கம்ப இராமாயணம் - 11. ஆறு செல் படலம்
மந்திரக் கிழவோர் முதலியோர் அரசவையை அடைதல்
வரன்முறை தெரிந்து உணர் மறையின் மா தவத்து அரு மறை முனிவனும், ஆண்டையான் என, விரைவின் வந்து ஈண்டினர்; விரகின் எய்தினர்; பரதனை வணங்கினர்; பரியும் நெஞ்சினர். | 1 |
மந்திரக் கிழவரும், நகர மாந்தரும், தந்திரத் தலைவரும், தரணி பாலரும், அந்தர முனிவரோடு அறிஞர் யாவரும், சுந்தரக் குரிசிலை மரபின் சுற்றினார். | 2 |
சுமந்திரன் முனிவரைக் குறிப்பாக நோக்குதல்
சுற்றினர் இருந்துழி, சுமந்திரப் பெயர்ப் பொன் தடந் தேர் வலான், புலமை உள்ளத்தான், கொற்றவர்க்கு உறு பொருள் குறித்த கொள்கையான், முற்று உணர் முனிவனை முகத்து நோக்கினான். | 3 |
முனிவர் சுமந்திரனின் குறிப்பை உணர்தல்
நோக்கினால் சுமந்திரன் நுவலலுற்றதை, வாக்கினால் அன்றியே உணர்ந்த மா தவன், 'காக்குதி உலகம்; நின் கடன் அது ஆம்' எனக் கோக் குமரனுக்கு அது தெரியக் கூறுவான்: | 4 |
பரதனுக்கு வசிட்டன் அரசின் சிறப்பை உரைத்தல்
'வேதியர், அருந்தவர், விருத்தர், வேந்தர்கள் ஆதியர் நின்வயின் அடைந்த காரியம், நீதியும் தருமமும் நிறுவ; நீ இது, கோது அறு குணத்தினாய்! மனத்துக் கோடியால். | 5 |
'தருமம் என்று ஒரு பொருள் தந்து நாட்டுதல் அருமை என்பது பெரிது; அறிதி; ஐய! நீ இருமையும் தருவதற்கு இயைவது; ஈண்டு, இது, தெருள் மனத்தார் செயும் செயல் இது ஆகுமால்! | 6 |
'வள் உறு வயிர வாள் அரசு இல் வையகம், நள் உறு கதிர் இலாப் பகலும், நாளொடும் தெள்ளுறு மதி இலா இரவும், தேர்தரின், உள் உறை உயிர் இலா உடலும், ஒக்குமே. | 7 |
'தேவர்தம் உலகினும், தீமை செய்து உழல் மா வலி அவுணர்கள் வைகும் நாட்டினும், ஏவெவை உலகம் என்று இசைக்கும் அன்னவை காவல் செய் தலைவரை இன்மை கண்டிலம். | 8 |
'முறை தெரிந்து ஒரு வகை முடிய நோக்குறின், மறையவன் வகுத்தன, மண்ணில், வானிடை, நிறை பெருந் தன்மையின் நிற்ப, செல்வன, இறைவரை இல்லன யாவும் காண்கிலம். | 9 |
'பூத்த, நாள்மலர் அயன் முதல புண்ணியர் ஏத்து, வான் புகழினர், இன்று காறும் கூக் காத்தனர்; பின், ஒரு களைகண் இன்மையால், நீத்த நீர் உடை கல நீரது ஆகுமால். | 10 |
'உந்தையோ இறந்தனன்; உம்முன் நீத்தனன்; வந்ததும், அன்னைதன் வரத்தில்; மைந்த! நீ அந்தம் இல் பேர் அரசு அளித்தி; அன்னது சிந்தனை எமக்கு' எனத் தெரிந்து கூறினான். | 11 |
வசிட்டன் சொல் கேட்ட பரதனின் அவல நிலை
'தஞ்சம் இவ் உலகம், நீ தாங்குவாய்' எனச் செஞ்செவே முனிவரன் செப்பக் கேட்டலும், 'நஞ்சினை நுகர்' என, நடுங்குவாரினும் அஞ்சினன் அயர்ந்தனன் - அருவிக் கண்ணினான். | 12 |
நடுங்கினன்; நாத் தடுமாறி, நாட்டமும் இடுங்கினன்; மகளிரின் இரங்கும் நெஞ்சினன்; ஒடுங்கிய உயிரினன்; உணர்வு கைதர, தொடங்கினன், அரசவைக்கு உள்ளம் சொல்லுவான்: | 13 |
அரசவைக்கு பரதன் தன் கருத்தை எடுத்தியம்புதல்
'மூன்று உலகினுக்கும் ஓர் முதல்வன் ஆய், முதல் தோன்றினன் இருக்க, யான் மகுடம் சூடுதல், சான்றவர் உரைசெயத் தருமம் ஆதலால், ஈன்றவள் செய்கையில் இழுக்கு உண்டாகுமோ? | 14 |
'அடைவு அருங் கொடுமை என் அன்னை செய்கையை, நடைவரும் தன்மை நீர், "நன்று இது" என்றிரேல், இடை வரும் காலம் ஈண்டு இரண்டும் நீத்து, இது கடை வரும் தீ நெறிக் கலியின் ஆட்சியோ! | 15 |
'வேத்தவை இருந்த நீர், விமலன் உந்தியில் பூத்தவன் முதலினர் புவியுள் தோன்றினார், மூத்தவர் இருக்கவே, முறைமையால் நிலம் காத்தவர் உளர் எனின், காட்டிக் காண்டிரால். | 16 |
'நல் நெறி என்னினும், நான் இந் நானில மன் உயிர்ப் பொறை சுமந்து இருந்து வாழ்கிலேன்; அன்னவன் தனைக் கொணர்ந்து, அலங்கல் மா முடி தொல் நெறி முறைமையின் சூட்டிக் காண்டிரால். | 17 |
'அன்று எனின், அவனொடும் அரிய கானிடை நின்று, இனிது இருந்தவம், நெறியின் ஆற்றுவென்; ஒன்று இனி உரைக்கின், என் உயிரை நீக்குவென்' என்றனன்; என்றபோது; இருந்த பேர் அவை. | 18 |
பரதனை அரசவையோர் புகழ்தல்
'ஆன்ற பேர் அரசனும் இருப்ப, ஐயனும் ஏன்றனன், மணி முடி ஏந்த; ஏந்தல் நீ, வான் தொடர் திருவினை மறுத்தி; மன் இளந் தோன்றல்கள் யார் உளர் நின்னின் தோன்றினார்? | 19 |
'ஆழியை உருட்டியும், அறங்கள் போற்றியும், வேள்வியை இயற்றியும், வளர்க்க வேண்டுமோ? ஏழினோடு ஏழ் எனும் உலகம் எஞ்சினும், வாழிய நின் புகழ்!' என்று வாழ்த்தினார். | 20 |
சத்துருக்கனனிடம் இராமனை அழைத்து வருதல் பற்றி முரசு அறிவிக்க பரதன் கூறுதல்
குரிசிலும், தம்பியைக் கூவி, 'கொண்டலின் முரசு அறைந்து, "இந் நகர் முறைமை வேந்தனைத் தருதும் ஈண்டு" என்பது சாற்றி, தானையை, "விரைவினில் எழுக!" என, விளம்புவாய்' என்றான். | 21 |
சத்துருக்கனன் உரை கேட்ட மக்களின் மகிழ்ச்சி
நல்லவன் உரைசெய, நம்பி கூறலும், அல்லலின் அழுங்கிய அன்பின் மா நகர் ஒல்லென இரைத்ததால் - உயிர் இல் யாக்கை அச் சொல் எனும் அமிழ்தினால் துளிர்த்தது என்னவே. | 22 |
அவித்த ஐம் புலத்தவர் ஆதியாய் உள புவித்தலை உயிர் எலாம், 'இராமன் பொன் முடி கவிக்கும்' என்று உரைக்கவே, களித்ததால்-அது செவிப் புலம் நுகர்வது ஓர் தெய்வத் தேன்கொலாம்? | 23 |
படு முரசு அறைந்தனர், 'பரதன் தம்முனைக் கொடி நகர்த் தரும்; அவற் கொணரச் சேனையும் முடுகுக' என்ற சொல் மூரி மா நகர், உடுபதி வேலையின் உதயம் போன்றதே! | 24 |
எழுந்தது பெரும் படை - எழு வேலையின், மொழிந்த பேர் ஊழியின் முழங்கி, முந்து எழ, அழிந்தது கேகயன் மடந்தை ஆசை; போய்க் கழிந்தது துயர், நெடுங் காதல் தூண்டவே. | 25 |
சேனையின் எழுச்சி
பண்ணின புரவி, தேர், பகடு, பண்டியும், மண்ணினை மறைத்தன; மலிந்த மாக் கொடி விண்ணினை மறைத்தன; விரிந்த மாத் துகள், கண்ணினை மறைத்தன, கமலத் தோனையே. | 26 |
ஈசன் இவ் உலகினை அழிக்கும் நாள் எழும் ஓசையின் நிமிர்ந்துளது, ஒல்லென் பேர் ஒலி; காசையின் கரியவற் காண மூண்டு எழும் ஆசையின் நிமிர்ந்தது அவ் அனிக ராசியே. | 27 |
படியொடு திரு நகர் துறந்து, பல் மரம் செடியொடு தொடர் வனம் நோக்கி, சீதை ஆம் கொடியொடு நடந்த அக் கொண்டல் ஆம் எனப் பிடியொடு நடந்தன-பெருங் கை வேழமே. | 28 |
சேற்று இள மரை மலர் சிறந்தவாம் எனக் கால் தளம் பொலிதரு கன்னிமாரொடும்- ஏற்று இளம் பிடிக்குலம்-இகலி, இன் நடை தோற்று, இள மகளிரைச் சுமப்ப போன்றவே. | 29 |
வேதனை வெயிற்கதிர் தணிக்க, மென் மழைச் சீதநீர் தொடு நெடுங் கொடியும் சென்றன; கோதை வெஞ்சிலையவன் கோலம் காண்கிலா மாதரின் நுடங்குவ, வரம்பு இல் கோடியே. | 30 |
வெண் மதி மீச்செல மேகம் ஊர்ந்தென, அண்ணல் வெங்கதிரவன், அளவு இல் மூர்த்தி ஆய், மண்ணிடை இழிந்து ஒரு வழிக் கொண்டாலென, எண்ண அரு மன்னவர் களிற்றின் ஏகினார். | 31 |
தேர்மிசைச் சென்றது ஓர் பரவை; செம்முகக் கார்மிசைச் சென்றது ஓர் உவரி; கார்க்கடல், ஏர்முகப் பரிமிசை ஏகிற்று; எங்கணும் பார்மிசைப் படர்ந்தது, பதாதிப் பௌவமே. | 32 |
தாரையும் சங்கமும், தாளம் கொம்பொடு பார்மிசைப் பம்பையும், துடியும், மற்றவும், பேரியும், இயம்பல சென்ற - பேதைமைப் பூரியர் குழாத்திடை அறிஞர் போலவே. | 33 |
தா அரு நாண் முதல் அணி அலால், தகை மே வரு கலங்களை வெறுத்த மேனியர், தேவரும் மருள்கொளத் தெரியும் காட்சியர், பூ உதிர் கொம்பு என, மகளிர் போயினார். | 34 |
அதிர் கடல் வையகம் அனைத்தும் காத்தவன் விதி வரும் தனிக்குடை மீது இலாப் படை, பொதி பல கவிகக மீன் பூத்தது ஆகிலும் கதிர் மதி நீங்கிய கங்குல் போன்றதே. | 35 |
செல்லிய செலவினால், 'சிறிய திக்கு' எனச் சொல்லிய சேனையைச் சுமந்ததே எனில், ஒல்லொலி வேலை நீர் உடுத்த பாரை, 'ஓர் மெல்லியல்' என்றவர் மெலியரே கொலாம்? | 36 |
தங்கு செஞ் சாந்து அகில் கலவை சார்கில, குங்குமம் கொட்டில, கோவை முத்து இல,- பொங்கு இளங் கொங்கைகள் - புதுமை வேறு இல தெங்கு இளநீர் எனத் தெரிந்த காட்சிய. | 37 |
இன் துணையவர் முலை எழுது சாந்தினும் மன்றல் அம் தாரினும் மறைந்திலாமையால் துன்று இளங் கொடி முதல் தூறு நீங்கிய குன்று எனப் பொலிந்தன - குவவுத் தோள்களே. | 38 |
நறை அறு கோதையர் நாள் செய் கோலத்தின் துறை அற, அஞ்சனம் துறந்த நாட்டங்கள் குறை அற நிகர்த்தன - கொற்றம் முற்றுவான், கறை அறக் கழுவிய கால வேலையே. | 39 |
விரி மணி மேகலை விரவி ஆர்க்கில தெரிவையர் அல்குல், தார் ஒலி இல் தேர் என பரிபுரம் ஆர்க்கில பவளச் சீறடி, அரி இனம் ஆர்க்கிலாக் கமலம் என்னவே. | 40 |
மல்கிய கேகயன் மடந்தை வாசகம் நல்கியது அரிவையர் நடுவிற்கே கொலாம்!- புல்கிய மணிவடம் பூண்கிலாமையால், ஒல்கிய ஒரு வகைப் பொறை உயிர்த்தவே. | 41 |
'கோமகன் பிரிதலின், கோலம் நீத்துள தாமரைச் செல்வியும், தவத்தை மேவினாள்; காமனும், அருந்துயர்க் கடலில் மூழ்கினான் ஆம்' என, நிகழ்ந்தது - அவ் அளவு இல் சேனையை | 42 |
மண்ணையும், வானையும், வயங்கு திக்கையும் உண்ணிய நிமிர் கடல் ஒக்கும் என்பது என்? கண்ணினும் மனத்தினும், கமலத்து அண்ணல்தன் எண்ணினும், நெடிது - அவண் எழுந்த சேனையே! | 43 |
அலை நெடும் புனல் அறக் குடித்தலால், அகம் நிலை பெற நிலை நெறி நிறுத்தலால், நெடு மலையினை மண் உற அழுத்தலால், தமிழ்த் தலைவனை நிகர்த்தது - அத் தயங்கு தானையே. | 44 |
அறிஞரும், சிறியரும் ஆதி அந்தமா செறி பெருந் தானையும் திருவும் நீங்கலால் குறியவன் புனல் எலாம் வயிற்றில் கொண்டநாள் மறிகடல் ஒத்தது - அவ் அயோத்தி மாநகர். | 45 |
பெருந்திரை நதிகளும், வயலும், பெட்புறு மரங்களும், மலைகளும், மண்ணும், கண்ணுறத் திருத்தல் இல் அயோத்தி ஆம் தெய்வ மா நகர் அருந்தெரு ஒத்தது - அப் படை செல் ஆறு அரோ! | 46 |
'தார்கள் தாம், கோதைதாம், தாமம்தாம், தகை ஏர்கள் தாம், கலவை தாம், கமழ்ந்தின்று என்பரால்- கார்கள் தாம் என மிகக் கடுத்த கைம்மலை வார் கடாம் அல்லது, அம் மன்னன் சேனையே. | 47 |
ஆள் உலாம் கடலினும் அகன்ற அக்கடல், தோள் உலாம் குண்டலம் முதல தொல் அணி கேள் உலாம் மின் ஒளி கிளர்ந்தது இல்லையால்- வாள் உலாம் நுதலியர் மருங்குல் அல்லதே. | 48 |
மத்தளம் முதலிய வயங்கு பல் இயம் ஒத்தன சேறலின், உரை இலாமையின், சித்திரச் சுவர் நெடுஞ் சேனை தீட்டிய பத்தியை நிகர்த்தது - அப் படையின் ஈட்டமே. | 49 |
ஏடு அறு கோதையர் விழியின் எய்த கோல் ஊடு உற உரம் தொளைத்து, உயிர் உணாவகை, ஆடவர்க்கு அரும் பெருங் கவசம் ஆயது - காடு உறை வாழ்க்கையைக் கண்ணன் நண்ணவே. | 50 |
கனங் குழைக் கேகயன் மகளின் கண்ணிய சினம் கிடந்து எரிதலின், தீர்ந்தவே கொலாம்- அனங்கன் ஐங் கொடுங் கணை அடரும் ஆடவர் மனம் கிடந்து உண்கில, மகளிர் கொங்கையே? | 51 |
மரவுரி அணிந்து பரதன் சத்துருக்கனனுடன் தேரில் செல்லுதல்
இன்னணம் நெடும் படை ஏக, ஏந்தலும், தன்னுடைத் திரு அரைச் சீரை சாத்தினான்; பின் இளையவனொடும், பிறந்த துன்பொடும், நல் நெடுந் தேர்மிசை நடத்தல் மேயினான். | 52 |
பரதனுடன் தாயரும் வருதல்
தாயரும், அருந் தவத்தவரும், தந்தையின் ஆய மந்திரியரும், அளவு இல் சுற்றமும், தூய அந்தணர்களும், தொடர்ந்து சூழ்வரப் போயினன் - திரு நகர்ப் புரிசை வாயிலே. | 53 |
சத்துருக்கனன் கூனிய துன்புறுத்தப் பற்ற, பரதன் விலக்கல்
மந்தரைக் கூற்றமும், வழிச் செல்வாரொடும் உந்தியே போதல் கண்டு, இளவல் ஓடி, ஆர்த்து அந்தரத்து எற்றுவான் அழன்று பற்றலும், சுந்தரத் தோளவன் விலக்கிச் சொல்லுவான்: | 54 |
'முன்னையர் முறை கெட முடித்த பாவியைச் சின்னபின்னம் செய்து, என் சினத்தைத் தீர்வெனேல், "என்னை இன்று என் ஐயன் துறக்கும்" என்று அலால், "அன்னை" என்று, உணர்ந்திலென், ஐய! நான்' என்றான் | 55 |
'ஆதலால், முனியும் என்று ஐயன், அந்தம் இல் வேதனைக் கூனியை வெகுண்டும் என்னினும், கோது இலா அரு மறை குலவும் நூல் வலாய்! போதும் நாம்' என்று கொண்டு, அரிதின் போயினான். | 56 |
இராமன் தங்கிய சோலையில் பரதன் தங்குதல்
மொய் பெருஞ் சேனையும் மூரி ஞாலமும் கைகலந்து அயல் ஒரு கடலின் சுற்றிட, ஐயனும் தேவியும் இளைய ஆளியும் வைகிய சோலையில் தானும் வைகினான். | 57 |
இராமன் தங்கிய புல்லணை அருகில் பரதன் மண்ணில் இருத்தல்
அல் அணை நெடுங் கணீர் அருவி ஆடினன், கல் அணை கிழங்கொடு கனியும் உண்டிலன், வில் அணைத்து உயர்ந்து தோள் வீரன் வைகிய புல் அணை மருங்கில், தான் பொடியின் வைகினான். | 58 |
'ஆண்டு நின்று, ஆண்தகை அடியின் ஏகினான் ஈண்டிய நெறி' என, தானும் ஏகினான் - தூண்டிடு தேர்களும் துரக ராசியும் காண் தகு கரிகளும் தொடர, காலினே. | 59 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
11. ஆறு செல் படலம் - Kambar Books - கம்பர் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - மறைத்தன, கொலாம், நெடுங், கேகயன், என்பது, இராமன், தெரிந்து