நற்றிணை - 215. நெய்தல்
குண கடல் இவர்ந்து, குரூஉக் கதிர் பரப்பி, பகல் கெழு செல்வன் குடமலை மறைய, புலம்பு வந்து இறுத்த புன்கண் மாலை, இலங்கு வளை மகளிர் வியல் நகர் அயர, மீன் நிணம் தொகுத்த ஊன் நெய் ஒண் சுடர் |
5 |
நீல் நிறப் பரப்பில் தயங்கு திரை உதைப்ப; கரை சேர்பு இருந்த கல்லென் பாக்கத்து, இன்று நீ இவணை ஆகி, எம்மொடு தங்கின் எவனோதெய்ய? செங்கால் கொடு முடி அவ் வலை பரியப் போகிய |
10 |
கோட் சுறாக் குறித்த முன்பொடு வேட்டம் வாயாது எமர் வாரலரே. |
சேர்ப்பனே! கீழ்க்கடலினின்றெழுந்து நல்ல நிறத்தையுடைய கதிர்களைப் பரப்பிப் பகற்பொழுதைச் செய்து விளங்கிய ஆதித்தன் மேல்பால் உள்ள மலையிலே மறைந்து செல்லலும்; துன்பத்தை முற்படுத்து வந்து தங்கிய புன்கண்ணையுடைய மாலைப் பொழுதினை; இலங்கிய வளையணிந்த மகளிர் தத்தம் மாளிகையிலே எதிர் கொண்டு அழையாநிற்ப; மீன் கொழுப்பைச் சேர்த்து உருக்கிய ஊனாகிய நெய்வார்த்து ஏற்றிய ஒள்ளிய விளக்கின் ஒளியையுடைய; நீல நிறமுடைய பரப்பின்கண் விளங்கிய அலைமோதக் கரையிடத்துப் பொருந்தியிருந்த கல்லென்னு மொலியையுடைய பாக்கத்து; இன்று நீ இவ்விடத்து இருந்தனையாகி எம்மொடு தங்கியிருப்பின் உனக்கு ஏதேனும் குறைபாடுளதாகுமோ?; சிவந்த நூலாகிய காலையும் வளைந்த முடியையுமுடைய அழகிய வலை கிழியும்படி அறுத்துக் கொண்டு புறத்தே ஓடிப்போன கொல்ல வல்ல சுறாமீனைக் கருதி மிக்க வலியுடனே; அவற்றைத் தம் வேட்டையிலகப்படப் பிடித்துக் கொண்டு வாராது எஞ்சுற்றத்தார் வறிதே மீண்டுவருபவரல்லர்;
பகற் குறி வந்து மீள்வானை 'அவள் ஆற்றும் தன்மையள் அல்லள்;நீயிர் இங்குத் தங்கற் பாலீர்; எமரும் இன்னது ஒரு தவற்றினர்' எனத் தோழி தலைமகற்குச் சொல்லியது. இரவுக் குறி மறுத்து வரைவு கடாயதூஉம் ஆம். - மதுரைச் சுள்ளம் போதனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 213 | 214 | 215 | 216 | 217 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - வந்து, கொண்டு, குறி, விளங்கிய, எம்மொடு, இன்று, மகளிர், மீன், பாக்கத்து