நற்றிணை - 57. குறிஞ்சி
தடங்கோட்டு ஆமான், மடங்கல் மா நிரைக் குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தென, துஞ்சு பதம் பெற்ற துய்த் தலை மந்தி கல்லென் சுற்றம் கை கவியாக் குறுகி, வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி, தீம் பால் |
5 |
கல்லா வன் பறழ்க் கைந் நிறை பிழியும் மா மலை நாட! மருட்கை உடைத்தே- செங் கோல், கொடுங் குரல், சிறு தினை வியன் புனம் கொய் பதம் குறுகும்காலை, எம் மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே! |
10 |
சிங்க முதலாய விலங்கின் கூட்டம் நெருங்கிய மலையின்கணுள்ள வேங்கை மரத்தின் கீழ் வளைந்த கொம்பினையுடைய ஆமான் தன் கன்றொடு தங்கியுளதாக; அவை துயில்வதனைக் கண்ட பஞ்சுபோன்ற தலையையுடைய மந்தி கல்லென வொலிக்கும் தன் சுற்றத்தை அவை ஒலியாவாறு தன்கையா லமர்த்திவிட்டு அருகிலே சென்று; ஆமானின் பால் சுரந்த மடியை அழுந்தும்படி பற்றியீர்த்து இனிய பாலைக் கறந்து தன்தொழிலையுங் கல்லாத வலிய குட்டியின் கையில் நிறையப் பிழியா நிற்கும்; பெரிய மலை நாடனே !; சிவந்த தாளையும் வளைந்த கதிரையுமுடைய சிறிய தினையின் பெரிய கொல்லை, கொய்பதம் குறுகும் காலை முற்றுங் கதிர் கொய்யும் பதம் வந்துற்றது, வரவே, தலைமகள் மனையகம் புகுதாநிற்கும், புக்கபின் நீ அங்கே வருதற் கியலாமையின்; எமது கரிய ஈரிய கூந்தலையுடையாளது மாட்சிமைப்பட்ட நலம் கெட்டொழியுங் கண்டாய்; அங்ஙனம் கெடுவதை நோக்கி என்னுள்ளம் மருளுதலையுடையதாயிரா நிற்கும்; ஆதலின், நீ ஆய்ந்து ஏற்றபெற்றிப்பட ஒழுகுவாயாக !
செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது. - பொதும்பில் கிழார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 55 | 56 | 57 | 58 | 59 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பதம், வளைந்த, நிற்கும், நலம், பெரிய, பால், கன்றொடு, மந்தி, ஆமான்