நற்றிணை - 369. நெய்தல்
சுடர் சினம் தணிந்து குன்றம் சேர, நிறை பறைக் குருகினம் விசும்பு உகந்து ஒழுக, எல்லை பைபயக் கழிப்பி, முல்லை அரும்பு வாய் அவிழும் பெரும் புன் மாலை இன்றும் வருவது ஆயின், நன்றும் |
5 |
அறியேன் வாழி- தோழி!- அறியேன், ஞெமை ஓங்கு உயர் வரை இமையத்து உச்சி, வாஅன் இழிதரும் வயங்கு வெள் அருவிக் கங்கைஅம் பேர் யாற்றுக் கரை இறந்து இழிதரும் சிறை அடு கடும் புனல் அன்ன, என் |
10 |
நிறை அடு காமம் நீந்துமாறே. |
தோழீ! வாழி; ஆதித்த மண்டிலம் தான்கொண்ட சினம் தணியப்பெற்று அத்தமனக் குன்றைச் சென்றுபுக; நிறைந்த சிறையையுடைய நாரையின் கூட்டம் ஆகாயத்திலே நெருங்கிச் செல்லாநிற்ப; பகற் பொழுதை மெல்ல மெல்லப் போக்கி முல்லையரும்பு வாய்திறந்து மலராநிற்கும் பெரிய புல்லிய மாலைப் பொழுதானது; நேற்று வந்து துன்புறுத்தியதுபோல இன்றும் வருவதாயினோ; பெரும்பாலும் ஞெமைகள் வளர்ந்த உயர்ந்த இமயமலை உச்சியின்கண்ணே; வானிடத்தினின்று இழிதரும் வயங்கிய வெளிய அருவியையுடைய பெரிய கங்கையாற்றினை; கரை கடந்து இழியாநின்ற அணையை உடைத்துச் செல்லுங் கடிய செலவினையுடைய நீர் வெள்ளம் போன்ற; எனது நிறையை அழித்துப் பெருகுகின்ற காம வெள்ளத்தை நீந்துமாறு நன்றாகத் தெரிந்தேனு மில்லையே! எவ்வாறு உய்குவேன்?
பட்ட பின்றை வரையாது பொருள்வயிற் பிரிந்து, ஆற்றாளாகிய தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது. - மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 367 | 368 | 369 | 370 | 371 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - இழிதரும், பெரிய, வாழி, அறியேன், நிறை, இன்றும், சினம்