கம்ப இராமாயணம் - 5. துந்துபிப் படலம்
துந்துபியின் உடலைப் பார்த்து, இராமன் வினாவுதல்
அண்டமும், அகிலமும் அடைய, அன்று அனலிடைப் பண்டு வெந்தன நெடும் பசை வறந்திடினும், வான் மண்டலம் தொடுவது, அம் மலையின்மேல் மலை எனக் கண்டனன், துந்துபி, கடல் அனான், உடல் அரோ! | 1 |
'தென் புலக் கிழவன் ஊர் மயிடமோ? திசையின் வாழ் வன்பு உலக் கரி மடிந்தது கொலோ? மகரமீன் என்பு உலப்புற உலர்ந்தது கொலோ? இது எனா, அன்பு உலப்பு அரிய நீ, உரைசெய்வாய்' என, அவன், | 2 |
துந்துபியின் வரலாற்றைச் சுக்கிரீவன் உரைத்தல்
'துந்துபிப் பெயருடைச் சுடு சினத்து அவுணன், மீது இந்துவைத் தொட நிமிர்ந்து எழு மருப்பு இணையினான், மந்தரக் கிரி எனப் பெரியவன், மகர நீர் சிந்திட, கரு நிறத்து அரியினைத் தேடுவான். | 3 |
'அங்கு வந்து அரி எதிர்ந்து, "அமைதி என்?" என்றலும், "பொங்கு வெஞ் செருவினில் பொருதி" என்று உரைசெய, "கங்கையின் கணவன், அக் கறை மிடற்று இறைவனே உங்கள் வெங் கத வலிக்கு ஒருவன்" என்று உரைசெய்தான் | 4 |
'கடிது சென்று, அவனும், அக் கடவுள்தன் கயிலையை, கொடிய கொம்பினின் மடுத்து எழுதலும், குறுகி, "முன் நொடிதி; நின் குறை என்?" என்றலும், நுவன்றனன் அரோ "முடிவு இல் வெஞ் செரு, எனக்கு அருள் செய்வான் முயல்க!" எனா, | 5 |
'"மூலமே, வீரமே மூடினாயோடு, போர் ஏலுமே? தேவர்பால் ஏகு" எனா, ஏவினான் - "சால நாள் போர் செய்வாய் ஆதியேல், சாரல்; போர் வாலிபால் ஏகு" எனா - வான் உளோர் வான் உளான். | 6 |
'அன்னவன் விட, உவந்து, அவனும் வந்து, "அரிகள் தம் மன்னவன்! வருக! போர் செய்க!" எனா, மலையினைச் சின்னபின்னம் படுத்திடுதலும், சினவி, என் முன்னவன், முன்னர் வந்து அனையவன் முனைதலும், | 7 |
'இருவரும் திரிவுறும் பொழுதின் இன்னவர்கள் என்று ஒருவரும் சிறிது உணர்ந்திலர்கள்; எவ் உலகினும், வெருவரும் தகைவுஇலர், விழுவர், நின்று எழுவரால்; மருவ அருந் தகையர், தானவர்கள் வானவர்கள்தாம். | 8 |
'தீ எழுந்தது, விசும்புற; நெடுந் திசை எலாம் போய் எழுந்தது, முழக்கு; உடன் எழுந்தது, புகை; தோய நன் புணரியும், தொடர் தடங் கிரிகளும், சாய் அழிந்தன; - அடித்தலம் எடுத்திடுதலால். | 9 |
'அற்றது ஆகிய செருப் புரிவுறும் அளவினில், கொற்ற வாலியும், அவன், குலவு தோள் வலியொடும் பற்றி, ஆசையின் நெடும் பணை மருப்பு இணை பறித்து, எற்றினான்; அவனும், வான் இடியின் நின்று உரறினான் | 10 |
'தலையின்மேல் அடி பட, கடிது சாய் நெடிய தாள் உலைய, வாய் முழை திறந்து உதிர ஆறு ஒழுக, மா மலையின்மேல் உரும் இடித்தென்ன, வான் மண்ணொடும் குலைய, மா திசைகளும் செவிடுற, - குத்தினான். | 11 |
'கவரி இங்கு இது என, கரதலம்கொடு திரித்து இவர்தலும், குருதி பட்டு இசைதொறும் திசைதொறும், துவர் அணிந்தன என, பொசி துதைந்தன - துணைப் பவர் நெடும் பணை மதம் பயிலும் வன் கரிகளே. | 12 |
'புயல் கடந்து, இரவிதன் புகல் கடந்து, அயல் உளோர் இயலும் மண்டிலம் இகந்து, எனையவும் தவிர, மேல் வயிர வன் கரதலத்து அவன் வலித்து எறிய, அன்று உயிரும் விண் படர, இவ் உடலும் இப் பரிசு அரோ! | 13 |
'முட்டி, வான் முகடு சென்று அளவி, இம் முடை உடற் கட்டி, மால் வரையை வந்து உறுதலும், கருணையான் இட்ட சாபமும், எனக்கு உதவும்' என்று இயல்பினின், பட்டவா முழுவதும், பரிவினால் உரைசெய்தான். | 14 |
இலக்குவன் துந்துபியின் உடலை உந்துதல்
கேட்டனன், அமலனும், கிளந்தவாறு எலாம், வாள் தொழில் இளவலை, 'இதனை, மைந்த! நீ ஓட்டு' என, அவன் கழல் விரலின் உந்தினான்; மீட்டு, அது விரிஞ்சன் நாடு உற்று மீண்டதே! | 15 |
மிகைப் பாடல்கள்
'புயலும், வானகமும், அப் புணரியும், புணரிசூழ் அயலும், வீழ் தூளியால் அறிவு அருந் தகையவாம் மயனின் மா மகனும் வாலியும் மறத்து உடலினார், இயலும் மா மதியம் ஈர்-ஆறும் வந்து எய்தவே.' | 9-1 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
5. துந்துபிப் படலம் - Kambar Books - கம்பர் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - எழுந்தது, அவனும், நெடும், துந்துபியின்