கம்ப இராமாயணம் - 4. அரசியற் படலம்
தயரதன் மாண்பு
அம் மாண் நகருக்கு அரசன் அரசர்க்கு அரசன்; செம் மாண் தனிக் கோல் உலகு ஏழினும் செல்ல நின்றான்; இம் மாண் கதைக்கு ஓர் இறை ஆய இராமன் என்னும் மொய்ம் மாண் கழலோன் - தரு நல் அற மூர்த்தி அன்னான். | 1 |
ஆதிம் மதியும், அருளும், அறனும், அமைவும், ஏதில் மிடல் வீரமும், ஈகையும், எண் இல் யாவும், நீதிந் நிலையும், இவை, நேமியினோர்க்கு நின்ற பாதி; முழுதும் இவற்கே பணி கேட்ப மன்னோ. | 2 |
மொய் ஆர்கலி சூழ் முது பாரில், முகந்து தானக் கை ஆர் புனலால் நனையாதன கையும் இல்லை; மெய் ஆய வேதத் துறை வேந்தருக்கு ஏய்த்த, யாரும் செய்யாத, யாகம் இவன் செய்து மறந்த மாதோ. | 3 |
தாய் ஒக்கும் அன்பின்; தவம் ஒக்கும் நலம் பயப்பின்; சேய் ஒக்கும், முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால்; நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும்; நுணங்கு கேள்வி ஆயப் புகும்கால், அறிவு ஒக்கும்;-எவர்க்கும், அன்னான். | 4 |
ஈந்தே கடந்தான், இரப்போர் கடல்; எண் இல் நுண் நூல் ஆய்ந்தே கடந்தான், அறிவு என்னும் அளக்கர்; வாளால் காய்ந்தே கடந்தான், பகை வேலை; கருத்து முற்றத் தோய்ந்தே கடந்தான், திருவின் தொடர் போக பௌவம். | 5 |
வெள்ளமும், பறவையும், விலங்கும், வேசையர் உள்ளமும், ஒரு வழி ஓட நின்றவன்; தள்ள அரும் பெரும் புகழ்த் தயரதப் பெயர் வள்ளல்; வள் உறை அயில் மன்னர் மன்னனே. | 6 |
உலகமனைத்தையும் ஒரு குடைக் கீழ் ஆள்பவன்
நேமி மால் வரை மதில் ஆக, நீள் புறப் பாம மா கடல் கிடங்கு ஆக, பல் மணி வாம மாளிகை மலை ஆக, மன்னற்குப் பூமியும் அயோத்தி மா நகரம் போலுமே. | 7 |
பாவரும் வன்மை நேர் எறிந்து தீட்டலால் மே வரும் கை அடை வேலும் தேயுமால்; கோவுடை நெடு மணி மகுட கோடியால் சேவடி அடைந்த பொன் கழலும் தேயுமால். | 8 |
தயரதனின் குடையும் செங்கோலும்
மண்ணிடை உயிர்தொறும் வளர்ந்து, தேய்வு இன்றி, தண் நிழல் பரப்பவும், இருளைத் தள்ளவும், அண்ணல்தன் குடை மதி அமையும்; ஆதலான், விண்ணிடை மதியினை 'மிகை இது' என்பவே. | 9 |
தயரதன் அரசு செய்யும் திறம்
வயிர வான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான், உயிர் எலாம் தன் உயிர் ஒப்ப ஓம்பலால், செயிர் இலா உலகினில், சென்று, நின்று, வாழ் உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பும் ஆயினான். | 10 |
குன்றென உயரிய குவவுத் தோளினான், வென்றி அம் திகிரி, வெம் பருதியாம் என, ஒன்றென உலகிடை உலாவி, மீமிசை நின்று, நின்று, உயிர்தொறும் நெடிது காக்குமே. | 11 |
'எய்' என பழு பகை எங்கும் இன்மையால், மொய் பெறாத் தினவு உறு முழவுத் தோளினான், வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர் செய் எனக் காத்து, இனிது அரசு செய்கின்றான். | 12 |
மிகைப் பாடல்கள்
விரிகதிர் பரப்பி, மெய்ப் புவனம் மீது இருள் பருகுறும் பரிதி அம் குலத்தில், பார்த்திபன் இரகு, மற்று அவன் மகன் அயன் என்பான், அவன் பெருகு மா தவத்தினில் பிறந்த தோன்றலே. | 5-1 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
4. அரசியற் படலம் - Kambar Books - கம்பர் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - ஒக்கும், கடந்தான், நின்று