நற்றிணை - 318. பாலை
நினைத்தலும் நினைதிரோ- ஐய! அன்று நாம் பணைத் தாள் ஓமைப் படு சினை பயந்த பொருந்தாப் புகர் நிழல் இருந்தனெமாக, நடுக்கம் செய்யாது, நண்ணுவழித் தோன்றி, ஒடித்து மிசைக் கொண்ட ஓங்கு மருப்பு யானை |
5 |
பொறி படு தடக்கை சுருக்கி, பிறிது ஓர் ஆறு இடையிட்ட அளவைக்கு, வேறு உணர்ந்து, என்றூழ் விடர் அகம் சிலம்ப, புன் தலை மடப் பிடி புலம்பிய குரலே? |
ஐயனே! அன்று நாம் பருத்த அடியையுடைய ஓமை மரத்தின் தாழ்ந்த கிளையிலுண்டாகிய இலை தீய்ந்தமையாலே பொருந்தாத புள்ளி பட்ட நிழலின்கண்ணே இருந்தேமாக; அப்பொழுது நம்மை நடுக்கப்படுத்தாது தான் அடையுமிடத்தில் வந்து தழையை ஒடித்துத் தின்னுதல் கொண்ட உயர்ந்த தந்தத்தையுடைய யானை; தன் புள்ளியையுடைய நீண்ட கையைச் சுருட்டித் தூக்கி வேறொன்றனை அறிகின்றதன் காரணமாக இடையீடுபட்டுப் பிளிற்றியவுடன்; அதனை வேறாக வுணர்ந்து வெயில் பரவிய மலைப்பிளப்பிடமெல்லாம் எதிரொலி எடுக்கும்படியாக; புல்லிய தலையையுடைய இளைய பிடியானை புலம்பிய குரலைக் கேட்டிருந்தீரன்றோ?; அதனை நினைத்தலும் செய்வீரோ? செய்வீராயின் கொடிய சுரநெறியில் ஏகாதிருத்தலுடன் இவளைப் பிரியத் தக்கீருமல்லீர்;
பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகனைத் தோழி சொல்லியது. - பாலை பாடிய பெருங் கடுங்கோ
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 316 | 317 | 318 | 319 | 320 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - யானை, புலம்பிய, அதனை, கொண்ட, நாம், நினைத்தலும், அன்று, பாலை