிடை யொன்று மிலாளை யுபநிடதப் படையாளை யெவ்வுயிரும் படைப்பாளைப் பதுமநறும் தொடையாளை யல்லது மற்றினி யாரைத் தொழுவதுவே. | 24 |
தொழுவார் வலம்வருவார் துதிப்பார் தந்தொழின் மறந்து விழுவா ரருமறைமெய் தெரிவா ரின்பமெய் புளகித் தழுவா ரினுங்கண்ணீர் மல்குவா ரென்கணாவ தென்னை வழுவாத செஞ்சொற் கலைமங்கை பாலன்பு வத்தவரே. | 25 |
வைக்கும் பொருளு மில்வாழ்க்கைப் பொருளுமற் றெப்பொருளும் பொய்க்கும் பொருளன்றி நீடும் பொருளல்ல பூதலத்தின் மெய்க்கும் பொருளு மழியாப் பொருளும் விழுப்பொருளும் உய்க்கும் பொருளுங் கலைமா னுணர்த்து முரைப்பொருளே. | 26 |
பொருளா லிரண்டும் பெறலாகு மென்றபொருள் பொருளோ மருளாத சொற்கலை வான்பொருளோ பொருள் வந்துவந்தித் தருளாய் விளங்கு மவர்க் கொளியா யறியாதவருக் கிருளாய் விளங்கு நலங்கிளர் மேனியிலங் கிழையே. | 27 |
இலங்குந் திருமுக மெய்யிற் புளகமெழுங் கண்கணீர் மலங்கும் பழுதற்ற வாக்கும் பலிக்கு மனமிகவே துலங்கு முறுவல் செயக் களிகூருஞ் சுழல்புனல்போல் கலங்கும் பொழுது தெளியுஞ் சொன்மானைக் கருதினர்க்கே. | 28 |
கரியா ரளகமுங் கண்ணுங் கதிர்முலைக் கண்ணுஞ்செய்ய சரியார் கரமும் பதமு மிதழுந்தவள நறும் புரியார்ந்த தாமரையுந் திருமேனி யும்பூண் பனவும் பிரியா தென்னெஞ்சினு நாவினு நிற்கும் பெருந்திருவே. | 29 |
பெருந்திருவுஞ் சயமங் கையுமாகி யென்பேதை நெஞ்சில் இருந்தருளுஞ் செஞ்சொல் வஞ்சியைப் போற்றிலெல்லாவுயிர்க்கும் பொருந்திய ஞானந்தரு மின்பவேதப் பொருளுந் தருந் திருந்திய செல்வந்தரு மழியாப் பெருஞ் சீர்தருமே. | 30 |
சரசுவதி அந்தாதி முற்றிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சரசுவதி அந்தாதி - Kambar Books - கம்பர் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - கலைமங்கை, மரைமலர், சரசுவதி