கம்ப இராமாயணம் - 15. சந்திரசயிலப் படலம்
யானைகளை மரத்தில் பிணித்தலும், அவற்றின் செயல்களும்
கோவை ஆர் வடக் கொழுங் குவடு ஒடிதர நிவந்த, ஆவி வேட்டன, வரிசிலை அனங்கன் மேல் கொண்ட, பூவை வாய்ச்சியர் முலை சிலர் புயத்தொடும் பூட்ட, தேவதாரத்தும், சந்தினும், பூட்டின - சில மா. | 1 |
நேர் ஒடுங்கல் இல் பகையினை நீதியால் வெல்லும் சோர்வு இடம் பெறா உணர்வினன் சூழ்ச்சியே போல, காரொடும் தொடர் கவட்டு எழில், மராமரக் குவட்டை வேரொடும் கொடு, கிரி என நடந்தது - ஓர் வேழம். | 2 |
திரண்ட தாள் நெடுஞ் செறி பணை மருது இடை ஒடியப் புரண்டு பின் வரும் உரலொடு போனவன் போல, உருண்டு கால் தொடர் பிறகிடு தறியொடும், ஒருங்கே இரண்டு மா மரம் இடை இற நடந்தது - ஓர் யானை. | 3 |
கதம் கொள் சீற்றத்தை ஆற்றுவான், இனியன கழறி, பதம் கொள் பாகனும் மந்திரி ஒத்தனன்; பல் நூல் விதங்களால், அவன், மெல்லென மெல்லென விளம்பும் இதங்கள் கொள்கிலா இறைவனை ஒத்தது - ஓர் யானை. | 4 |
மாறு காண்கிலதாய் நின்று, மழை என முழங்கும் தாறு பாய் கரி, வன கரி தண்டத்தைத் தடவி, பாறு பின் செல, கால் எனச் செல்வது, பண்டு ஓர் ஆறு போகிய ஆறு போம் ஆறு போன்றதுவே. | 5 |
பாத்த யானையின் பதங்களில் படு மதம் நாற, காத்த அங்குசம் நிமிர்ந்திட, கால் பிடித்து ஓடி, பூத்த ஏழிலைப் பாலையைப் பொடிப் பொடி ஆக, காத்திரங்களால், தலத்தொடும் தேய்ந்தது - ஓர் களிறு. | 6 |
அலகு இல் ஆனைகள் அநேகமும், அவற்றோடு மிடைந்த திலக வாள் நுதல் பிடிகளும், குருளையும், செறிந்த உலவை நீள் வனத்து, ஊதமே ஒத்த; அவ் ஊதத் தலைவனே ஒத்துப் பொலிந்தது, சந்திரசயிலம். | 7 |
கருங்கல்லைப் பொன்னாக்கிச் சென்ற தேர்கள்
'தெருண்ட மேலவர், சிறியவர்ச் சேரினும், அவர்தம் மருண்ட புன்மையை மாற்றுவர்' எனும் இது வழக்கே: உருண்ட வாய்தொறும், பொன் உருள் உரைத்து உரைத்து ஓடி, இருண்ட கல்லையும் தன் நிறம் ஆக்கிய - இரதம். | 8 |
மலையில் இறங்கிய மகளிர், மர நிழல் மற்றும் பளிக்குப் பாறையில் இளைப்பாறி, துயில் கொள்ளுதல்
கொவ்வை நோக்கிய வாய்களை, இந்திர கோபம் கவ்வி நோக்கின என்றுகொல் - காட்டு இன மயில்கள், நவ்வி நோக்கியர், நலம் கொள் மேகலை, பொலஞ் சாயல்- செவ்வி நோக்கின திரிவன போல்வன, திரிந்த? | 9 |
உய்க்கும் வாசிகள் இழிந்து, இள அன்னத்தின் ஒதுங்கி, மெய்க் கலாபமும், குழைகளும், இழைகளும் விளங்க, தொக்க மென் மர நிழல் படத் துவன்றிய சூழல் புக்க மங்கையர், பூத்த கொம்பு ஆம் எனப் பொலிந்தார். | 10 |
தளம் கொள் தாமரை என, தளிர் அடியினும், முகத்தும், வளம் கொள் மாலை வண்டு அலமர, வழி வருந்தினர் ஆய், விளங்கு தம் உருப் பளிங்கிடை வெளிப்பட, வேறு ஓர் துளங்கு பாறையில், தோழியர் அயிர்த்திடத் துயின்றார். | 11 |
பிடி புக்கு ஆயிடை, மின்னொடும் பிறங்கிய மேகம் படி புக்காலெனப் படிதர, பரிபுரம் புலம்ப, துடி புக்கா இடைத் திருமகள் தாமரை துறந்து குடி புக்காலென, குடில் புக்கார் - கொடி அன்ன மடவார். | 12 |
வரிசையாகக் கட்டி வைத்த குதிரைகள்
உண் அமுதம் ஊட்டி, இளையோர் நகர் கொணர்ந்த, துண்ணெனும் முழக்கின, துருக்கர் தர வந்த, மண்மகள் தன் மார்பின் அணி வன்ன சரம் என்ன, பண் இயல் வயப் பரிகள், பந்தியில் நிரைத்தார். | 13 |
பணியாளர்கள் தங்குவதற்கு வசதி செய்தல்
நீர் திரை நிரைத்த என, நீள் திரை நிரைத்தார்; ஆர்கலி நிரைத்த என, ஆவணம் நிரைத்தார்; கார் நிரை என, களிறு காவிடை நிரைத்தார்; மாருதம் நிரைத்த என, வாசிகள் நிரைத்தார். | 14 |
மங்கையரும் மைந்தரும் மயங்கித் திரிதல்
நடிக்கும் மயில் என்ன வரும் நவ்விவிழியாரும், வடிக்கும் அயில் வீரரும், மயங்கினர் திரிந்தார்; இடிக்கும் முரசக் குரலின், எங்கும் முரல் சங்கின், கொடிக்களின் உணர்ந்து, அரசர் கோ நகர் அடைந்தார். | 15 |
மிதிக்க நிமிர் தூளியின் விளக்கம் அறு மெய்யை, சுதைக் கண் நுரையைப் பொருவு தூசு கொடு, தூய்தா உதிர்த்தனர், இளங் குமரர், ஓவியரின்; ஓவம் புதுக்கினர் என, தருண மங்கையர் பொலிந்தார். | 16 |
யானைகளிலிருந்து இறங்கி, அரச குமாரர் பட மாடங்களில் புகுதல்
தாள் உயர் தடக் கிரி இழிந்து தரை சேரும் கோள் அரி என, கரிகள் கொற்றவர் இழிந்தார்; பாளை விரி ஒத்து உலவு சாமரை படப் போய், வாள் எழ நிரைத்த படமாடம் அவை புக்கார். | 17 |
தூசின் நெடு வெண் பட முடைக் குடிலகள்தோறும், வாச நகை மங்கையர் முகம் பொலிவ, வானில், மாசு இல் மதியின் கதிர் வழங்கும் நிழல் எங்கும், வீசு திரை வெண் புனல், விளங்கியன போலும். | 18 |
புழுதி படிய வரும் யானை
மண் உற விழுந்து, நெடு வான் உற எழுந்து, - கண்ணுதல் பொருந்த வரு கண்ணனின் வரும் - கார் உண் நிற நறும் பொடியை வீசி, ஒரு பாகம் வெண் நிற நறும் பொடி புனைந்த மத வேழம். | 19 |
குதிரைகள் அடங்கி வருதல்
தீயவரொடு ஒன்றிய திறத்து அரு நலத்தோர், ஆயவரை, அந் நிலை, அறிந்தனர், துறந்தாங்கு, ஏய அரு நுண் பொடி படிந்து, உடன் எழுந்து ஒண் பாய் பரி விரைந்து உதறி நின்றன, பரந்தே. | 20 |
மும்மை புரி வன் கயிறு கொய்து, செயல் மொய்ம்பால் தம்மையும் உணர்ந்து, தரை கண்டு, விரைகின்ற, அம்மையினொடு இம்மையை அறிந்து நெறி செல்லும் செம்மையவர் என்ன, நனி சென்றன - துரங்கம். | 21 |
திரைக் குடிலில் கழங்கு ஆடும் மங்கையர்
விழுந்த பனி அன்ன, திரை வீசு புரைதோறும், கழங்கு பயில் மங்கையர் கருங் கண் மிளிர்கின்ற - தழங்கு கழி சிந்திய தரம் பயில் தரங்கத்து, எழுந்து இடை பிறழ்ந்து ஒளிர் கொழுங் கயல்கள் என்ன. | 22 |
ஆறு உதவும் ஊற்றுப்பெருக்கு
வெள்ள நெடு வாரி அற வீசி உளவேனும், கிள்ள எழுகின்ற புனல், கேளிரின் விரும்பி, - தெள்ளு புனல் ஆறு - சிறிதே உதவுகின்ற; உள்ளது மறாது உதவும் வள்ளலையும் ஒத்த. | 23 |
படமாடத்தில் நுழைகின்ற வீரர்கள்
துன்றி நெறி பங்கிகள் துளங்க, அழலோடும் மின் திரிவ என்ன, மணி ஆரம் மிளிர் மார்பர், மன்றல் மணம் நாறு பட மாடம் நுழைகின்றார், குன்றின் முழைதோறும் நுழை கோள் அரிகள் ஒத்தார். | 24 |
நீரில் விழுந்து உழக்கி நிற்கும் யானைகள்
நெருங்கு அயில் எயிற்றனைய செம் மயிரின் நெற்றிப் பொருங் குலிகம் அப்பியன, போர் மணிகள் ஆர்ப்ப,- பெருங் களிறு - அலைப் புனல் கலக்குவன; பெட்கும் கருங் கடல் கலக்கும் மது கயிடவரை ஒத்த. | 25 |
ஒக்க நெறி உய்ப்பவர் உரைத்த குறி கொள்ளா, பக்கம் இனம் ஒத்து, அயல் அலைக்க, நனி பாரா,- மைக் கரி, மதத்த - விலை மாதர் கலை அல்குல் புக்கவரை ஒத்தன, புனல் சிறைகள் ஏறா. | 26 |
அட்டிலில் எழும் புகை
துகில் இடை மடந்தையரொடு ஆடவர் துவன்றி, பகல் இடைய, அட்டிலில் மடுத்து, எரி பரப்பும் அகில் இடு கொழும் புகை அழுங்கலின், முழங்கா முகில் படு நெடுங் கடலை ஒத்து உளது, அம் மூதூர். | 27 |
பொலிவுற்ற சேனை வெள்ளம்
கமர் உறு பொருப்பின் வாழும் விஞ்சையர் காண வந்தார், தமரையும் அறியார் நின்று திகைப்புறு தகைமை சான்ற குமரரும் மங்கைமாரும் குழுமலால், வழுவி விண் நின்று அமரர் நாடு இழிந்தது என்னப் பொலிந்தது, அவ் அனீக வெள்ளம் | 28 |
மகளிரும் மைந்தரும் மகிழ்வுடன் திரிதல்
வெயில் நிறம் குறையச் சோதி மின் நிழல் பரப்ப, முன்னம் துயில் உணர் செவ்வியோரும், துனி உறு முனிவினோரும், குயிலொடும் இனிது பேசி, சிலம்பொடும் இனிது கூவி, மயிலினம் திரிவ என்ன, திரிந்தனர் - மகளிர் எல்லாம். | 29 |
தாள் இணை கழல்கள் ஆர்ப்ப, தார் இடை அளிகள் ஆர்ப்ப, வாள் புடை இலங்க, செங் கேழ் மணி அணி வலையம் மின்ன, தோள் என உயர்ந்த குன்றின் சூழல்கள் இனிது நோக்கி, வாள் அரி திரிவ என்ன, திரிந்தனர் - மைந்தர் எல்லாம். | 30 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
15. சந்திரசயிலப் படலம் - Kambar Books - கம்பர் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - மங்கையர், நிரைத்தார், நிரைத்த, ஆர்ப்ப, எழுந்து, நின்று